Wednesday 6 January 2010

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி

நேற்று ஒரு பெண்ணும் ஆணும் என்னிடம் திருமணப் பொருத்தம் பார்க்க வந்தாங்க. பொண்ணுக்கு பூச நட்சத்திரம். ஆணுக்கு அசுவினி நட்சத்திரம்.

பத்துக்கு ஆறு பொருத்தம் சரியாக இருக்கிறது என்பதால் திருமணம் முடிக்கலாம் என்று சொன்னேன்.




யோனிப் பொருத்தம் மத்திபமாக இருக்கிறது. வசியப் பொருத்தம் இல்லை. ஆகவே சில விஷயங்களில் அனுசரித்துப் போக வேண்டும் என சொன்னேன். அந்த ஆடவரிடம் சில ஆலோசனைகளையும் கூறினேன்.

அப்போது இடைமறித்த அந்தப் பெண், " இவர் மாப்பிள்ளை இல்லை. அவர் வேறு ஆள்" என்றார்.

எனக்கு சங்கடமாக போய்விட்டது.

" நீங்கள் பேசிக் கொண்ட விதம்... நடந்து கொண்ட முறை... ஆகியவற்றை வைத்து தப்பாக நினைத்து விட்டேன்" என சொன்னேன்.

" எதற்காக வருத்தப்படுகிறீர்கள். இவர் என் காதலர்..ஐந்து வருடமாக பழக்கம். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதனால் இவரைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இதுவரை கணவன் மனைவியாகதான் வாழ்ந்து வருகிறோம். இவர்தான் வேறு ஒரு ஆளைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்துகிறார்" என பதட்டப்படாமல் கூறினார்.

"இல்லை அம்மா, யோனிப் பொருத்தம் குறைவாக இருப்பதாலும் சில கிரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தாம்பத்திய வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம் என்பதற்காத்தான் சொன்னேன்" என குறிப்பிட்டேன்.

" அதைப் பற்றி கவலை இல்லை... எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது சந்தோசம் கொடுக்கத்தான் இவர் இருக்கிறாரே" என அதிரடியாக ஒரு பதிலைச் சொன்னார். நான் ஆடிப் போய் விட்டேன்.

"அப்படியானால் திருமணத்துக்கு பின்னரும் உங்கள் உறவு தொடருமா" என கேட்டேன்.

"அப்கோர்ஸ்... இவரை மறக்க முடியுமா?" என ஒரு குண்டைத் தூக்கி போட்டாள்.

"சரி அம்மா... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்... ஒரு காலத்தில் இப்படி நடந்து கொண்டால் அது பெரிய பாவம் என கருதப்பட்டது. ஆனால்,  நாசமாய்ப் போன நாகரீக வளர்ச்சி இதெல்லாம் சகஜமப்பா என நடக்கச் சொல்கிறது. போய் வாருங்கள்" என அனுப்பி வைத்தேன்.

இப்படியும் சிலர் இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டேன்.

 ஆனால், வாடகைக்கு மனைவி என்ற உண்மைச் சம்பவத்தை ஜூனியர் விகடனில் படித்தேன்.

அதில் நிருபருக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்கும் நடக்கும் உரையாடலை அப்படியே வெளியிட்டு இருந்தார்கள்.

இப்படியும் இருக்கிறார்களே என்னிடம் பொருத்தம் பார்க்க வந்த ஜோடியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட என்னை இப்படி ஏராளமான பேர் இருக்கிறார்கள் என சாட்டையால் அடித்தது போல் சொன்னது அந்த உண்மைச் சம்பவம்.

ஒரு பாப கிரகமும் ஒரு சுப கிரகமும் இணைந்து களத்திர ஸ்தானத்தில் இருந்தால் (தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் கிரகங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை) கட்டிய கணவனே காசுக்காக தன்னுடைய மனைவியை மாற்றானுடன் அனுப்பி வைப்பான் என புலிப்பாணி கூறுகிறார்.

ஆனால் அது இந்த அளவுக்கு இருக்குமா என்பதை எண்ணிப் பார்க்க மனம் கூசுகிறது. தயவு செய்து நீங்களும் அதைப் படித்துப் பாருங்கள். உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணருவீர்கள்.

No comments:

Post a Comment