Tuesday 1 October 2013

பிடிவாதத்தால் பிரிந்த தம்பதிகள்.....!




அப்பா மருத்துவர். அம்மா மருத்துவர். அக்காவும் குழந்தை நல மருத்துவர். ஆனால் ஆண்பிள்ளையான இவருக்கு படிப்பு ஏறவில்லை.

கொஞ்சம் பிடிவாதக்காரர். சுயநல சிந்தனை சற்று தூக்கலாக இருக்கும். அம்மா செல்லம் அதிகம் என்பதால் இவர் இப்படி வளர்ந்து விட்டார் என்பது உறவினர்களின் குற்றச்சாட்டு.

இவரின் சகோதரிக்கு 30 வயதுவரை திருமணமாகவில்லை. நல்ல அழகு இருந்தும் வசதி இருந்தும் ஏனோ தள்ளிக் கொண்டேபோனது.



என்னை சிரம்பானில் உள்ள இவரின் வீட்டுக்கு அழைத்திருந்தார்கள். சென்று ஜாதகத்தை பார்த்தேன்.

திருமண வகையில் சில குறைகள் இருந்தன. தோஷ நிவர்த்தி செய்யும் படி ஆலோசனைகூறினேன்.

என்னையே செய்யச் சொன்னார்கள். பெரும்பாலும் தொழில் ரீதியாக நான் இதைச் செய்வதில்லை.

மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கணபதி ஹோமம் தோஷ சாந்தி போன்றவற்றை செய்வேன்.

முறைப்படி சர்ப்பதோஷ சாந்தி பூஜைகளை அவர்கள் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு செய்தேன்.

என்னவோ தெரியவில்லை. என் மீது அந்தப் பெண்ணுக்கும் அவரின் பெற்றோருக்கும் அலாதி நம்பிக்கை.

ஆறு மாத காலத்தில் டாக்டர் மணமகனே அமைந்தார். நான் சிறப்பு விருந்தினராக அந்த கல்யாணத்தில் கலந்து கொண்டேன். இவருக்கு இப்போது இரண்டு ஆண்குழந்தைகள்.

பின்னர் அவளின் சகோதரர் என்னை சந்தித்து ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டார்.

திருமணம் எப்போது நடைபெறும் என்று வினவினார். இப்போது வேண்டாம். நான்கு ஆண்டுகள் கழியட்டும்.

அவசரப்பட்டு கல்யாணம் செய்தால் பிரச்சினையில் முடிய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினேன்.

தாம் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் இந்த ஆண்டே திருமணத்தை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

மேலும் திருமணத்தில் தடை இல்லை என்று தகப்பனாரிடம் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன். பெண்ணின் ஜாதகத்தை பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டேன்.

இது அவரின் பெற்றோருக்கும் தெரியும். ஆனால், வீம்பாக நின்று அந்தப் பெண்ணையே கரம்பிடித்து விட்டார்.

கடந்த வாரம் ஒரு திருமண விருந்து 5 நட்சத்திர விடுதியில் நடந்தது. அங்கு அவர் மனைவியுடன் வந்திருந்தார்.

விருந்து முடிந்த பின்னர் என்னை தனியாக சந்தித்த அவர், மனைவியைப் பிடிக்கவில்லை என்றும் அவரோடு உறவு வைத்துக் கொள்ள இயலவில்லை என்றும் சொன்னார்.

இனிமேல் சேர்ந்து வாழ்வது இயலாத காரியம். விவாகரத்து செய்து விடலாம் என நினைக்கிறேன். தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என என்னிடம் கேட்டார்.

மேஷ லக்கனம். கும்ப ராசி. ஐந்தில் ராகு. பதினொன்றில் கேது. மற்ற ஏழு கிரகங்களும் பாம்புகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகி கிடந்தன.

பதினொன்றில் குரு இருந்தால் அது ஆன்மீக ஜாதகம். குடும்பம் அமையாது. அமைந்தாலும் குழந்தைப் பாக்கியம் கிடைப்பது அரிது.

ஆன்மீக குருவான அரவிந்தரில் இருந்து தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்ஜிஆர் வரை பலரை உதாரணம் சொல்லலாம்.

பிடிவாதம் என்பது விலக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலை உண்டு பண்ணி விடும் என்பதற்கு இவரின் வாழ்க்கை ஒரு எடுத்துக் காட்டு.



No comments:

Post a Comment