Wednesday 18 December 2013

சனி கொடுத்தால் யார் தடுப்பார்

   தற்கொலைக்குத் தூண்டும் ஏழரைச் சனி என்ற தலைப்பில் என்னிடம் ஜாதகம் பார்த்த அன்பரின் பலனை இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன்.
   இடைக்காலத்தில் முன்னுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் எல்லாவற்றையும் இழந்து திருவோடு தூக்கும் நிலைக்கு வந்தவர்.
    துலாம் ராசிக்காரர. பார்த்த இடத்தில் எல்லாம் ஏழரைச் சனியின் தாக்கம். மீள்வது சிரமம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
 

 என்னை இவர் வெறும் ஜோதிடனாக மட்டும் பார்க்கவில்லை. வழிகாட்டியாகவே எண்ணி மனதில் இருந்த குறைகளையும் கொட்டித் தீர்த்தார்.
    பல வகையில் ஆறுதல் கூறினேன். சில வழிபாட்டு முறைகளைச் சொல்லி சனிபகவானை மனதார வணங்கி வரும்படி கேட்டுக் கொண்டேன்.
    அவரும் அவ்வாறே செய்தார். கடன் தொல்லை கழுத்தைப் பிடித்து நெரித்ததால் இடையிடையே மனம் சோர்ந்து விடுவார்.
     கடந்த வாரம் திடீரென்று எனக்கு போன் செய்தார். ஒரு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. போய்ப் பார்க்கட்டுமா என்றார்.
    உடனே கிளம்பிப் போகும்படி சொன்னோன். இவரின் ஆவணங்களைச் சரிபார்த்த அவர்கள் வேலையை ஆரம்பிப்பதற்கு எவ்வளவு தொகை தேவை என்று கேட்டிருக்கிறார்கள்.
    ஒரு லட்சம் வெள்ளி கேட்கலாமா என என்னிடம் கேட்டார். இரண்டு லட்சம் வெள்ளியாக கேளுங்கள் என்று சொன்னேன். அவரும் அதன்படி கேட்டிருக்கிறார்.
   1லட்சத்து 80 ஆயிரம் வெள்ளிக்கான காசோலையை கொடுத்து விட்டார்கள். அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
   சனி கொடுத்தால் யார் தடுப்பார். கொடுத்த பணத்தை முறையாகப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்து என்று சொன்னேன்.
     ஆசி வழங்குபடி கூறி விழுந்து வணங்கினார். மனப்பூர்வமாக வாழ்த்தினேன். சில பாகிஸ்தான் தொழிலாளர்களை வைத்து வேலையைத் தொடங்கி விட்டார்.
    மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வர இயலாவிட்டாலும் தொழிலைத் தற்காத்துக் கொண்டால் பின்னர் அதன் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும் என்பது என் எண்ணம்.
   குடும்பத்தோடு சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலை உள்ளது. அதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என வினவினார்.
    தேவையில்லை, இன்னும் சில காலங்களில் அனைத்தும் சரியாகி விடும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன்.
      மேலும் இன்னொரு முக்கிய தகவலைப் பரிமாற நினைக்கிறேன். இந்தப் பையன் குறித்து என் நெருங்கிய நண்பர் மோகன் என்பவரிடம் பேசினேன்.
      மோகனும் என் ஆன்மீக ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். லண்டனில் வழக்கறிஞருக்குப் படித்து பட்டம் பெற்றவர். அந்த வகையில் இந்தப் பேச்சு ஆரம்பமானது.
     அப்படியா கவிஞர், அவரை வந்து பார்க்கச் சொல்லுங்கள். முறையான ஆவணங்கள் இருந்தால் முதலீடு செய்ய ஆள் இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று கூறினார்.
     இதுவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்தது.
.
       

Saturday 5 October 2013

கணவன் - மனைவி பிரச்சினையைத் தீர்க்கும் காளகஸ்தி

வாழ்க்கை என்பது கைக்குள் இருக்கும் பட்டாம் பூச்சி மாதிரி. திறந்து விட்டால் பறந்து விடும். இறுக்கிப் பிடித்தால் இறந்து விடும்.

இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் இல்லறப் பயணம் இடையூறு இல்லாமல்  தொடரும். இல்லையென்றால் கரடு முரடான கற்பாறைகளில் இடரும்.



பெரும்பானவர்களின் வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் பிடிவாதம்(ஈகோ).

"ஒரு குடுவையில் இருந்த பொரியை அள்ள அதற்குள் கையை விட்டதாம் ஒரு குரங்கு. வேண்டிய மட்டும் அள்ளிக் கொண்டு கையை வெளியே எடுக்க முயற்சி செய்ததாம்.

குடுவையின் வாய் சிறியதாக இருந்ததால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. 

பொரியை விட்டு விட்டால் வெறுங்கையை வெளியே எடுத்து விடலாம் என அனுபவசாலியான கிழட்டுக் குரங்கு ஒன்று ஆலோசனை சொன்னதாம்ஆனால், அந்த முட்டாள் குரங்குக்கு பொரியை விட மனசில்லை.

ஒரு நாள்... இரண்டு நாள்.. மூன்று நாள்... என குடுவையோடு சுற்றிய குரங்கு இறுதியாக பட்டினியால் இறந்து விட்டதாம்"

இப்படித்தான் பலர் பிடிவாதம் என்ற பேயோடு கூட்டணி அமைத்துக் கொண்டு வாழ்க்கையை குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள்.



சிலர் ஒரு கட்டத்தில் பிடிவாதத்தை உதறி விட்டு பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருகிறார்கள். பலர் அதற்குள்ளேயே சிக்கி மாண்டு போகிறார்கள்.

சுரேஷ்..... இவர் மேலாண்மைக் கல்வி கற்ற பட்டதாரி. நல்ல வேலை.. கை நிறைய சம்பளம். 

சுகுணா.. இவர் பொறியியல் பட்டதாரி. படபடப்பான பேச்சுக்காரர். அன்பு செலுத்துவதில் வஞ்சனை இல்லாதவர்.

இருவருக்கும் திருமணமாகி இரு ஆண்பிள்ளைகள். பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் விரிசல் விழுந்ததைப் போல் இவர்கள் இல்லற வாழ்க்கையில் பிரச்சினை பிடில் வாசிக்கத் தொடங்கியது.

விரிசல் வளர்ந்து விலகல் வரை நீண்டு விட்டது. இனி இணைந்து வாழ்வது கானல் நீரில் கட்டுமரம் ஓட்டுவது மாதிரி என்ற நிலை உருவாகி விட்டது.

படித்தவர்களுக்கு அறிவுரை சொல்லி புரிய வைப்பது என்பது உப்பை உரமாக போட்டு தர்ப்பைப் புல் வளர்ப்பது போல.

இருவரும் பிரிந்து விடுவார்களோ என உறவுகளும் நட்புகளும் கையைப் பிசைந்து கொண்டு நின்ற போது....

கறந்த பால் மீண்டும் மடி புகுந்தது போல.... கருவாடு மீண்டும் மீனாக மாறியது போல... தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி மறக்காமல் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்தது போல இவர்கள் வாழ்க்கையிலும் அதிசயம் நடந்தது.

பிரிவின் எல்லைக்கு போனவர்கள்..அறிவின் துணைகொண்டு அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் ஏன் இந்தப் புயல்... பின்னர் ஏன் வசந்தத்தின் வரவேற்புரை...

இருவரின் ஜாதகமும் என் பார்வைக்கு வந்தது. சுகுணாவிற்கு லக்னம் துலாம். ராசி ரிஷபம். நட்சத்திரம் மிருகசீரிடம்-1 ஆம் பாதம்.

லக்கனாதிபதியும் ராசியாதிபதியும் ஒருவரே.. லக்கனத்தில் சுக்கிரன் ஆட்சி. சந்திரன் உச்சம். இருந்தாலும் இருக்கும் இடம் அஷ்டமம்.

குரு ஒன்பதில்.. புதன் மூன்றில்... இருவரும் பரிவர்த்தனை.. மேலும் சந்திரனில் இருந்து புதன் வரை எல்லாக் கட்டங்களிலும் கிரகங்கள். கேது மட்டும் ஆறில் தனித்து.

இது ஒரு வகையில் கிரக மாலிகா யோகத்தை கொடுக்கக் கூடியது. செல்வம்... செல்வாக்கு... பணம் வசதி இவற்றுக்கு பஞ்சம் இல்லை.

ஆனால், வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேச வைப்பார். தான் ஓட்டும் காருக்கு ஏழு சக்கரம் என ஏட்டிக்கு போட்டியாக சொல்ல வைப்பார்.

தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற இறுமாப்பு இவர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

அன்புக்கு அடிமை.. பணிந்து கேட்டால் குனிந்து நின்று படிக்கட்டாக மாறுவார். அதிர்ந்து கேட்டால் நெருப்பில் போட்ட வெடிக்கட்டாக சீறுவார்.

பணம் இவருக்கு துச்சம். கலை இலக்கியத்தில் இவரின் ஆசை உச்சம். கணவர் தன்னை புரிந்து கொண்டு நடத்த வேண்டும் என்பது இவரின் ஏக்கம். பல நேரங்களில் இவர் செயல்களில் வெளிப்படும் அதன் தாக்கம்.

சுரேஷின் லக்கனம் மிதுனம். ராசி மேஷம். நட்சத்திரம் பரணி-4 ஆம் பாதம். லக்கனத்தில் சூரியன், சனி, கேது சேர்க்கை. 

ஏழில் ராகு. மேலே குறிப்பிட்ட மூவரின் திருஷ்டி வேறு. எட்டில் குரு நீச்சம். நாலில் மாந்தி.

செவ்வாய் பத்தில்... சந்திரன் பதினொன்றில். வாக்குஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை. 

அதுவே குடும்பஸ்தானமும் என்பதால் செல்வம், கல்வி அமைப்புடைய மனைவி வாய்த்தார்.

திருமணத்திற்கு பின்னர் இவர் வாழ்க்கையில் முன்னேற்றம் முகம் காட்டி இருக்கும்.

லக்கனத்தில் பாவ கிரகங்கள் நின்று களத்திர ஸ்தானத்தை பார்ப்பது குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியது.

சுகஸ்தானமான நாலாமிடத்தில் மாந்தி நிற்பது இல்லற சுகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியது.

களத்திர ஸ்தானதிபதியான குரு எட்டில் மறைவு... மேலும் களத்திர ஸ்தானத்தில் ராகு..

ஆக இவை அனைத்தும் கணவன் மனைவியின் கண்களில் விரலை விட்டு ஆட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே பாரதப் போரை உருவாக்கி விட்டது.

கடந்த காலத்தில் தசா புத்தி பலன்கள் கடுமையாக இருந்தன. கோச்சார பலன்களும் கோளாறாக அமைந்தன.

இப்போது இருவருக்கும் குரு பலம் இல்லாவிட்டாலும் கொடுமை குறைந்து இனிமை பூக்கத் தொடங்கி இருக்கிறது.

 எட்டில் மறைந்த குரு நீச்சமாகி போனது பட்டுப் போகவிருந்த இல்லறச் செடி மொட்டுவிட காரணமாக அமைந்தது.

தசவித பொருத்தங்களில் வசியம் இல்லாதது ஒரு குறை. இருப்பினும் எட்டுப் பொருத்தங்கள் இசைந்து வந்தது சிறப்பு. 

இதைப் பக்குவமாக பாதுகாக்க வேண்டியது கணவன் மனைவி இருவரின் கடமையாகும். 

வாழ்க்கையில் கோளாறு செய்த கிரகங்களின் மனம் குளிரும்படி பரிகாரம் செய்து விட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அணை போட்டு விடலாம்.

காளகஸ்தி திருத்தலத்திற்கு இருவரும் சென்று நாக சாந்தி செய்து கொள்ள வேண்டும்.



காளகஸ்திக்கு செல்லும் போது வேறு கோவில்களுக்கு போகக்கூடாது. வீட்டிற்கு திரும்பி விட வேண்டும்.

வார வாரம் சனிக்கிழமைகளில் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். பக்கத்தில் உள்ள ஆலயத்துக்கு சென்று ராகு.. கேது.. ச்ர்ப்பக் கிரகங்களை வழிபட வேண்டும்.



தொடர்ந்து 48 வாரங்கள் செய்தால் பூரண பலன் கிடைக்கும். வேண்டாத விருந்தினரை வீட்டிற்கு சாப்பிட அழைப்பதைப் போல் அல்லாமல் ஆத்ம திருப்தியோடு வழிபாடு செய்ய வேண்டும்.

ஆஸ்துமா... சைனஸ் பிரச்சினைகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுகுணா.. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சொந்தமாக தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.

யாரையாவது முன்னிறுத்தி பின்னால் இருந்து இயங்கலாம். இயக்கலாம். ஆனால் நிதானப் போக்கு மிகவும் முக்கியம்.

விட்டுக் கொடுத்து வாழ்வது சிறப்பு. ஆனால் பல வீடுகளில் யார் முதலில் விட்டுக் கொடுப்பது என்பதில் பிரச்சினை வெடித்து பிரிவினைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

கடந்த காலத்தையோ.... இழந்த இன்பத்தையோ.... திரும்ப பெற இயலாது. இதைக் கருத்தில் கொண்டு கணவன் - மனைவி இருவரும் வாழ்க்கைச் சோலையில் வசந்தத்தை காண வேண்டும்.

இறைவன் அருளால் இனி வரும் காலங்கள் இளமை மாறாத இனிப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.

Tuesday 1 October 2013

பிடிவாதத்தால் பிரிந்த தம்பதிகள்.....!




அப்பா மருத்துவர். அம்மா மருத்துவர். அக்காவும் குழந்தை நல மருத்துவர். ஆனால் ஆண்பிள்ளையான இவருக்கு படிப்பு ஏறவில்லை.

கொஞ்சம் பிடிவாதக்காரர். சுயநல சிந்தனை சற்று தூக்கலாக இருக்கும். அம்மா செல்லம் அதிகம் என்பதால் இவர் இப்படி வளர்ந்து விட்டார் என்பது உறவினர்களின் குற்றச்சாட்டு.

இவரின் சகோதரிக்கு 30 வயதுவரை திருமணமாகவில்லை. நல்ல அழகு இருந்தும் வசதி இருந்தும் ஏனோ தள்ளிக் கொண்டேபோனது.



என்னை சிரம்பானில் உள்ள இவரின் வீட்டுக்கு அழைத்திருந்தார்கள். சென்று ஜாதகத்தை பார்த்தேன்.

திருமண வகையில் சில குறைகள் இருந்தன. தோஷ நிவர்த்தி செய்யும் படி ஆலோசனைகூறினேன்.

என்னையே செய்யச் சொன்னார்கள். பெரும்பாலும் தொழில் ரீதியாக நான் இதைச் செய்வதில்லை.

மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கணபதி ஹோமம் தோஷ சாந்தி போன்றவற்றை செய்வேன்.

முறைப்படி சர்ப்பதோஷ சாந்தி பூஜைகளை அவர்கள் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு செய்தேன்.

என்னவோ தெரியவில்லை. என் மீது அந்தப் பெண்ணுக்கும் அவரின் பெற்றோருக்கும் அலாதி நம்பிக்கை.

ஆறு மாத காலத்தில் டாக்டர் மணமகனே அமைந்தார். நான் சிறப்பு விருந்தினராக அந்த கல்யாணத்தில் கலந்து கொண்டேன். இவருக்கு இப்போது இரண்டு ஆண்குழந்தைகள்.

பின்னர் அவளின் சகோதரர் என்னை சந்தித்து ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டார்.

திருமணம் எப்போது நடைபெறும் என்று வினவினார். இப்போது வேண்டாம். நான்கு ஆண்டுகள் கழியட்டும்.

அவசரப்பட்டு கல்யாணம் செய்தால் பிரச்சினையில் முடிய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினேன்.

தாம் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் இந்த ஆண்டே திருமணத்தை முடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

மேலும் திருமணத்தில் தடை இல்லை என்று தகப்பனாரிடம் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன். பெண்ணின் ஜாதகத்தை பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டேன்.

இது அவரின் பெற்றோருக்கும் தெரியும். ஆனால், வீம்பாக நின்று அந்தப் பெண்ணையே கரம்பிடித்து விட்டார்.

கடந்த வாரம் ஒரு திருமண விருந்து 5 நட்சத்திர விடுதியில் நடந்தது. அங்கு அவர் மனைவியுடன் வந்திருந்தார்.

விருந்து முடிந்த பின்னர் என்னை தனியாக சந்தித்த அவர், மனைவியைப் பிடிக்கவில்லை என்றும் அவரோடு உறவு வைத்துக் கொள்ள இயலவில்லை என்றும் சொன்னார்.

இனிமேல் சேர்ந்து வாழ்வது இயலாத காரியம். விவாகரத்து செய்து விடலாம் என நினைக்கிறேன். தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என என்னிடம் கேட்டார்.

மேஷ லக்கனம். கும்ப ராசி. ஐந்தில் ராகு. பதினொன்றில் கேது. மற்ற ஏழு கிரகங்களும் பாம்புகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகி கிடந்தன.

பதினொன்றில் குரு இருந்தால் அது ஆன்மீக ஜாதகம். குடும்பம் அமையாது. அமைந்தாலும் குழந்தைப் பாக்கியம் கிடைப்பது அரிது.

ஆன்மீக குருவான அரவிந்தரில் இருந்து தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்ஜிஆர் வரை பலரை உதாரணம் சொல்லலாம்.

பிடிவாதம் என்பது விலக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலை உண்டு பண்ணி விடும் என்பதற்கு இவரின் வாழ்க்கை ஒரு எடுத்துக் காட்டு.



கணவனை கட்டையால் அடித்த மனைவி


காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல. ஏழு வருடங்களுக்கு முன்னர் இதயத்தை இடமாற்றிக் கொண்டவர்கள்.

திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஒரு வயதில் அழகான ஆண் குழந்தை. இரண்டு வருடங்களுக்குள் இல்லறம் கசந்துவிட்டது.

ஒரே வீட்டுக்குள் எலியும் பூனையுமாக வாழ ஆரம்பித்தார்கள். எதற்கு எடுத்தாலும் சண்டை. ஏட்டிக்கு போட்டியான பேச்சு. வீடு நரகமாக மாறி விட்டது.

அந்தப் பையன் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். இரண்டு பேரின் ஜாதகத்தையும் பார்த்தேன். பெண்ணுக்கு எட்டில் சனி. பையனுக்கு இரண்டில் ராகு எட்டில் கேது.

பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. காளசர்ப்ப தோஷம் வேறு. பொருத்தத்தில் கணப்பொருத்தமும் வசியமும் இல்லை.

காதல் என்பதால் முதலில் அவர்கள் ஜாதகப் பொருத்தத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க்கை கசக்க ஆரம்பித்தபின்னர்தான் ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்து போன காலத்தையும் நடந்து போன சம்பவத்தையும் நினைத்து கவலைப்பட்டு லாபம் இல்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் எதிர்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்று அறிவுரை சொன்னேன்.

ஆனால் அவர்கள் சண்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் உச்சகட்டத்தை அடைந்து விட்டது. இருவரும் இரவு ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிட போயிருக்கிறார்கள்.



வாய் வார்த்தை வசமிழந்து சண்டைக்கு அடிகோலியது. பிரச்சினை பெரிதாக கீழே கிடந்த கட்டையை எடுத்து கணவன் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.

கணவனுக்கு மொட்டைத்தலை. ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவர்கள் பதைபதைத்து விக்கித்து நின்றனர்.

நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட பையன் உடனே காவல்நிலையத்துக்கு சென்று மனைவியிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படி புகார் கொடுத்து விட்டான்.

காவல் அதிகாரி இரண்டு வீட்டினருக்கும் தகவல் அனுப்பினர். பெற்றோர்கள் வந்து இருவரையும் பிரித்து அவரவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

விவாகரத்து ஒன்றுதான் விடுதலை எனக் கருதி கணவன் வழக்கறிஞரின் உதவியை நாடி இருக்கிறான்.

சாந்தி செய்யப்படாத காளசர்ப்ப தோஷம், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் நிற்பது, மேலும் செவ்வாய் சேர்க்கை இவை அனைத்தும் அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கை குந்தகத்தை ஏற்படுத்தி விட்டது.

மாங்கல்ய ஸ்தானத்தில் சனீஸ்வரன் இருப்பதும் பெரிய பாதிப்பாக அமைந்து விட்டது.

பையனுக்கு ராகு கேது இருக்கும் இடம் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் சிரமங்களுக்கு வழி கோலி விட்டது.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். பல நேரங்களில் ஜாதக கோளாறுகளால் காதல் வாழ்க்கை மோதல் வாழ்க்கையாக மாறி எதிர்காலத்தை சூன்யமாக்கி விடும் என்பதை ஏனோ பலர் உணர மறுக்கிறார்கள்.

Monday 16 September 2013

மனைவியின் காள சர்ப்ப தோஷம் கணவனை முடமாக்கும்

சில நாட்களுக்கு முன்னர் சிரம்பான் மாறனைப் பற்றி எழுதி இருந்தேன். அவர் என்னை சந்தித்த செய்தியை அவர் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

அவர் மனைவி என்னோடு தொலைபேசியில் உரையாடி ஜாதக விவரங்களை வினவினார். என் கருத்தில் கணிப்பில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதனால் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வீட்டிற்கு வரமுடியுமா என்றும் கேட்டார். எத்தனையோ ஜோதிட விற்பன்னர்களை சந்தித்தவர்கள்... நம்மை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களே என்ற மகிழ்ச்சி ஒருபுறம்...



மாறன் குடும்பத்திற்கு நம்மால் ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது நட்புக்கு நன்றியாக அமையுமே என்ற நப்பாசை ஒரு புறம்... ஆகவே அடுத்த வாரத்தில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தேன்.

அதோடு உங்கள் ஜாதகத்தில் கண்டிப்பாக காளசர்ப்ப தோஷ அமைப்பு இருக்க வேண்டும் என குறிப்பிட்டேன். அவர் ஆச்சரியப்பட்டார்.

ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் இது குறித்து குறிப்பிட்டதாகவும் திருக்காளகஸ்தி திருத்தளத்திற்கு சென்று வரும்படி அந்த ஜோதிடர் அறிவுறுத்தியதாகவும் சொன்னார்.

மேலும் நான் சொன்ன சில விஷயங்கள் என்பால் அவருக்கு பெருத்த ஈர்ப்பை ஏற்ப்டுத்தியது என நம்புகிறேன்.

அவர் பிறந்த நேரத்தையும் தேதியையும் சொன்னார்.கணித்துப் பார்த்ததில் நான் எண்ணியபடியே கடுமையான காலசர்ப்பதோஷ அமைப்பு.

திருமணப் பொருத்தத்தில் வசியமும் இல்லை... ரஜ்ஜும் இல்லை. ஆனால், குடும்ப வண்டி குடை சாயாமல் தட்டுத்தடுமாறி ஓடிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாட்களில் இவர்களுக்கு விவாகரத்து நடந்திருக்க வேண்டும். அது நடக்க வில்லை.

அல்லது பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்து குடும்பம் நசிந்து போயிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இன்னொரு வகையில் உயிர்ப்பாதிப்புகளை ஏற்படுத்தி குடும்பத்தைக் குலைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இதற்கு பதிலாக முதுகுத்தண்டில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்த அடி எடுத்து வைக்கவே பெரும் அவஸ்தைப்படும் நிலைக்கு ஆளாக்கி விட்டது காளசர்ப்பதோஷம்.

ஏற்கனவே பார்த்த ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை அலட்சியப்படுத்தாமல் செய்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்காது.

காலுக்கு வந்த ஆபத்து கட்டை விரலோடு போயிருக்கும். காலம் கடந்தால் என்ன கனிவோடு வேண்டினால் கடவுளின் அருள் கண்டிப்பாக கிட்டும்.

நண்பர் மாறனின் நோய்ப்பாதிப்பு அகலும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.


Sunday 15 September 2013

அவசரக் கல்யாணம்... அதிர்ச்சி தந்த மரணம்...!

இரண்டு ஆண்டுகளூக்கு முன்னர் நான் தமிழகம் சென்றிருந்த சமயம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்னைப்பார்க்க வந்திருந்தார்.

அவர் மகளுக்கு 18 வயது. திருமணம் செய்யலாமா என என்னிடம் கேட்டார். ஜாதகத்தைப் பார்த்தேன். திருமண வகையில் பிரச்சினை. செவ்வாயும் சுக்கிரனும் பாதகமான இடத்தில் இணைவு.

பெண் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். கிராமம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகம். ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடக்கூடாது என அந்த தகப்பனாருக்கு தவிப்பு.

இரண்டு எட்டில் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் வேறு கடுமையாக இருந்தது. ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் சீக்கிரமாக திருமணத்தை நடத்தினால் நல்லது என கூறியதாக அவர் சொன்னார்.



அந்த ஜாதகர் சொன்னதிலும் ஆழ்ந்த கருத்து இருந்தது. அந்தப் பெண் தடம் மாறிச் செல்வதற்கு ஜாதக ரீதியாக வாய்ப்பு அதிகம் இருந்தததால் அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எனக்கும் அவரின் அவசரத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை அவரிடம் அழுத்தமாக சொன்னேன்.

உறவுக்கார மாப்பிள்ளையோ அன்னியமோ.. அது பிரச்சினை இல்லை. ஆனால் இருவருக்கும் உள்ள ஜாதகப் பொருத்தத்தைக் கவனமாக பார்க்க வேண்டும். 

தசவிதப் பொருத்தம் மட்டுமல்லாமல் ஏணைய சில முக்கிய பொருத்தங்களையும் கவனமாக பார்க்க வேண்டும் என கூறினேன்.

அதன் பின்னர் மலேசியா வந்து விட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் காலகட்டத்தில் தமிழகம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டத்தால் நானும் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

அடுத்த வாரத்தில் மலேசியா திரும்பி விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அதிகாலைப் பொழுது என் கைத்தொலைபேசி என்னை எழுப்பியது.

எடுத்துப் பேசிய போது அதிர்ச்சி தரும் தகவல் என் இதயத்தை கசக்கியது. நள்ளிரவு நேரத்தில் அந்தப் பையன் நெஞ்சு வலிக்கிறது என சொல்லி இருக்கிறார்... அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

மருத்துவமனைக்கு செல்லக் கூட அவகாசம் அளிக்காமல் காலன் அவர் உயிரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

சரியாக ஜாதகம் கணிக்காமல் திருமணம் செய்தால் அந்தப்பெண் கணவனைப் பிரிந்து வந்து விடுவார் என்பது என் கணிப்பு.

ஆனால், ஒரேயடியாக கணவனைத் தொலைத்து விட்டு தாய் வீடு வருவாள் என கனவிலும் நினைக்கவில்லை.

மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என அந்தப் பெண்ணின் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

அதைவிட பலமடங்கு என் மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்வது இறைவன் திருவுள்ளம் அப்படி இருந்தால் மானிட ஜென்மத்தால் மாற்ற முடியுமா என்ன?





Wednesday 11 September 2013

ஆண்டவன்.... அலட்சியம்... ஆபத்து...!

   என் மனதுக்கு பிடித்த நண்பர்களுள் மகத்தானவர். சிரம்பானைச் சேர்ந்தவர். சிறந்த வழக்கறிஞர். பொருளாதாரத்தில் வலுவானவர்.
   
   இவருக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை. முழங்கால் மூட்டு தேய்வு. முன்பு ஓய்வும் அசதியும் இவர் பக்கத்தில் வரவே பயப்படும்.

   ஆனால், இப்போது உட்கார்ந்து எழுவதற்கே சிரமப்படும் அளவுக்கு காலம்  இவர் கால்களுக்கு வியாதி என்ற விலங்கைப் பூட்டி விட்டது.



   இவர் பேச்சில் எப்போதும் கலகலப்பு கைகோர்த்து நிற்கும். இன்று அதில் விரக்தியின் வெளிப்பாடு அதிகம் இருப்பது வேதனை.

   இவருடைய ஜாதகத்தைக் கணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மகர லக்கனம். கடக ராசி. பூச நட்சத்திரம் மூன்றாம் பாதம்.

    லக்கனாதிபதி லக்கனத்தில்.  ராசியாதிபதி சொந்த வீட்டில். சிறுவயதில் கஷ்டமும் கவலையும் இவரின் விளையாட்டுத் தோழர்கள். 

    இன்று அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்திற்கு இவர் சொந்தக்காரர். ஆனால், உண்பது ஒரு கை பிடியளவுதான்.

    ஏன் இந்த அவஸ்தை இவருக்கு.... சரீரகாரகன் சந்திரனும் எலும்புக்கு அதிபதியான சனியும் சமசப்தம பார்வைப் பரிமாற்றம். ஏழரைச் சனி காலத்தில் இவரை முடமாக்க சனிபகவான் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

   அதற்கான அறிகுறிகளையும் இவருக்கு அனுப்பி வைத்தார். இவரின் மன பலம் ... பணபலம்... அதை அலட்சியப்படுத்தி விட்டது.

   தெய்வபலமும் சேர்ந்து கொண்டதால் தெம்பும் அதிகம் இருந்தது. விளைவு வியாதியை ஓட ஓட விரட்டிய இவரை வியாதி விரட்டிக் கொண்டிருக்கிறது.

   கோச்சாரத்தில் குரு பகவான் பலவீனமாக இருக்கிறார். நான்காம் வீட்டில் இருக்கும் சனியும் குடும்ப உறவில் குழப்பத்தை உண்டு பண்ணி திருப்தி இல்லாத நிலைக்கு தள்ளி விட்டார்.

    மேலும் இவருக்கு மறுபிறவி இல்லை என்பதால் ஜென்மாந்திர பலாபலன்களையும் இந்தப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி.



   நள மகராஜாவுக்கு விமோசனம் அளித்த திருநள்ளாறு திருத்தளத்துக்கு சென்று திருக்குளத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டு வருமாறு அறிவுறுத்தி இருக்கிறேன்.

   அதன் பின்னர் வீட்டில் ரோக நிவர்த்தி யாகம் ஒன்றையும் செய்யச் சொல்லி ஆலோசனை கூறியிருக்கிறேன்.

   இவை இரண்டையும் ஆத்ம சுத்தியோடு செய்து சனிபகவான் அனுகிரகத்தை அடைந்து விட்டால் அறுவைச்சிகிச்சை தேவைப்படாது.

   அறுவைச்சிகிச்சை தவிர்க்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் கூட கவலைப்பட வேண்டாம். சிகிச்சைக்கு பின்னர் ஓடியாடி விளையாட முடியாவிட்டாலும் வலி இல்லாமல் இயல்பாக வலம் வர இயலும் என்பது திண்ணம்.

   இவர் பார்த்த ஜோதிடரின் அறிவுறையையும் மருத்துவரின் ஆலோசனையையும் அலட்சியப்படுத்தால் ஏழரைச் சனி காலத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதிப்பு பாதி அளவு குறைந்திருக்கும். சிலவேளைகளில் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கலாம்.

   என்ன செய்வது... மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று..

Wednesday 7 August 2013

தற்கொலைக்கு தூண்டும் ஏழரைச் சனி

சிவபெருமானுக்கே சிக்கல் ஏற்படுத்தியவர் சனி பகவான். சாதாரண மனிதர்களை சட்னியாக்கி விடமாட்டாரா என்ன?

அவதார புருஷர்களுக்கே அல்வா கொடுப்பர் சனிபகவான். அகப்பட்ட மனிதர்களை அல்லாட வைத்து விட மாட்டாரா என்ன?

ஏழரைச் சனி  என்பது சனி பகவானுக்கு மிகவும் இன்பமான கால கட்டமாகும். ஒருவருக்கு ஏழரைச் சனி பிடித்து விட்டால் உருக்குலைந்து சின்னாபின்னமாகி விடுவார்.



அதுவும் சனி பகவானுக்கு பிடிக்காத வீட்டுக்காரர்கள் என்றால் (சிம்மம் போன்ற சில ராசிக்காரர்கள்) சும்மா சொல்லிச் சொல்லி அடித்து கில்லி விளையாடி விடுவார்.

இது மாதிரி ஏழரைச் சனியின் பிடியில் சிக்கிய ஒருவர் கடந்த வாரம் என்னைச் சந்தித்தார்.

இவர் துலாம் ராசிக்காரர். லக்கனமும் துலாம்தான். 1992-ஆம் ஆண்டுகளில் மலேசியாவுக்கு வந்தவர்.

படாத கஷ்டங்கள் இல்லை என்றே சொல்லலாம். படுக்கக் கூட இடம் கிடைக்காமல் திண்டாடியவர்.

நாலைந்து ஆண்டுகள் தான் இவருக்கு சிரமம். அடுத்து ஏற்றமான காலகட்டம். சொந்தத்தொழில் ஆரம்பித்தார்.

ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி. மில்லியன் கணக்காக சம்பாத்தியம். இந்த நேரத்தில் தான் சனிபகவான் ஏழரைச்சனி என்ற வாகனம் ஏறி இவர் வாழ்க்கையில் புகுந்தார்.

இவர் நம்பி வேலைக்கு வைத்த இவரின் உறவுக்காரப் பையனை சனியன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

பணக் கையாடலை மிக பக்குவமாக அரங்கேற்றினார். தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட விலை மிகுந்த உபகரணங்களை அடகு வைத்து விட்டு கம்பி நீட்டினார்.

வெளிநாடு போயிருந்த சமயத்தில் இவ்வளவும் நடந்து விட்டது. தொழில் படுத்து விட்டது. கடன் கூடி விட்டது.

படுத்த தொழிலை எழுப்ப பல வகையில் முயன்றும் முடியாமல் தற்கொலை வரை போய் விட்டார்.

"வரும் போது என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு". இதுதான் அவருக்கு நான் சொன்ன ஆறுதல்.

ஆறுதல் மட்டும் இவரின் அழுகைக்கு மருந்து ஆகி விடாது. என்ன செய்வது அது ஒரு முதலுதவி.

நான் அவருக்கு கொடுத்த தன்முனைப்பு கொஞ்சம் தெம்பை அளித்தது. அவர் கண்களில் நம்பிக்கை ஒளி. மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற வேட்கை.

துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார்.

மேலும் மகாதசை வேறு மக்கர் பண்ணுகிறது. ஏழரைச் சனி  காலத்தில்தான் சனி மகா தசை ஆரம்பம். சுயபுத்தியில் இவரின் செயல்பாடு சுனாமியாக இருக்கும்.

திருநள்ளாறு சென்று வர கூறியிருக்கிறேன். சில வழிபாட்டு முறைகளையும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இவருக்கு சிரமமான காலகட்டமாகும். அதன் பின்னர் மாற்றம் தெரியும். படிப்படியாக ஏற்றம் கிடைக்கும்.

உயர்ந்த நிலைக்கு வருவார் என்பது உறுதி.

 

Wednesday 31 July 2013

கல்யாணத்தைத் தடுக்கும் காளசர்ப்ப தோஷம்

நாகநந்தினி என்ற அழகான பெண். வயது 32. இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்.

அழகு இருந்தும் பணம் இருந்தும் திருமணம் மட்டும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஏராளமாக இருந்தது.



ஜாதகத்தைப்பார்த்தேன். கடுமையான காளசர்ப்பதோஷம். அதென்ன கடுமையான காளசர்ப்பதோஷம் என நினைக்கிறீர்களா?

இது வியாதி மாதிரிதான். சாதரண காய்ச்சல். டைபாய்டு. மலேசியா. டெங்கு என்பதுபோல்.

களத்திரகாரகனான சுக்கிரன் 8 ஆம் இடத்தில் மறைவு. சனியோடு சேர்க்கை. 7 ஆம் இடத்தில் சூரியன். இப்படி பல கோளாறு.

இதெல்லாம் விட மிக முக்கியமான விஷயம்... அந்த பெண்ணின் முக அமைப்பு நாகத்தைப் போல. 

நம்மைக் கூர்ந்து நோக்கினால் நாகப் பாம்பு படம் எடுத்துப் பார்ப்பதைப்போல பயப்பட வைக்கும்.

இப்படிப் பட்ட பெண்ணுக்கு கணவன் வாய்ப்பது கடினம். இருப்பினும் மணவாழ்க்கை அமைவதற்கு சில வழிகளைச் சொன்னேன்.

திருக்காளகஸ்திக்கு சென்று சர்ப்ப சாந்தி செய்யும்படி அறிவுறுத்தினேன். மேலும் தமிழ்நாட்டில் 48 வாரம் தங்கி இருக்கும்படி கூறினேன்.

தமிழ்நாடு ராமநாதபுரம் இந்தப் பெண்ணின் பூர்வீகம். சொந்த வீடு இருக்கிறது. அதில் இவரின் பெரியம்மா வசிக்கிறார்.

இவர் அங்கு இருந்து வாரம் ஒரு முறை இராமேஸ்வரம் சென்று கடலில் குளித்து தீர்த்தமாடி வந்தால் சர்ப்ப சாந்தி ஏற்படும்.

சங்கராபரணமாக சிவன் கழுத்தில் தவழும் நாகதேவன் மனம் இறங்கி மணவாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுப்பான் என்பது திண்ணம்.

இந்தப் பெண்ணுக்கு 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். இது இறைவன் திருவருளால் ஈடேறும் என்பது திண்ணம்.

Thursday 25 July 2013

பரிகாரங்கள் கண்டிப்பாக பலன் கொடுக்கும்....!

ஜோதிடம் என்பது ஞானிகளின் அற்புத ஆன்மீக கண்டுபிடிப்பு. இது பொய் என்று புறம் தள்ளி போகின்றவர்களும் உண்டு... உண்மை என்று ஒத்துக் கொண்டு வாழ்கின்றவர்களும் உண்டு.

எட்டி மிதிப்பவர்களுக்கும் ஏற்று மதிப்பவர்களுக்கும் ஜோதிடம் பாகுபாடு பார்த்து பலன் தருவதில்லை. கிழக்கு வானை கிழித்து ஒளி சிந்தும் சூரியனைப் போல வாழ்க்கையின் வழி காட்டி அது.

எல்லாம் இருந்தும் ஒன்று இல்லாதது... எதுவும் இல்லாமல் ஏதாவது ஒன்று இருப்பது ஜோதிடத்தின் சூட்சமம்.

ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் இறக்காத சகோதர பாசம் கொண்டவர்.அன்பு இளவல் மகேந்திரன்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் சின்ன கிராமத்தில் இவர் வசிக்கிறார்.

ஊருக்கு அம்பலகாரர். ஊரை வழி நடத்தும் கடமை இவருக்கு உண்டு. அதற்கான தகுதியும் ஏராளம். இவருக்கு வயது 36. பாதை தடுமாற வைக்கும் போதைப்பழக்கம் இல்லை. உடலுக்கு பகையான புகை பிடிக்கும் பழக்கம் கிடையாது.

வசதி வாய்ப்புக்கள் ஏராளம். ஓடியாடி தேடித்தான் ஒருவேளை உணவு உண்ண வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அழகும் சுறுசுறுப்பும் இவருக்கு அணி செய்பவை.

எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் திருமண வாழ்க்கை கண்ணாமூச்சி காட்டியது. எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் இறுதிப் பலன் தோல்விதான்.

மகனுக்கு இன்னும் மணவாழ்க்கை அமையவில்லையே என ஈன்ற அன்னைக்கு இதயச் சுமை ஏறிக் கொண்டே போனது. இனிமேல் ஏது திருமணம் என்ற விரக்தி அந்த இளைஞனின் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்தது.



இந்த காலகட்டத்தில் நான் இந்தியாவில் இருந்தேன். என்னை வந்து சந்தித்தார்கள். நான் மட்டுமே தீர்வு காண முடியும் என உறவுகளும் நட்புகளும் உறுதியாக நம்பின.

ஜாதகத்தைப் பார்த்தேன். காளசர்ப்ப தோஷத்தின் கடுமையான பிடியில் சிக்கி அனைத்து கிரகங்களும் முடங்கிக் கிடந்தன. களத்திரகாரகனான சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தான்.

சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய திருக்காளகஸ்திக்கு அழைத்துச் சென்றேன். திருமண வகையில் இருந்த மற்ற இடையூறுகளூக்கு உரிய பரிகாரம் சொன்னேன்.

காலம் நீண்டதால் தண்ணீரில் தலை தூக்கும் கெண்டை மீனைப் போல ஏமாற்றம் அவர்கள் இதயத்தில் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதை இலை மறை காயாக என்னிடம் உணர்த்தினார்கள்.

அன்னக்கிளி படம் ஆரம்பத்தில் தடுமாறி இடைப்பட்ட காலத்தில் வசூலில் எகிற வைத்தது போல இவருக்கு பரிகாரகங்கள் பலன் தர ஆரம்பித்தன.

 இந்தப் பெண்தான் இல்லத்தரசியாக வரவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் நினைத்து அது ஈடேறாமல் மனம் வெந்து போயிருந்தாரோ அதே பெண் அவருக்கு மனைவியாக அமையும் வாய்ப்பை காலம் ஏற்படுத்தித் தந்தது.

காளசர்ப்ப தோஷம் 35 வயதுக்கு மேல் காளசர்ப்ப யோகமாக மாறும் என்பது பொதுவான விதி. இருப்பினும் களத்திர வகையில் அவருக்கு இருந்த இடையூறுகள் எல்லாம் களையப்பட்டு இன்று இல்லறச் சோலையில் தடம் 
பதிக்கப் போகிறார்.

இதில் முக்கியமான ஒரு அம்சத்தை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இவருடைய ஜாதக பலனை கணிக்கும் போது தசா புத்தி கணக்கிட்டேன். அப்போது கழித்தலில் பிழை ஏற்பட்டு வயதை சற்று குறைத்து சொல்லி விட்டேன்.

இது நான் தெரிந்து செய்த பிழை அல்ல. என்னை அறியாமல் என் இதழ் பிளந்து விழுந்த சொல். நல்லது நடக்க இறைவன் நடத்தும் நாடகங்களில் இதுவும் என்று நான் வியந்து போனேன்.

வரும் ஆவணி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். சுமார் 3500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மலேசியாவில் நான் இருக்கிறேன். அன்பு இளவலின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் நெஞ்சு நிறைந்த ஆசை. ஆனால், காலம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.





Monday 29 April 2013

டத்தோ சரவணன் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்டது

மலேசிய கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன்.

பேராக் மாநில தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றார்.

இந்த முறை அதே தொகுதியில் போட்டி இடுகிறார். சிறந்த சேவையாளர். 

இனப்பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களிடமும் அணுக்கமான அன்பும் பாசமும் கொண்டவர்.

இவரின் ஜாதகமும் கிடைக்கவில்லை. ஆனால், இவரின் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு.

அரசியல் சேவை இவரின் வெற்றிக்கு வழி வகுத்தாலும் ஆன்மீக ஆற்றல் இவரின் எல்லா வெற்றிகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது.

இறைவனை இவர் தேடிப்போக வேண்டியதில்லை. இறையருள் இவரைத்தேடி வரும்.



கலைமகள் இவர் நாவில் நடனமிடுகிறாள். அதனால், மற்றவர்களை வார்த்தையால் வசப்படுத்தும் வல்லமை இவருக்கு இயல்பாகவே அமைந்து
விட்டது.

எதிரியின் பலத்தில் பாதியை ஈர்க்கும் வல்லமை வாலிக்கு இருந்ததாக இதிகாசம் கூறுகிறது.

இந்திய அரசியல் வாதிகளில் எம் ஜி ஆருக்கு அந்தப்பலம் அளவற்று இருந்ததாக அவரின் ஆஸ்தான ஜோதிடர், ஜோதிட பூஷன், ஜோதிட சாம்ராட் வித்வான் லெட்சுமணன் அவர்கள் கூறுவார்கள்.

அந்தப் பலம் டத்தோ சரவணனுக்கு அமைந்திருக்கிற அம்சத்தை பல கட்டங்களில் காண முடிகிறது.

இவை அனைத்தும் டத்தோ சரவணன் அவர்களின் அரசியல் வெற்றிக்கு அனுசரணையாக உள்ளன.

இந்த வெற்றி மட்டுமல்ல... இன்னும் பல உச்ச பதவிகளை அடையும் பாக்கியத்தை இவரின் சாமுத்திரிகா லட்சண யோகம் அளிக்கிறது.





மீண்டும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்

மலேசியாவில் மே 5-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறப் போகிறது. 

2007-ஆம் ஆண்டு ஹின்ட்ராப் என்ற இந்தியர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது.

அப்போது துன் அப்துல்லா படாவி பிரதமராக இருந்தார். அடுத்து 2008- ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி பெரிய சரிவைச் சந்தித்தது.

அடுத்து டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்னர் இந்திய சமுதாய்த்தின் ஆதரவைப் பெறுவதற்காக பல திட்டங்களை கொன்டு வந்தார்.

இருப்பினும் இந்தமுறை வெற்றி வாய்ப்பு ஆளும் கட்சிக்கா... எதிர்க்கட்சிக்கா என்பது இழுபறியாகவே இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் கண்ணாமூச்சி 
காட்டுகின்றன.



நஜீப் அவர்களின் பிறந்த நேரம் தெரியாததால் ஜாதகம் கணிக்க முடியவில்லை. ஆயினும் அவரின் சில அம்சங்களை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் அவரே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சிகள்தான் வெற்றி பெறும் என்று பரவலாக பேசப்பட்டாலும் அதற்கான வாய்ப்பு குறைவு.

நஜிப் என்ற தனிமனிதரின் அம்சம் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர வழி வகுக்கும் என்பது காலத்தின் கட்டாயம்

Saturday 13 April 2013

வெற்றித் திருமகன் டத்தோஶ்ரீ பழனிவேலு

ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ பழனிவேலு. மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.

கடந்த முறை உலுசிலாங்கூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்.

ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி. ஆனால், பேசுவது குறைவு. சேவை அதிகம்.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்து உள்ளே இருப்பதை எடை போடாதே... என்ற  பழமொழி உண்டு.

இவரின் அமைதியைப் பார்த்து ஆற்றலைக் குறைவாக மதிப்பிடுபவர்கள், கண்டிப்பாக ஏமாந்து போவார்கள்.



இவரின் பிறந்த நேரம் தெரியாது. ஆகையால் முறையான ஜாதகத்தைக் கணிக்க இயலவில்லை.

இருப்பினும் இவரின் சில அம்சங்களை வைத்து அலசிப் பார்த்தேன். அந்த வகையில் இவரின் பதவி யோகத்தை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

கட்சிச் தலைவருக்கு விசுவாசமாக இருந்தவர். கிடைத்த பொறுப்புக்களைக் கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொண்டவர்.

கட்சித் தலைமைப் பதவி கஷ்டம் தராமல் இவரைத் தேடி வந்தது.

 கட்சிப் பதவிக்கு கடும் போட்டியாக இருப்பார் எனக் கருதிய செல்வாக்கு மிக்க  தலைவர் ஒருவரை இயங்க விடாமல் காலம் கட்டிப் போட்டு விட்டது.

இது இவரின் அரசியல் வெற்றிப் பாதைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது.

உலுசிலாங்கூர் தொகுதியில் இவருக்கு தோல்வியைத் தந்த மாற்றுக் கட்சி உறுப்பினர் துரதிஷ்டவசமாக இயற்கை எய்தினார்.

அதன் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் இந்தத் தொகுதி மீண்டும் ம.இ.கா. வசம் ஆனது.  இது மீட்சி யோக அமைப்பாகும்.

இவரின் மூக்கு அமைப்பும் தீட்சண்யம் மிக்க திருஷ்டியும் உச்ச பதவியில் உட்காருகின்ற அம்சத்தை அளிக்கிறது.

எதிர்க்கட்சியினரின் எழுச்சி இவரைக் கண்டிப்பாக வீழ்த்தி விடும் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

அந்தக் கணக்கை காலம் மாற்றப் போகிறது. இவருக்கு வெற்றியைக் காணிக்கையாக தரப் போகிறது.

டத்தோஶ்ரீ பழனிவேலு, உலுசிலாங்கூர் தொகுதியை ஒதுக்கி விட்டு வேறு தொகுதிக்கு செல்வார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

எந்தத் தொகுதியாக இருந்தாலும் இவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

வாக்கு வித்தியாசங்கள் அதிகமா... குறைவா... என்பது குறித்து எனக்கு தெரியாது.

ஆனால், இவரின் வெற்றி மட்டும் நிச்சயமானது என்பது என் கணிப்பு.

என் கணிப்பு என்று சொல்வதை விட காலத்தின் தீர்ப்பு என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் என் ஆத்மார்த்த நண்பரும் மிகச் சிறந்த ஊடகவியளாருமான ஒருவரிடம் டத்தோஶ்ரீ பழனி குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னர்
இந்தக் கணிப்பை எழுதினேன்.






Tuesday 2 April 2013

கலைஞர் கருணாநிதிக்கு இது போதாத காலம்

கலைஞர் கருணா நிதிக்கு இது போதாத காலம். வீட்டுக்குள்ளேயே வெட்டுக் குத்து. அழகிரி ஒரு பக்கம். ஸ்டாலின் ஒரு பக்கம். கனிமொழி இன்னொரு பக்கம்.

இலங்கை பிரச்சினையைக் காட்டி காங்கிரசுக்கு கல்தா கொடுத்தாகி விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது கலைஞருக்கே தெரியாது.

குடும்பத்தில் நடக்கும் குத்து வெட்டுக்கு முடிவு கட்டுவது எப்படி என தெரியாமல் முழிப்பதும் வெட்ட வெளிச்சம்.

இந்த நேரத்தில் கலைஞருக்கு சாதகமாக ஜாதகம் பலன் இருக்கிறதா என்று பார்த்தால் கணிப்பு என்னவோ பாதகமாகத்தான் தெரிகிறது.

ரிஷப ராசி கலைஞருக்கு. ஆறாம் இடத்தில் சனி. இது சாதகமாக இருந்தாலும் இது வரை கலைஞருக்கு கை கொடுத்து வந்த குரு பகவான் முகத்தைத் திருப்பிக் கொண்டு முறுக்கி நிற்கிறார்.



அடுத்த மாதத்தில் இருந்து இந்த முறுக்கலின் இறுக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் பன்னிரண்டாம் இடத்துக் குரு கண்ணிரண்டில் விரலை விட்டு ஆட்டாமல் போக மாட்டார்.

ஆகவே நிதானமாக அடி எடுத்து வைக்கா விட்டால் நிச்சயம் அதன் பலனை அனுபவிக்காமல் கலைஞரால் தப்பி முடியாது

Wednesday 27 March 2013

உருட்டுக் கட்டை... காந்தி... காங்கிரஸ்.....



மாணவர்கள் போராட்டம் தமிழ் நாட்டை தணலாக கொதிக்க வைத்திருக்கிறது.. பொறுப்பு இல்லாதவர்கள் என பொல்லாங்கு பேசியவர்களுக்கு இந்த நெருப்பு மலர்கள்.. செறுப்பு சாமரம் வீசியிருக்கின்றன.



காங்கிரஸ்காரர்களுக்கு பஞ்சு மெத்தை நஞ்சு மெத்தை ஆகி உறக்கத்தை உறிஞ்சி விட்டது. தமிழர்களின் இரத்ததை ஸ்ட்ரா போட்டு குடித்த ராஜபக்சேவின் ராத்தூக்கம் ராத்துக்கமாகி விட்டது.

திவ்யா என்ற அனல் பூ... கனல் வீசி கக்கிய கருத்துக்கள்.. ஆகா... என்ன ஆக்ரோசம்... என்ன ஆவேசம்... என்ன இறுமாப்பு... எத்தனை பொறுப்பு...

போராட்டம் எங்கள் குடும்பச்சொத்து என்று உதட்டிலேயே உடுக்கடித்து தமிழ் நாட்டை கூறு போட்ட திமுக.. திடுக்கிட்டு நிற்கிறது..



குண்டு வீச்சில் சிதறிய இரண்டு லட்சம் உயிர்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்லி அஞ்சலி பாடிய கலைஞர் கருணா நிதி.. அடி வயிறு கலங்கிய கருணா நிதியாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த இக்கட்டான நேரத்தில்தான் அகிம்சை தான் எங்கள் தாரக மந்திரமென அகிலமெல்லாம் ஒலிபரப்பிய காந்தி கண்ட காங்கிரஸ்காரர்கள் உருட்டுக் கட்டை மன்னர்களாக உருவெடுத்து மனிதாபிமானப் போர் தொடுத்த மாணவர்களின் மண்டையை பிளந்திருக்கிறார்கள்.



அடடா... பாட்ஷா படத்தில் ரஜினிகாந்துக்கு பின்னால் வேக நடை போட்டு வரும் வில்லன் களைப் போல அவர்கள் வந்த கோலம் இருக்கிறதே... காணக் கண் கோடி  வேண்டும்.

சும்மா.. வெள்ளை சட்டை... வேட்டி.. பேண்டு என அவர்கள் வித விதமான கெட்டப்புகளில் வந்து பிறவி தாதாக்களை பின்னுக்கு தள்ளி  விட்டார்கள்..

சாண்டோ சின்னப்ப தேவரிடம் கம்புச்சண்டை கற்றவர்கள் மாதிரி மாணவர்களை அவர்கள் புரட்டி எடுத்த காட்சி இருக்கிறதே... சினிமா தோற்றுவிட்டது போங்கள்...

மாணவர்கள் திருப்பி போட்டிருந்தால் அந்த தொந்தி தாதாக்கள்.. சந்து கிழிந்திருக்கும். ஆனால்.. மரணத்தைக் கூட மலர்ப்படுக்கையாக கருதும் மாணவர்கள்... காங்கிரஸ் கட்டெறும்புகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சொந்த ரத்தம் நக்கும் அந்த காங்கிரஸ் ஓநாய்களுக்கு தெரியவில்லை... எரிமலையை இதயத்தில் சுமக்கும் மாணவர் சமுதாயத்தின் விழி அவர்களின் பக்கம் திரும்பினால் இங்கிருக்கும் தலைவர்கள் அன்னைக்கு அடி வருட டெல்லியில் முகாம் போட வேண்டி இருக்கும் என்பது.

இந்த நேரத்தில் இன்னொரு அசிங்கத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்க போகிறதாம்.. அதற்காக பல நடை பிணங்கள் டிக்கெட் வாங்க ஐந்தாறு மணி நேரம் காத்து நிற்கிறதாம்.

பெத்த ஆத்தா செத்துக் கிடந்தாக்கூட அதை பத்தி கவலைப்படாமல் பிரியாணி தின்னுற மானங்கெட்ட ஜென்மங்க மாதிரி டிக்கட் வாங்கிய பெருமையை டிவியில பல்லக் காட்டி சொல்லும்போது அடி வயிறு பத்தி எரியுதுங்க....

அட.. கிரிக்கெட் பைத்தியம் பிடித்த கிறுக்கு சிகாமணிகளா.... தொப்புள் கொடி உறவுக்கு நீ உயிரையும் கொடுக்க வேண்டாம்... ஒரு மயிரையும் கொடுக்க வேண்டாம்... கிரிக்கெட்டை பாக்க மாட்டோமுனு ஒரு தடவை ஒதுக்கித்தான் தொலையுங்களேன்..