Monday 28 December 2009

அண்ணன் என்னடா... தங்கை என்னடா... அறிவியல் வளர்ந்த உலகத்திலே.

சாலமன் அரசவைக்குத்தான் விசித்திரமான வழக்குகள் வருவது வழக்கமாம். அதுபோல என்னிடம் விசித்திரமான ஒரு பிரச்சினை வந்தது. ஒரு நாள் இரண்டு ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஒருவர் என்னிடம் வந்தார்.

"இவர்கள் என் பிள்ளைகள். இவர்களின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மூத்தவன் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கிறான். இளையவள் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறாள்" என்றார்.




இருவரின் ஜாதகத்தையும் பார்த்தேன். பிறகு அந்தப் பெரியவரிடம் கேட்டேன். " சரி... இப்போது நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என தெளிவாக சொல்லுங்கள். அதற்கு சாத்தியம் இருக்கிறதா என பார்த்துச் சொல்கிறேன்" என கூறினேன்.

" இவர்கள் இரண்டு பேருமே கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்க மாட்டேன் என்கிறார்கள். இவர்களுக்கு திருமண யோகம் இருக்கிறதா" எனக் கேட்டார்.

திருமணத்திற்கு பாதகமான வகையில் எந்தக் கிரகமும் அமைந்திருக்கவில்லை. சுகஸ்தானமும் அயன சயன ஸ்தானமும் நன்றாக இருந்தன. காம வேட்கையை அதிகரிக்கும் வகையில் சில கிரகங்கள் வலிமை அடைந்திருந்தன. சந்நியாச யோகத்தைத் தருகின்ற வகையில் எந்தக் கிரகமும் இல்லை.

இது குறித்து இவரிடம் பேசி பயனில்லை. ஆகவே பிள்ளைகளை அழைத்து வர முடியுமா என அவரிடம் கேட்டேன். அழைத்து வருவதாக சொல்லி விட்டு சென்றவர் அடுத்த வாரத்தில் வந்தார்.

இருவரிடமும் பேசினேன். இருவருமே திருமணம் வேண்டாம் என சொன்னார்கள். அதே நேரத்தில் அவர்களிடம் ஆன்மீக நாட்டமோ பொதுச்சேவை ஆர்வமோ இல்லை என்பதும் தெரிந்தது. வேறு கோணத்தில் பேச்சைத் திருப்பினேன்.

அண்ணனை விட்டு விட்டு போக மாட்டேன். திருமணம் என்ற பெயரில் தங்கையைப் பிரிய மாட்டேன் என்பதுதான் இருவரின் இறுதிப் பதிலாக இருந்தது. இவர்களின் பாச உணர்ச்சி ஆரம்பத்தில் என்னை வியக்க வைத்தது. இருந்தாலும் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

பையனையும் அப்பாவையும் வெளியே இருக்கச் சொல்லி விட்டு பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன். எதிர்கால பாதிப்புகளை சரியான கோணத்தில் எடுத்துச் சொன்னால் ஆண்களை விட பெண்கள்தான் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தான் அவர்கள் கதை...

இவர்கள் இருவரும் சின்ன வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். இவருடைய தகப்பனார் பாசத்தைக் கொட்டி வளர்த்து படிக்க வைத்தார். தாயின் அன்பு கிடைக்காததால் அண்ணனும் தங்கையும் ஒருவருக்கொருவர் தாயாக மாறி அன்பைப் பொழிந்தனர்.

ஒரே தட்டில் சாப்பிட்டனர். ஒரே படுக்கையில் படுத்தனர். வயது ஆக ஆக பாலியல் மாற்றங்கள் உருவாகின. இருந்தாலும் இவர்கள் அன்பில் மாற்றம் இல்லை. தகப்பனாரும் பிள்ளைகளின் அன்பைக் கண்டு பூரிப்பில் இருந்தார்.

ஒரு நாள் குளித்து விட்டு அறைக்குள் ஆடை மாற்றிக் கொண்டு நின்றிருக்கிறாள் தங்கை. ஏதோ ஒரு சாமானை எடுக்க உள்ளே நுழைந்த அண்ணன் நிர்வாணக் கோலத்தில் நின்ற தங்கையைப் பார்த்திருக்கிறான். என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை அல்லவா.

பட்சம் வழக்கறியாது... நித்திரை சுகமறியாது..... பிச்சை தரமறியாது.... இச்சை முறையறியாது.... என்ற முன்னோரின் வாக்குப்படி காம வயப்பட்ட அண்ணன் ஒரு கணம் ஆடாமல் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அடுத்த கணம் புலி மாதிரி பாய்ந்து அவளை கட்டிப் பிடித்திருக்கிறான்.

எதிர்த்து போராட வேண்டிய தங்கை இணங்கிப் போனாள். இருவரும் படுக்கையில் சாய்ந்தனர். சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்தது. இது வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தொடர்ந்தது. திருமணம் செய்து கொண்டால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போக வேண்டும். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சட்டமும் சமுதாயமும் தடையாக நிற்கும்.

படித்தவர்கள் அல்லவா... இதைத் தீர்க்கமாக தெரிந்து கொண்டு திருமணத்தை மறுத்து வந்திருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை என்ற பெயரில் வேறு வேறு இடங்களில் வாழ்வதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்த உண்மையை என்னிடம் கூறிய போது அவள் பயமோ பதட்டமோ அடையவில்லை. மிக சாதாரணமாகவே பேசினாள். "இது என்னுடைய அப்பாவுக்கோ மற்றவர்களுக்கோ தெரியக்கூடாது. தெரிந்தால் என் அப்பா தாங்க மாட்டார். உங்களிடம் சொன்ன இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டேன்" என்று சொல்லி என்னையும் அதிர வைத்து விட்டாள்.

இது குறித்து அவளிடம் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்டே இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீது எந்தக் கருத்தையும் திணிக்க முடியாது. அப்படிச் செய்தாலும் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

அவர்களுடைய தகப்பனாரை வரவழைத்து " இன்னும் சில ஆண்டுகளுக்குள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். அதுவரை அவசரப்பட வேண்டாம். பிள்ளைகள் போக்கிலேயே விட்டு விடுங்கள்" என சொல்லி அனுப்பி வைத்தேன்.

இப்படிச் சொல்லும்போது என் இதயத்தில் இனம் தெரியாத வலி.... நான் செய்தது சரியா... தவறா...என்னை நானே அலசிப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை.

மாமியாரைக் காதலிக்கும் மருமகன்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி என்னை வந்து சந்தித்தார். அவருக்கு 35 வயது இருக்கும். இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பெண். இளையவன் ஆண். அவர்கள் வசிப்பது ஒரு அடுக்குமாடி வீடு.

கணவர் காலையில் ஆறு மணிக்கே வேலைக்கு போய் விடுவார். இவர் இல்லத்தரசியாக இருப்பதால் மீண்டும் படுக்கச் செல்வார். அப்படி படுத்து இருக்கும்போது யாரோ ஒருவர், இவர் பக்கத்தில் படுப்பது போலவும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது போலவும் இருக்கிறது என என்னிடம் சொன்னார்.



இது இவருடைய மனப்பிரமை என நினைத்து சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வந்தேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். இன்றும் எனக்கு அந்த சம்பவம் நடந்தது. அது உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது என்று சொன்னார்.

அப்போதும் அவருக்கு ஆறுதலான சில விஷயங்களைச் சொல்லி அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தார். குளிக்கும்போது என் உடம்பில் ஒரு பாம்பு வந்து சுற்றிக் கொள்கிறது. அது சில்மிஷமான காரியங்களைச் செய்கிறது என கூறினார்.

என்னடா இது சந்திரமுகி படம் போல இருக்கிறதே என நினைத்தேன். இனிமேலும் வெற்று வார்த்தைகள் பயனளிக்காது என எண்ணி என்னிடம் இருந்த அழகர்கோவில் தீர்த்தத்தைக் கொடுத்து வீடு முழுவதும் தெளிக்கச் சொன்னேன்.
அதற்கு பின்னர் அவர் வரவில்லை. அண்மையில் என்னைத் தேடி வந்தார். அவர் முகம் வெளிறிப் போய் இருந்தது. இப்போது இன்னொரு புதுக் கதை ஒன்றைச் சொன்னார்.

" என் மகளுக்கு 16 வயது ஆகிறது. ஒரு பையன் அவளைக் காதலிக்கிறான். அவன் முகத்தைப் பார்க்கும்போது நான் கனவில் பார்க்கும் பாம்பைப் போலவே இருக்கிறது. என்னுடைய கணவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. வீட்டிற்கு வரக்கூடாது என கண்டிப்பாக சொல்லி விட்டார்" என கூறினார்.

" இது நல்ல விஷயம்தானே... இதில் என்ன பிரச்சினை இருக்கிறது" என நான் சொன்னேன்.

" ஐயா... என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என் கணவர் இல்லாத நேரத்தில் நானே போன் செய்து வரச் சொல்கிறேன். என் மகளும் பள்ளிக்கூடத்துக்கு போய் விடுவாள். எனக்கும் அவனுக்கும் முன் ஜென்மத்தில் தொடர்பு இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்கள்" என கேட்டாள்.

அந்தப் பெண்ணின் பிறந்த நேரத்தை வாங்கிக் கொண்டு மறுநாள் வந்து பார்க்கும்படி அனுப்பி வைத்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால், நெஞ்சுக்குள் ஒரு நெருடல். இதையும் தாண்டி ஏதாவது இருக்கக்கூடுமா என என் உள்ளுணர்வு சொல்லியது.

மறுநாள் நான் சொன்ன நேரத்துக்கு வந்தாள். நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விட்டேன்.

" அம்மா... நீ அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறாய். நான் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் முன் ஜென்மத் தொடர்பு பொருந்துகிறதா என பார்க்க முடியும்" என சொன்னேன்.

அவளுடைய முகத்தில் சின்னக் கலவரம். அதை நான் கவனிக்கத் தவறவில்லை. " சரி கேளுங்கள்" என சொன்னாள்.

"உன் மகளின் காதலன் உன்னைத் தொட்டிருக்கிறானா?'

" ஆம் ஐயா..."

" கட்டிப் பிடித்து இருக்கிறானா..."

கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

" என் கண்ணைப் பார்.... நான் சொல்வது சரியா என உன் மனதைக் கேள். ஒத்துக் கொள்வதாக இருந்தால் மேலே பேசலாம். இல்லை என்றால் நடையைக் கட்டு" எனக் கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன்

"அவன் உன்னைக் முதலில் கட்டிப் பிடித்தான்.அது உனக்கு கூச்சமாக இருந்தது. மகளின் காதலன் இப்படிச் செய்கிறானே என மனம் சஞ்சலப்பட்டது. நாளடைவில் உன் மனமும் உடலும் அதை ஏற்றுக் கொண்டது.

ஒரு நாள் சரியான சந்தர்ப்பத்தில் உன்னை அவன் படுக்கையில் பிடித்து தள்ளி விட்டான். முதலில் நீ முரண்டு பிடித்தாய். பின்னர் இணங்கி விட்டாய். இப்போது அடிக்கடி அந்த சுகம் கேட்கிறது.

மகளின் காதலனோடு இப்படி நடப்பது தவறு என உன்னுடைய அறிவு சொல்கிறது. ஆனால் பாழாய்ப் போன ஆசை அதை ஜெயித்து விடுகிறது. இப்போது உன் கணவரின் கண்டிப்பால் அவன் வீட்டிற்கு வர முடியவில்லை. அதே நேரத்தில் உன்னால் அந்த சுகத்தை அடையாமல் இருக்க முடியவில்லை. உன் மனமும் உடம்பும் கிடந்து தவிக்கிறது. இது சரியாக இருந்தால் அதற்கான ஆலோசனை சொல்கிறேன். இல்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்யலாம்" என சொன்னேன்.

அவளுடைய கண்களில் இருந்து பொல பொல வென கண்ணீர் கொட்டியது.

" நீங்கள் நேரில் பார்த்ததைப் போல் அப்படியே சொல்லி விட்டீர்கள். இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள் ஐயா" என அழுது கொண்டே கேட்டாள்.

என் நண்பர் ஒருவர் மன நல மருத்துவராக இருக்கிறார். அவரைப் போய் பார்க்கும்படி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறேன்.

இதைப் படித்தவுடன் 'அந்தப் பெண் இப்படி செய்யலாமா...' என கோபப்பட்டு விட வேண்டாம்.

அந்தச் சுகம் மட்டுமே பிரதானம் என எண்ணி இருந்தால் என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டாள். அதே வேளையில் அந்தப் பெண் செய்வதை நியாயப்படுத்துவதும் முட்டாள்தனம்.

அவளுடைய ஜாதகத்தைப் பார்த்தேன். அவளைத் தடம்மாறச் செய்கின்ற அளவுக்கு சில கிரகங்கள் கெட்டுப் போய் இருந்தன. அதை விளக்கிச் சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.

இந்த பதிவூட்டத்தைப் படிக்கும் ஆண்களும் பெண்களும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். காலம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோளாறான பாலியல் பழக்கங்கள் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியாகின்றன.

நாக்கு ருசிக்காக பல உணவுக்கடைகளில் ஏறி இறங்குவதைப் போல உடல் ருசிக்காக நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத பல காரியங்களை இளைஞர்களும் யுவதிகளும் செய்கிறார்கள்.

 இது ஆரம்பத்தில் இன்பத்திலும் இன்பமாக இருக்கலாம். குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் தீர்க்க முடியாத துன்பத்தை கொண்டு வந்து விட்டு விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Friday 18 December 2009

காலம் மாறும். கவலை தீரும்.

பிரான்சு நாட்டில் வசிக்கும் அன்பர் ஒருவர் என் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி இருந்தார். அந்த தகவலின் சாரத்தை இங்கே தந்திருக்கிறேன்.

vanakam sir
mikavum nandri sir
naan srilanka naadai pirapidamaka kondavan. ippoluthu france (europe) ennum naadil vasikiren. ennakku nalla kalam endu sollukirarkal but appadi nalla kalam ethuvum nadakavillai maaraka thaan nadakirathu.
ennathu yathakathil entha kalam nalla kalam ? enna tholil seiyalam? business sari varuma ? kalyanam entha vayathil eppoluthu ? kadan pirachani thiruma? ennathu ayul matrum health? ennaku politics , cinema sammanthama full intrest irukku ithukal ennaku sari varuma ? appa, amma health ? ennudaya yathakathil  panam sampathikka mudiuma ? aakiyavatrai kanithu kurunkal pls. unkaludaya telephone number kodukka mudiuma thodarpu kolvathatku.....
mikavum rompa rompa nadri sir.


அருமை நண்பர் சுகிதாசுக்கு என்றும் நலமே வளரட்டும்.

" என்ன... என்ன.... வேலைப் பிடித்ததும் என்ன..." என்ற கேபி சுந்தராம்பாள் பாடலைப்போல பல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்.




உங்கள் ஜாதக பலனைச் சொல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜாதகம் என்பது வழிகாட்டி மட்டுமே. அதோடு உழைப்பும் சேர்ந்தால்தான் உயர்வு கிட்டும்.

உங்கள் நட்சத்திரம் பூசம் 4-ஆம் பாதம், ராசி கடகம், லக்கனம் கன்னி.
நீங்கள் பிறந்த போது சனிமகாதசை கர்ப்பச் செல் நீக்கி எட்டு மாதங்கள். ஆயுளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆயுள் ஸ்தானாதிபதி லக்கனத்தில் இருப்பதால் ஆயுள் தீர்க்கம் என்று குறிப்பிடலாம்.
கலைக்கு காரனான சுக்கிரன் 4-ஆம் வீட்டில் இருக்கிறான். நடிப்புகாரகன் செவ்வாய் கேந்திரத்தில் இருக்கிறான். ஆகவே நீங்கள் துணிந்து நாடகம், திரைப்படம் போன்ற துறைகளில் உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்த களம் இறங்கலாம்.

வீடு, இடம் வாங்கி விற்பது போன்ற தொழில் உங்களுக்கு லாபத்தை தரும். உணவகத் தொழிலும் லாபத்தைத் தரும். மொத்தத்தில் வார்த்தை ஜாலத்தால் நடக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக ஏழரைச்சனியின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி இருக்கிறீர்கள். அதனால் கடன் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். அவை மெல்ல மெல்ல விலகும்.
மாதுரு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் நிற்பதால் தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு இருக்கும். இது போன்ற ஜாதக அமைப்பு கொண்ட பலர் தாயைப் பிரிந்தோ இழந்தோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உங்களுக்கு செவ்வாய் தோஷ அமைப்பு இருக்கிறது. செவ்வாய் லக்கனத்தில் இருப்பதோடு மட்டும் அல்லாமல் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதற்கு நீங்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற அமைப்புக்கொண்டவர்கள் ஏற்கனவே காதலில் வீழ்ந்து இருப்பார்கள். அதோடு தோல்வியும் கண்டிருப்பார்கள். உங்களைப் பொறுத்தவரை 30-க்கு மேல் திருமணம் நடந்தால் நல்லது..
சனிபகவானும் லக்கனத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமணத்தில் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

லக்கனாதிபதி சர ராசியில் இருந்து பாப கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டிருப்பது உங்களை ஒரு நிலையில் இருக்க விடாது. இதற்கு சதா சஞ்சார யோகம் என்று பெயர். அதனால் நாடோடி வாழ்க்கை அமைவதும் ஏற்ற இறக்கமான பொருளாதார சூழல் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

6-ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பது எத்தகைய எதிர்ப்பையும் தாண்டி வெற்றி கொள்ள வைக்கும். இப்போது உங்களுக்கு சுக்கிரமகா தசை நடக்கிறது. இதில் 2016- ஆம் ஆண்டு வரும் வியாழபுத்தியில் நீங்கள் நினைக்கின்ற லட்சியத்தை அடைவீர்கள். 2013-ஆம் ஆண்டில் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகளைக் கண்டறிவீர்கள்.


"நமக்குக் கீழே உள்ளவர் கோடி.... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்பது கவியரசர் கண்ணதாசனின் மெய்ஞான வரிகள்.... ஒரு காலத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். காலம் மாறும். கவலை தீரும். மனக்குழப்பத்தை அகற்றி விட்டு முன்னேற்றப்பாதைக்கு வழித்தடத்தை அமைக்க முயற்சி செய்யுங்கள்.

Wednesday 16 December 2009

எங்கே நிம்மதி.....?

என் நண்பர்... என் துன்பத்தில் தோள் கொடுத்து நான் துவண்டு விடாமல் காத்தவர். வெறித்தனமான பாசக்காரர். சலிப்படையாத நேசக்காரர். இப்போது லண்டனில் சட்டம் படித்து விட்டு உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தையும் அதற்கு நான் அளித்த பதிலையும் இங்கே தந்திருக்கிறேன்.


வேலைப்பளுவும் அலுவல் அலைச்சலும் வலைப்பூவுக்குள் என்னை வரவிடாமல் தடுத்து விட்டன.
 
வணக்கம். வாழ்த்துக்கு நன்றி.



இங்கு விருந்து என்பது மது அருந்துவதுதான். உடல் நல காரணத்தால் மிக சிறிய அளவில் வீட்டிலேயே செய்து முடித்துக்கொண்டோம்.


மாஸ்டர் முடித்து விட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். பி.எச்.டி செய்ய முயற்சிப்பேன். தற்பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறேன்.


இங்கிலாந்தின் குடிநுழைவுத்துறையின் வழங்கும் High skilled Immigrant அங்கீகாரத்தையும். இங்கிலாந்தின் நிதிநிறுவனங்களின் இயக்குனர் வாரியத்தில் இடம் பெறுவதற்கு தேவையான Financial Service Authority... யின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன்.


நான் இங்கு அரசு ஊழியர்களுக்கான கூட்டுறவு கழகத்தின் வாரியத்தின் செயல் பாட்டு கண்காணிப்பு அதிகாரியாக பணி ஆற்றுகிறேன். தற்போது கூட்டுறவு கழகத்தின் வாரியத்தில் பொறுப்பேற்றேன்.


மனைவியோடு வாழ முடியாமல் போன வாழ்க்கையை, எந்த தேசமும் திருப்பி தந்து விடமுடியாது கவிஞரே, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும், இந்த வரிகளை எழுதும் போதே கண்கள் கலங்குகின்றன. இவ்வளவு பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாத மூர்க்கமான முட்டாளாய் வாழ்ந்து விட்டேனே என்பதுதான் எனது இன்றைய கவலை. இந்த கவலைகள் எல்லாம் ஆழ்கடல் மணலாய் அடங்கி கிடக்கும். நெஞ்சோடு நெருக்கமானவர்களை சந்திக்கும் போது விழித்துக்கொள்ளும். பொதுவாக பிடித்து இருக்கிறது.


கவிஞரே, நாம் கிள்ளானில் ஜாதகம் பார்த்த சகோதருக்கு இந்த திருமணம் சரி இல்லை என்பதனை மிகத்திட்டவட்டமாக உணர்ந்திருந்தார் என்பதனை என்னால் உணர முடிகிறது. அவர் சொன்னார், அம்மனை துதிப்பவன், நல்லதே நடக்கும் என்று சொன்னால் நல்லா இல்லாத ஜாதகம் கூட நன்மையில் முடியும். அவரது குரல் பாதிதூக்கத்தில் இப்போதும் கேட்கும். பாவம் அவரால் சரி இல்லை என்று எப்படி சொல்ல முடியும், நாம் திருமண தேதி குறிக்க அல்லவா சென்றோம். இதற்கிடையில் இப்போது நமது ஜாதகம் என்ன சொல்கிறது என்பதும் முக்கியம். பார்த்துச் சொல்லுங்கள்.




அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்

உங்களுடைய ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தேன். நட்சத்திரம் பூரம் 2, ராசி சிம்மம், லக்கனம் மிதுனம். நீங்கள் அரசியல் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியும்.
பத்தாம் வீட்டு அதிபதியும் ஏழாம் அதிபதியுமான குரு லக்கனத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டையும் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டையும் பார்க்கிறார். இது
அரசியலில் வெற்றி வாய்ப்பைத் தருகின்ற அம்சமாகும்.

10- ஆம் அதிபதியான குரு லக்கனத்தில் இருப்பது கடின உழைப்பால் சொந்த முயற்சியால் முன்னுக்கு வருகின்ற நிலையை ஏற்படுத்தும். விஜய வீரிய ஸ்தானதிபதி சூரியன் 6-ஆம் இடத்தில் சிறப்பாக இருப்பதால் எத்தகைய எதிர்ப்பையும் சமாளிக்கும் வல்லமை உடையவர் நீங்கள். மற்றவர்களால் முடிக்க இயலாத காரியத்தை முழுவீச்சில் இறங்கி முடிக்கின்ற திறன் படைத்தவர்.

சந்திரன் 3-ஆம் வீட்டில் இருப்பது ஏதாவது நோய்த் தொல்லையைத் தந்து கொண்டே இருக்கும். லக்கனாதிபதி புதன் ரோகஸ்தானத்தில் இருக்கிறார்.
துடுக்காக பேசுதல், எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல், கர்வமாக நடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களை 6-ஆம் வீட்டில் இருக்கின்ற புதன் செய்யத் தூண்டுவார்.

இப்படி பல அம்சங்கள் இருக்கின்ற உங்கள் ஜாதகத்தில் பாதகமான நிலைகளையும் பார்ப்போம். உங்கள் நட்சத்திர பாதம் புதன் அம்சத்தில் அமர்ந்திருக்கிறது.

புதன் ஒரு அலி கிரகம். இவன் குடும்பவாழ்க்கைக்கு எதிரி. வாரிசுகள் இருக்கக்கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு கெடுதல் செய்பவன்.
அடுத்து களத்திரகாரனான சுக்கிரன் 8-ஆம் வீட்டில் கெட்டுப் போய் இருக்கிறான். இதுவும் பாதகமான அம்சம். கலகப் பிரியனாக இருத்தல், வயிறு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு நோய் போன்றவற்றை இந்தச் சுக்கிரன் ஏற்படுத்துவான்.

மேலும் சுக்கிரன் நிற்பது திருவோண நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில். இதற்கு செவ்வாய் அதிபதி. மேலே சொன்ன பலன்களை இந்தச் செவ்வாய் கண்டிப்பாக ஜாதகருக்கு கொடுத்தே தீருவான்.

முக்கியமாக செவ்வாய்.... மங்களன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் களத்திரஸ்தானமாகிய 7-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறான். இது மிகக் கடுமையான செவ்வாய் தோஷமாகும். இது குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்துகின்ற ஸ்தானாதிபத்தியமாகும்.

மேலும் ஆதிபத்தியத்திலும் மணவாழ்க்கைக்கு எதிராகவே ஜாதக பலன்கள் இருக்கின்றன. ரோகஸ்தானாதிபதியான செவ்வாய் (6- வீட்டுக்கு அதிபதி)
களத்திர ஸ்தானத்தில் (7-ஆம் வீட்டில் ) இருப்பது மிகவும் தீமை பயக்கக்கூடியதாகும்.
மனைவியைப் பிரித்து விடுவான். அல்லது மனைவிக்கு மாரகத்தைத் (மரணம்) தந்து விடுவான். இல்லையேல் மனைவியை தீராத நோயாளியாக்கி விடுவான்.

அதே மாதிரி 4-ஆம் அதிபதியான புதன் 6-ஆம் வீட்டில் இருப்பது உங்களுக்கு முன்கோபத்தையும் யாரையும் எடுத்து எறிந்து பேசுகின்ற
தன்மையையும் மற்றவர்களை புண்படுத்திப் பார்ப்பதில் சந்தோசத்தையும் ஒருவருக்கொருவர் கலகமூட்டி ரசிக்கின்ற மனப்பான்மையையும் உருவாக்குவான். இது குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கின்ற மிகப் பெரிய ஆபத்தான குணமாகும்.

ஆகக்கூட்டி பார்த்தால் குடும்பம் என வருகின்றபோது அதற்கான கிரகங்கள் பாதகமான அமைப்புப் பெற்று இருப்பதோடு தோஷ நிவர்த்தி அடையாத் தன்மையையும் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மையாகும்.

உங்கள் மணவாழ்க்கையைக் கெடுத்ததற்கு பிரதி உபகாரமாக பல நன்மைகளைச் செய்யும் விதமாக 12-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறான். அயல் நாட்டில் வேலை, மிகப்பெரிய செல்வாக்கு, புகழ், செல்வம், கீர்த்தி போன்றவற்றை சுக்கிரனே உங்களுக்கு அருளுகிறான். இந்த அமைப்பு விபரீத ராஜ யோக அமைப்பாகும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பது ஜோதிட பொன்மொழியாகும்.

கோச்சாரப்படி இப்போது நீங்கள் ஏழரைச் சனியின் பிடிக்குள் இருக்கிறீர்கள். சூரியனுக்கு எதிரி சனி என்பதால் சிம்ம ராசிக்காரர்களை ஒரு கை பார்த்து விட்டுத்தான் சனி ஓய்வெடுப்பான். அந்த வகையில் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சிரமத்தை எதிர் நோக்கத்தான் வேண்டும்.

இது வரை 6-ஆம் வீட்டில் இருந்த குரு இம்மாதம் 19-ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பத்திற்கு போகிறார். இது நல்ல அமைப்பாகும்.

மேலும் தற்போது ராகு மகா தசையில் சனி புத்தி நடக்கிறது. 2010- 7-ஆம் மாதம் வரை நீடிக்கும். இதுவும் சாதகமான காலம் அல்ல. அதற்கு பின்னர்
2013-1-ஆம் மாதம் வரை மிக நேர்த்தியான காலம் ஆகும். உங்கள் எதிர்கால லட்சியத்துக்கு ராஜ பாட்டை அமைக்கின்ற நேரம் என்றுகூடச் சொல்லலாம்.
2020- வருடத்தில் குருமகாதசை வருகிறது. அந்தக் காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருப்பீர்கள்.
மேலும் உங்களை மாதிரி ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு 45- வயதுக்கு மேல் அதாவது வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் மிகச் சிறப்பான
பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும் என்பது ஜோதிட மாமுனி புலிப்பாணியின் கூற்று.

இன்னொரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். கிள்ளான் ஜோதிடர் தொழில் முறையில் அதிகமான சம்பாத்தியத்தை பெற்றவர். அவருக்கு ஐந்து கிரகங்கள் உச்சம். இப்படி உச்சம் பெற்ற கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் அடைந்திருந்தால் ஆண்டியையும் அரசனாக்கி விடும்.

அதே நேரத்தில் பணம் ஒன்றே அவரின் குறிக்கோளாக மாறியது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதனால், அவரிடம் பாசத்தோடு ஒரு எச்சரிக்கை விடுத்தேன்.

"அண்ணே பணம் என்பது வாழ்க்கையின் இரத்த ஓட்டம் என்பார்கள்... ஆனால், இரத்த ஓட்டம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. நோயற்ற
வாழ்வே...குறைவற்ற செல்வம்" என சொல்வேன்.

அவரோ சிரித்துக் கொண்டே " குறைவற்ற செல்வமே... நோயற்ற வாழ்வாகும். காசைக் காட்டினால் நோய் வந்த வழியே திரும்ப ஓடிவிடும்." என சொல்வார். கோடி ரூபாய் சம்பாதிப்பதுதான் என் லட்சியம் என்பார்.

அவர் சொன்ன மாதிரியே இரவு பகல் பாராமல் உழைத்து சில கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார். கடந்த ஆண்டு தீபாவளி கழித்து மூன்றாம் நாள் மதிய வேளையில் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்தவர் பக்கத்தில் இருந்தவர்களுக்குக்கூட தெரியாமல் பரம பதம் அடைந்து விட்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய மனைவியும் இறந்துவிட்டார்.

அவர் என்ன வைத்திருக்கிறார். எங்கு வைத்திருக்கிறார் என்பது தெரியாமல் வாரிசுகள் தவிக்கிறார்கள். அதோடு பிள்ளைகளும் சரியான வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.

இந்த வேதனையும் என் மனதை பிறாண்டிக் கொண்டிருக்கிறது.

Monday 7 December 2009

விஜய்க்கு அரசியல் ஒத்து வராது

நடிகர் விஜய் தமிழகத்தின் இப்போதைய செல்லப்பிள்ளை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர். ரசிகர்களுக்கு இளைய தளபதி. விஜய் அரசியலுக்கு வரப்போகிறார்...என்ற செய்தி தமிழகத்தில் காட்டுத் தீ மாதிரி பரவியது. ரசிகர்கள் உற்சாகத்தில் கொந்தளித்தனர். வாண வெடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அறிவிப்புக்காக காத்திருந்தனர்.





காத்திருந்து காத்திருந்து கால்கள் வலித்ததுதான் மிச்சம். பார்த்திருந்து பார்த்திருந்து கண்கள் பூத்ததுதான் லாபம். உடைத்தவுடன் பொங்கிய அடங்கும் சோடாவைப் போல அந்த அறிவிப்பு கர்ப்பத்திலே இறந்து போனது.

இப்படி ஆனதற்கு ஆளும் கட்சி திமுக கொடுத்த அழுத்தம்தான் காரணம் என ஒரு தரப்பு கூறியது. இல்லை... இல்லை... எங்கள் தலைவரை ராகுல் காந்தி மதிக்கவில்லை என மற்றொரு தரப்பு மறுத்தது.

எது எப்படியோ விஜய்யின் ஜாதகம் சினிமாவுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். அரசியலுக்கு சாதகமாக இல்லை என்பதே என்னுடைய கருத்து.

முதலில் இவருடைய தனிப்பட்ட குணத்தைப் பார்ப்போம். இவர் மிகவும் அமைதியானவர். விளம்பர வெளிச்சம் இவருக்கு அவ்வளவாக ஒத்து வராது. பொதுமக்களிடம் நெருக்கமாக இருக்க முயற்சி செய்கிறார். ஆனால், முடியவில்லை.

சற்று உற்று நோக்கினால் விஜய் அரசியலுக்கு வருவதில் விஜய்யை விட விஜய்யின் அப்பா சந்திரசேகர்தான் ஆவலாகவும் ஆர்வமாகவும் இருந்தார்...இருக்கிறார்...

திரைப்படத்தில் நடப்பதற்கு கூட தந்தையால் உந்தப்பட்டு வந்தவர்தான் விஜய். தந்தையின் அனுசரணை இல்லாவிட்டால் சினிமாவில் இந்த அளவுக்கு பேர் போட்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இவர் ஜாதகத்தில் கலைக்கு நாயகனான சுக்கிரன் 11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். நடிப்புகாரகன் செவ்வாய் லக்கனத்தில். விஜய்யின் ராசியும் லக்கனமும் கடகம். இதுவரை ஏழரைச்சனியின் பிடியில் இருந்து இப்போதுதான் விடுபட்டிருக்கிறார்.

வாக்குஸ்தானாதிபதி சூரியன் 12- மறைவு இருந்தாலும் குருபார்வையால் பலம் அடைகிறார். மேலும் 2-ஆம் இடத்தையும் பார்வை செய்கிறார். கடகத்தில் செய்வாய் நீச்சம். ஆட்சி பெற்ற சந்திரனோடு இருப்பதால் நீசபங்கம் அடைந்து ராஜயோகத்தைத் தந்திருக்கிறார்.

குரு எட்டில் மறைந்தாலும் ஆயுள் ஸ்தானத்தை வலுவாக வைத்திருக்கிறார். ஆயுள் ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியுமான சனியையும் 5-ஆம் பார்வையாக பார்க்கிறார்.

இவையல்லாமே புகழ் பெற்ற மக்களை வசியப்படுத்துகின்ற நடிகராக வைத்திருக்க உதவுமே தவிர அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடிக்க ஆதரவாக இருக்காது.

4-ஆம் இடத்ததிபதி ஆட்சி பெற்றிருந்தால் அரசியலுக்கு வரலாம். 1-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் அரசியல் பிரவேசத்திற்கு உதவும். ஆனால், 7-ஆம் இடத்து அதிபதியும் 9-ஆம் இடத்து அதிபதியும் வலுவாக இல்லை.

மேலும் குரு 8-ஆம் இடத்தில் மறைந்திருப்பதும் இவருடைய அரசியல் பிரவேசத்திற்கு பாதகமான நிலையையே ஏற்படுத்தும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சர்ப்பகிரகம் நிற்பது பூர்வபுண்ணிய பலன்களைக் குறைப்பதாக கருதலாம்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்க்கும்போது விஜய் தனிக்கட்சி தொடங்கி அரசியல் பண்ணுவது என்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.

அரசியல் சம்பந்தப்பட்ட சில கிரகங்கள் சாதகமாக இருப்பதால் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நிலையில் மட்டுமே செல்வாக்கோடு இருக்க முடியும்.

தன்னுடைய செல்வாக்கை மற்றவர்களுக்கு தாரைவார்ப்பதைவிட நடிப்புத்துறையில் கிடைத்திருக்கும் அளப்பரிய ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டால் விஜய் இன்னொரு ரஜினியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday 1 December 2009

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரமாட்டார்

2012- உலகம் அழியுமா என்பதுதான் அனைவரின் மனதில் பயத்தோடு தொக்கி நிற்கும் விடை தெரியாத கேள்வி. இதை விட பொது மக்களை பிறாண்டிக் கொண்டு இருக்கும் கேள்வி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதுதான்.




இந்த ஆண்டு வருவார்.. அடுத்த ஆண்டில் அரசியல பிரவேசம் நடத்துவார் என அரசியல் ஆய்வாளர்களும் ஜோதிட விற்பன்னர்களும் சொன்னார்கள்...சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் சுருக்குப் பையில் போட்ட சுக்கான் கல்லு மாதிரி சும்மா இருக்கிறார்.

இப்போது சண்டி யாகம் செய்ய ரஜினி ஆயத்தமாகி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எதிர்ப்புகளை முறியடிக்கவும் எதிரிகளை வீழ்த்தவும் செய்யப்படுகின்ற யாகம் இது. அரசியல்வாதிகள்தான் இந்த யாகத்தின் மொத்த குத்தகையாளர்கள். இது ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி என பரவலாகப் பேசப்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 7-ஆம் இடத்து அதிபதி 9-ஆம் இடத்து அதிபதி ஆட்சி பெற்றிருந்தால் அரசியல் பதவிகளுக்கு வரலாம். ரஜினி ஜாதகத்தில் 9-ஆம் அதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். சந்திரனோடு இருப்பதால் சந்திர மங்கல யோகத்தையும் தருகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் 4- ஆம் இடத்து அதிபதி ஆட்சி உச்சம் பெற்று நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மந்திரி ஆகும் வாய்ப்பு உண்டு. ரஜினி ஜாதகத்தில் 4- ஆம் இடம் விருச்சிகம். இதன் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் அடைந்திருக்கிறார். அதோடு 6- ஆம் இடம் என்பது செவ்வாய்க்கு மிக அனுகூலமான இடமாகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்கனாதிபதியாக இருக்கும் கிரகம் அம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறதோ... அந்த ராசியாதிபதி ராசிச் சக்கரத்தில் கேந்திர கோணம் ஏறினால் அரசியலில் கோலோச்சலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால் ரஜினியிடம் இருக்கிற பிரத்தியேக குணங்களைப் பார்க்க வேண்டும். ரஜினி மனதில் பட்டதை அப்படியே கூறுபவர். இது அரசியலுக்கு ஆகாது. பொய் சொல்லக்கூடாது என்ற கொள்கையுடையவர். இது அரசியல் கொள்கைக்கு எதிரானது. தன்னால் யாருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் தீங்கு வரக்கூடாது என நினைப்பவர். அரசியலில் தேவைப்பட்டால் பொதுச்சொத்துகளை எரிக்க வேண்டும். அவசியப்பட்டால் ஆளையே கொளுத்த வேண்டும். இதை ரஜினி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

நேரத்துக்கு தகுந்த மாதிரி நிறம் மாற வேண்டும். இது ரஜினிக்கு ஆகவே ஆகாது. லஞ்ச ஊழலே கூடாது என நினைப்பவர் ரஜினி. அரசியலில் அந்தரங்கச் செயலாளரைக்கூட அடக்கி வைக்க முடியாது.

இப்படி நடைமுறை வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களே ரஜினிக்கு எதிராக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

இப்போது நான் சொல்லப்போகிற விஷயம்தான் மிக முக்கியமானது. ஒருவரின் ஜாதகத்தில் 1-ஆம் 2-ஆம் இடத்து அதிபதிகள் கேந்திரத்திலோ கோணத்திலோ இருந்தால் பிரம்ம ஞானியாக திகழ்வார் என்பது ஜோதிட விதி. 1- ஆம் இடத்து அதிபதி சூரியன் கேந்திரத்தில் இருக்கிறார். 2- ஆம் இடத்து அதிபதி புதன் கோணத்தில் இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கின்ற போது ரஜினியின் அரசியல் ஆற்றலைவிட ஆன்மீக சக்தியே பலம் பொருந்தியதாக இருக்கிறது. தேரை இழுத்து தெருவில் விட்ட மாதிரி சிலரால் ரஜினி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டாலும் பின்னால் இருந்து மற்றவர்களை இயக்குவாரே தவிர நேரடியாக நிற்க மாட்டார்.

ஆகவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது கனவிலும் நடக்காத காரியம். அவர் அரசியலுக்கு வருவார் என அடித்துக் கூறுவது ரஜினி ரசிகர்களுக்கு கொடுக்கும் திருநெல்வேலி அல்வா என்பதில் சந்தேகமில்லை.

அப்படி ஒருவேளை வந்தால் மருத்துவ அதிசயம், அறிவியல் அதிசயம், வான்வியல் அதிசயம் எனபதுபோல் அரசியல் அதிசயம் என கொள்ளலாம்.