Monday 12 January 2015

உயிரைப் பறித்த ஏழரைச் சனி

மிக மன வேதனையோடு இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உள்ளத்தைப்  பிசைந்து விழிகளைக் குளமாக்கிய ஒரு மரணத்தின் வலி இன்னும் என் இதயத்தை விட்டு இறங்கவில்லை.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு தம்பதியர் என்னைச் சந்தித்தனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு ஆண்.

மகள்களுக்குத் திருமணம் முடித்து விட்டார். மகன் கொஞ்சம் உடற்குறை உடையவர். பேசும் போது நாக்கு சற்று குளறும்.

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அவ்வளவாக நெருக்கம் கிடையாது. எலியும் பூனையும் பேசிக் கொள்வது போல்தான் எப்போதாவது அவர்களுக்கு இடையே உரையாடல் நடக்குமாம்.

ஜாதகத்தைப் பார்த்தேன். பித்ருகாரகன் மிக மோசமான நிலையில் இருந்தார். ஒன்பதாம் இடத்தில் சனியும் ராகும்.

அந்தப் பையன் ஒரு வங்கியில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். பையனைக் கூட்டி வர முடியுமா என்று கேட்டேன்.

நாங்கள் கூப்பிட்டால் வரமாட்டான் என்று சொல்லி விட்டார்கள். தொலைபேசியில் நான் அழைத்தேன்.

மறுப்புக் கூறாமல் அரை மணி நேரத்தில் வருவதாக தெரிவித்தார். பெற்றோரை மறைவாக வீட்டுக்குள் இருக்கச் சொன்னேன்.

குறிப்பிட்ட நேரத்தில் வந்து விட்டார். நான் பேச ஆரம்பித்த சிறிது சில நிமிடங்களில் என் வசம் ஈர்க்கப்பட்டு விட்டார்.

தகப்பனாரின் தியாகங்கள், தாயார் பட்ட சிரமங்கள் அனைத்தையும் அவருக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறினேன்.

ஜாதக பலாபலன்களையும் தெரிவித்தேன். அவர் ஒரு பெண்ணைக் காதலித்து அது நிறைவேறாமல் போய்விட்டதாக குறிப்பிட்டார்.

அவமிருத்த யோக அமைப்பு. ஆகையால் தற்கொலைக்கு ஆட்படுகின்ற நிலை ஏற்படலாம் என்பது என் கணிப்பு.

வாழ்க்கையில் வரிசை பிடித்து நிற்கும் இடையூறுகளையும் இடர்பாடுகளையும் எடுத்துக் கூறி, அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று விளக்கினேன்.

புரிந்து கொண்டார். புதுச் சிந்தனைகளை நடைமுறையில் புகுத்திக் கொண்டார். அப்பாவிடம் அன்பாக பேசத் தொடங்கினார்.

குடும்பத்தில் குதூகலம் களை கட்டியது. கால் கட்டுப் போட பெண் பார்க்கத் தலைப்பட்டனர். உறவு முறையிலே ஒரு பெண் அமைந்தது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இடி போன்ற செய்தி என்னை வந்து அடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் தலை நசுங்கி மாண்டு விட்டார் என்பதுதான் அந்தத் தகவல்.

ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்ததால் அடக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அங்கு சென்றேன்.

என்னைக் கண்டதும் தாயும் தந்தையும் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள். ஆறுதல் சொல்லக் கூட என் நாக்குக்குத் தைரியம் இல்லை.

மருத்துவரும் ஜோதிடரும் லௌகீக வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலைப்படக் கூடாது. அவர்களுக்கு முன்னறியும் ஆற்றல் இருப்பதால் பக்குவம் அவர்கள் பக்கத்திலேயே நிற்க வேண்டும்.

தனுசு ராசிக்காரர். பலவீனப்பட்ட ஆயுள் ஸ்தானம். மாரகாதிபதி திசை சந்திப்பு. ஏழரைச் சனி தொடக்கம். 

வண்டி வாகனங்கள் ஓட்டாமல் இருக்க இயலாது. இருப்பினும் இரண்டு மடங்கு கவனம் தேவை. ஏழரைச் சனியின் தாக்கம் உடலை ஊனப்படுத்தி விடலாம் என ஜாதகம் பார்க்கும்போது எச்சரித்து இருந்தேன்.

ஊனப்படுத்தி விடும் என்றுதானே சொன்னீர்கள்... உயிரைப்பறித்து விடும் என்று சொல்லவில்லையே என என் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார்.

ஆயுளை நிர்ணயிக்க நாம் ஆண்டவன் இல்லை. இருந்தாலும் அந்த அகால மரணம் என்னை உலுக்கி விட்டது.

Wednesday 7 January 2015

தாய் தந்தையரை எட்டி மிதிக்கும் பிள்ளை

தாயிற் சிறந்த கோவிலுமில்லை... தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... இந்த ஒரு வாசகத்தை எத்தனை பிள்ளைகள் திருவாசகமாக கருதுகிறார்கள் இந்த நாளில்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.... இந்த பொன்மொழியை எத்தனை பிள்ளைகள் எண்ணிப் பார்த்து நடக்கின்றனர்.

ஆலாய்ப் பறந்து தனம் தேடி அலையும் அவசர காலம் இது. சொந்தம் சுருத்து பந்த பாசம் எல்லாமே பணத்துக்குப் பின்னால்தான்.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தோள் மீதும் மார் மீதும் போட்டு வளர்த்து கல்விக் கண்ணைக் கொடுத்த தந்தையையும் எத்தி விட்டு ஏறி மிதித்து வெற்றிக் கொடி நாட்ட விரையும் பிள்ளைகள் அதிகரித்து விட்ட காலம் இது.

அண்மையில்  வயதான தம்பதியர் என்னைச் சந்தித்தார்கள். வசதியாக வாழ்ந்தவர்கள் என்பதை அசதியாக இருந்த அந்த நேரத்திலும் உடல் வாகு உணர்த்தியது.

களை பறிக்காத வயலைப் போல களை இழந்த முகம். அவர்களை வருத்துவது உடல் வலியா... மனவலியா... என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனை அவர்கள் தோற்றத்தில் விளையாடி இருந்தது.

திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தது ஆண் குழந்தை. அந்தக் குழந்தையைக் கருவறையில் சுமக்க தாய் இருந்த விரதமும் தந்தை நோற்ற நோன்பும் வார்த்தைகளில் வடிக்க இயலாது.

தவமாய் தவமிருந்து பெற்ற மகனின் மேனியில் பூ விழுந்தால்கூட தாயின் உடல் புண்ணானது. ஈ அமர்ந்தால் கூட தந்தையின் இதயம் வலித்தது.

அழுதால் குழந்தைக்கு ஆரோக்கியம். இது மருத்துவ உண்மை. ஆனால், சின்னச் சிணுங்கள் கூட பெற்றவர்களை பேதலிக்க வைத்தது.

படிக்க வைத்தார்கள். பல கலைகளை வடிக்க வைத்தார்கள். பள்ளிக் காலத்தில் மகன் எழுதும் பேனாவில் மைக்குப் பதிலாக தங்கள் இரத்தத்தை ஊற்றி அனுப்பி வைத்தார்கள்.

பெற்றோரை மகன் ஏமாற்றவில்லை. பள்ளி வாழ்க்கை மகனின் குணத்தை மாற்றவில்லை. பட்டம் பெற்றான், பெரிய பதவிக்கு வந்தான்.

ஒரு பிள்ளைதானே என்று  மொத்த சொத்தையும் விற்று மகனின் வாழ்க்கைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தார்கள். திருமணமும் செய்து வைத்தார்கள். பாசமாக இருந்த மகன் மோசமாக மாறி விட்டான்.

அடிவயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்க்கு பிடி சோறு போட மகனுக்கு மனமில்லை. கண்ணை இமைபோல காத்த தந்தை கனக்கும் சுமையாக மாறிப் போனார்.

'வீட்டின் பெயரோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்'... கண்ணீர் மல்க ஒரு கவிஞன் எழுதிய வெந்நீர் வரி இது.

இந்தக் கவிதை வரிக்கு உயிர் கொடுப்பதைப் போல உயிர் கொடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்து விட்டான் அந்த மகன்.

எங்களுக்கு ஏன் இந்த நிலை. செத்த பிறகு கொள்ளி போடுவான் என்று நினைத்த மகன், உயிரோடு இருக்கும்போதே கொள்ளி வைத்து விட்டான். இதற்கு என்ன காரணம் என்று என்னிடம் கேட்டார்கள்.

பிள்ளைகளின் நிலை குறித்து நிர்ணயம் பண்ணுவது புத்திரஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் பாவம்.

இது கெட்டுப் போகக் கூடாது. ஐந்தாம் பாவத்தின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். புத்திரகாரகன் பலமாக சஞ்சரிக்க வேண்டும்.

இவற்றில் ஏதேனும் கோளாறு இருந்தால் பிள்ளைபேறு ஏற்படுவது கஷ்டம். ஒருவேளை ஆண்டவனின் அனுக்கிரகத்தால் குழந்தை பிறந்தால் மூன்று வகையான பாதிப்புகளைக் கொண்டு வரும்.

1. பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் மடிந்து போகும். அல்லது தீர்க்க இயலாத வியாதியால் பயனற்றுக் கிடக்கும்.

2. தாய் தந்தையரை விட்டு பிரிந்து செல்லும். அல்லது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டி அடிக்கும்.

3. ஒரே வீட்டில் வசிப்பார்கள். பெற்றோரை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். நடைபிணங்களாக வீட்டில் நடமாட வேண்டிய அவல நிலை ஏற்படும்.

இந்த விபரங்களை எடுத்துக் கூறினேன். மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இறைவன் அவதாரங்கள் அடையும் இன்ப துன்பங்களை விளக்கினேன்.

நடைமுறை வாழ்க்கையில் என்னைச் சந்தித்து சோகங்களைப் பரிமாறிக் கொண்ட பல பெற்றோரின் கதைகளை அவர்களுக்கு புரிய வைத்தேன்.

ஆன்மீக ரீதியாக பல அம்சங்களை அவர்களுக்கு உணர்த்தினேன். அதன் பின்னர் அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. நீண்ட நேர தேறுதலுக்கு பின்னரே அவர்கள் என்னிடம் இருந்து விடை பெற்றார்கள். 

தள்ளாத வயதில் பெற்றோரை ஒதுக்கித் தள்ளாத பிள்ளைகள் கிடைப்பது நாம் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலனால்தான் அமையும்.

என்ன செய்வது இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.





 

Saturday 3 January 2015

தொடாமல் தொடர்ந்த முப்பது வருடக் காதல்

ஆழ்கடலில் மூழ்கினால் ஆச்சரியங்கள் பலவற்றைச் சந்திக்கலாம் என ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான்.

நான் அடியவர்க்கும் அடியவன். இருப்பினும் என்னை நம்பி ஒவ்வொரு நாளும் பலர் வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் இன்னல்களையும் குறிப்பிடுகிறார்கள்.

அவற்றில் சில என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று இருக்கின்றன. இது சாத்தியம்தானா என்று சிந்திக்க வைத்திருக்கின்றன.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க மாது. திருமணமாகி மூன்று குழந்தகளுக்குத் தாய். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

பொருளாதாரத்திலும் குறைவில்லை. இருப்பினும் அவர் மனதில் நெருஞ்சி முள்ளாய் உருண்டு கொண்டிருந்த ஒரு பிரச்சினையை என்னிடம் மனம் விட்டு சொன்னார்.

இவருக்கு திருமணம் ஆன புதிது. கணவர் மேல் காதல் இல்லாவிட்டாலும் வெறுப்பு இல்லை. இவர் படித்தவர். இவருடைய கணவனுக்கு படிப்பறிவு இல்லை.

இருந்தாலும் தன்னைத் தவிர உலகத்தில் யாரும் அறிவாளி இல்லை என்பது கணவரின் எண்ணம். தோற்றப் பொருத்தத்தில் இருவருக்கும் மிகப் பெரிய இடைவெளி.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெரிய மாமனார் மகன் மீது இனம் தெரியாத ஈர்ப்பனிந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டு விட்டது. இரு வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்லை.

சுமார் நான்கு வருடங்களாக அந்தப் பையனை நினைத்து மனதில் மருகிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கு பின்னர் இவர்கள் பேசிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

தனியாக சந்திக்க வேண்டும் என்று அந்தப் பையனுக்கு தூது அனுப்பி இருக்கிறார். சந்திக்க சம்மதம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் என்னைத் தொடக்கூடாது என்பது அந்தப் பையன் விதித்த நிபந்தனை.

இவனுக்கு என்ன பைத்தியமா.... அழகான பெண் அழைக்கிறார். தொடக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார். தூது போனவருக்கு ஆச்சரியம்.

இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அந்தக்காலகட்டத்தில் இரு குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிதைந்து போயிருந்தது. இதற்கிடையில் பையனுக்குத் திருமணம் ஆனது. குழந்தைகளும் பிறந்தன.

இருந்தாலும் இவர்கள் உறவு மட்டும் வாடிப் போகவில்லை. வடிவம் மாறவில்லை. இனிமை குறையவில்லை. இளமை குன்றவில்லை.

தாலி கட்டியர் இன்னொருவராக இருந்தாலும் இவரைத் தான் கணவனாக எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறார்.

இருவருக்கும் சம வயது. இரு குடும்பத்தவரும் மன முரண்பாடு இல்லாமல் உறவுகளைப் பேணி காத்து வருகின்றனர். இதுவரை இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளவில்லை என்பது வியப்பான உண்மை.

சின்ன கண்ணீர் முத்து விழியோரத்தில் எட்டி பார்க்க அந்தப் பெண் சொன்ன இந்தக் கதையில் துளியளவும் பொய் இல்லை என்று என் மனம் அறிவுக்கு அறிவுறுத்தியது.

இப்பொழுது இவர் கேள்வி என்ன தெரியுமா.... தாலி கட்டியர் ஒருவர் இருக்க... இன்னொருவரைக் கணவராக வரித்து வாழ்ந்து விட்டேனே.. இதற்கு என்ன காரணம்.

நான் செய்தது தவறா.. அல்லது என் ஜாதக  அமைப்பு இப்படித்தான் இருந்ததா... விடைகூறுங்கள் சாமி என்று கேட்டார்.

ஜாதகத்தை மிக அணுக்கமாக ஆராய்ந்தேன். இன்னும் சில அம்சங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தேன்.

அந்தப் பெண்ணுக்கு இரு மண அமைப்பு. போன ஜென்மத்தில் இந்தப் பெண்ணும் அந்தப் பையனும் கருத்தொருமித்த கணவன் மனைவியாக இருந்திருக்கிறார்கள்.

இந்தப் பிறவியில் உறவினர்களாக பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் மலேசியாவில் மலாக்கா மாநிலத்தில் பிறந்த இந்தப் பெண் இந்தியாவில் திருமணமாகிச் சென்றிருக்கிறார்.

அங்கு அந்தப் பையனைச் சந்தித்து இருக்கிறார். போன ஜென்மத்தின் நினைவு பூரணமாக வராவிட்டாலும் அதன் விட்ட குறை தொட்ட குறையாக இவர்களின் உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களை எடுத்துக் கூறி அவர் மனதைப் பிசைந்து கொண்டிருந்த பிரச்சினையைக் கிள்ளி எறிந்தேன்.

இதயம் முழுக்க கனத்துக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்த மகிழ்ச்சியோடு என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

மகா பாரதத்தில் ஐவருக்கு மனைவியான பாஞ்சாலி கூட கணவன்மார்களை ஆண்டுக்கு ஒருவராக மகிழ்வித்தார்.

இந்தப் பெண்ணோ உள்ளத்தால் நினைந்து உடலால் விலகி உறவைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறார். எல்லாம் இறைவன் செயல்.
 

Thursday 1 January 2015

பணம் இருந்தால் திருமணம் நடந்து விடுமா?

ஏராளமாக பணம் இருந்தால் எல்லா வகையான இன்பங்களையும் அடைந்து விடலாம் என பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அது எந்தளவுக்கு உண்மை... சாத்தியம். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதைப் போலத்தான் இந்த எண்ணமும்.

பணம் படைத்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு மருத்துவருக்குத்தான் தெரியும் உலகத்தில் எத்தனை வகை நோய் இருக்கிறது என்று.

ஆளைப் பார்த்தால் ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவாக இருப்பார். ஆனால், 100 மீட்டர் வேகமாக நடந்தால் 200 தடவை இழுத்து மூச்சு விடுவார். கொஞ்ச நேரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.

சிலர் சீக்குக் கோழி போல தெரிவார்கள். ஆனால், இவர்களுக்கும் நோய்க்கும் நெடுந்தூரம். இவர்களிடம் நோய் நெருங்கவே பயப்படும்.

ஆகவே, பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கையை பாகுபடுத்திப் பார்த்து விட இயலாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியாது.

என்னிடம் வருகின்றவர்களின் வாழ்க்கைக் கதைகள் பல வியப்பான விஷயங்களை எனக்கு வெளிப்படுத்துகின்றன.

இப்படியும் இருக்குமா... நடக்குமா... என சில பிரச்சினைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து... வசதிக்கு பஞ்சமில்லாத குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது என்னைச் சந்தித்தார்.

இரண்டு ஆண்கள்.. ஒரு பெண்.. ஒரு மகனுக்கு திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.

மகளுக்கும் கல்யாணம் ஆகி அவரும் அமெரிக்காவில்தான் வாழ்கிறார். மூன்றாவது மகனும் அமெரிக்காவில்தான் வேலை பார்க்கிறார்.

கடைசிப் பையனுக்கு மட்டும் கல்யாண வைபவம் கண்ணாமூச்சி காட்டுகிறது. பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

ஒரு பெண்ணை பேசி முடித்து அந்தா.. இந்தா.. என்று திருமண நாள் நெருங்கும்போது பெண் பின்வாங்கி விட்டார்.

பெண்கள் வெறுத்து ஒதுக்குமளவுக்கு மாப்பிள்ளை அசிங்கமாக இல்லை. கண்ணுக்கு லட்சணமாக எழில் குறையாத நிலையில்தான் இருந்தார்.

ஏழாம் இடமும் எட்டாமிடமும் பாதிக்கப்பட்டிருந்தது. காளசர்ப்பதோஷம் வேறு அனைத்து கிரகங்களையும் முடக்கி வைத்திருந்தது.

வானளாவ வசதி இருந்தும்... படி வைத்து ஏறி பணத்தை எடுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தும் பிள்ளைக்கு திருமணம் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது.

மேலும், அந்த அம்மாவின் குடும்ப வாழ்க்கை வெறும் 16 வருடம்தான். பூத்துக் குலுங்கி புதுவாசம் பரப்பி மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் இழந்திருக்கிறார்.

என்னைப் பற்றி ஏனோதானோவென்று நினைத்து மகனின் ஜாதகத்தைக் கொடுத்த அவர், என் கணிப்பையும் சொன்ன கருத்தையும் பார்த்து பெரிய மகன் பேரன் பேத்திகள், மகள் மருமகன் ஜாதகங்களையும் கொடுத்தார்.

எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கை அருகுபோல் வேரோட வேண்டிய நேரத்தில் கருகிப் போனதற்கும் மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள்.

எனக்கு பூரண தெளிவு பிறந்திருக்கிறது. இதுவரை என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த கவலையின் கனம் குறைந்திருக்கிறது என்று சொல்லி நான் எதிர்பார்த்ததை விட காணிக்கையை பல மடங்கு கொடுத்தார்.

நான் மறுத்தும் கேட்கவில்லை. வாங்கிக் கொண்டால்தான் மனம் திருப்தி கொள்ளும் என்று பிடிவாதமாக பாசத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது ஒரு பெண் அமைந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். குவைத் நாட்டில் வேலை பார்ப்பதாகச் சொல்லி ஜாதகத்தையும் அனுப்பி வைத்தார்.

பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் உள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் உள்ள குறை பாதிப்பைச் சமப்படுத்தி நிற்கிறது.

கண்டிப்பாக நான் கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.. அவ்வளவு பெரிய பணக்கார மாது அவ்வப்போது என் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார்.

கஷ்டமும் கவலையும் எளியவர்களுக்கு மட்டுமல்ல... பணம் படைத்த வலியவர்களுக்கும் உண்டு. எல்லாம் இறைவன் செயல்.