Monday 12 January 2015

உயிரைப் பறித்த ஏழரைச் சனி

மிக மன வேதனையோடு இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உள்ளத்தைப்  பிசைந்து விழிகளைக் குளமாக்கிய ஒரு மரணத்தின் வலி இன்னும் என் இதயத்தை விட்டு இறங்கவில்லை.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு தம்பதியர் என்னைச் சந்தித்தனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு ஆண்.

மகள்களுக்குத் திருமணம் முடித்து விட்டார். மகன் கொஞ்சம் உடற்குறை உடையவர். பேசும் போது நாக்கு சற்று குளறும்.

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அவ்வளவாக நெருக்கம் கிடையாது. எலியும் பூனையும் பேசிக் கொள்வது போல்தான் எப்போதாவது அவர்களுக்கு இடையே உரையாடல் நடக்குமாம்.

ஜாதகத்தைப் பார்த்தேன். பித்ருகாரகன் மிக மோசமான நிலையில் இருந்தார். ஒன்பதாம் இடத்தில் சனியும் ராகும்.

அந்தப் பையன் ஒரு வங்கியில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். பையனைக் கூட்டி வர முடியுமா என்று கேட்டேன்.

நாங்கள் கூப்பிட்டால் வரமாட்டான் என்று சொல்லி விட்டார்கள். தொலைபேசியில் நான் அழைத்தேன்.

மறுப்புக் கூறாமல் அரை மணி நேரத்தில் வருவதாக தெரிவித்தார். பெற்றோரை மறைவாக வீட்டுக்குள் இருக்கச் சொன்னேன்.

குறிப்பிட்ட நேரத்தில் வந்து விட்டார். நான் பேச ஆரம்பித்த சிறிது சில நிமிடங்களில் என் வசம் ஈர்க்கப்பட்டு விட்டார்.

தகப்பனாரின் தியாகங்கள், தாயார் பட்ட சிரமங்கள் அனைத்தையும் அவருக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறினேன்.

ஜாதக பலாபலன்களையும் தெரிவித்தேன். அவர் ஒரு பெண்ணைக் காதலித்து அது நிறைவேறாமல் போய்விட்டதாக குறிப்பிட்டார்.

அவமிருத்த யோக அமைப்பு. ஆகையால் தற்கொலைக்கு ஆட்படுகின்ற நிலை ஏற்படலாம் என்பது என் கணிப்பு.

வாழ்க்கையில் வரிசை பிடித்து நிற்கும் இடையூறுகளையும் இடர்பாடுகளையும் எடுத்துக் கூறி, அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று விளக்கினேன்.

புரிந்து கொண்டார். புதுச் சிந்தனைகளை நடைமுறையில் புகுத்திக் கொண்டார். அப்பாவிடம் அன்பாக பேசத் தொடங்கினார்.

குடும்பத்தில் குதூகலம் களை கட்டியது. கால் கட்டுப் போட பெண் பார்க்கத் தலைப்பட்டனர். உறவு முறையிலே ஒரு பெண் அமைந்தது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இடி போன்ற செய்தி என்னை வந்து அடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் தலை நசுங்கி மாண்டு விட்டார் என்பதுதான் அந்தத் தகவல்.

ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்ததால் அடக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அங்கு சென்றேன்.

என்னைக் கண்டதும் தாயும் தந்தையும் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள். ஆறுதல் சொல்லக் கூட என் நாக்குக்குத் தைரியம் இல்லை.

மருத்துவரும் ஜோதிடரும் லௌகீக வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலைப்படக் கூடாது. அவர்களுக்கு முன்னறியும் ஆற்றல் இருப்பதால் பக்குவம் அவர்கள் பக்கத்திலேயே நிற்க வேண்டும்.

தனுசு ராசிக்காரர். பலவீனப்பட்ட ஆயுள் ஸ்தானம். மாரகாதிபதி திசை சந்திப்பு. ஏழரைச் சனி தொடக்கம். 

வண்டி வாகனங்கள் ஓட்டாமல் இருக்க இயலாது. இருப்பினும் இரண்டு மடங்கு கவனம் தேவை. ஏழரைச் சனியின் தாக்கம் உடலை ஊனப்படுத்தி விடலாம் என ஜாதகம் பார்க்கும்போது எச்சரித்து இருந்தேன்.

ஊனப்படுத்தி விடும் என்றுதானே சொன்னீர்கள்... உயிரைப்பறித்து விடும் என்று சொல்லவில்லையே என என் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார்.

ஆயுளை நிர்ணயிக்க நாம் ஆண்டவன் இல்லை. இருந்தாலும் அந்த அகால மரணம் என்னை உலுக்கி விட்டது.

No comments:

Post a Comment