Monday 23 February 2015

இறந்த பிள்ளை பேசுகிறது...ஆவியாக வந்து...!

அரசியலில் செல்வாக்கு மிக்கவர். எல்லாரிடமும் அன்பாக...அணுக்கமாகப் பழகக்கூடியவர். என்னுடைய நீண்ட கால நண்பர்.
நான் மலையகத்தில் தங்கும் நிலை ஏற்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.
கடந்த மாதம் நான் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூரில் உணவகம் நடத்தும் நண்பரின் மைத்துனர் திருமணத்தில் அவரைச் சந்தித்தேன்.
கல்யாணம் மதுரையில் நடந்தது. மதிய உணவுக்குப் பின்னர் நானும் அவரும் காரில் காரைக்குடிக்குத் திரும்பினோம்.
அவர் மனைவியும் கூட இருந்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். இருப்பினும் அவர் முகத்தில் ஏதோ ஒரு சோகம் தோன்றித் தோன்றி மறைந்தது.
பேச்சு வாக்கில் கேட்டேன். அவர் சொன்ன சம்பவங்கள் என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். ஒரு பெண்ணுக்கு திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். இன்னொரு பெண் படித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் குழந்தை 6 வயதில் இறந்து விட்டது. இறந்த குழந்தை நேரடியாக வந்து பேசுகிறது என்று நண்பரின் மனைவி சொன்னார்.
அந்தக் குழந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நண்பரின் மனைவி பிறந்த ஊரில் சொந்த இடத்தில் சின்ன கோவில் கட்டி இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் விழா எடுத்து அன்னதானம் வழங்கி வந்திருக்கிறார்கள். இதற்கு அவரின் தம்பி இருவரும் ஒத்துழைப்புத் தந்திருக்கிறார்கள்.
என்ன காரணத்தாலோ இரண்டு குடும்பத்துக்கும் மன வருத்தம் ஏற்பட்டு விட்டது.
அதனால் பூஜை போடக்கூடாது . அன்னதானம் வழங்கக்கூடாது என தம்பிகள் இருவரும் தகராறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் மோதல் முற்றி என் நண்பரின் கண் எதிரிலேயே அவரின் மனைவியை அடித்து கையை ஒடித்து விட்டார்கள்.
என் நண்பருக்கு ஜாதகத்தில் அதீதமான நம்பிக்கை. அடிக்கடி ஜாதகம் பார்ப்பது வழக்கம்.
"நான் துலாம் ராசி. ஏழரைச் சனி நடக்கிறது. வம்பு வழக்கு வேண்டாம். உடலில் ஒச்சம் ஏற்படலாம். சிறை செல்ல நேரலாம். உயிருக்குக்கூட ஆபத்து உண்டாகலாம் என ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே, நடந்த அக்கிரமங்களைக் கண்களால் கண்டும் கையைக் கட்டிக் கொண்டு கல்லைப் போல் இருந்து விட்டேன்" என்று சொன்னார்.
அப்போது அவர் மனைவியின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
மலேசியாவுக்கு போகும் முன்னால் வீட்டுக்கு வந்து விட்டுச் செல்ல முடியுமா எனக் கேட்டார்.
காரைக்குடியில் உள்ள அவரின் வீட்டுக்குப் போனேன். ஜாதகத்தைக் காண்பித்தார். பார்த்தேன்.
இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த என் மகள் இப்போது என் தம்பிகளுக்குச் சாதகமாக இருக்கிறாள்.
அவர்களைக் குறை கேட்க மறுக்கிறாள். அர்த்த ஜாமத்தில் என் முன்னே தோன்றி அழுகிறாள். எதுவும் பேச மாட்டேன் என்கிறாள் என்று அவர் சொன்னார்.
ஜாதகப்படி அந்த நண்பருக்கு இக்கட்டான சூழ்நிலை. மேலும் அவர் வசிக்கும் வீட்டில் வாஸ்து குற்றம் அதிகமாக உள்ளது.
அதைச் சுட்டிக் காட்டினேன். ஒப்புக் கொண்டார். காளஹஸ்திக்கும் திருநள்ளாறுக்கும் திருப்பதிக்கும் ஆண்டுக்கு இரு முறை போய் வருவார்.
சனி ஈஸ்வரத் தலமான பெரிச்சிக் கோவிலுக்கு சனி தோறும் சென்று வருவார்.
தட்சணாமூர்த்தி எழுந்தருளி இருக்கும் பட்டமங்களத்துக்குச் சென்று வியாழக்கிழமைகளில் தவறாது  வழிபாடு செய்வார்.
ஆகவே, ஆலயங்களுக்குச் செல்லுங்கள் என்று பரிகாரம் சொல்வது பொருத்தமற்றது.
அதனால் இதற்கு மாற்று ஏற்பாடாக சில காரியங்களைச் செய்யச் சொல்லி இருக்கிறேன்.
மலேசியாவில் இருந்து திரும்பி வந்த பின்னால் வீட்டில் கவச யாகம் ஒன்றை நடத்தலாம் எனச் சொன்னேன்.
நான் ஜாதக பலன்களைச் சொன்னபோது நண்பரின் மனைவி பல உண்மைகளை ஒத்துக் கொண்டார்.
ஆகவே கண்டிப்பாக இந்த யாகத்தைச் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.
கம்பீரமாகவும் கலகலப்பாகவும் காட்சி தரும் என் நண்பரின் வீட்டுக் கதவுகளுக்குப் பின்னால் இத்தனை துன்பங்களும் துயரங்களும் மண்டிக் கிடப்பதை எண்ணிப் பார்க்கும்போது விதியின் கரங்கள் எத்தனை வலிமையானவை என உணர்கிறேன்.

No comments:

Post a Comment