Monday 26 December 2022

மீண்டும் சந்திக்கிறேன்

 எனது அருமை வலைப்பூ உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஜோதிடம் சம்பந்தப்பட்ட பதிவுகளை போடுவதற்கான அவகாசம் இல்லாத நிலை ஏற்பட்டது.

காரைக்குடியில் ஜோதிட அலுவலகம் தொடங்கி பலருக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்கிறேன்.

அது மட்டுமில்லாமல் ஜாதகம் எழுதுகிறேன் பொருத்தம் பார்க்கிறேன் வாஸ்து  பார்த்து நிறை குறைகளை சரி செய்கிறேன்.

அந்த வகையில் ஒரு நிறைவான மகிழ்வான நிலையில் நாட்கள் நகர்கின்றன.

இனிவரும் காலங்களில் நுணுக்கமான ஜோதிடப் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன்.

அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.


Monday 1 February 2021

அரசியலும் ஜோதிடமும்



சாதாரணமாக ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதகத்தில் நிறை குறைகளை வைத்து பலன் சொல்கிறோம்...

ஆனால் அரசியல்வாதிகளுக்கு இப்படி பலன் சொல்வது பொருந்துமா தனிப்பட்ட ஜாதகம் தான் வேலை செய்யுமா...

அவர்களுடைய செல்வாக்கை வெற்றி வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துவது எந்த கிரகம் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் ஆய்வு செய்வோம்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைப்பூவில் வலம் வர தயாராக இருக்கிறேன் வாழ்த்துங்கள்... வரவேற்புக் தாருங்கள்...

Wednesday 25 November 2015

ரஜ்ஜு தட்டினால் வாழ்க்கை நாசமா....?

" உனக்கு என்ன குறை வச்சேன். எதுக்கு ஏட்டிக்கு போட்டியா பேசுறே. புருசன்கிற மரியாதை வேண்டாம் ஒரு மனுசனாக்கூட மதிக்க மாட்டேன்கிறியே"

" சும்மா... நிறுத்துக்கங்க... எப்ப நான் உங்கள மதிக்கலே. வீட்டுல இருக்கிற நாய் பூனையைக் கூட கொஞ்சுறீங்க. என்னைக் கண்டா மட்டும் காண்டா மிருகத்தைப் பார்க்கிற மாதிரி நினைக்கிறீங்க.

" பாத்தியா.. நான் ஒரு வார்த்தை சொன்னா... உன்னோடு வாயில இருந்து ஓட்டை வாளில தண்ணி கொட்டுற மாதிரி ஓராயிரம் வார்த்தைங்க வந்து விழுது."

" மத்தவங்க பேசுனா..பல்லை இளிச்சுக்கிட்டு கேக்கிறீங்க. நான் பேசுனா மட்டும் வேப்பங்காயைக் கடிச்ச மாதிரி துடிக்கிறீங்க.

"  வாயைத் துறந்தா நிறுத்த மாட்டியே.. ஒன்னோட மல்லுக்கட்டியே என் மண்டை முடி கொட்டிப் போச்சு."

" சும்மா.. கதை விடாதீங்க. என்னை பொண்ணு பாக்கிறப்பவே மண்டையில் பாதி முடி இல்லை. போனாப் போகுதுன்னு கட்டுனதுக்கு எம்மேல பொல்லாப்ப இல்லே அள்ளி வீசுறீங்க."

என்னை பார்க்க வந்த தம்பதிகள் என் அலுவலகத்தில் மோதிக் கொண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது.

அவர்கள் பேசும் போது நான் குறிக்கிடவில்லை. அந்த தம்பதிகளின் மகளும் மருமகனும் வேறு உடன் இருந்தார்கள். இவர்களின் சண்டை அவர்களுக்கு பழக்கமாகி விட்டது. இது நம்ம குடும்பம் சீரியல் நாடகம் பார்ப்பது போல் ரொம்ப சீரியசாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

கிட்டட்தட்ட கல்யாணம் ஆன நாளில் இருந்தே எலியும் பூனையுமாக வலியும் வாதமுமாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள்.

இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவர்களுக்கு ஜாதக நிலவரங்களை விளக்கி கூறினேன்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் என் முன்னால் மனசு விட்டு பேசிக் கொண்டார்கள்.

அதற்கு அடுத்த படியாக மகள் மருமகனுடைய ஜாதகபலன்களைச் சொன்னேன். நான் சொல்லச் சொல்ல அந்த இளம் பெண் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.

திருமணமாகி ஓராண்டு வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் பிறகு தொட்டதற்கெல்லாம் குற்றம் குறை. அடிதடியும் அழுகையும் வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது.

சின்ன வயது. சீக்கிரம் உணர்ச்சி வயப்பட்டு நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டும் பொறுப்பில்லா இளம் பருவம்.

அந்தப் பையனுக்கு சில விஷயங்களை சூசகமாக விளக்கிக் கூறினேன். அவரும் புரிந்து கொண்டார்.

எல்லாம் தெரியும் என பகிரங்கமாக பற்ற வைக்கும் பாங்கு என்னிடம் இல்லை. அது அவருக்கு என் மீது அலாதியான நம்பிக்கை வைக்கத் தூண்டியது.

அவரும் இல்லற நிலவரங்களை இலை மறை காயாக எடுத்துக் கூறினார். வேண்டிய அறிவுரைகளை வழங்கினேன்.

இனிமேல் எங்களுக்குள் சண்டை வராது. அப்படி வந்தால் அடுத்த நிமிடமே உங்களை நினைத்து எங்களைச் சாந்தப்படுத்திக் கொள்வோம் என சத்தியம் செய்தார்.

மாமியாருக்கும் மாமனாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இப்படி ஒரு வார்த்தை மருமகன் வாயில் இருந்து வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்.

முதலில் நம்பிக்கை இல்லாமல் உங்களைப் பார்க்க மாடி ஏறினோம். கடவுளைக் கண்ட திருப்தியோடு திரும்புகிறோம் என அந்த அம்மையார் கண்ணீர் மல்க கூறியது என் நெஞ்சில் நிற்கிறது.

எல்லாம் எம்பெருமான் திருமுருகனின் திருவுள்ளம்.

Friday 13 November 2015

ஜோதிடம் பொய்யா.. விடை தெரிந்தோர் விளக்குங்கள்

விதியை மதியால் வெல்ல முடியுமா... இது விடை காண முடியாத வில்லங்கமான கேள்வி.

மலேசியாவில் நான் பத்திரிகை முழு நேர பணியில் இருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து வந்த பல பிரபலமான ஜோதிடர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அவர்கள் முன்னால்  வைக்கும் முதல் கேள்வி இதுதான். ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்து கொடுத்தவர் வசிஷ்ட மகரிஷி.

ஆனால், பட்டாபிஷேகம் நடக்கவில்லை. மாறாக காட்டுக்கு போனார். இது எதனால் நடந்தது. மகரிஷியின் வாக்கு பொய்த்தது ஏன்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி. சுமார் 2 லட்சம் உயிர்களை சுருட்டிக் கொண்டு போனது. இவர்கள் அத்தனை பேருக்கும் அவமிருத்த யோகம் இருந்ததா..?

இப்படி சிக்கலான கேள்விகளைக் கேட்டு விடை தேடி அழைந்த காலம் அது.

 புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த வித்வான் லெட்சுமணன் ஐயா அவர்கள் இதற்கு பொருத்தமான விளக்கத்தைத் தந்தார்.

பொருள் புரியாமல் மனனம் செய்த திருக்குறள் வரிகளைப் போல அவர் சொன்ன விளக்கம், விளங்காமலேயே மூளைக்குள் முடங்கியது.

காலையில் புல்லை மேய்ந்த மாடு மாலையில் மீண்டும் அசைபோட்டு உணவாக்கிக் கொள்வதைப் போல பின்னாளில் அதன் பொருள் புரிந்தது.

வாழ்க்கையின் வெற்றி பொருளாதாரம் என்பது ஒரு சாரரின் கருத்து. இல்லை நிம்மதி என்பது இன்னொரு சாரரின் கருத்து.

பணம் இல்லாமல் வாழ முடியுமா... பணம் இருந்தால் மட்டும் வாழ முடியுமா... இப்படிப்பட்ட வினாக்களை என் மீது வீசியவர்கள் ஏராளம்.

பணம் சம்பாதித்திவன் எல்லாம் புத்திசாலி இல்லை. பற்றாக்குறையோடு வாழ்பவன் எல்லாம் முட்டாள் இல்லை. இப்படி சொல்லலாமா...

உலகத்தில் பணக்காரர்களாக இருக்கிற அறிவாளிகள் ஏராளம். முட்டாளாக முனைமழுங்கித் திரிகிற ஏழைகளும் ஏராளம்.

அறிவு என்பது என்ன... வெற்றிகரமாக தொழில் நடத்தி கோடி கோடியாக சம்பாதிப்பவன் இல்லற வாழ்க்கையில் சில்லறைத்தனமாக இருக்கிறான்.

பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற அவன் ஏன் குடும்ப வாழ்க்கையில் குதர்க்கமாக நடந்து கொள்கிறான்.

திறமை என்பது என்ன.... ஒரு போட்டியில் 200 ரன் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் இன்னொரு போட்டியில் இரண்டு ரன்னைக் கூட எட்ட முடியாமல் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்.

அதே மட்டை... அதே.. பந்து... அதே கைகள்... திறமை மட்டுமே வெற்றி என்றால் இங்கும் அவர் 200 ரன்னைத் தொட்டிருக்க வேண்டும் அல்லவா...

பக்தி மட்டும் வெற்றி என்றால்... பழனிக்கும் ஐயப்பன் கோவிலுக்கும் படை எடுக்கின்ற அத்தனை பேரும் பணக்காரர்களாகவும் வெற்றியாளர்களாகவும் திகழ வேண்டும் அல்லவா...

அதே வேளையில் இரவு பகலாக உழைத்து கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, அல்லல்பட்டு, அவதிப்பட்டு உழைத்து சம்பாதித்த பலர் திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கோடி கோடியாக கொட்டுகிறார்களே ஏன்...

அவர்கள் எல்லாம் முட்டாள்களா.. மூடர்களா...

படிக்கவே லாயக்கில்லை என்று குருகுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் கண்ணதாசன்.

கல்வியைக் கசடறக் கற்று கவிதையால் வறுமையை வெல்ல வேண்டும் என்று வெறிபிடித்து எழுதுகோல் ஏந்தியர் வைரமுத்து..

படிக்காமல் கவிதை வார்த்து படித்தவர்களை பாமர மக்களை ஈர்த்தவர் கண்ணதாசன்... படித்து கவிதை யாத்து வைரவரிகளை தந்தவர் வைரமுத்து. இவர்கள் இருவருமே வெற்றியாளர்கள்.

ஆனால், எழுதுகோல் எடுத்த இருசாரருமே இவர்களைப் போல ஆகி விட முடியுமா...

சிவகங்கையில் பிரபலமான வழக்கறிஞர்.. என் மீது மாறா அன்பு கொண்டவர். என் குடும்பத்தில் மூத்த சகோதரர் போன்றவர். போன்றவர் என்ன மூத்த சகோதரர்தான்.

மதுரையில் சென்னை சில்க்ஸ் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. என் பிள்ளைகள் இருவரும் கட்டிட பொறியாளர்கள்.

ஒரு மதிய வேளையில் நானும் பிள்ளைகளும் பக்கத்தில் உள்ள சபரி உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம்.

அப்போது மெதுவாக எங்களைக் கடந்து சென்ற ஹோண்டா சிட்டி கார் சில அடி தூரத்தில் நின்றது. பின் கதவைத் திறந்து வெள்ளை உடையில் வெளியே வந்தார். ஒரு நபர்.

அவர்தான் என் வழக்கறிஞ சகோதரர். " இங்க என்னடா.. பண்ணுகிறாய்.. எப்போது மலேசியாவில் இருந்து வந்தாய்.. ஏன் வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்டார்.

பிள்ளைகளை அறிமுகப்படுத்தினேன். அவரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார்கள். அப்படிப்பட்ட வழக்கறிஞர் சில சிக்கலான வழக்குகளில் வாதத்திறமையால் குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கித் தந்திருக்கிறார்.

நீதி வென்றதா... அல்லது நீங்கள் வென்றீர்களா... என்று அப்போதே நான் அவரைப் பார்த்து கேட்டிருக்கிறேன்.

இது தொழில் தர்மம். நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று உதடு வலிக்காமல் சொல்லி விடுவார்.

இதைப் போல இன்னும் ஏராளமான உதாரணங்களை எடுத்து வைக்க என்னால் இயலும்.

சூப்பர் டெலஸ்கோப் என்ற நுண் தொலைநோக்காடி இல்லாமலேயே 'யுனிவர்ஸ்' என்று சொல்லக்கூடிய பிரபஞ்சத்தையும் 'கேலக்ஸி' என்று சொல்லக்கூடிய நட்சத்திரக் கூட்டத்தையும் 'மில்க்கி வே' என்று சொல்லக் கூடிய பால்வெளி மண்டலத்தையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பாகுபடுத்திப் பார்த்து சொன்னவர்கள் நம் முன்னோர்கள்.

நிலவளி, ஜலவளி, அண்டவளி, ஆகாசவளி, பரவளி, பராபரவளி, சதாசிவவளி, சச்சிதானந்தவளி என்று எட்டு வளி மண்டலத்தை ஆய்ந்து உலகுக்கு உணர்த்தி முதன்மையாக நின்றவர்கள் நம் முன்னோர்கள்.

வெளிநாட்டுக்கார விஞ்ஞானிகளை எல்லாம் இன்றும் வியக்க வைக்கும் விந்தைகள் இவை.

நம்மை விட ஆயிரம் மடங்கு அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் இஸ்ரேலியர்கள்.

அவர்கள் 1969 ஆம் ஆண்டுகளில் மேஷம் முதல் மீனம் வரையான ராசிச் சக்கர படங்களை அப்படியே அதிகாரத்துவ தபால்தலையாக வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்திற்கு சென்றால் இந்த உண்மையைக் காணலாம்.

விஞ்ஞானம் ஒரு கலை.. விவசாயம் ஒரு கலை.. ஓவியமும் காவியமும் கலைதான். இல்லறமும் துறவறமும் கலைதான். ஜோதிடமும் மருத்துவமும் கலைதான். இவர்களில் யார் வெற்றியாளர்கள்.

ஜோதிடக் கலையின் சூட்சுமங்கள் தெரிந்த விற்பன்னர்கள் ஏராளமாக வாழும் நாடு இது. அவர்கள் நடுவே ஊர்ந்து செல்லும் பிள்ளைப் பூச்சி போன்றவன் நான்.

அவர்கள் எல்லாம் ஜாதக சாகரம் என்ற ஆழியில் மூழ்கி முத்தெடுத்தவர்கள். அலைக்குழந்தை தலைசுமந்து கரைமணலில் வீசிச் செல்லும் கிளிஞ்சல்களைப் பொறுக்கி ஆனந்தம் அடைபவன் நான்.

'யார் அறிவாளி.. யார் வெற்றியாளர்... யார் ஏமாளி.. யார் முட்டாள்... யார் விதியை மதியால் வென்றவர்... யார் மதியால் வாழ்ந்து விதியால் வீழ்ந்தவர்...

என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் இவை. தெரிந்தவர்கள் விளக்கினால் நான் தெளிவடைவேன்.

வாதம் மட்டும் வாழ்க்கை அல்ல.. பிடிவாதம் மட்டும் வாழ்க்கை அல்ல.. விதண்டாவாதம் மட்டும் வாழ்க்கை அல்ல. வாழ்க்கை என்றால் என்ன.. வெற்றி என்றால் என்ன என்று நேற்று என்னைச் சந்தித்த ஒருவர் கேட்டார்.

"நாம் அறிவாளிகள் என்று நிரூபிப்பதைவிட மற்றவர்களை முட்டாள்கள் என்று மட்டம் தட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறவர்கள் நாம்" என்று சொல்வேந்தர் சுகி. சிவம் அடிக்கடி கூறுவார்.

அறிந்தவர்கள் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். உண்மையானவர்கள் உதவுங்களேன்.

Thursday 12 November 2015

முறிந்த உறவு...பிரிந்த குடும்பம்..இணைந்தது இன்று...!

ஒரு சிக்கலான பிரச்சினை என்னிடன்  சென்ற ஆண்டு வந்தது. நான் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிய இரண்டு நாட்களில் இந்த பிரச்சினை குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அழகான மனைவி... அள்ளி எடுத்து உச்சி முகர வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும் எழில் கொஞ்சும் மூன்று குழந்தைகள்.


கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு. மாமனார் இல்லை. மாமியார் மட்டும்தான். மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம். அடிதடி என்று அமர்க்களப்பட்டது. பஞ்சாயத்து களை கட்டியது. குடு

மற்றவர்கள் ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஜாதக அமைப்புத்தான் இதற்கு பிரதான காரணம் என்பதை நான் உணர்ந்தேன்.

ஒரு கட்டத்தில் மனைவி பிள்ளைகளோடு தாய் வீடு போய்ச் சேர்ந்தாள். பலர் சமரச முயற்சியில் ஈடுபட்டு மூக்குடைந்து போனார்கள்.

இந்த நிலையில் பெண் வீட்டிற்கு நெருக்கமான வழக்கறிஞர் வேறு  வழியை மறித்துக் கொண்டு நின்றார். என்ன முயன்றும் அவர் மனதை மாற்ற இயலவில்லை.

அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய சிலர் மீண்டும் என்னிடம் வந்தார்கள். குறிப்பிட்ட காலம் கடக்கட்டும். எல்லா காரியங்களும் நல்ல விதமாக முடியும் என்று சொன்னேன்.

அவர்கள் இருமனதாக சென்றார்கள். என் கருத்தில் உடன்பாடில்லை என்பதை அவர்களின் முகக் குறிப்பு காட்டியது.

கோழி ஒரு கூட்டிலே... சேவல் ஒரு கூட்டிலே.. என்று அவர்களின் வாழ்க்கை ஆளுக்கொரு திசையில் சென்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரு குடும்பத்துக்கும் பொதுவாக உள்ள சிலர் மீண்டும் என்னிடம் வந்தார்கள். கண்டிப்பாக ஏதாவது செய்து குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

"சில பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். சில பிரச்சினைகளைப் பேசாமல் தீர்க்க வேண்டும். இது இரண்டாவது வகை" என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

எனக்கு இதில் அக்கறை இல்லையோ என்ற வகையில் விடைபெற்றுச் சென்றார்கள்.

தீபாவளி அன்று இரவு 7 மணி இருக்கும். நானும் சிலரும் ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த பையன் வீட்டிற்கு முன்னர் ஒரு கார் வந்து நின்றது.

முதலில் அவர் இறங்கினார். பின்னர் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் காரில் இருந்து வெளிப்பட்டனர். எல்லோருக்கும் ஆச்சரியம்.

எனக்கு இதில் வியப்பில்லை. காலம் கனிந்தது, காரியம் நடந்தது. மூன்று பிள்ளைகளும் ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டபோது இதை விட என்ன இன்பம் இருக்கப் போகிறது இந்த பூலோகத்தில் என்று இறுமாந்து போனேன்.

எத்தனை நாளைக்கு இவர்கள் ஒன்றாக குப்பை கொட்டப்  போகிறார்கள் என்ற முணுமுணுப்பும் காதில் வந்து விழுந்தது. உறவுகளின் உறக்கம் தொலைவது மற்றவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்துத்தானே.

வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பெண் இன்று வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டாள். இதை இறைவன் நிச்சயமாக நிரந்தரமாக்குவான்.

சில ஜாதக தோஷங்களுக்கு நாம் பரிகாரம் செய்து நிவர்த்தி பெறலாம். சில தோஷங்களுக்கு காலமே பரிகாரம் செய்து விடும்.

அனுபவம் மிக்க ஜோதிட விற்பன்னர்களுக்கு இந்த நுணுக்கம் தெரியும்.


Saturday 7 November 2015

மகனால் மகிழ்ச்சி... மனைவியால் அதிர்ச்சி....!

மலேசியாவில் வேலை பார்த்தவர். திருமணம் ஆன இரண்டு மாதங்களில் மலேசியாவுக்குத் திரும்பி விட்டார். அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் ஊருக்கு வந்தார்.

இப்படியே நாலைந்து தடவை விமானத்தில் இங்கும் அங்கும் பறந்தார். ஆண்டுகள் நான்கு ஓடி விட்டன.ஆனால், அவருடைய மனைவி கருக் கொள்ளவில்லை.


இந்த ஏக்கம், ஊராரின் கேலிப் பேச்சு, உறவினர்களின் உச்சுக் கொட்டு இவையனைத்தும் இவரை திக்குமுக்காட வைத்தது.

மலேசியாவை காலி பண்ணிவிட்டு வந்து விட்டார். அடுத்த மாதமே அவர் மனைவி கர்ப்பமாகி விட்டார். ஒரு பக்கம் சந்தோசம். இன்னொரு பக்கம் கவலை.

வேலை இல்லாததால் கொண்டு வந்த பணம் மருத்துவமனைக்கும் மருந்துக்குமாகக் கரைந்து விட்டது. குடும்ப வாழ்க்கையிலும் குத்து வெட்டு. இப்போது அவரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி.

நொந்து போய் என்னிடம் வந்தார். ஜாதகத்தைப் பார்த்து விவரம் சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஜோதிடம் பார்த்தோம். எல்லாரும் நல்லா இருக்குன்னுதான் சொன்னார்கள் என்றார்.

இப்போது போய் கேட்டுப் பாருங்கள் எல்லாரும் ஏறுக்குமாறாகச் சொல்வார்கள் என்று கூறினேன். அதை அவர் ஒப்புக் கொண்டார். இது நடந்தது ஒரு மாதத்திற்கு முன்னால்.

பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்தார். மனைவிக்கு இதுதான் மாதம். 27 ஆம் தேதிக்கு முன்னால் மூன்று நாட்களைத் தேர்வு செய்யும்படி மருத்துவர் கூறிவிட்டார். நல்ல நாள் பார்த்து சொல்ல முடியுமா எனக் கேட்டார்.

மேலும் என்ன பிள்ளை பிறக்கும். ஆண் பிள்ளை வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதையும் பார்த்துச் சொல்லுங்கள் ஐயா என்றார்.

எனக்கு இதில் உடன்பாடில்லை. இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும். எப்போது வலி எடுக்கிறதோ அப்போது அறுவைச் சிகிச்சை செய்யலாம். ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என்பது முக்கியமல்ல. குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்று சொன்னேன்.

அவர் விடவில்லை. நான் குறித்துக் கொடுக்கிறேன். ஆனால், அதற்கு முன்பாகவே குழந்தை பிறந்து விடும் பரவாயில்லையா என்று கேட்டேன்.

இருந்தாலும் அவர் பிடிவாதம் மாறவில்லை. அவர் விருப்பப்படி மூன்று நாட்களை தேர்வு செய்து கொடுத்தேன்.

நேற்று இரவு 7 மணி அளவில் அவர் எனக்கு போன் செய்தார். மனைவிக்கு வலி வந்து விட்டதாகவும் உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அச்சப்படத் தேவையில்லை. குழந்தை நல்லபடியாக பிறக்கும். மேலும் நீங்கள் கேட்டது கிடைக்கும். இது உறுதி என்று அவரிடம் சொன்னேன்.

இருப்பினும் என் வார்த்தையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பது குரலில் தெரிந்த பயம் எனக்கு உணர்த்தியது.

இரவு சரியா 9 மணிக்கு என் கைத் தொலைபேசி கதறியது. எடுத்தேன். அந்த அன்பர்தான். ஐயா குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டது என்று சொன்னார்.

என்ன பிள்ளை என்று நான் கேட்கவில்லை. நீங்கள் சொன்னபடி ஆண்பிள்ளை ஐயா.. இரண்டு ஜோதிடர்கள் பெண்தான் பிறக்கும் என்றார்கள்.

காசு இல்லாத கவலையோடு அந்தக் கவலையும் என்னைப் பிடித்து ஆட்டியது. இப்போது இந்த ஒரு ஆசையையாவது இறைவன் நிறைவேற்றி வைத்தானே என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியோடு சொன்னார்..

முந்தைய நிகழ்வும் இந்த சம்பவமும் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் நடந்தவை.

"சாமி... உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. வாழ்நாள் முழுவதும் இதை மறக்க மாட்டோம்" என ஆண்பிள்ளை பாக்கியத்தை அடைந்த இருவரும் சொன்னது இன்னும் என் காது மடல்களில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

எல்லாம் எம்பெருமான் விநாயகப் பெருமான், இளவல் முருகப் பெருமான் ஆகியோரின் அருட் கடாட்சம். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க இந்த இருவரையும் பிரார்த்திக்கிறேன்.

Friday 6 November 2015

பிள்ளை பிறக்கும் நேரம்... நிர்ணயிப்பது யார்..?

மனிதன் ஆசைப்படுவது இயற்கை. அதை நிறைவேற்றுவது இறைவன். வயிற்றில் கருவான குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பது தாய் தந்தையரின் தணியாத விருப்பம்.

இதை நிறைவேற்றுவது யார். ஜோதிடரா... மருத்துவரா.. இந்தக் கேள்விக்கு விடை தேடி காலத்தைக் கணித்து கையைக் கடித்துக் கொண்ட ஜோதிடர்கள் ஏராளம்.


இடைநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் இரு வாரங்களுக்கு முன்னர் எனக்கு போன் செய்தார். அறிமுகம் கிடையாது.
தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அழைத்து என் எண்ணை வாங்கி என்னிடம் பேசினார்.

"சார்... நான் நிறைமாத கர்ப்பிணி. எனக்கு வயது 40. என்னோட பணி செய்யும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை... குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என்று சொல்கிறார்.

அதன்படி ஒரு நாளை அறுவைச் சிகிச்சைக்கு தேர்வு செய்திருக்கிறேன். குறிப்பிட்ட நட்சத்திரம் எவ்வளவு நேரத்திற்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா" என்று கேட்டார்.

நான் சிரித்தேன். "அம்மா.. இப்போது உங்களுக்கு தேவை மருத்துவரின் ஆலோசனையும் சேவையும். ஜோதிடர்களின் கருத்து அல்ல. கண்டிப்பாக உங்களுக்கு நல்ல விதமாக குழந்தை பிறக்கும் நம்புங்கள்" என்று சொன்னேன்.

" ஐயா... என்னுடைய 12 வயது மகன் சாலை விபத்தில் துள்ளத் துடிக்க இறந்து விட்டான். இப்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டவன் அனுக்கிரகத்தால் கர்ப்பமாகி இருக்கிறேன். அதனால்தான் பயமாக இருக்கிறது" என்று சொன்னார்.

"அவரோடு சுமார் அரை மணி நேரம் பேசினேன். நாம் கணக்குப் போடலாம். இறைவன்  தான் விடை எழுத வேண்டும்.

இருப்பினும் தாங்கள் முடிவு செய்த நேரத்தில் அறுவைச் சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இறந்தவன் மீண்டும் பிறப்பான். உங்களுக்காக நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்" என்று கூறினேன்.

நேற்று அந்தப் பெண்மணி எனக்குப் போன் செய்தார். "ஐயா... நீங்கள் சொன்னது போலவே நடந்து விட்டது. நாங்கள் நிர்ணயித்த தேதிக்கு முதல் நாளே வலி வந்து விட்டது.

அவசரமாக காரில் என்னை மருத்துவமனைக்கு என் கணவர் அழைத்துச் சென்றார். மகப்பேறு மருத்துவர்கூட அப்போது இல்லை.

இருந்தாலும் எனக்கு மயக்க மருந்து கொடுக்காமல் மரமரப்பு ஊசி போட்டு குழந்தையை எடுத்து விட்டார்கள். தாங்கள் சொல்லியபடி ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான். நான் தான் பலவீனமாக இருக்கிறேன். என் தாய் வீட்டிற்கு வந்து விட்டேன். சற்று தேறியவுடன்தான் தங்களை அழைக்கிறேன்.

உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் பயந்த காலத்தில் தொலைபேசி வாயிலாக ஊக்கப்படுத்தி என் அச்சத்தைப் போக்கி உறுதுணையாக இருந்த உங்களை எந்தக் காலத்திலும் மறக்க மாட்டேன்" என்று நா தழுதழுக்க கூறினார்.

கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சகோதரியும் குழந்தையும் என்றென்றும் ஆரோக்கியத்துடனும் சிறப்பாகவும் வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்.

மேலும் என்னைச் சந்தித்து 'பிள்ளை பிறக்கும் நேரம்' குறித்து கேட்ட ஒரு சகோதரருக்கு நேர்ந்த அனுபவத்தை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.