Thursday 12 November 2015

முறிந்த உறவு...பிரிந்த குடும்பம்..இணைந்தது இன்று...!

ஒரு சிக்கலான பிரச்சினை என்னிடன்  சென்ற ஆண்டு வந்தது. நான் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிய இரண்டு நாட்களில் இந்த பிரச்சினை குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அழகான மனைவி... அள்ளி எடுத்து உச்சி முகர வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும் எழில் கொஞ்சும் மூன்று குழந்தைகள்.


கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு. மாமனார் இல்லை. மாமியார் மட்டும்தான். மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம். அடிதடி என்று அமர்க்களப்பட்டது. பஞ்சாயத்து களை கட்டியது. குடு

மற்றவர்கள் ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஜாதக அமைப்புத்தான் இதற்கு பிரதான காரணம் என்பதை நான் உணர்ந்தேன்.

ஒரு கட்டத்தில் மனைவி பிள்ளைகளோடு தாய் வீடு போய்ச் சேர்ந்தாள். பலர் சமரச முயற்சியில் ஈடுபட்டு மூக்குடைந்து போனார்கள்.

இந்த நிலையில் பெண் வீட்டிற்கு நெருக்கமான வழக்கறிஞர் வேறு  வழியை மறித்துக் கொண்டு நின்றார். என்ன முயன்றும் அவர் மனதை மாற்ற இயலவில்லை.

அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய சிலர் மீண்டும் என்னிடம் வந்தார்கள். குறிப்பிட்ட காலம் கடக்கட்டும். எல்லா காரியங்களும் நல்ல விதமாக முடியும் என்று சொன்னேன்.

அவர்கள் இருமனதாக சென்றார்கள். என் கருத்தில் உடன்பாடில்லை என்பதை அவர்களின் முகக் குறிப்பு காட்டியது.

கோழி ஒரு கூட்டிலே... சேவல் ஒரு கூட்டிலே.. என்று அவர்களின் வாழ்க்கை ஆளுக்கொரு திசையில் சென்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரு குடும்பத்துக்கும் பொதுவாக உள்ள சிலர் மீண்டும் என்னிடம் வந்தார்கள். கண்டிப்பாக ஏதாவது செய்து குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

"சில பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். சில பிரச்சினைகளைப் பேசாமல் தீர்க்க வேண்டும். இது இரண்டாவது வகை" என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

எனக்கு இதில் அக்கறை இல்லையோ என்ற வகையில் விடைபெற்றுச் சென்றார்கள்.

தீபாவளி அன்று இரவு 7 மணி இருக்கும். நானும் சிலரும் ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த பையன் வீட்டிற்கு முன்னர் ஒரு கார் வந்து நின்றது.

முதலில் அவர் இறங்கினார். பின்னர் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் காரில் இருந்து வெளிப்பட்டனர். எல்லோருக்கும் ஆச்சரியம்.

எனக்கு இதில் வியப்பில்லை. காலம் கனிந்தது, காரியம் நடந்தது. மூன்று பிள்ளைகளும் ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டபோது இதை விட என்ன இன்பம் இருக்கப் போகிறது இந்த பூலோகத்தில் என்று இறுமாந்து போனேன்.

எத்தனை நாளைக்கு இவர்கள் ஒன்றாக குப்பை கொட்டப்  போகிறார்கள் என்ற முணுமுணுப்பும் காதில் வந்து விழுந்தது. உறவுகளின் உறக்கம் தொலைவது மற்றவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்துத்தானே.

வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பெண் இன்று வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டாள். இதை இறைவன் நிச்சயமாக நிரந்தரமாக்குவான்.

சில ஜாதக தோஷங்களுக்கு நாம் பரிகாரம் செய்து நிவர்த்தி பெறலாம். சில தோஷங்களுக்கு காலமே பரிகாரம் செய்து விடும்.

அனுபவம் மிக்க ஜோதிட விற்பன்னர்களுக்கு இந்த நுணுக்கம் தெரியும்.


No comments:

Post a Comment