Tuesday 3 November 2015

"சாமி வணக்கம்... அப்பா போய்ட்டு வர்றேன்" என் விழிகளை ஈரமாக்கிய இளம் பெண்...!

தோற்றதைப் பார்த்து ஒருவரின் ஏற்றத்தை எடை போடக் கூடாது என்ற தத்துவப் பழமொழி ஒன்று உண்டு.

அதற்கு சரியான விளக்கத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து உணர்ந்தேன்.

தாய் தந்தையருடன் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஓர் இளம் பெண் என்னைப் பார்க்க வந்தார். அவருடன் தந்தையும்  தாயும் வந்தனர். கையில் மூன்று வயதுக் குழந்தை.

முதலில் மகனுடைய ஜாதகத்தைக் கொடுத்து பலன் கேட்டார்கள். பார்த்துச் சொன்னேன். அதன் பின்னர் மகளின் ஜாதகத்தையும் மருமகனின் ஜாதகத்தையும் கொடுத்தார்கள்.

இரண்டையும் கணித்தேன். அந்தப் பெண் இருக்கும் தோற்றம், கையில் வைத்திருக்கும் குழந்தை ஆகியவை என் கணிப்பில் முரண்பாடுகளைத் தந்தது.

தசவிதப் பொருத்தங்களில் முக்கிய பொருத்தங்கள் இல்லை. அதைவிட ஜென்ம ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் தாறுமாறாக தறிகெட்டு நின்றன.

இவர்கள் இருவரும் நிறைவான வாழ்க்கை வாழ இயலாது. அப்படி வாழ்ந்தால் அது இறைவனின் திருவருளால்தான் இயலும்.

கிரகங்கள் நிற்கும் சூழலைப் பார்த்து இப்படி அவர்களிடன் விளக்கினேன்.

"ஐயா உங்கள் மகள் மிகவும் அதிர்ஷ்டசாலி, கொடுத்து வைத்தவள். இந்த ஜாதக அமைப்புப்படி கணவனோடு சேர்ந்து வாழ்வது கடினம்.

பிரிந்து இருக்க வேண்டும் என்பது விதி. மேலும் குழந்தைப் பாக்கியம் கிடைப்பது குதிரைக் கொம்பு.

ஆண்டவன் கருணையால் அனைத்தும் வாய்த்திருப்பதாக நினைக்கிறேன். ஆகவே, இந்தச் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். எல்லாம் ஈசன் செயல்" என்று கூறி ஜாதகத்தை மூடி மேஜையில் வைத்தேன்.

இப்படிச் சொன்னவுடன் அந்த இளம் பெண்ணுடைய தாயாரின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிய ஆரம்பித்தது.

" சாமி இவளுக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷமாச்சு. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. கல்யாணத்துக்கு முந்தி மருத்துவ சோதனை செஞ்சோம்.

அப்ப ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு. கல்யாணம் செஞ்சு வச்சோம். மூனு வருஷம் ஓடிருச்சு. டாக்டரைப் பாத்தோம். கர்ப்பப் பைக்கு போற நரம்பில கோளாறு இருக்குன்னு சொல்றாரு.

எல்லா வைத்தியமும் பாத்துட்டோம். வைத்தியமுங்கிற பேருல எம் பொண்ணு படுற அவஸ்தையைப் பார்க்க சகிக்கலை. நீங்கதான் ஒரு நல்ல வழி சொல்லணும்"

அந்த அம்மா இப்படி அழுது கொண்டே கேட்டது என் நெஞ்சை பிசைந்தது.

அந்த இளம்பெண் படித்தவர். தெளிவான பேச்சு, தேர்ந்த சிந்தனை, பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு பக்குவமாக வாழும் பாங்கு. இவை என்னை வியக்க வைத்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினேன். பல்வேறு எடுத்துக் காட்டுகளைச் சொன்னேன்.

இரண்டு கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்யச் சொல்லி இருக்கிறேன்.மருத்துவரை மாற்றி வேறு சிறப்பு மருத்துவரை அணுக ஆலோசனை தந்திருக்கிறேன்.

அந்த இளம்பெண்ணின் கையில் இருந்த குழந்தை அவருடைய தங்கை மகளாம். அவர் துபாயில் இருக்கிறாராம். அந்தக் குழந்தையும் அகத்துக் கவலையை முகத்தில் காட்டாத அழுத்தமும்தான் என் ஆரம்ப தடுமாற்றத்திற்கு காரணம்.

என்னை முதலில் பார்க்கும் போது "சாமி வணக்கம்" என்று கை கூப்பி வணங்கிய அந்த இளம் பெண், என்னிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும்போது "அப்பா, போய்ட்டு வர்றேன்" என்று சொன்னது என் விழிகளை ஈரமாக்கியது.

கண்டிப்பாக இந்தப் பெண்ணின் ஏக்கத்துக்கு வடிகால் கிடைக்கும். அதற்கு ஆண்டவன் நிச்சயம் அருள் செய்வார்.

No comments:

Post a Comment