Monday 12 October 2015

தெய்வத்தாயின் தரிசனம்... தேடிச் சேர்த்த புண்ணியம்...!

உடலைப் படைத்தது இறைவன். அதற்கு உயிரைக் கொடுத்தது இறைவன். வினை செய்யும் விதியைக் அளித்தது இறைவன். அதில் இருந்து விலகும் மதியைத் தந்தது இறைவன்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியான ஆண்டவன் உறையும் ஆலயங்களுக்குச் செல்லும்போது மனம் சாந்தி அடைகிறது.

வாட்டும் துன்பங்களுக்கு வடிகால் கிடைக்கிறது. துரத்தும் துயரங்களுக்கு துயரம் உண்டாகிறது.

இது ஒரு புறமிருக்க, சில வேளைகளில் மனிதர்களே தெய்வங்களாக காட்சி தரும் அதிசய அனுபவங்களை அடைகிறோம்.

அப்படிப்பட்ட மகத்தான அனுபவம் இரு தினங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம்.

அருமைச் சகோதரன் மகேந்திரனுக்கு அணுக்கமான நண்பர் கண்ணன். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.

அவரும் அவர் துணைவியாரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ஒரு ஹோமம் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள்.

தம்பி மகேந்திரன் என்னை அணுகினார். குறிப்பிட்ட நாளில் கணபதி ஹோமம் செய்ய வேறு ஒருவர் முன்பதிவு செய்து விட்டார்.

ஒரு நாளில் ஒரு நபர் மட்டுமே ஹோகம் செய்ய இயலும் என்ற வகையில் நிர்வாகம் வரையறை செய்துள்ளது.

அதனால் அபிஷேக ஆராதனை செய்து விநாயகப்பெருமானை வழிபட ஆவன செய்தோம். ஏனெனில் அக்.11 அவரின் பிறந்த நாள்.

கண்ணன் தம்பதியரும் கட்டுமானத் தொழிலில் கோலோச்சும் லெட்சுமணன் தம்பதியரும் குறிப்பிட்ட நாளில் சென்னையில் காரைக்குடி வந்து விட்டார்கள்.

பிள்ளையார்பட்டியில் மிக நேர்த்தியாக அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கற்பக விநாயகரை பூரண அலங்காரத்தோடு தரிசித்து புளகாங்கிதம் அடைந்தோம்.

பின்னர் பட்டமங்கலம் தட்சணாமூர்த்தியைத் தரிசித்தோம். திருக்கோஷ்டியூர் சென்று பள்ளிகொண்ட பெருமாளை வணங்கினோம்.

அன்புத்தம்பி நாகராஜன் (ARC உணவக உரிமையாளர்) அனுப்பி வைத்த மதிய உணவை ரசித்து ருசித்தோம்.

அதற்கு பின்னர்தான் நான் மேலே குறிப்பிட்ட அற்புத அனுபவம் கிடைத்தது.

நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த திரு அண்ணாமலை அவர்களின் துணைவியாரின் இல்லத்தை பார்க்க சென்றோம். திரு அண்ணாமலை கண்ணன், லெட்சுமணன், மகேந்திரன் ஆகியோருக்கு நெருக்கமான நணபர்.

காரைக்குடி மத்திய பகுதியில் மிகப் பெரிய வீடு. நாங்கள் வரும் செய்தி ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு விட்டது.

நாங்கள் வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்திய சில விநாடிகளில் பல கோடி மதிப்புள்ள பிரமாண்டமான ராஜநிலைக்கதவு திறந்தது.

பார்த்தவுடன் பாதம் பணிந்து வணங்க வைக்கும் அருட்கடாட்சத்தோடு வெள்ளை உடையில் 80 வயது மதிக்கத்தக்க அம்மையார் அன்பும் அருளும் இழையோட எங்களை வரவேற்றார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய வீடு. அன்று பதிக்கப்பட்ட தரைக்கற்கள் இன்றும் அழுக்குப்படாமல் இருக்கின்றன.

சிபிஐ புலனாய்வுத்துறை களத்தில் இறங்கினால் கூட ஒரு ஒரு தூசி தும்பைக் கண்டுபிடிக்க முடியாது. அத்தனை சுத்தம்.

அந்தத் தாயைப் பார்த்து சுறுசுறுப்பே வெட்கப்பட வேண்டும். சுமார் மூன்று நிமிடத்தில் எங்களுக்கு காபி தாயரித்து உபசரித்த பாங்கை இந்தக் கால இளைய சமுதாயம் ஏணி வைத்தாலும் எட்டிப் பிடிக்க முடியாது.

வசதியான குடும்பம், வளமான வாழ்க்கை. இறையருள் நந்தவனமாக விளங்கிய இந்த இல்லத்திலும் விதி விஷ நாக்கை நீட்டி சோகச் சொக்கட்டான் விளையாடியது கொடுமையிலும் கொடுமை.

மடை திறந்த வெள்ளம் போல தடையில்லாமல் இவர் பேசியபோது அந்தச் சோகத்தின் வேதனை நெல்லோடு கலந்த கல்லாக... சொல்லோடு சேர்ந்து வந்தது.

தவமிருந்து பெற்ற பிரிய மகனை 14 வயதில் பறிகொடுத்திருக்கிறார். அந்தச் சோகத்தில் ஆழ்ந்து போன கணவரை அடுத்த நான்கு ஆண்டுகளில் இழந்திருக்கிறார்.

சோகமும் துயரமும் சூறாவளியாக இவரைச் சுழற்றி அடித்தாலும் இறை பக்தி தந்த தன்னம்பிக்கை இவரைத் தளர விடவில்லை.

வீட்டு நிர்வாகத்தையும் மில் நிர்வாகத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பாரம்பரியத்திற்கு பங்கம் வராமல் இரண்டு பெண்களைக் கரை சேர்த்தார்.

இன்றும் தானே சமைத்துச் சாப்பிடுகிறார். இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறோமே என்ற உணர்வு இவருக்கு சிறிதளவேனும் இல்லை.

இதோ எங்கள் அய்யா (கணவர்) அன்புக்குரிய ராமு (மகன்) மாமனார் மாமியார், தாயார் தகப்பனார் எல்லோரும் என்னுடன் இருக்கிறார்கள். நான் எதற்கு அஞ்ச வேண்டும் என்று கேட்கிறார்.

பக்கத்தில் பல்லி கத்தினாலே பயத்தில் பத்தடி தள்ளிப் பாயும் இன்றைய மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு கலங்கரை விளக்கம்.

அனைவரும் அந்த அருட் தாயின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம்.

"இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் என்னை வந்து பார்த்து விட்டுப் போங்கப்பா" என்று அப்பழுக்கில்லாத உள்ள சுத்தியோடு சொன்ன வாசகம் எந்நாளும் எங்கள் இதயத்தை விட்டு இறங்காது.













No comments:

Post a Comment