Friday 9 October 2015

விதியை மதியால் வென்ற பெண்...!

நான் பெரிய ஜோதிடன், சாஸ்திர வித்தைகளின் சாகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களைக் கூட கிறுகிறுக்க வைக்கும் ஜாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நேற்று ஒரு தம்பதியர் என்னை சந்தித்தார்கள். கணவனுக்கு 46 வயது. மனைவிக்கு 32 வயது.

பெண் நல்ல அழகு. கணவர் கருப்பு. அதே நேரத்தில் தோற்றப் பொலிவும் குறைவு.

அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். கடைசிப் பிள்ளை ஆணாகத்தான் பிறக்கும் என்று... பார்த்த ஜோதிடர்கள் எல்லாம் சொன்னார்களாம்.

ஆணாகப் பிறக்கவில்லை என்றால் ஜாதகம் பார்ப்பதையே விட்டு விடுவதாக ஒரு ஜோதிடர் அடித்துக் கூறினாராம்.

ஆனால், பிறந்தது பெண். அதனால் இவருக்கு ஜோதிடர்கள் மீது அடக்க முடியாத கோபம்.

இந்த நிலையில் என்னைப் பற்றி கேள்விப்பட்டு அலுவலகத்திற்கு வந்தார்.

முதலில் இறுக்கமாக இருந்தவர் என் பேச்சைப் பார்த்து மனதில் உள்ளதை மளமளவென்று கொட்டி விட்டார்.

அனைத்து ஜாதகங்களையும் ஆய்வு செய்தேன். பிள்ளைகள் மூவருமே குட்டிச் சுக்கிரனில் பிறந்தவர்கள். காளசர்ப்பதோஷ அமைப்பு உடையவர்கள்.

புத்திரஸ்தானம் கெட்டுப் போய் பொல்லாத கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கும்போது இவருக்கு பிள்ளைகள் பிறந்ததே பெரும் பாக்கியம்.

இதனால் இவர் சம்பாதித்த செல்வம், பிள்ளைகள் பிறந்தவுடன் டாட்டா காட்டி விட்டு போய் விட்டது.

மேலும் இருவர் ஜாதகங்களும் சிக்கலான அமைப்பில் இருந்தன. அனைத்து தோஷங்களும் அரவணைத்து நின்றன.

மனமொத்து வாழ்வதற்கான மார்க்கம் அதில் சிறிதளவேனும் இல்லை.

" அம்மா, உன் முகத்தில் விசனத்திற்கான அறிகுறி கொஞ்சம் கூட இல்லை. ராட்ஷஸ குணத்தில் பிறந்தவள். அமைதியின் அடுத்த பிறவியாக இருக்கிறாய். எப்படிச் சாத்தியமானது" என்று கேட்டேன்.

அப்போது எனக்குக் குருவாக அவள் மாறினாள். அவள் எளிமையாக சொன்ன காரணங்கள் என் மனதில் வலிமையாக இறங்கின.

" சாமி... திருமணம் ஆகி மூன்று வருடங்கள் போராட்டம்தான். இளமையாக இருந்த என்னை கட்டி அணைத்து மகிழ்வதை விட எட்டி உதைத்து இன்பம் காண்வதில் அவருக்கு அலாதிப் பிரியம்.

அடுப்பில் வைத்த விறகு எரிந்துதானே ஆக வேண்டும். நான் அவரை மாற்ற முயற்சி செய்யவில்லை. என்னை மாற்றிக் கொண்டேன். பாலைவன வாழ்க்கை சோலைவனமாக மாறியது.

முதலில் அவருக்கு என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் என்ன பிடிக்கும் என்பதைப் அறிந்து கொண்டேன்.

பிறகு அவரிடம் இருக்கும் நிறை குறைகளைப் புரிந்து கொண்டேன். இதனால் அவரை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

இப்போது பணம் இல்லை எங்களிடம். ஆனால், பக்குவமான மனம் இருக்கிறது" என்றார்.

விதியை மதியால் வெல்ல முடியும் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா... என்ன...

என்ன தொழில் செய்யலாம் என்று கேட்டார்கள். துணி வியாபாரம், இரும்பு சம்பந்தமான தொழில் சிறப்பாக இருக்கும் என கூறினேன்.

துணிக்கடை வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதையே நீங்கள் கூறியது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

இழந்ததை நினைத்து கவலைப்படவில்லை. வருவதை எதிர்கொள்ள தயாராகி விட்டோம் எனக் கூறினர் அந்தத் தன்னம்பிக்கைத் தம்பதிகள்.

என்னிடம் பேசிக் கொண்டிருந்த மூன்று மணி நேரமும் அவர்கள் எனக்கு ஆசானாகத் திகழ்ந்தார்கள். நான் மாணவனாக மாறி என்னை நானே புதுப்பித்துக் கொண்டேன்.


No comments:

Post a Comment