Thursday 8 October 2015

ரச்சுத் தட்டியது.... வாழ்க்கை கெட்டது....!

முகத்தைப் பார்த்து அகத்தை அறிந்து கொள்ளலாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

ஆனால், அழகான முகத்துக்குப் பின்னால் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பின்னால் இதயத்தில் இழையோடும் சோகத்தை அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை.

அண்மைய காலங்களில் அனுபவத்தின் மூலமாக அடியேன் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற தாயும் மகளும் வந்தார்கள்.

மகள் இளங்களைப் பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்சி முடித்து இருக்கிறார். இவருக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் மெக்கானிக் இஞ்சினியர் படிப்பு. இன்னொருவர் பள்ளி இறுதி வகுப்பு.

பெண்ணின் கணவர் துபாயில் வேலை பார்க்கிறார். அந்தப் பெண்ணின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது பொருளாதாரப் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அனைவரின் ஜாதகத்தையும் கணித்தேன். எதார்த்தமாக கணவன் மனைவிக்கு பொருத்தம் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்த்தேன்.

அதிர்ச்சி அலை என் இதயத்தில் மோதிச் சிதறியது. கணவனுக்கும் மனைவிக்கும் ரச்சுப் பொருத்தம் இல்லை.

அதை வெளிக்காட்டி நான் மிகப் பெரிய ஜோதிடன் என அலப்பறை பண்ண விரும்பவில்லை.

என் பேச்சு அவர்களுக்கு மிகத் திருப்தியாக இருந்தது என்பதை அவர்கள் அடுத்தடுத்து அடுக்கிய கேள்விகளால் உணர முடிந்தது.

இறுதியாக அந்தப் பெண் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். "சாமி என் ஜாதகத்தில் முக்கியமான அம்சம் இருக்கிறது அதைச் சொல்ல முடியுமா" என்று.

"ஜோதிடம் என்பது வழிகாட்டி.. ஜோதிடனிடம் ஆலோசனை கேட்கலாம். சோதனை நடத்தக் கூடாது. அது விபரீத விளைவுக்கு வித்திட்டு விடும்" என்று அறிவுறுத்தினேன்.

" அம்மா... ஆண்டவன் அருளால் உன் குடும்ப வண்டி குடை சாயாமல் இவ்வளவு நாட்கள் ஓடி விட்டன.

அதற்காக இறைவனுக்கு நீ ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேண்டும். உன் பிள்ளைகள் இறைவனின் அருட்கொடை.

அதுதான் சுமங்கலியாக உன்னை பூவையும் பொட்டையும் சுமக்க வைத்திருக்கிறது. இருப்பினும் வாழ்ந்தும் நீ வாழா வெட்டி" என்று சொன்னேன்.

அடுத்த வினாடி ஒரு விம்மல் வெடித்துச் சிதறியது. கண்கள் அருவியாகின. ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஐந்தாறு நிமிடங்கள் ஆகி விட்டன.

அணைக்குள் அடங்கி இருக்கும்வரைதான் தண்ணீர். உடைத்துக் கொண்டு வெளியேறினால் வெள்ளம்.

அந்த நிலையில் இருந்தார் அந்தப் பெண். தாய் அழுவதைப் பார்த்து மகளும் அழுதார்.

இந்த நிலைக்கு என்ன காரணம். இருவருக்கும் மிக முக்கிய பொருத்தமான ரஜ்ஜு இல்லை. இப்படி ஒரு நிலை இருந்தால் எந்த ஜோதிடரும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்.

"தாலியைக் கழட்டி விட்டு உண்டியலில் போடும்படி ஒருத்தர் சொன்னார். அப்படிச் செய்யலாமா சாமி" என்று கேட்டார்.

தலையில் விழுந்த இடி எல்லாவற்றையும் தாங்கி ஆகி விட்டது. தொடர்ச்சியான துன்பமே துணையாகி விட்டது. இனித் தேவையில்லை. பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொல்லி அனுப்பினேன்.

சில பரிகாரங்களை செய்யச் சொல்லி இருக்கிறேன். குறை இருக்கிறது என்று தெரிந்தும் 'கொண்டு நோக்கி' வாழ்ந்த அந்த அம்மையாரின் பொறுமையும் திற்மையும் பாராட்டுக்குரியவை.

நேற்று என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " உங்களைச் சந்தித்து விட்டு வந்த இரண்டு நாட்களில் என் மனம் மிகவும் லேசாக இருக்கிறது.

தொலைந்து போன தூக்கம் மீண்டு வந்திருக்கிறது. என் வாழ்க்கைப் பிரச்சினைக்கு உங்கள் மூலமாக ஒரு வடிகால் அமைந்திருக்கிறது" எனச் சொன்னார்.

எல்லாம் என்னுள் இருந்து என்னை இயக்கும் முருகப் பெருமான், அவருடைய அண்ணன் விநாயகப் பெருமானின் அருள்.

No comments:

Post a Comment