Wednesday 30 September 2015

நாக்கில் சனி... நரகமாகும் வாழ்க்கை...!

நான் அலுவலகத்தில் அமர்ந்து கணினியை திறக்கின்ற போது அலைபேசி என்னை அழைத்தது.

" ஐயா நான் உயிர் வாழ்வதிலேயே அர்த்தம் இல்லை. எனக்கு வாழப் பிடிக்கவில்லை. நீங்கள்தான் எனக்கு வழி சொல்ல வேண்டும்."

ஒரு பெண் வெடித்துக் கிளம்பும் விம்மலை அடக்க முடியாமல் என்னிடம் பேசினார்.

" வாழ வழி கேட்டால் என்னால் ஆயிரம் வாய்ப்புகளைக் கூற முடியும். சாக வழி கேட்பது எந்த வகையில் நியாயம" என்று அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தினேன்.

" நீ பாட்டுக்கு ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடாதே.. கடைசி நேரத்தில் என்னிடம்தான் பேசினாய் என்று தெரிந்து போலீஸ் என்னை புரட்டி எடுத்து விடும்" என நகைச்சுவையாகச் சொன்னேன்.

கவ்விப் பிடித்த சோகத்திலும் அந்தப் பெண் மெல்லச் சிரிப்பது எனக்குக் கேட்டது.

" சார் உங்களை நேரில் சந்திக்க வேண்டும். எத்தனை மணிக்கு வரட்டும் எனக் கேட்டார்.

அன்று காலை இரண்டு பேருக்கு ஒப்புதல் அளித்து இருந்ததால் 12 மணிக்கு வரச்சொன்னேன்.

கணவரின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார். என்னை பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு சின்ன சலனம்.

ஜோதிடர் என்றதும் வயதான தோற்றத்தில் பட்டை அடித்து அதற்குரிய அடையாளங்களோடு இருப்பேன் என நினைத்திருப்பார் போலும்.

அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு நான் பேசியதும் அவரின் இறுக்கம் குறைந்து விட்டது.

" நான் என்ன பேசினாலும் தவறாகப் போய் விடுகிறது. எதைத் தொட்டாலும் பிரச்சினை வெடிக்கிறது. வீட்டில் மட்டுமல்ல, நண்பர்கள் உறவுகள் மத்தியிலும் இதே நிலைதான்.

நான் நியாயத்தைத் தான் பேசுகிறேன். ஆனால், அதுவே எனக்கு வினையாகி விடுகிறது. வீட்டில் வெட்டுக் குத்து நடக்காத குறைதான்" என்று சொன்னார்.

ஜாதகங்களை ஆய்வு செய்தேன். ஜென்மம், மகாதசை, கோச்சாரம் என எல்லா வகையிலும் சற்று ஆழமாகப் பார்த்தேன்.

அவர் ஜாதகத்தில் கிரகங்கள் எந்த எந்தக் கட்டத்தில் இருந்தன என நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் சிலர் அதைவைத்து தங்கள் ஜாதகத்தை ஒப்பீடு செய்கிறார்கள்.

அது தவறு. மருத்துவர் செய்வதைப்  பார்த்து அதேபோல் நாமும்  செய்தால் பாதிப்பு நமக்குத் தான். மேலும் சில தவறான அபிப்பிராயங்கள் மற்றவர் மீது ஏற்பட இந்த சிறுபிள்ளைத்தனம் வழி வகுத்து விடும்.

குடும்ப உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சில கிரகங்கள் கெட்டுக் கிடந்தன. ஏழரைச் சனியின் இறுக்கமான பிடியில் வேறு இருக்கிறார்.

நியாயத்தை மட்டும் வைத்து வாழ்க்கை வண்டியை ஓட்டி விட முடியாது. எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனிப்பு உடலுக்கு மிகவும் நல்லது. அதன் ஆக்க சக்திதான் நமக்கு ஊக்க சக்தியாக மாறி ஊட்டம் அளிக்கிறது.

ஆனால், சர்க்கரை வியாதி வந்து விட்டால் அதே சர்க்கரை நமக்கு எதிரியாகி விடுகிறது. இந்த உண்மை தெரிந்து அதை நாம் ஒதுக்காவிட்டால் அதுவே நமக்கு எமனாகி விடுகிறது.

ஆகவே, இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமைதியாக இருங்கள். சனிக்கிழமைதோறும் மௌன விரதம் அனுஷ்டியுங்கள்.

நவக்கிரக வழிபாடு செய்து வாருங்கள். மனதை அடக்கப் பழகிக் கொள்ளுங்கள். நியாயம் பேசுகிறோம் என்று சொல்லி வீட்டை நரகமாக்கி விடாதீர்கள் என கூறினேன்.

புராண இதிகாசங்களில் இருந்து பல எடுத்துக் காட்டுகளை அவருக்கு விளக்கினேன். என்னைச் சந்தித்த பலர் இறக்கி வைத்த அனுபவங்களை அவருக்கு உணர்த்தினேன்.

சிதைந்து போன மனதோடு வந்தவர் தெளிந்த முகத்தோடு திரும்பினார். என்ன அவருக்கு எதார்த்த உண்மைகளை உணர்த்த நான் எடுத்துக் கொண்ட நேரம் இரண்டு மணிக்கும் மேலாக நீண்டு விட்டது.



No comments:

Post a Comment