Sunday 27 September 2015

பெண்டாட்டியா... பிசாசா....?

" உன்னைய பஞ்சாயத்துல நிக்க வச்சு நாறக் கேள்வி கேட்கலைன்னா நான் மனுசி இல்லை."

" ஏம்மா இப்படி பேசுறே.. உனக்கு நான் என்ன குறை வச்சேன். நீ என்னை புருசனா நினைக்க வேண்டாம். ஒரு மனுசா நினைச்சு மரியாதை கொடுக்கக் கூடாதா"

" பொட்டப் பயலுக்கு என்னடா மரியாதை. உன் ஆத்தா பேச்சக் கேட்டுக்கிட்டு அழிச்சாட்டியமா பண்ணுற"

" உங்க அம்மாவ நீ நினைக்கிற மாதிரி தானே... நான் எங்க அம்மாவ நினைக்கிறேன். அது தப்பா...?

" பெத்துப் போட்டா தொத்திக்கிட்டே திரியணுமா.. அந்தக் கெழத்துக்கு கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலை. அம்மாவாம் அம்மா..  நொம்மா"

" இங்க பாரு என்னைய என்ன வேணுமின்னாலும் பேசு.. ஆனா, எங்க அம்மாவை இழுக்காதே. அப்புறம் என்ன நடக்குமுன்னு தெரியாது"

" என்னடா செய்வே.. அடிப்பியா.. மிதிப்பியா... பண்ணிப்பாரு உன் கன்னம் பழுத்துப் போகும்"

" போடி உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு பதிலா.. ஒரு காட்டெருமையைக் கட்டி இருக்கலாம்."

" இப்ப என்ன கேடு வந்துச்சு... காட்டெருமையக் கட்டிக்க.. இல்லைன்னா ஒரு கழுதைய வேணுமின்னாலும் கட்டிக்க..நானா வேண்டாமிங்கிறேன்."

" சீச்சீ... பொம்பளையா இருந்தா உன் கூட பேசலாம். ஒரு பிசாசோடு பேச முடியுமா" என்று கத்திக் கொண்டு வெளியேறிய ராமநாதன் ஆத்திரத்தை எல்லாம் மோட்டார் சைக்கிளில் காட்டினான்.

அவனுக்கு பயந்த ஹீரோ கோண்டா அடுத்த தெருவில் இருந்த டாஸ்மாக் கடையை நோக்கி பாய்ந்து சென்றது.

ராமநாதன் திருமணம் செய்திருப்பது மாமன் மகள் மேகலாவை. வேறு ஒரு பையனுக்கு நிச்சயம் பண்ணி கல்யாண நாளன்று ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் நின்று விட்டது.

அண்ணன் குடும்பம் அசிங்கப்பட்டு நிற்கிற்தே... என ஆதங்கப்பட்ட ராமநாதனின் தாயார் மகனுக்கு மணம் முடித்து வைத்தார்.

மேகலாவின் குடும்பம் வசதி வாய்ப்புக் குறைவானது. மேகலாவுக்கும் தகப்பனார் இல்லை, ராமநாதனுக்கும் அப்பா கிடையாது.

திருமணம் ஆகி இரண்டு வாரங்களில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. என்ன சொன்னாலும் ஏட்டிக்கு போட்டிதான்.

அத்தை அவளுக்கு சொத்தை. புருசனை புடுங்கி எடுப்பது இருட்டுக் கடை அல்வா சாப்பிடுவது மாதிரி மேகலாவுக்கு.

சண்டை சச்சரவோடு ஓராண்டு ஓடி விட்டது. தாம்பத்திய வாழ்க்கை இல்லை. பிரச்சினையைச் சமாளிக்க முடியாத ராமநாதன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு தொலைபேசியில் அழைத்தார். நேரில் வரச் சொன்னேன். இருவரின் ஜாதகத்தோடு வந்தார்.

பார்த்தேன். எந்தப் பொருத்தமும் இல்லை. நல்லதைச் செய்யக் கூடிய கிரகங்கள் அத்தனையும் கெட்டுக் கிடக்கின்றன.

சுமார் இரண்டு மணி நேரம் பேசி அவர் மனதைத் தேற்றினேன். பல்வேறு என் அனுபவங்களை எடுத்துக் காட்டாகக் கூறினேன்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின்னர் அவர் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கும் எனத் தெரிவித்தேன்.

மணமான இருவரைப் பிரிப்பது மிகப் பெரிய பாவம். ஆனால், சேர்ந்தே வாழ முடியாது என்று இருக்கும்போது ஒன்றாக வாழ்ந்து வீட்டை நரகமாக்குவது எந்த வகையில் நியாயம்.

என்னால்தான் என் மகன் வாழ்க்கை பாழாகி விட்டது என்று ராமநாதனின் தாயார் நொந்து நொந்து வெந்து சாகிறார்.

அனைவருக்கும் நிம்மதி வேண்டும் என்றால் அவரவர் பாதையில் செல்வதுதான் சிறப்பு.

அதை நடத்திக் காட்டும் வல்லமை ஆண்டவனுக்கு மட்டும்தானே உண்டு.


 

No comments:

Post a Comment