Tuesday 29 September 2015

பெற்ற தாயை தூக்கி எறிந்த பிள்ளைகள்

ஓர் அம்மையார் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று உங்களைப் பார்க்க முடியுமா என்றார்.

அவருடைய குரலில் அழுகையும் அவசரமும் தெரிந்தது. என் அலுவலகத்துக்கு வரச் சொன்னேன்.

மகளைக் கூட்டிக் கொண்டு மதிய நேரத்தில் வந்தார். அவருடைய இரண்டு மகன்களின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.

பார்த்தேன். அவருக்கு ஏற்பட்ட சிக்கல் என்ன என்பது தெரிந்து விட்டது.

இரண்டு ஆண்கள், ஒரு பெண், எல்லாருக்கும் திருமணம் ஆகி விட்டது.

அதன் பின்னர்தான் பிரச்சினை. ஆண்பிள்ளைகள் இருவரும் அம்மாவை ஒதுக்கி விட்டு மனைவி வீட்டில் மஞ்சம் கொண்டு விட்டார்கள்.

இந்த அம்மா குருட்டுத்தனமான தெய்வ பக்தி உடையவர். தான் அம்மனின் அவதாரம் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

மஞ்சள் ஆடையில்தான் காட்சி தருவார். சற்று அதிகமாகப் பேசக்கூடியவர்.

இவருக்கு துறவு ஜாதகம். எப்படியோ திருமணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு தாயாகி விட்டார்.

பளிங்குத் தரையில் சிதறிய பாதரசத்தைப் போல எதிலும் ஒட்டாத இல்வாழ்க்கை.

பெற்றோர் எல்லாம் பெற்றவர் இல்லை. பிள்ளைகள் எல்லாம் பிள்ளைகள் அல்லர். உங்கள் மூலமாக பிள்ளைகளை உலகுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான் என்று சொன்னேன்.

எங்கு இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் சந்தோசமாக வாழ்ந்தால் சரி தானே. அதைத் தானே ஒரு தாயின் மனது விரும்பும் என்று எடுத்துச் சொன்னேன்.

மனம் ஆறவில்லை. மருகி மருகி கேள்வி கேட்டார். கோகுலத்து கண்ணன் கதையை அவருக்கு உணர்த்தினேன்.

இனிமேல் பிள்ளைகள் இவரிடம் வர வாய்ப்பு இல்லை. ஆனால், மருமகள்கள்தான் மகன்களை பிரித்து விட்டார்கள் என்ற ஆத்திரம் இவரை அவஸ்தைப்படுத்துகிறது.

இவரின் மகள் ஜாதகமும் இல்லற வாழ்க்கைக்கு இசைவாக இல்லை. அதிலும் பிரச்சினை.

இதையெல்லாம் தாண்டி இவர் குடும்பத்திற்கு ஏதோ ஒரு சாபக்கேடு இருக்கிறது.

அதன் தாக்கம் இந்த அம்மையாரை இந்தப் பிறவியில் நிம்மதி இல்லாமல் ஆக்கி விட்டது.

வரும் குருப் பெயர்ச்சி வரை பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.

இதற்கிடையில் அந்த இளம் பெண் என்னிடம் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னார்.

அவர் என்னிடம் அவரின் மனக்குறையை இறக்கி வைக்கத் துடிக்கிறார் என்று அவரின் கண்கள் சொல்லியது.

ஆசிரியையாக பணி செய்கிறார். விடுமுறை நாளில் வரச் சொல்லி இருக்கிறேன்.

அவருக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதை என் உள் மனது தெளிவாக உணர்த்தி விட்டது.

இருப்பினும் அவர் வாயால் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

No comments:

Post a Comment