Monday 28 December 2009

அண்ணன் என்னடா... தங்கை என்னடா... அறிவியல் வளர்ந்த உலகத்திலே.

சாலமன் அரசவைக்குத்தான் விசித்திரமான வழக்குகள் வருவது வழக்கமாம். அதுபோல என்னிடம் விசித்திரமான ஒரு பிரச்சினை வந்தது. ஒரு நாள் இரண்டு ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஒருவர் என்னிடம் வந்தார்.

"இவர்கள் என் பிள்ளைகள். இவர்களின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மூத்தவன் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கிறான். இளையவள் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறாள்" என்றார்.




இருவரின் ஜாதகத்தையும் பார்த்தேன். பிறகு அந்தப் பெரியவரிடம் கேட்டேன். " சரி... இப்போது நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என தெளிவாக சொல்லுங்கள். அதற்கு சாத்தியம் இருக்கிறதா என பார்த்துச் சொல்கிறேன்" என கூறினேன்.

" இவர்கள் இரண்டு பேருமே கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்க மாட்டேன் என்கிறார்கள். இவர்களுக்கு திருமண யோகம் இருக்கிறதா" எனக் கேட்டார்.

திருமணத்திற்கு பாதகமான வகையில் எந்தக் கிரகமும் அமைந்திருக்கவில்லை. சுகஸ்தானமும் அயன சயன ஸ்தானமும் நன்றாக இருந்தன. காம வேட்கையை அதிகரிக்கும் வகையில் சில கிரகங்கள் வலிமை அடைந்திருந்தன. சந்நியாச யோகத்தைத் தருகின்ற வகையில் எந்தக் கிரகமும் இல்லை.

இது குறித்து இவரிடம் பேசி பயனில்லை. ஆகவே பிள்ளைகளை அழைத்து வர முடியுமா என அவரிடம் கேட்டேன். அழைத்து வருவதாக சொல்லி விட்டு சென்றவர் அடுத்த வாரத்தில் வந்தார்.

இருவரிடமும் பேசினேன். இருவருமே திருமணம் வேண்டாம் என சொன்னார்கள். அதே நேரத்தில் அவர்களிடம் ஆன்மீக நாட்டமோ பொதுச்சேவை ஆர்வமோ இல்லை என்பதும் தெரிந்தது. வேறு கோணத்தில் பேச்சைத் திருப்பினேன்.

அண்ணனை விட்டு விட்டு போக மாட்டேன். திருமணம் என்ற பெயரில் தங்கையைப் பிரிய மாட்டேன் என்பதுதான் இருவரின் இறுதிப் பதிலாக இருந்தது. இவர்களின் பாச உணர்ச்சி ஆரம்பத்தில் என்னை வியக்க வைத்தது. இருந்தாலும் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

பையனையும் அப்பாவையும் வெளியே இருக்கச் சொல்லி விட்டு பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன். எதிர்கால பாதிப்புகளை சரியான கோணத்தில் எடுத்துச் சொன்னால் ஆண்களை விட பெண்கள்தான் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தான் அவர்கள் கதை...

இவர்கள் இருவரும் சின்ன வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். இவருடைய தகப்பனார் பாசத்தைக் கொட்டி வளர்த்து படிக்க வைத்தார். தாயின் அன்பு கிடைக்காததால் அண்ணனும் தங்கையும் ஒருவருக்கொருவர் தாயாக மாறி அன்பைப் பொழிந்தனர்.

ஒரே தட்டில் சாப்பிட்டனர். ஒரே படுக்கையில் படுத்தனர். வயது ஆக ஆக பாலியல் மாற்றங்கள் உருவாகின. இருந்தாலும் இவர்கள் அன்பில் மாற்றம் இல்லை. தகப்பனாரும் பிள்ளைகளின் அன்பைக் கண்டு பூரிப்பில் இருந்தார்.

ஒரு நாள் குளித்து விட்டு அறைக்குள் ஆடை மாற்றிக் கொண்டு நின்றிருக்கிறாள் தங்கை. ஏதோ ஒரு சாமானை எடுக்க உள்ளே நுழைந்த அண்ணன் நிர்வாணக் கோலத்தில் நின்ற தங்கையைப் பார்த்திருக்கிறான். என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை அல்லவா.

பட்சம் வழக்கறியாது... நித்திரை சுகமறியாது..... பிச்சை தரமறியாது.... இச்சை முறையறியாது.... என்ற முன்னோரின் வாக்குப்படி காம வயப்பட்ட அண்ணன் ஒரு கணம் ஆடாமல் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அடுத்த கணம் புலி மாதிரி பாய்ந்து அவளை கட்டிப் பிடித்திருக்கிறான்.

எதிர்த்து போராட வேண்டிய தங்கை இணங்கிப் போனாள். இருவரும் படுக்கையில் சாய்ந்தனர். சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்தது. இது வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தொடர்ந்தது. திருமணம் செய்து கொண்டால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போக வேண்டும். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சட்டமும் சமுதாயமும் தடையாக நிற்கும்.

படித்தவர்கள் அல்லவா... இதைத் தீர்க்கமாக தெரிந்து கொண்டு திருமணத்தை மறுத்து வந்திருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை என்ற பெயரில் வேறு வேறு இடங்களில் வாழ்வதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்த உண்மையை என்னிடம் கூறிய போது அவள் பயமோ பதட்டமோ அடையவில்லை. மிக சாதாரணமாகவே பேசினாள். "இது என்னுடைய அப்பாவுக்கோ மற்றவர்களுக்கோ தெரியக்கூடாது. தெரிந்தால் என் அப்பா தாங்க மாட்டார். உங்களிடம் சொன்ன இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டேன்" என்று சொல்லி என்னையும் அதிர வைத்து விட்டாள்.

இது குறித்து அவளிடம் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்டே இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீது எந்தக் கருத்தையும் திணிக்க முடியாது. அப்படிச் செய்தாலும் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

அவர்களுடைய தகப்பனாரை வரவழைத்து " இன்னும் சில ஆண்டுகளுக்குள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். அதுவரை அவசரப்பட வேண்டாம். பிள்ளைகள் போக்கிலேயே விட்டு விடுங்கள்" என சொல்லி அனுப்பி வைத்தேன்.

இப்படிச் சொல்லும்போது என் இதயத்தில் இனம் தெரியாத வலி.... நான் செய்தது சரியா... தவறா...என்னை நானே அலசிப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை.

மாமியாரைக் காதலிக்கும் மருமகன்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி என்னை வந்து சந்தித்தார். அவருக்கு 35 வயது இருக்கும். இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பெண். இளையவன் ஆண். அவர்கள் வசிப்பது ஒரு அடுக்குமாடி வீடு.

கணவர் காலையில் ஆறு மணிக்கே வேலைக்கு போய் விடுவார். இவர் இல்லத்தரசியாக இருப்பதால் மீண்டும் படுக்கச் செல்வார். அப்படி படுத்து இருக்கும்போது யாரோ ஒருவர், இவர் பக்கத்தில் படுப்பது போலவும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது போலவும் இருக்கிறது என என்னிடம் சொன்னார்.



இது இவருடைய மனப்பிரமை என நினைத்து சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வந்தேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். இன்றும் எனக்கு அந்த சம்பவம் நடந்தது. அது உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது என்று சொன்னார்.

அப்போதும் அவருக்கு ஆறுதலான சில விஷயங்களைச் சொல்லி அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தார். குளிக்கும்போது என் உடம்பில் ஒரு பாம்பு வந்து சுற்றிக் கொள்கிறது. அது சில்மிஷமான காரியங்களைச் செய்கிறது என கூறினார்.

என்னடா இது சந்திரமுகி படம் போல இருக்கிறதே என நினைத்தேன். இனிமேலும் வெற்று வார்த்தைகள் பயனளிக்காது என எண்ணி என்னிடம் இருந்த அழகர்கோவில் தீர்த்தத்தைக் கொடுத்து வீடு முழுவதும் தெளிக்கச் சொன்னேன்.
அதற்கு பின்னர் அவர் வரவில்லை. அண்மையில் என்னைத் தேடி வந்தார். அவர் முகம் வெளிறிப் போய் இருந்தது. இப்போது இன்னொரு புதுக் கதை ஒன்றைச் சொன்னார்.

" என் மகளுக்கு 16 வயது ஆகிறது. ஒரு பையன் அவளைக் காதலிக்கிறான். அவன் முகத்தைப் பார்க்கும்போது நான் கனவில் பார்க்கும் பாம்பைப் போலவே இருக்கிறது. என்னுடைய கணவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. வீட்டிற்கு வரக்கூடாது என கண்டிப்பாக சொல்லி விட்டார்" என கூறினார்.

" இது நல்ல விஷயம்தானே... இதில் என்ன பிரச்சினை இருக்கிறது" என நான் சொன்னேன்.

" ஐயா... என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என் கணவர் இல்லாத நேரத்தில் நானே போன் செய்து வரச் சொல்கிறேன். என் மகளும் பள்ளிக்கூடத்துக்கு போய் விடுவாள். எனக்கும் அவனுக்கும் முன் ஜென்மத்தில் தொடர்பு இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்கள்" என கேட்டாள்.

அந்தப் பெண்ணின் பிறந்த நேரத்தை வாங்கிக் கொண்டு மறுநாள் வந்து பார்க்கும்படி அனுப்பி வைத்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால், நெஞ்சுக்குள் ஒரு நெருடல். இதையும் தாண்டி ஏதாவது இருக்கக்கூடுமா என என் உள்ளுணர்வு சொல்லியது.

மறுநாள் நான் சொன்ன நேரத்துக்கு வந்தாள். நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விட்டேன்.

" அம்மா... நீ அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறாய். நான் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் முன் ஜென்மத் தொடர்பு பொருந்துகிறதா என பார்க்க முடியும்" என சொன்னேன்.

அவளுடைய முகத்தில் சின்னக் கலவரம். அதை நான் கவனிக்கத் தவறவில்லை. " சரி கேளுங்கள்" என சொன்னாள்.

"உன் மகளின் காதலன் உன்னைத் தொட்டிருக்கிறானா?'

" ஆம் ஐயா..."

" கட்டிப் பிடித்து இருக்கிறானா..."

கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

" என் கண்ணைப் பார்.... நான் சொல்வது சரியா என உன் மனதைக் கேள். ஒத்துக் கொள்வதாக இருந்தால் மேலே பேசலாம். இல்லை என்றால் நடையைக் கட்டு" எனக் கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன்

"அவன் உன்னைக் முதலில் கட்டிப் பிடித்தான்.அது உனக்கு கூச்சமாக இருந்தது. மகளின் காதலன் இப்படிச் செய்கிறானே என மனம் சஞ்சலப்பட்டது. நாளடைவில் உன் மனமும் உடலும் அதை ஏற்றுக் கொண்டது.

ஒரு நாள் சரியான சந்தர்ப்பத்தில் உன்னை அவன் படுக்கையில் பிடித்து தள்ளி விட்டான். முதலில் நீ முரண்டு பிடித்தாய். பின்னர் இணங்கி விட்டாய். இப்போது அடிக்கடி அந்த சுகம் கேட்கிறது.

மகளின் காதலனோடு இப்படி நடப்பது தவறு என உன்னுடைய அறிவு சொல்கிறது. ஆனால் பாழாய்ப் போன ஆசை அதை ஜெயித்து விடுகிறது. இப்போது உன் கணவரின் கண்டிப்பால் அவன் வீட்டிற்கு வர முடியவில்லை. அதே நேரத்தில் உன்னால் அந்த சுகத்தை அடையாமல் இருக்க முடியவில்லை. உன் மனமும் உடம்பும் கிடந்து தவிக்கிறது. இது சரியாக இருந்தால் அதற்கான ஆலோசனை சொல்கிறேன். இல்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்யலாம்" என சொன்னேன்.

அவளுடைய கண்களில் இருந்து பொல பொல வென கண்ணீர் கொட்டியது.

" நீங்கள் நேரில் பார்த்ததைப் போல் அப்படியே சொல்லி விட்டீர்கள். இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள் ஐயா" என அழுது கொண்டே கேட்டாள்.

என் நண்பர் ஒருவர் மன நல மருத்துவராக இருக்கிறார். அவரைப் போய் பார்க்கும்படி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறேன்.

இதைப் படித்தவுடன் 'அந்தப் பெண் இப்படி செய்யலாமா...' என கோபப்பட்டு விட வேண்டாம்.

அந்தச் சுகம் மட்டுமே பிரதானம் என எண்ணி இருந்தால் என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டாள். அதே வேளையில் அந்தப் பெண் செய்வதை நியாயப்படுத்துவதும் முட்டாள்தனம்.

அவளுடைய ஜாதகத்தைப் பார்த்தேன். அவளைத் தடம்மாறச் செய்கின்ற அளவுக்கு சில கிரகங்கள் கெட்டுப் போய் இருந்தன. அதை விளக்கிச் சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.

இந்த பதிவூட்டத்தைப் படிக்கும் ஆண்களும் பெண்களும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். காலம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோளாறான பாலியல் பழக்கங்கள் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியாகின்றன.

நாக்கு ருசிக்காக பல உணவுக்கடைகளில் ஏறி இறங்குவதைப் போல உடல் ருசிக்காக நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத பல காரியங்களை இளைஞர்களும் யுவதிகளும் செய்கிறார்கள்.

 இது ஆரம்பத்தில் இன்பத்திலும் இன்பமாக இருக்கலாம். குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் தீர்க்க முடியாத துன்பத்தை கொண்டு வந்து விட்டு விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Friday 18 December 2009

காலம் மாறும். கவலை தீரும்.

பிரான்சு நாட்டில் வசிக்கும் அன்பர் ஒருவர் என் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி இருந்தார். அந்த தகவலின் சாரத்தை இங்கே தந்திருக்கிறேன்.

vanakam sir
mikavum nandri sir
naan srilanka naadai pirapidamaka kondavan. ippoluthu france (europe) ennum naadil vasikiren. ennakku nalla kalam endu sollukirarkal but appadi nalla kalam ethuvum nadakavillai maaraka thaan nadakirathu.
ennathu yathakathil entha kalam nalla kalam ? enna tholil seiyalam? business sari varuma ? kalyanam entha vayathil eppoluthu ? kadan pirachani thiruma? ennathu ayul matrum health? ennaku politics , cinema sammanthama full intrest irukku ithukal ennaku sari varuma ? appa, amma health ? ennudaya yathakathil  panam sampathikka mudiuma ? aakiyavatrai kanithu kurunkal pls. unkaludaya telephone number kodukka mudiuma thodarpu kolvathatku.....
mikavum rompa rompa nadri sir.


அருமை நண்பர் சுகிதாசுக்கு என்றும் நலமே வளரட்டும்.

" என்ன... என்ன.... வேலைப் பிடித்ததும் என்ன..." என்ற கேபி சுந்தராம்பாள் பாடலைப்போல பல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்.




உங்கள் ஜாதக பலனைச் சொல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜாதகம் என்பது வழிகாட்டி மட்டுமே. அதோடு உழைப்பும் சேர்ந்தால்தான் உயர்வு கிட்டும்.

உங்கள் நட்சத்திரம் பூசம் 4-ஆம் பாதம், ராசி கடகம், லக்கனம் கன்னி.
நீங்கள் பிறந்த போது சனிமகாதசை கர்ப்பச் செல் நீக்கி எட்டு மாதங்கள். ஆயுளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆயுள் ஸ்தானாதிபதி லக்கனத்தில் இருப்பதால் ஆயுள் தீர்க்கம் என்று குறிப்பிடலாம்.
கலைக்கு காரனான சுக்கிரன் 4-ஆம் வீட்டில் இருக்கிறான். நடிப்புகாரகன் செவ்வாய் கேந்திரத்தில் இருக்கிறான். ஆகவே நீங்கள் துணிந்து நாடகம், திரைப்படம் போன்ற துறைகளில் உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்த களம் இறங்கலாம்.

வீடு, இடம் வாங்கி விற்பது போன்ற தொழில் உங்களுக்கு லாபத்தை தரும். உணவகத் தொழிலும் லாபத்தைத் தரும். மொத்தத்தில் வார்த்தை ஜாலத்தால் நடக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக ஏழரைச்சனியின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி இருக்கிறீர்கள். அதனால் கடன் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். அவை மெல்ல மெல்ல விலகும்.
மாதுரு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் நிற்பதால் தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு இருக்கும். இது போன்ற ஜாதக அமைப்பு கொண்ட பலர் தாயைப் பிரிந்தோ இழந்தோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உங்களுக்கு செவ்வாய் தோஷ அமைப்பு இருக்கிறது. செவ்வாய் லக்கனத்தில் இருப்பதோடு மட்டும் அல்லாமல் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதற்கு நீங்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற அமைப்புக்கொண்டவர்கள் ஏற்கனவே காதலில் வீழ்ந்து இருப்பார்கள். அதோடு தோல்வியும் கண்டிருப்பார்கள். உங்களைப் பொறுத்தவரை 30-க்கு மேல் திருமணம் நடந்தால் நல்லது..
சனிபகவானும் லக்கனத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமணத்தில் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

லக்கனாதிபதி சர ராசியில் இருந்து பாப கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டிருப்பது உங்களை ஒரு நிலையில் இருக்க விடாது. இதற்கு சதா சஞ்சார யோகம் என்று பெயர். அதனால் நாடோடி வாழ்க்கை அமைவதும் ஏற்ற இறக்கமான பொருளாதார சூழல் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

6-ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பது எத்தகைய எதிர்ப்பையும் தாண்டி வெற்றி கொள்ள வைக்கும். இப்போது உங்களுக்கு சுக்கிரமகா தசை நடக்கிறது. இதில் 2016- ஆம் ஆண்டு வரும் வியாழபுத்தியில் நீங்கள் நினைக்கின்ற லட்சியத்தை அடைவீர்கள். 2013-ஆம் ஆண்டில் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகளைக் கண்டறிவீர்கள்.


"நமக்குக் கீழே உள்ளவர் கோடி.... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்பது கவியரசர் கண்ணதாசனின் மெய்ஞான வரிகள்.... ஒரு காலத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். காலம் மாறும். கவலை தீரும். மனக்குழப்பத்தை அகற்றி விட்டு முன்னேற்றப்பாதைக்கு வழித்தடத்தை அமைக்க முயற்சி செய்யுங்கள்.

Wednesday 16 December 2009

எங்கே நிம்மதி.....?

என் நண்பர்... என் துன்பத்தில் தோள் கொடுத்து நான் துவண்டு விடாமல் காத்தவர். வெறித்தனமான பாசக்காரர். சலிப்படையாத நேசக்காரர். இப்போது லண்டனில் சட்டம் படித்து விட்டு உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தையும் அதற்கு நான் அளித்த பதிலையும் இங்கே தந்திருக்கிறேன்.


வேலைப்பளுவும் அலுவல் அலைச்சலும் வலைப்பூவுக்குள் என்னை வரவிடாமல் தடுத்து விட்டன.
 
வணக்கம். வாழ்த்துக்கு நன்றி.



இங்கு விருந்து என்பது மது அருந்துவதுதான். உடல் நல காரணத்தால் மிக சிறிய அளவில் வீட்டிலேயே செய்து முடித்துக்கொண்டோம்.


மாஸ்டர் முடித்து விட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். பி.எச்.டி செய்ய முயற்சிப்பேன். தற்பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறேன்.


இங்கிலாந்தின் குடிநுழைவுத்துறையின் வழங்கும் High skilled Immigrant அங்கீகாரத்தையும். இங்கிலாந்தின் நிதிநிறுவனங்களின் இயக்குனர் வாரியத்தில் இடம் பெறுவதற்கு தேவையான Financial Service Authority... யின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன்.


நான் இங்கு அரசு ஊழியர்களுக்கான கூட்டுறவு கழகத்தின் வாரியத்தின் செயல் பாட்டு கண்காணிப்பு அதிகாரியாக பணி ஆற்றுகிறேன். தற்போது கூட்டுறவு கழகத்தின் வாரியத்தில் பொறுப்பேற்றேன்.


மனைவியோடு வாழ முடியாமல் போன வாழ்க்கையை, எந்த தேசமும் திருப்பி தந்து விடமுடியாது கவிஞரே, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும், இந்த வரிகளை எழுதும் போதே கண்கள் கலங்குகின்றன. இவ்வளவு பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாத மூர்க்கமான முட்டாளாய் வாழ்ந்து விட்டேனே என்பதுதான் எனது இன்றைய கவலை. இந்த கவலைகள் எல்லாம் ஆழ்கடல் மணலாய் அடங்கி கிடக்கும். நெஞ்சோடு நெருக்கமானவர்களை சந்திக்கும் போது விழித்துக்கொள்ளும். பொதுவாக பிடித்து இருக்கிறது.


கவிஞரே, நாம் கிள்ளானில் ஜாதகம் பார்த்த சகோதருக்கு இந்த திருமணம் சரி இல்லை என்பதனை மிகத்திட்டவட்டமாக உணர்ந்திருந்தார் என்பதனை என்னால் உணர முடிகிறது. அவர் சொன்னார், அம்மனை துதிப்பவன், நல்லதே நடக்கும் என்று சொன்னால் நல்லா இல்லாத ஜாதகம் கூட நன்மையில் முடியும். அவரது குரல் பாதிதூக்கத்தில் இப்போதும் கேட்கும். பாவம் அவரால் சரி இல்லை என்று எப்படி சொல்ல முடியும், நாம் திருமண தேதி குறிக்க அல்லவா சென்றோம். இதற்கிடையில் இப்போது நமது ஜாதகம் என்ன சொல்கிறது என்பதும் முக்கியம். பார்த்துச் சொல்லுங்கள்.




அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்

உங்களுடைய ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தேன். நட்சத்திரம் பூரம் 2, ராசி சிம்மம், லக்கனம் மிதுனம். நீங்கள் அரசியல் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியும்.
பத்தாம் வீட்டு அதிபதியும் ஏழாம் அதிபதியுமான குரு லக்கனத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டையும் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டையும் பார்க்கிறார். இது
அரசியலில் வெற்றி வாய்ப்பைத் தருகின்ற அம்சமாகும்.

10- ஆம் அதிபதியான குரு லக்கனத்தில் இருப்பது கடின உழைப்பால் சொந்த முயற்சியால் முன்னுக்கு வருகின்ற நிலையை ஏற்படுத்தும். விஜய வீரிய ஸ்தானதிபதி சூரியன் 6-ஆம் இடத்தில் சிறப்பாக இருப்பதால் எத்தகைய எதிர்ப்பையும் சமாளிக்கும் வல்லமை உடையவர் நீங்கள். மற்றவர்களால் முடிக்க இயலாத காரியத்தை முழுவீச்சில் இறங்கி முடிக்கின்ற திறன் படைத்தவர்.

சந்திரன் 3-ஆம் வீட்டில் இருப்பது ஏதாவது நோய்த் தொல்லையைத் தந்து கொண்டே இருக்கும். லக்கனாதிபதி புதன் ரோகஸ்தானத்தில் இருக்கிறார்.
துடுக்காக பேசுதல், எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல், கர்வமாக நடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களை 6-ஆம் வீட்டில் இருக்கின்ற புதன் செய்யத் தூண்டுவார்.

இப்படி பல அம்சங்கள் இருக்கின்ற உங்கள் ஜாதகத்தில் பாதகமான நிலைகளையும் பார்ப்போம். உங்கள் நட்சத்திர பாதம் புதன் அம்சத்தில் அமர்ந்திருக்கிறது.

புதன் ஒரு அலி கிரகம். இவன் குடும்பவாழ்க்கைக்கு எதிரி. வாரிசுகள் இருக்கக்கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு கெடுதல் செய்பவன்.
அடுத்து களத்திரகாரனான சுக்கிரன் 8-ஆம் வீட்டில் கெட்டுப் போய் இருக்கிறான். இதுவும் பாதகமான அம்சம். கலகப் பிரியனாக இருத்தல், வயிறு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு நோய் போன்றவற்றை இந்தச் சுக்கிரன் ஏற்படுத்துவான்.

மேலும் சுக்கிரன் நிற்பது திருவோண நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில். இதற்கு செவ்வாய் அதிபதி. மேலே சொன்ன பலன்களை இந்தச் செவ்வாய் கண்டிப்பாக ஜாதகருக்கு கொடுத்தே தீருவான்.

முக்கியமாக செவ்வாய்.... மங்களன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் களத்திரஸ்தானமாகிய 7-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறான். இது மிகக் கடுமையான செவ்வாய் தோஷமாகும். இது குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்துகின்ற ஸ்தானாதிபத்தியமாகும்.

மேலும் ஆதிபத்தியத்திலும் மணவாழ்க்கைக்கு எதிராகவே ஜாதக பலன்கள் இருக்கின்றன. ரோகஸ்தானாதிபதியான செவ்வாய் (6- வீட்டுக்கு அதிபதி)
களத்திர ஸ்தானத்தில் (7-ஆம் வீட்டில் ) இருப்பது மிகவும் தீமை பயக்கக்கூடியதாகும்.
மனைவியைப் பிரித்து விடுவான். அல்லது மனைவிக்கு மாரகத்தைத் (மரணம்) தந்து விடுவான். இல்லையேல் மனைவியை தீராத நோயாளியாக்கி விடுவான்.

அதே மாதிரி 4-ஆம் அதிபதியான புதன் 6-ஆம் வீட்டில் இருப்பது உங்களுக்கு முன்கோபத்தையும் யாரையும் எடுத்து எறிந்து பேசுகின்ற
தன்மையையும் மற்றவர்களை புண்படுத்திப் பார்ப்பதில் சந்தோசத்தையும் ஒருவருக்கொருவர் கலகமூட்டி ரசிக்கின்ற மனப்பான்மையையும் உருவாக்குவான். இது குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கின்ற மிகப் பெரிய ஆபத்தான குணமாகும்.

ஆகக்கூட்டி பார்த்தால் குடும்பம் என வருகின்றபோது அதற்கான கிரகங்கள் பாதகமான அமைப்புப் பெற்று இருப்பதோடு தோஷ நிவர்த்தி அடையாத் தன்மையையும் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மையாகும்.

உங்கள் மணவாழ்க்கையைக் கெடுத்ததற்கு பிரதி உபகாரமாக பல நன்மைகளைச் செய்யும் விதமாக 12-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறான். அயல் நாட்டில் வேலை, மிகப்பெரிய செல்வாக்கு, புகழ், செல்வம், கீர்த்தி போன்றவற்றை சுக்கிரனே உங்களுக்கு அருளுகிறான். இந்த அமைப்பு விபரீத ராஜ யோக அமைப்பாகும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பது ஜோதிட பொன்மொழியாகும்.

கோச்சாரப்படி இப்போது நீங்கள் ஏழரைச் சனியின் பிடிக்குள் இருக்கிறீர்கள். சூரியனுக்கு எதிரி சனி என்பதால் சிம்ம ராசிக்காரர்களை ஒரு கை பார்த்து விட்டுத்தான் சனி ஓய்வெடுப்பான். அந்த வகையில் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சிரமத்தை எதிர் நோக்கத்தான் வேண்டும்.

இது வரை 6-ஆம் வீட்டில் இருந்த குரு இம்மாதம் 19-ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பத்திற்கு போகிறார். இது நல்ல அமைப்பாகும்.

மேலும் தற்போது ராகு மகா தசையில் சனி புத்தி நடக்கிறது. 2010- 7-ஆம் மாதம் வரை நீடிக்கும். இதுவும் சாதகமான காலம் அல்ல. அதற்கு பின்னர்
2013-1-ஆம் மாதம் வரை மிக நேர்த்தியான காலம் ஆகும். உங்கள் எதிர்கால லட்சியத்துக்கு ராஜ பாட்டை அமைக்கின்ற நேரம் என்றுகூடச் சொல்லலாம்.
2020- வருடத்தில் குருமகாதசை வருகிறது. அந்தக் காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருப்பீர்கள்.
மேலும் உங்களை மாதிரி ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு 45- வயதுக்கு மேல் அதாவது வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் மிகச் சிறப்பான
பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும் என்பது ஜோதிட மாமுனி புலிப்பாணியின் கூற்று.

இன்னொரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். கிள்ளான் ஜோதிடர் தொழில் முறையில் அதிகமான சம்பாத்தியத்தை பெற்றவர். அவருக்கு ஐந்து கிரகங்கள் உச்சம். இப்படி உச்சம் பெற்ற கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் அடைந்திருந்தால் ஆண்டியையும் அரசனாக்கி விடும்.

அதே நேரத்தில் பணம் ஒன்றே அவரின் குறிக்கோளாக மாறியது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதனால், அவரிடம் பாசத்தோடு ஒரு எச்சரிக்கை விடுத்தேன்.

"அண்ணே பணம் என்பது வாழ்க்கையின் இரத்த ஓட்டம் என்பார்கள்... ஆனால், இரத்த ஓட்டம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. நோயற்ற
வாழ்வே...குறைவற்ற செல்வம்" என சொல்வேன்.

அவரோ சிரித்துக் கொண்டே " குறைவற்ற செல்வமே... நோயற்ற வாழ்வாகும். காசைக் காட்டினால் நோய் வந்த வழியே திரும்ப ஓடிவிடும்." என சொல்வார். கோடி ரூபாய் சம்பாதிப்பதுதான் என் லட்சியம் என்பார்.

அவர் சொன்ன மாதிரியே இரவு பகல் பாராமல் உழைத்து சில கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார். கடந்த ஆண்டு தீபாவளி கழித்து மூன்றாம் நாள் மதிய வேளையில் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்தவர் பக்கத்தில் இருந்தவர்களுக்குக்கூட தெரியாமல் பரம பதம் அடைந்து விட்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய மனைவியும் இறந்துவிட்டார்.

அவர் என்ன வைத்திருக்கிறார். எங்கு வைத்திருக்கிறார் என்பது தெரியாமல் வாரிசுகள் தவிக்கிறார்கள். அதோடு பிள்ளைகளும் சரியான வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.

இந்த வேதனையும் என் மனதை பிறாண்டிக் கொண்டிருக்கிறது.

Monday 7 December 2009

விஜய்க்கு அரசியல் ஒத்து வராது

நடிகர் விஜய் தமிழகத்தின் இப்போதைய செல்லப்பிள்ளை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர். ரசிகர்களுக்கு இளைய தளபதி. விஜய் அரசியலுக்கு வரப்போகிறார்...என்ற செய்தி தமிழகத்தில் காட்டுத் தீ மாதிரி பரவியது. ரசிகர்கள் உற்சாகத்தில் கொந்தளித்தனர். வாண வெடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அறிவிப்புக்காக காத்திருந்தனர்.





காத்திருந்து காத்திருந்து கால்கள் வலித்ததுதான் மிச்சம். பார்த்திருந்து பார்த்திருந்து கண்கள் பூத்ததுதான் லாபம். உடைத்தவுடன் பொங்கிய அடங்கும் சோடாவைப் போல அந்த அறிவிப்பு கர்ப்பத்திலே இறந்து போனது.

இப்படி ஆனதற்கு ஆளும் கட்சி திமுக கொடுத்த அழுத்தம்தான் காரணம் என ஒரு தரப்பு கூறியது. இல்லை... இல்லை... எங்கள் தலைவரை ராகுல் காந்தி மதிக்கவில்லை என மற்றொரு தரப்பு மறுத்தது.

எது எப்படியோ விஜய்யின் ஜாதகம் சினிமாவுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். அரசியலுக்கு சாதகமாக இல்லை என்பதே என்னுடைய கருத்து.

முதலில் இவருடைய தனிப்பட்ட குணத்தைப் பார்ப்போம். இவர் மிகவும் அமைதியானவர். விளம்பர வெளிச்சம் இவருக்கு அவ்வளவாக ஒத்து வராது. பொதுமக்களிடம் நெருக்கமாக இருக்க முயற்சி செய்கிறார். ஆனால், முடியவில்லை.

சற்று உற்று நோக்கினால் விஜய் அரசியலுக்கு வருவதில் விஜய்யை விட விஜய்யின் அப்பா சந்திரசேகர்தான் ஆவலாகவும் ஆர்வமாகவும் இருந்தார்...இருக்கிறார்...

திரைப்படத்தில் நடப்பதற்கு கூட தந்தையால் உந்தப்பட்டு வந்தவர்தான் விஜய். தந்தையின் அனுசரணை இல்லாவிட்டால் சினிமாவில் இந்த அளவுக்கு பேர் போட்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இவர் ஜாதகத்தில் கலைக்கு நாயகனான சுக்கிரன் 11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். நடிப்புகாரகன் செவ்வாய் லக்கனத்தில். விஜய்யின் ராசியும் லக்கனமும் கடகம். இதுவரை ஏழரைச்சனியின் பிடியில் இருந்து இப்போதுதான் விடுபட்டிருக்கிறார்.

வாக்குஸ்தானாதிபதி சூரியன் 12- மறைவு இருந்தாலும் குருபார்வையால் பலம் அடைகிறார். மேலும் 2-ஆம் இடத்தையும் பார்வை செய்கிறார். கடகத்தில் செய்வாய் நீச்சம். ஆட்சி பெற்ற சந்திரனோடு இருப்பதால் நீசபங்கம் அடைந்து ராஜயோகத்தைத் தந்திருக்கிறார்.

குரு எட்டில் மறைந்தாலும் ஆயுள் ஸ்தானத்தை வலுவாக வைத்திருக்கிறார். ஆயுள் ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியுமான சனியையும் 5-ஆம் பார்வையாக பார்க்கிறார்.

இவையல்லாமே புகழ் பெற்ற மக்களை வசியப்படுத்துகின்ற நடிகராக வைத்திருக்க உதவுமே தவிர அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடிக்க ஆதரவாக இருக்காது.

4-ஆம் இடத்ததிபதி ஆட்சி பெற்றிருந்தால் அரசியலுக்கு வரலாம். 1-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் அரசியல் பிரவேசத்திற்கு உதவும். ஆனால், 7-ஆம் இடத்து அதிபதியும் 9-ஆம் இடத்து அதிபதியும் வலுவாக இல்லை.

மேலும் குரு 8-ஆம் இடத்தில் மறைந்திருப்பதும் இவருடைய அரசியல் பிரவேசத்திற்கு பாதகமான நிலையையே ஏற்படுத்தும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சர்ப்பகிரகம் நிற்பது பூர்வபுண்ணிய பலன்களைக் குறைப்பதாக கருதலாம்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்க்கும்போது விஜய் தனிக்கட்சி தொடங்கி அரசியல் பண்ணுவது என்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.

அரசியல் சம்பந்தப்பட்ட சில கிரகங்கள் சாதகமாக இருப்பதால் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நிலையில் மட்டுமே செல்வாக்கோடு இருக்க முடியும்.

தன்னுடைய செல்வாக்கை மற்றவர்களுக்கு தாரைவார்ப்பதைவிட நடிப்புத்துறையில் கிடைத்திருக்கும் அளப்பரிய ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டால் விஜய் இன்னொரு ரஜினியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday 1 December 2009

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரமாட்டார்

2012- உலகம் அழியுமா என்பதுதான் அனைவரின் மனதில் பயத்தோடு தொக்கி நிற்கும் விடை தெரியாத கேள்வி. இதை விட பொது மக்களை பிறாண்டிக் கொண்டு இருக்கும் கேள்வி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதுதான்.




இந்த ஆண்டு வருவார்.. அடுத்த ஆண்டில் அரசியல பிரவேசம் நடத்துவார் என அரசியல் ஆய்வாளர்களும் ஜோதிட விற்பன்னர்களும் சொன்னார்கள்...சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் சுருக்குப் பையில் போட்ட சுக்கான் கல்லு மாதிரி சும்மா இருக்கிறார்.

இப்போது சண்டி யாகம் செய்ய ரஜினி ஆயத்தமாகி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எதிர்ப்புகளை முறியடிக்கவும் எதிரிகளை வீழ்த்தவும் செய்யப்படுகின்ற யாகம் இது. அரசியல்வாதிகள்தான் இந்த யாகத்தின் மொத்த குத்தகையாளர்கள். இது ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி என பரவலாகப் பேசப்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 7-ஆம் இடத்து அதிபதி 9-ஆம் இடத்து அதிபதி ஆட்சி பெற்றிருந்தால் அரசியல் பதவிகளுக்கு வரலாம். ரஜினி ஜாதகத்தில் 9-ஆம் அதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். சந்திரனோடு இருப்பதால் சந்திர மங்கல யோகத்தையும் தருகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் 4- ஆம் இடத்து அதிபதி ஆட்சி உச்சம் பெற்று நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மந்திரி ஆகும் வாய்ப்பு உண்டு. ரஜினி ஜாதகத்தில் 4- ஆம் இடம் விருச்சிகம். இதன் அதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் அடைந்திருக்கிறார். அதோடு 6- ஆம் இடம் என்பது செவ்வாய்க்கு மிக அனுகூலமான இடமாகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்கனாதிபதியாக இருக்கும் கிரகம் அம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறதோ... அந்த ராசியாதிபதி ராசிச் சக்கரத்தில் கேந்திர கோணம் ஏறினால் அரசியலில் கோலோச்சலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால் ரஜினியிடம் இருக்கிற பிரத்தியேக குணங்களைப் பார்க்க வேண்டும். ரஜினி மனதில் பட்டதை அப்படியே கூறுபவர். இது அரசியலுக்கு ஆகாது. பொய் சொல்லக்கூடாது என்ற கொள்கையுடையவர். இது அரசியல் கொள்கைக்கு எதிரானது. தன்னால் யாருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் தீங்கு வரக்கூடாது என நினைப்பவர். அரசியலில் தேவைப்பட்டால் பொதுச்சொத்துகளை எரிக்க வேண்டும். அவசியப்பட்டால் ஆளையே கொளுத்த வேண்டும். இதை ரஜினி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

நேரத்துக்கு தகுந்த மாதிரி நிறம் மாற வேண்டும். இது ரஜினிக்கு ஆகவே ஆகாது. லஞ்ச ஊழலே கூடாது என நினைப்பவர் ரஜினி. அரசியலில் அந்தரங்கச் செயலாளரைக்கூட அடக்கி வைக்க முடியாது.

இப்படி நடைமுறை வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களே ரஜினிக்கு எதிராக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

இப்போது நான் சொல்லப்போகிற விஷயம்தான் மிக முக்கியமானது. ஒருவரின் ஜாதகத்தில் 1-ஆம் 2-ஆம் இடத்து அதிபதிகள் கேந்திரத்திலோ கோணத்திலோ இருந்தால் பிரம்ம ஞானியாக திகழ்வார் என்பது ஜோதிட விதி. 1- ஆம் இடத்து அதிபதி சூரியன் கேந்திரத்தில் இருக்கிறார். 2- ஆம் இடத்து அதிபதி புதன் கோணத்தில் இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கின்ற போது ரஜினியின் அரசியல் ஆற்றலைவிட ஆன்மீக சக்தியே பலம் பொருந்தியதாக இருக்கிறது. தேரை இழுத்து தெருவில் விட்ட மாதிரி சிலரால் ரஜினி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டாலும் பின்னால் இருந்து மற்றவர்களை இயக்குவாரே தவிர நேரடியாக நிற்க மாட்டார்.

ஆகவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது கனவிலும் நடக்காத காரியம். அவர் அரசியலுக்கு வருவார் என அடித்துக் கூறுவது ரஜினி ரசிகர்களுக்கு கொடுக்கும் திருநெல்வேலி அல்வா என்பதில் சந்தேகமில்லை.

அப்படி ஒருவேளை வந்தால் மருத்துவ அதிசயம், அறிவியல் அதிசயம், வான்வியல் அதிசயம் எனபதுபோல் அரசியல் அதிசயம் என கொள்ளலாம்.

Wednesday 18 November 2009

மலேசியாவில் ஒரு சாதனைத் தமிழர்

என்னுடைய வலைப்பூவை வலம் வருகின்ற அன்பு நெஞ்சங்களுக்கு பணிவான வணக்கங்கள். இரண்டு வாரமாக உங்கள் உள்ளத்தோடு உறவாடுகின்ற பாக்கியத்தை இழந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.





டத்தோ ரெனா. துரைசிங்கம்


ஒரு சாதனைத் தமிழரின் 50-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வெளிநாடு சென்றிருந்தேன். அதனால்தான் நம்முடைய தொடர்பில் ஒரு நீண்ட தொய்வு.

உணவகம், திரையரங்கு, திரைப்படம் தயாரிப்பு என பல தொழில்களில் கொடிகட்டிப் பறக்கும் லோட்டஸ் குழுமத்தின் தலைவர டத்தோ ரெனா.துரைசிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாதான் அது.

திருப்பத்தூர் தந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை- பார்வதி அம்மாள் தம்பதியரின் தவப்புதல்வர்களில் மூத்தவர் ரெனா.துரை. அண்ணனின் வழித்தடம் மாறாத தம்பிகள் இருவர். டத்தோ ரெனா. ராமலிங்கம். ரெனா. நாகசுந்தரம்.

ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்கும் இந்த சகோதரர்கள் பல நூறுகோடி ரூபாயில் கடற்கரை உல்லாசத்தளம் ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள். 2400 அறைகளை...அல்ல...அல்ல...அழகான சிறிய வீடுகளைக் கொண்ட இந்த உல்லாசத்தளம் மலேசியாவில் ஜொகூர் நகரத்துக்கு அருகில் இருக்கிறது.




இங்கிருந்து சிங்கப்பூருக்கு இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சும்மா கூப்பிடு தூரம்தான். அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருந்தாலும் கள்ளம் கபடு இல்லாத மனதுக்கு சொந்தக்காரர்கள். எளிமை...எளிமை... எளிமை...இந்தச் சொல் இவர்களைப் பார்த்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.




                                மோட்டார் சைக்கிளில் இருப்பவர் டத்தோ.ரெனா.துரைசிங்கம்
பின்னால் அமர்ந்திருப்பவர்
மலேசியாவில் பெர்லிஸ்  மாநிலத்தின்  முதலமைச்சர்
(கலைஞர் கருணாநிதியைப் போல)
அருகில் சிரித்துக் கொண்டு நிற்பது அடியேன்


பணிவு...பணிவு...பணிவு....இது இவர்களின் பாரம்பரியச் சொத்து. இந்த சாதனைத் தமிழரை வாழ்த்த எனக்கு வாய்ப்பு நல்கிய ஆண்டவனுக்கு ஆயிரம் லட்சம் கோடியாய் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.

அடுத்த பதிவில் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்பதை குறிப்பிடுகிறேன்.

Wednesday 4 November 2009

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜாதகம்

இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, நாடு கடந்து நேசிக்கப்படுகின்ற ஒரு மனிதரின் ஜாதகத்தை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இதில் நாம் பார்க்கப்போவது அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை மட்டுமே.





மற்றபடி கிரகங்களின் அமைப்பை வைத்து தன்மூப்பாக எந்தக் கருத்தையும் நான் வெளியிட விரும்பவில்லை. ஒருவரின் ஜாதக பலன் ஜென்மம், உடுமகா தசை, கோச்சாரம் என்ற வகையில் கணிக்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி பூர்வ ஜாதகம் என்ற அமைப்பு இருக்கிறது. இதைக் கொண்டு போன பிறவியில் அவர் எப்படிப்பட்ட பிறப்பை எடுத்திருந்தார் என்பதையும் அவருடைய குண நலன்கள் எத்தகையது என்பதையும் ஓரளவு கணித்துவிடலாம் என அனுபவம் வாய்ந்த ஜோதிட ஞானி ஒருவர் கூறி இருக்கிறார்.அந்த வகையிலும் ரஜினியின் ஜாதகத்தை ஓர் ஆய்வு செய்து பார்த்தேன்.




ரஜினியின் ராசி மகரம். லக்கனம் சிம்மம். நட்சத்திரம் திருவோணம். (ஒருவேளை இதில் தவறு இருந்தால் சரியான ஜாதகத்தை என் பார்வைக்கு அனுப்பலாம்)

ஆனால், இந்த ஜாதக அமைப்புப்படி பெரும்பாலான விஷயங்கள், அவருடைய வெற்றிகள், குணாம்சங்கள் ஒத்துப் போகின்றன. அதனால் என் நண்பரிடம் அப்போது சில விஷயங்களைக் கூறினேன்.

அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது விவேக சிந்தாமணியில் கூறுப்பட்டுள்ள ஒரு கருத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.



"பட்சம் வழக்கறியாது

நித்திரை சுகமறியாது

பிச்சை தரமறியாது

இச்சை முறையறியாது"



இது தான் அந்தப்பாடல். இதில் பட்சம் என்பது சார்பு என்று பொருள். ஒருதலைப்பட்சமாக என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் உள்ள ஒன்று. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தி விட்டால் அவரைப்பற்றி மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இந்த நிலையில்தான் என் நண்பர் இருந்தார். ரஜினிமீது கொண்ட அளப்பறிய காதல் அவரை ஓர் அரசியல் தலைவராக மட்டும்தான் என் நண்பரால் பார்க்க முடிந்தது.

நான் என் நண்பரிடம் என்ன சொன்னேன் என்பதை அடுத்த அங்கத்தில் விவரிக்கிறேன்.

Monday 2 November 2009

சூப்பர் ஸ்டார் ஏன் அரசியலுக்கு வரவில்லை

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் குதிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அடம்பிடித்து... அடம்பிடித்து சோர்ந்து விட்டார்கள். அவரை அரசியலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முயற்சித்த சில அரசியல் வல்லுனர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்கள்.





சந்திரமுகி படத்தின் சகாப்த வெற்றிக்கு பின்னர் ரஜினி அரசியல் களத்தில் சுனாமியாக பொங்கப் போகிறார் என்று பலர் ஆரூடம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அன்றைய சூழ்நிலைகளும் அவ்வாறுதான் இருந்தன.

அந்த சமயத்தில் என் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி பேசினார். அவர் மிகத்தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினி ஒருவரால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சியைத் தர இயலும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்.

எனக்கு ரஜினி மீது அபார மரியாதை உண்டு. பல கோடிப் பேரை கவர்ந்த நடிகர் என்பதற்காக அல்ல...அலை எழும்பி ஆர்ப்பரிக்காத ஆன்மீகக் கடல் என்பதற்காக.

அவரிடம் ஏராளமான செல்வங்கள் கொட்டிக்கிடக்கலாம். ஆனால், அவர் எளிமையானவர். அவரிடம் ஆடம்பரமான வசதிகள் அணிவகுத்து நிற்கலாம்... ஆனால், அவர் அமைதியானவர். திரைப்படங்களில் விதவிதமான ஒப்பனைகளில் ஜொலிப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒப்பனையும் கிடையாது ஒளிவு மறைவும் கிடையாது. இப்படி ஏராளமான நல்ல குணங்களை எடுத்து அடுக்கிக் கொண்டே போகலாம்.




"ரஜினி அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று என்னிடம் கேட்டார்.

"அவர் மனதில் என்ன இருக்கிறதோ... எனக்கு எப்படித் தெரியும். ஒருவேளை அவருடைய ஜாதகம் தெரிந்தால் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா என என் சிற்றறிவுக்கு எட்டியவரை கணித்து பார்க்கலாம்" என்றேன்.

"இதோ இருக்கிறது ஜாதகம். பார்த்துச் சொல்லுங்கள்" என பரபரப்புடன் ஒரு ஜாதகத்தைக் கொடுத்தார்.

அது உண்மையான ஜாதகம் தானா என்பதை பலவழிகளில் அவர் மூலமாகவே உறுதிப்படுத்திக் கொண்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெனன ஜாதகத்தைப் பார்த்து என் நண்பரிடம் சில விஷயங்களைச் சொன்னேன்.

அவை என்ன என்பதையும் ரஜினியின் ஜனன ஜாதகத்தையும் அடுத்த அடுத்த நாட்களில் பார்க்கலாம்.

Thursday 29 October 2009

விதவைக்கு வாழ்வு தரும் ஜாதக அமைப்பு

ஒரு பெரியவரை மகா பெரியவராக பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை ஏற்பட்டது. 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் என்னை ஒரு நாள் சந்தித்தார். அவர் மூன்று ஜாதகங்களை எடுத்து வந்திருந்தார்.ஆண்களின் ஜாதகம் இரண்டு. பெண்ணின் ஜாதகம் ஒன்று.





வைத்தியம் பார்க்கப் போகும் ஒருவர், மருத்துவரிடம் "எனக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை நீங்களே கண்டுபிடித்துச் சொல்லுங்கள்" என்று அடம்பிடிப்பதைப் போல் சிலர் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு ஜோதிடரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் ஆற்றோரம் இருக்கின்ற சாமியாரிடம் குறி கேட்கப்போன குப்புசாமியைப்போல.

இவர் அப்படி இல்லை. " ஐயா.. இது என் மூத்த மகனோட ஜாதகம். படகில போகும்போது தவறிவிழுந்து இறந்துட்டான். அந்தச் சம்பவம் மனைவி கண்ணு முன்னாடியே நடந்திருச்சு. என்னோட மருமக தங்கமான பொண்ணு. அதை பூ இல்லா... பொட்டு இல்லா.. என்னால பாக்க முடியலை. இந்த சின்ன வயசில வாழ்க்கையை தொலைக்கிறதை என்னால நினைச்சுக்கூட பாக்க முடியலை.

அதனால என் இளைய மகனுக்கே திருமணம் செஞ்சு வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்.

இது இளையவனோட ஜாதகம். இது என் மருமகளோட ஜாதகம்" என்று மூன்று ஜாதகங்களையும் கொடுத்தார்.

வியாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்துவிட்டதால் அதன் தன்மையையும் பாதிப்பையும் பார்க்கும் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. இறந்தவருக்கு ஆயுள் ஸ்தானத்தில் தேய்பிறைச் சந்திரன். அதோடு பாபர்களின் கொடூரமான பார்வையை வேறு கொண்டிருந்தான்.

இலக்கனாதிபதி நீச ஸ்தானம் ஏறி இருந்தான். இப்படிப்பட்ட அமைப்பு உடைய சாதகத்தை அவமிருத்த யோகம் கொண்டது என ஜோதிட ஞானிகள் குறிப்பிடுவர்.

அவமிருத்த யோகம் என்பது அகால மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. எட்டாம் இடம் என்ன ராசி, அதில் எந்தக் கிரகம் இருக்கிறது என்பதைப் பொறுத்து அவர் தீயினால் மடிவாரா..ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணமடைவாரா... தண்ணீரில் உயிரை விடுவாரா.. என கணிக்கலாம்.

இளைய மகனின் லக்கனம் மகரம். கடகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு எட்டாமிடத்தில் செவ்வாய். 2இல் ராகு 8-இல் கேது.

இப்படி பார்த்த வகையில் இருவருக்கும் திருமணத்தை செய்து வைக்கலாம் என்று சொன்னேன். மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை கேட்டீர்களா என வினவினேன்.

"முதலில் பிடிவாதமாக மறுத்தாள். நீ இதற்கு ஒப்புக் கொள்ளலைனா.. என் மகன் போன இடத்துக்கே நானும் போயிருவேன்ன்னு சொன்னதும் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

இளையவனும் எந்த மறுப்பும் சொல்லலை . என் மருமகள் சந்தோசமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்" இப்படிச் சொல்லும் போது பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிதறின.

"கவலைப்படாதீர்கள் ஐயா.. உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என்று சொல்லி அனுப்பினேன். இப்போது அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயத்தை ஆரம்பத்தில் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு கணவன் இறக்கும் போது ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. இப்போது புதுவரவாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் இரண்டு குழந்தைகளும் பாசத்தோடு வளர்கிறார்கள்.

*** ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து ஏழாம்பாவத்தில் இருந்தால் அவன் ஒரு விதவையை மணம் புரிய வேண்டிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday 28 October 2009

கணவனைப் பிரிக்கும் 8-ஆம் இடத்து செவ்வாய்


புருசனை மதிக்காத அந்தப் பொண்ணுக்கிட்ட இந்த விஷயத்தைத்தான் சொன்னேன். "இங்க பாரும்மா... அவரோட ஜாதகப்படி இரண்டு தாரம். உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. புத்தி தடுமாறி இந்த வீணா போன டிவி நாடகங்களைப் பாத்து... அதுமாதிரி நடக்க நினைச்சு... வாழ்க்கையைக் கெடுத்துக்காதே.

உன்னோட இடத்துக்கு வேற ஒருத்தி வந்துட்டான்னா.. அப்புறம் தலைகீழா நின்னாலும் இதுமாதிரியான வாழ்க்கை கிடைக்காது"ன்னு சொன்னவுடன் அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாள்.

அந்தப் பெண்ணுக்கு லக்கனத்துக்கு இரண்டில் சனி. இதைச் சொல்லி " நீ அடங்கி நடக்காவிட்டால் அடுத்து வருகிற தசாபுத்தியில் நீ வாழ்க்கையை இழந்து விடுவாய்.

உன்னுடைய முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பூனையாக இருக்கும் கணவனை புலியாக மாற்றி விடாதே. அப்புறம் உன்.கதி அதோகதிதான்" என எச்சரித்தேன்.

சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியம் நன்றாக வேலை செய்யும் என்பதை நன்கு அறிவேன். இப்போது பிரச்சினை இல்லாமல் குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது என்னிடம் ஆலோசனை கேட்டுக் கொள்கிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த நிம்மதி எனக்கு.

சின்ன ஜோதிட குறிப்பு: ஒரு பெண்ணின் லக்கனம் கும்பம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எட்டாம் இடம் கன்னி. இதில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லை என்றால் அந்தப் பெண், நிரந்தரமாக கணவனைப் பிரிந்து விடுவாள் என்பது ஜோதிட விதி.

Monday 26 October 2009

பேய் அடிக்கவில்லை... பெண்டாட்டிதான் அடித்தாள்....

ஒரு நாள் நான் அலுவலகத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தயங்கித் தயங்கி என்னுடைய அறைக்குள் வந்தார்.


"சார் எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழுந்தைகள். வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை. சாகலாம் போல் இருக்கிறது" என்றார்.

"கற்களும் முட்களும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பாதை. அதைத் ஏற்றுக்கொண்டு கடப்பதுதான் இல்லறம். இராமாயணத்தில் ராமனும் மகாபாரதத்தில் தருமனும் படாத கஷ்டமா..." என்று ஆறுதல் கூறினேன்.

"ஆறுதல் சொல்வது சுலபம். அனுபவிப்பவனுக்குத்தானே தெரியும் கஷ்டம்" என்று வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு கேட்டது. ஆனால், பரிதாபமாக பார்த்தார்.

"என்ன தம்பி... பிரச்சினையைச் சொல்லுங்கள். எதற்காக பேய் அடித்தது போல் இருக்கிறீர்கள்" என்றேன்




" பேய் அடிக்கவில்லை சார்.. என் பெண்டாட்டிதான் தினமும் என்னை அடிக்கிறாள்" சொல்லும் போது அழுதே விட்டார்.

கதை இதுதான். இவருடைய மனைவி ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள். இவர் வசதியான குடும்பம். வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. தன்னையும் அம்மாவையும் கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைத்தார். அதே நேரத்தில் மனைவி மீது உள்ள அன்புக்கும் குறைவில்லை.

மாமியாரும் மருமகளை மகளாகவே நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணோ யாரையும் மதிப்பதில்லை. ஏதாவது பேசினால் கணவனின் கன்னத்தையே பதம் பார்த்து விடுகிறாள்.

இப்போது இது போன்ற பிரச்சினைகள் பலவீடுகளில் இருப்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். அவருடைய ஜாதகத்தையும் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்தேன். இவர் மனுச கணம். அந்தப் பெண் ராட்சஷ கணம். வசியப் பொருத்தம் இல்லை. மேலும் சில பாதிப்புகள் இருந்தது.

அவரிடம் நிலவரத்தைக் கூறி சிறிது நாட்கள் அமைதியாக இருக்கும்படி சொல்லி... அவருடைய வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தேன்.

இந்தக் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை எப்படியாவது களைந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆகவே, சில நாட்கள் கழித்து அவருடைய வீட்டுக்கு போன் செய்து அந்தப் பெண்ணிடம் பேசினேன். என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.

முதலில் ஏன்... எதற்கு என்று கேட்டு முரண்டு பிடித்தார். உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்தேன். உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி விட்டு 'இதுதான் அந்த விஷயம். என ஒன்றைக் குறிப்பிட்டேன்.

அவ்வளவுதான் "எப்பொழுது வரட்டும் ஐயா" என உடனே ஒப்புக்கொண்டாள். அந்தக் குடும்பத்தில் எப்படி அமைதி மலர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.

Thursday 22 October 2009

பிடிவாதமே பிரச்சினைக்கு மூல காரணம்

கணவனுக்கு மனைவி மீது பாசம். மனைவிக்கு கணவன் என்றால் கொள்ளை பிரியம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது.





எதுக்கு எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியாக முட்டிக் கொண்டார்கள். வேலை விட்டு கணவன் எப்போது வருவான் என்று மனைவி ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பாள். மனைவியைக் காண கணவன் ஓடி வருவான்.

ஆனால், வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஏதாவது பிரச்சினை குறித்து சண்டை நாறத் தொடங்கி விடும். ஏண்டா கல்யாணம் செய்து கொண்டோம் என தனித்தனியாக படுத்துக் கொள்வார்கள்.

ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரின் ஜாதகத்தைப் பார்த்தேன். வசியப் பொருத்தம், கணப்பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் முரண்பட்டு இருந்தது.

மருத்துவரிடம் செல்கிறோம். அவர் சர்க்கரை வியாதி இருக்கிறது. இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார். நாம் அதன் படி நடந்தால் பிரச்சினை இல்லை. மீறி இனிப்பு சாப்பிட்டால் இதய நோய் வரும். புண் வந்தால் ஆறாது. கை கால்களை அகற்றவேண்டி வரும். கண்பார்வை பறிபோகும். சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்து.

அது மாதிரிதான் ஜாதகமும். எந்தக் கிரகத்தால் பாதிப்பு. எந்த அம்சத்தில் பொருத்தக் குறைவு என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை சுமூகமாக போகும். இல்லை என்றால் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மனநோயாளியாகத் திரிய வேண்டியதுதான்.

இதைத்தான் அந்த ஜோடியிடம் எடுத்துச் சொன்னேன்.

அந்தப் பெண்ணுக்கு முன்கோபம் ஜாஸ்தி. அளவு கடந்த ஈகோ. வியாதி தெரிந்த பின்னரும் விட்டுக் கொடுத்துப் போகும் பக்குவம் இல்லை. இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இதனால், அந்த ஆணுக்கு பெரிய பாதிப்பு இல்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு. அந்தப் பெண்தான் பாவம். ஆதரவின்றி அல்லாடிக் கொண்டிருக்கிறார். பிறந்த வீட்டிலும் ஒதுக்கி விட்டார்கள். பிடிவாதம் என்பது வாத நோயைவிட கொடுமையானது.

இன்று எத்தனையோ வீடுகளில் இந்த ஜோடியைப்போல எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்து (இருவரும்) போனால் வசந்தம் வாசல்படியிலே மண்டியிட்டு படுத்திருக்கும் என்பது  மறுக்கமுடியாத உண்மை.

Tuesday 13 October 2009

செவ்வாய் தோஷத்துக்கு அல்வா கொடுத்தவர்கள்

கடந்த முறை சொன்ன ஜாதகம் இதுதாங்க. லக்கனமும் ராசியும் கடகம். 5-இல் ராகு. 8-ல் குரு. 9-இல் சனி. 10-இல் புதன். 11-இல் சூரியனும் கேதும். 12-இல் சுக்கிரனும் செவ்வாயும்.


இவர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர். சமீபத்தில் ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறார். அவர், " உங்களுக்கு ஏழரைச்சனி. இது மூன்றாவது சுற்று. மாரகத்தை ஏற்படுத்தலாம். கடுமையான செவ்வாய் தோஷம். மனைவி இருக்க முடியாது. புத்திர ஸ்தானத்தில் ராகு. அதனால் பிள்ளைகளுக்கு வாய்ப்பு குறைவு" எனச் சொல்லி இருக்கிறார்.

அவ்வளவுதான் மனிதர் ஆடிப்போய் விட்டார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு அலுவலகத்தில் வந்து சந்தித்தார். நான் அவருடைய ஜாதகத்தைப் பார்த்தேன். ஆயுள் ஸ்தானத்தில் குரு இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியும் ஆயுள்காரகனுமான சனி குரு வீட்டில் இருந்து பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் ஆயுள் பங்கம் வருவதற்கு வாய்ப்பில்லை என அவரிடம் கூறினேன்.




அதே நேரத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. 12-ஆம் இடத்து ஆதிபத்தியம். லக்கனத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பது ஒரு வகையில் நல்லது என்றாலும் லக்கனத்திலேயே மாந்தி. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம். இப்படி பல பாதிப்புகளைக் கூறலாம்.

அவர் ஆசிரியராக இருந்தவர். மூன்று பிள்ளைகள். உயர்ந்த படிப்பு படித்திருக்கிறார்கள்.

இதுவரை கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மனைவியும் உடன் வந்திருந்ததால் பலமுறை என்னுடைய சந்தேகங்களை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆயுள்பங்கம் இல்லை என்று நான் சொன்னவுடன் அவர் கேட்ட அடுத்த கேள்வி, " எனக்கு அதிர்ஷ்ட வகையில் பணம் வர வாய்ப்பு இருக்கிறதா?"

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. "இதுவரை ஆண்டவன் நோய் நொடி இல்லாமல் வைத்திருக்கிறானே... அதுவே உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்" என்று சொல்லி விட்டு கண்ணதாசன் மொழி மாற்றம் செய்த பஜகோவிந்தம் பாடலில் உள்ள 'பாடிடுக...பாடிடுக.. பரந்தாமன் மெய்புகழை என்ற பாடலில் உள்ள "சந்ததமும் பாடுபடு...வந்தவரை நிம்மதி கொள் தங்குவது தெய்வ யோகம்" என்ற வரியை அவருக்கு விளக்கினேன்.

அவருடைய மனைவிக்கு மிகுந்த சந்தோஷம். கனத்த இதயத்தோடு வந்தவர்கள், சிரித்த முகத்தோடு கிளம்பினார்கள். இந்த ஜாதகத்தை அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் காட்டி செவ்வாய்தோஷ அமைப்பு பற்றி கேட்டேன்.

"இது பாதிப்பான ஜாதகம்தான். நம்முடைய கணக்கு.... இறைவனின் கணக்குக்கு முன்னால் எம்மாத்திரம்" என்று விளக்கம் தந்தார். நான் மிக மிகச் சிறியவன் அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.

12- இடத்து செவ்வாய் நிலையற்ற வாழ்க்கையை அமைத்துத்தருவான் என்பது ஜோதிட ஞானிகளின் கருத்து. விட்டுக் கொடுத்து நடந்தால் அந்தக் கருத்தையும் பொய்யாக்கி வெற்றிகரமாக வாழலாம் என்பதை மேற்கண்ட ஜாதகம் எனக்கு உணர்த்தியது.

பிடிவாதத்தால் வாழ்க்கையைத் தொலைத்த ஒரு தம்பதியரின் கதையை அடுத்து கூறுகிறேன்.

* படம் பார்வைக்கு மட்டும்

Monday 12 October 2009

உறவைப் பிரிக்கும் செவ்வாய் தோஷம்

என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண். சுறுசுறுப்பு பரபரப்பு இரண்டும் அவளிடம் அதிகம். ஆனால், சில நேரங்களில் எதையோ பறி கொடுத்தது போல் ஆகி விடுவாள்.


வேலையில் கவனம் போய் விடும். இந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும் காதலும் இல்லாத பெண்கள் மிகக்குறைவு. அதனால் காதல் பிரச்சினையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

ஒரு நாள் அவளிடம் இது பற்றி கேட்டேன்.

" நான் ஒருவரை விரும்புகிறேன். அவரும் என்னை நேசிக்கிறார். ஆனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. அதுதான் பயமாக இருக்கிறது. எங்கள் இருவரின் ஜாதகத்தை பார்க்க முடியுமா" என்றாள்.




"காதலும் மோதலும் சகஜம்தானே...காலப்போக்கில் சரியாகி விடும்" என்றேன். ஆனால் அவள் பிடிவாதமாக இருந்தாள்.

ஒரு நாள் மாலை வேலையில் அந்தப் பையனை அலுவலகத்துக்கு வரச்சொன்னேன். இருவரின் ஜாதகத்தையும் கணித்துப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய். லக்கனத்தில் சூரியன். பையனின் ஜாதகத்தில் தோஷமில்லை. இருந்தாலும் மூன்றாம் இடத்தில் ராகுவோடு சந்திரன். இது அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மையை ஏற்படுத்தும்.

ஆனால், இதையெல்லாம் அவர்களிடம் சொல்லாமல் " வாழ்க்கைக்கு புரிந்துணர்வு முக்கியம். நீங்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்தால் பிரச்சினை இல்லாமல் வாழலாம்" என்றதோடு பல அறிவுரைகளையும் கூறினேன். காதலித்த பின்னர் கணக்கு போடுவதில் என்ன லாபம்.

அவருக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவில் நானும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினேன். அந்தப் பெண்ணும் வேலையை ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார்.

சுமார் ஒரு வருடம் கழித்து எனக்கு போன் செய்தார். "கணவருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை. நாங்கள் பிரிந்து விட்டோ ம். இப்போது தகவல் நுட்பத்துறையில் மேல்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சரியாக எங்களுக்கு பொருத்தம் பார்க்கவில்லை" என்று சொல்லி அழுதார்.

ஜாதகத்தை விட காதல் வலிமையானது என்று நினைத்தேன். ஆனால் ஏறுக்குமாறாக நடந்து விட்டது.

முதலிலேயே சொல்லி இருக்கலாமோ என்று என்னுடைய மனம் வலித்தது.

காதலர்களே, உங்களுடைய ஜாதகத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். பிரிந்து போவதற்கு அல்ல, புரிந்து நடந்து வாழ்வதற்கு.

அதேவேளையில், செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம். இவர்கள் சேர்ந்து வாழ்வது கடினம் என்று ஜோதிடரால் சொல்லப்பட்ட ஒரு ஜோடி. இன்றும் இணைந்து வாழ்கிறார்கள். அந்த நபருக்கு வயது 72. அம்மையாருக்கு வயது 65. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களைச் சந்தித்தேன்.அடுத்து அவர்களைப் பற்றி எழுதுகிறேன்.

Friday 9 October 2009

ஜெயலலிதாவும் சனி பகவானும்

இதுவரை கொட நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா சென்னை திரும்பப் போகிறார். அதிமுக தொண்டர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அதிமுக இருக்கிறதா காணாமல் போய்விட்டதா என்று கேட்கும் நிலையில் இருக்கும்போதும் ஏன் ஜெயலலிதா மௌனமாக இருந்தார்.


எல்லாம் அவருக்கு நடக்கும் ஏழரைச் சனிதான். அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கத்தான் அவர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருந்தார்.

ஜெயலலிதா 24-2-1948-இல் பிறந்தவர். இவருடைய நட்சத்திரம் மகம் 1-ஆம் பாதம். நட்சத்திரத்துக்கு அதிபதி கேது. ராசி சிம்மம். இவர் ஏழரைச் சனியில் பிறந்தவர். ராசிக்கு 12-இல் சனி. இப்பொழுது ஏழரைச் சனியின் கடைசி பாகத்தில் இருக்கிறார்.




சிம்மத்தின் அதிபதி சூரியன். சனிக்கும் சூரியனுக்கும் எப்போதும் ஆகாது. இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியனுக்கு பிறந்தவர்தான் சனி. சூரியனின் மனைவி பெயர் சம்ஞா. சூரியனுக்கும் சம்ஞாவுக்கும் பிறந்தவர் யமன்.

என்னதான் அன்பு மனைவியாக இருந்தாலும் சூரியனின் வெப்பத்தை சம்ஞாவால் தாங்க முடியவில்லை. அதனால் தன்னுடைய நிழலை ஒரு பெண்ணாக (அதன் பெயர் சாயா.... கவனிக்க பாபா படப் பாடல், சாயா... சாயா... மாயா...மாயா...) படைத்து சூரியனிடம் தள்ளிவிட்டு தந்தை வீட்டிற்கு போய்விட்டாள்.

இந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர்தான் சனி. ஒரு கட்டத்தில் பங்காளிச் சண்டை முற்றி சனியை யமன் எட்டி உதைக்க சனிக்கு கால் ஒடிந்து விட்டது. அதனால் சனி நொண்டி நொண்டி மெதுவாகத்தான் நடப்பார். ஆகவே அவருக்கு சனைச்சரன் ( மெதுவாக நடப்பவன்) என்று பெயர்... ராசி மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வர சனிதான் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதாவது 30 ஆண்டுகள்.

இப்படி பலவிதங்களில் பாதிக்கப்பட்டதால் சூரியன் மீது சனியனுக்கு அடங்காத கோபம். அதனால்தான் சிம்ம ராசிக்காரர்களை எழரைச் சனி காலத்தில் சனிபகவான் படாத பாடு படுத்தி விடுகிறார்.

ஏழரைச் சனி காலத்தில் சனியனோடு மல்லுக்கட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தால் அவர் சற்று கரிசனமாகவே கஷ்டத்தைக் கொடுப்பார். ஆகவே, எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஜெயலலிதா கொட நாட்டில் ஓய்வெடுத்தார்.

இந்தச் சுற்றில் சனியின் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இருந்தாலும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் மகம் ஒன்றாம் பாதத்திற்கு அதிபதி செவ்வாய் .போர்க்குணம் கொண்டவர். இவர் யாருக்கும் மடங்கிப் போக விடமாட்டார். இதுதான் ஜெயலலிதாவுக்கு இருக்கும் பலவீனம். இதைச் சரி செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு அருகில் இருக்கும் ஆஸ்தான ஜோதிடர்களின் வேலை.

அதே நேரத்தில் ஏழரைச் சனி எல்லாருக்கும் கெடுதலை செய்வார் என்று கூறமுடியாது. நட்பு வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவற்றில் இருந்தால் சனியின் தொல்லை மிகக் குறைவாகவே இருக்கும்.

காளசர்ப்ப தோஷம் காளசர்ப்ப யோகமாக மாறும்

நீங்களே எப்படி சுலபமா உங்க கோச்சார பலன்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பாக இன்றைக்கு என்னைக் காண வந்த ஒரு பெண்ணோட ஜாதக பலன்களைப் பார்ப்போம். அந்த இளம் பெண்ணுக்கு இருபத்து நாலு வயது. பார்க்க லட்சணமான முகவெட்டு. நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறையச் சம்பாதிக்கிறார்.


திருமணத்திற்காக காத்திருக்கிறார். கைகூடி வரவில்லை. திருமண வகையில் தோஷமில்லை. இருந்தாலும் திருமணத்தடையை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் இந்த ஜாகத்தில் இருக்கின்றன.

லக்கனமும் ராசியும் ஒன்று. லக்கனத்தில் சனி. புத்திரஸ்தானத்தில் செவ்வாய். இப்படி சில தடைகள். இவற்றைத் தாண்டலாம். ஆனால், இவர் ஜாதக கிரக முடக்கம் அமைப்புடையது. அதாவது காளசர்ப்ப தோஷம். இந்தத் தோஷம் 35 வயதுக்கு பிறகு யோகமாக மாறும்.

ராகு, கேது என்ற சர்ப்ப கிரகங்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் மாட்டிக்கொண்டால் அதற்கு காளசர்ப்ப தோஷம் என்று பெயர். இவருக்கு கொஞ்சம் காலம் கடந்து திருமணம் நடக்கும்.

ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் இவர் அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினை இல்லாமல் இருக்கும். கொஞ்சம் மதியோடு நடந்தால் விதியை வெல்ல முடியாவிட்டாலும் அதன் தாக்கத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும்.

நான் கூறிய வார்த்தைகளைக் கேட்டு நம்பிக்கையோடு சென்றிருக்கிறார்.

Wednesday 7 October 2009

புதன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் படிப்பு சிறப்பாக வரும்

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். ஒரு பெண், தன்னுடைய மகன் படிப்பைப் பற்றி என்னிடம் கேட்க வந்தார்.

ஜாதகத்தை பார்த்தேன். வித்தியாகரனான புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இருந்தார். கர்ம தர்ம ஸ்தானாதிபதி சனி. அவரும் நல்ல இடத்தில் இருந்தார். குரு பார்வை பெற்றிருந்தார்.




நான் அந்தப் பெண்ணைப் பார்த்து " படிப்பு சிறப்பாக வருமே பையனுக்கு " என்றேன்.

"எங்கே சாமி படிக்கிறான். பிளஸ் டூ வில் பெயிலாகி விட்டான். ராங்கியத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றார்.

ஜாதக அமைப்போ மிக நன்றாக இருக்கிறது. ஆனால், அந்த பெண்ணோ சரியாக படிக்க மாட்டான் என்று சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். மிதுனராசி அந்தப் பையனுக்கு. ஏழரைச் சனி இடைஞ்சல் செய்திருக்கலாம் என்று நினைத்தேன்.

இறுதியாக " அம்மா... உங்கள் பையன் படிப்பில் வெற்றி பெற்று உயர்ந்த நிலைக்கு வருவான்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று சொல்லி அனுப்பினேன்.

ஆனால், மனதுக்குள் குறுகுறுப்பு. இந்த ஜாதக அமைப்புப்படி அவன் பொறியியலாளராக வர வேண்டும். ஆனால், படிப்பு வரவில்லை என்று அந்தப் பெண் சொல்கிறார். கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

கடந்த மாதம் அந்தப் பெண் என்னைத் தேடி வந்தார். ஒரு தட்டில் தேங்காய், பழம், வெத்திலை, பாக்கு அதோடு அவரால் முடிந்த காணிக்கையையும் வைத்து என்னிடம் கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் தெரியாமல் திகைத்தேன்.

"ஐயா, என்னுடைய மகன் பாலிடெக்னிக்கில் நல்ல மார்க் எடுத்திருந்தான். இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றான். அவனுடைய அப்பாவும் நானும் எப்படி முடியும் என்று கவலைப்பட்டோ ம். அவன் எடுத்திருந்தது சிவில் இஞ்சினியரிங்.
கற்பகம் காலேஜ் என்பது கோயம்புத்தூரில் உள்ள பிரபலமான இஞ்சியனியரிங் காலேஜ். இடம் கிடைப்பதே சிரமம். அதிலும் இவன் பாலிடெக்னிக் படித்தவன். எங்களுக்கு பெரிய பணவசதி கிடையாது. என் தம்பி வேலை பார்க்கும் கடை முதலாளி என் பையனை அந்தக் காலேஜில் டொனேஷன் இல்லாமல் சேர்த்து விட்டார்.
இப்பொழுது அவன் சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறான் ஐயா..."

இப்படிச் சொல்லும்போது அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கின. என்னுடைய கணிப்பு சரியாக இருந்த சந்தோஷம் எனக்கு. சில நேரங்களில் ஜாதக கட்டத்தையும் தாண்டி சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு. அவற்றை பின்னர் பார்ப்போம்.

Tuesday 6 October 2009

ஜோதிடம் வாழ்க்கை அல்ல... வழிகாட்டி

ஜோதிடமா... அதெல்லாம் உல்டா என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஜோதிடத்தையே உயிர் மூச்சாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் தலைசிறந்த அறிவாளிகள் என போற்றப்படுபவர்கள் இஸ்ரேலியர்கள். அவர்களுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். அந்த நாட்டில் மட்டும் தான் 12 ராசிகளின் படம் போட்டு தபால் தலை வெளியிட்டிருக்கிறார்கள்.







அப்படி என்றால் அவர்கள் எந்த அளவுக்கு ஜோதிடத்தை நம்புகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மாவீரன் அலெக்ஸாண்டரில் இருந்து அமெரிக்காவின் முதல் குடிமகன் வாஷிங்டன் வரை ஜோதிடத்தில் அபார நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்கள் என்பது பல ஆய்வுகள் மூலமாக தெரியவந்திருக்கிறது.


பெரிய பெரிய தொழில் அதிபர்கள் ஜோதிடத்தை நம்புகிறார்கள். அரசியல்வாதிகள், நடிகர்கள் ஜோதிடத்தை நம்புகிறார்கள். மூட நம்பிக்கையை ஒழிக்கிறோம் என முழக்கமிட்டு களம் இறங்கி வலம் வந்தவர்கள்கூட யாகம்...பூஜை என அமர்க்களப்படுத்துகிறார்கள்.


ஆனால், ஏனோ தெரியவில்லை சிலர் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜோதிடம் என்பது வாழ்க்கை அல்ல...வழிகாட்டி... இதை உணர்ந்து நடந்தால் வரும் துன்பங்களைத் தடுக்க முடியாவிட்டாலும் விலகிச் செல்லலாம்.


எப்படி விலகிச் செல்வது என்பதை உங்களுக்கு புரியும் வகையில் வரும் காலங்களில் வகைப்படுத்துகிறேன்.

Monday 5 October 2009

என்னைப் பற்றி நான்...

அன்பிற்கினிய என் நண்பர்களே....


இந்த வலைப்பதிவின் நோக்கம் என்னுடைய ஜோதிட அனுபங்களையும் என்னை திக்கு முக்காட வைத்த உண்மைச் சம்பவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான். கடந்த
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுள் இல்லை என்ற கொள்கையில் பிடிப்போடு இருந்தேன்.

அப்போது ஒரு நாளிதழில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். ஒரு ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றிய கட்டுரையை எழுதி எடுத்து வந்து இருந்தார். நான் படித்துப் பார்த்தேன்.

பெண்களுக்கு எதிராக இருப்பது போல் எனக்குப் பட்டது. அதைப் பிரசுரிக்க இயலாது என மறுத்து விட்டேன்.

" நீங்கள் கவிதை எழுதுவதில் கெட்டிக்காரராக இருக்கலாம். ஆனால் ஜோதிடம் என்பது அப்படி அல்ல. அதற்கெல்லாம் தெய்வீக அருள் வேண்டும்" என்று சொல்லி விட்டு கோபத்தோடு போய் விட்டார்.

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. எப்படியாவது ஜோதிடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பு பாடாய் படுத்தியது. இரவு ஒரு மணிக்கு மேல் என்னை அறியாமலேயே இமைகள் தூக்கத்தை சுமந்தன. 50 வயது மதிக்கத்தக்க பெண் எனக்கு எதிரே தோன்றினார். அவர் முகத்தில் தெய்வீகக் களை சொட்டியது. "மகனே கவலைப்படாதே... உன்னுடைய குழப்பத்திற்கு விரைவில் விடை கிடைக்கும்" என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார்.

நான் திடுக்கிட்டு விழித்தேன். உடலெல்லாம் வேர்த்துக் கொட்டியது. அப்புறம்தான் அது கனவு என்று தெரிந்தது. ஓரிரு மாதங்கள் உருண்டன. ஒரு முறை நான் வசிக்கும் நகரத்துக்கு
மாதா அமிர்தானந்தமயி அம்மா வருகை தந்திருந்தார். ஒரு பத்திகையாளான அந்த நிகழ்வுக்கு போயிருந்தேன்.

சரியான கூட்டம். ஏறக்குறைய 50000 பேர் இருப்பார்கள். இதில் எங்கே நாம் அவரை அருகில் சென்று பார்ப்பது என்று நினைத்துக் கொண்டு மேடைக்கு சற்று தள்ளி ஓரமாக நின்று
கொண்டிருந்தேன். திடீரென்று அம்மா என்னை கை நீட்டி அழைத்தார். பக்கத்தில் போனேன். கட்டி அணைத்து "நீ நினைக்கும் காரியத்தில் வெற்றி அடைவாய்" என காதுக்குள்
சொன்னார். ஒருபக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் குழப்பம். இரண்டையும் சுமந்து கொண்டு அங்கிருந்து வந்தேன்.

எனக்கு மாப்பிள்ளை முறைகொண்ட ஒருவர். ஆன்மீகவாதி. அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது "ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. ஆனால், எப்படி என்றுதான் தெரியவில்லை" என்று கூறினேன்.

அது சாதாரண காரியம் அல்ல. கலைமகளின் அருள் பூரணமாக இருக்க வேண்டும். ஜோதிடத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வாக்கிலும் நாக்கிலும் வாணி நிற்க வேண்டும். இந்தாருங்கள் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்" என்று சொல்லி 'சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி?' என்ற சிறிய நூல் ஒன்றைக் கொடுத்தார். என்னிடம். சின்ன அதிர்ச்சி.



இப்போது இருபது ஆண்டுகள் பின்னோக்கி போகப் போகிறேன். காரைக்குடியில் என் நண்பர் ஒருவரின் வீட்டில் மாலை நேரத்தில் காபி அருந்திக் கொண்டிருந்தேன். அவர் செல்வந்தர்.
ஜமீன் சொக்கு என்று அவரை அழைப்பார்கள்.

அவருடைய வீட்டுக்கு ஜோதிடர் ஒருவர் வந்தார். நண்பர், அவரின் குடும்பத்தார்கள் ஆகியோரின் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து பலன் சொன்னார். என்னை பார்த்து ஜாதகம் இருக்கிறதா... என்று கேட்டார். இல்லை....அதோடு எனக்கு ஜோசியம் ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை... என்று கூறினேன். சிரித்துக் கொண்டே பிறந்த நேரத்தையும் தேதியையும் கேட்டார்.

என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் இரண்டையும் சொன்னேன். ஒரு சில நிமிடத்திலேயே என் ஜாதகக் கட்டத்தைப் போட்டு சில விஷயங்களைச் சொன்னார்.

"இன்று எதை நம்பிக்கை இல்லை என்று ஒதுக்குகிறீர்களோ... அது ஒரு நாள் உங்களிடம் வந்து சேரும். பலருக்கு வழிகாட்டியாக இருக்கப் போகிறீர்கள். அதற்கான அம்சம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. இது நடக்கும். நான் கும்பிடும் ஜக்கம்மா மீது ஆணை" என்று சொன்னார்.

அவருடைய பெயர் பெத்த பெருமாள். வசித்த ஊர் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூர். என்னுடைய மாப்பிள்ளை ஜோதிட நூலைக் கொடுத்த போது இந்த சம்பவம் என்னுடைய நெஞ்சில் நிழலாடியது.

அதன் பிறகு நடந்த இன்னொரு சம்பவம். ஞான சக்திவேலன் என்ற ஜோதிடர், ஜோதிட மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு ஒரு விழா மலர் தயார் செய்தார். அதில்
என்னுடைய வாழ்த்துக் கவிதை இடம் பெற வேண்டும் என்று கேட்டார். "அப்துல் காதரிடம் வந்து அமாவாசைக்கு குறிப்பு கேட்பது மாதிரி இருக்கிறது உங்கள் வேண்டுகோள்" என்று
சிரித்தேன்.

விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு போனவர் இரண்டாம் பக்கத்தில் அந்தக் கவிதையை அச்சிட்டு இருந்தார். அதோடு விழா நாளன்று நானே அந்தக் கவிதையை மேடையில் வாசிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். விழாவுக்கு போனேன். புகழ் பெற்ற ஜோதிடர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். கவிதையைப் படித்தேன்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரு ஜோதிட மேதை என்னை அருகில் அழைத்தார். "உனக்குத் தெரியாமலேயே உன்னிடம் ஒரு சக்தி ஒளிந்திருக்கிறது. உரிய நேரத்தில் வெளிப்படும்" என்றார்.

இது நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எனக்கு ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு நிறைய ஜோதிடப் புத்தகங்களைப் படித்தேன். முதலில்
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. போகப் போக அதில் ஆர்வமும் ஒருவித ஆளுமையும் உருவானது.

ஜோதிடம் சம்பந்தமாக சுமார் 600 கேள்விகளைத் தயார் செய்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் அனுபவம் வாய்ந்த ஒரு ஜோதிடரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு பின்னர் குடும்ப உறவாக மாறியது.
என்னுடைய கேள்விகளை எல்லாம் அவரிடம் வைத்தேன். அதற்கு உரிய விளக்கத்தை பொறுமையாக உள்வாங்கிக் கொண்டேன்.பின்னர்தான் புரிந்தது ஜோதிடம் என்பது மகாசமுத்திரம் என்பது. அதில் கரை கண்டு விட்டோம் என்று யாரும் மார்தட்ட இயலாது. அப்படி யாராவது சொன்னால் குருவி குண்டுக்கல்லைத் தூக்கிக் கொண்டு குத்தாட்டம் போட்ட கதை மாதிரிதான். நான் ஓரளவு அடிப்படையைத் தெரிந்த பின்னர் பலன்களையும் கணிக்கத் தொடங்கினேன்.

நான் ஜோதிடத்தை தொழிலாக பார்க்கவில்லை. கலையாகவே பார்த்தேன். ஆகவே, பலன்களைக் கணிக்கும்போது நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை அதிக கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.



ஒரு நாள் ஒரு காதல் ஜோடி என்னிடம் வந்தது. " நாங்கள் மூன்று வருடமாகக் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள நினைக்கிறோம். பொருத்தம் பார்த்துக் கூறுங்கள்" என்று கேட்டனர்.

"இருவரும் காதலிக்கிறீர்கள். இனிமேல் பொருத்தம் பார்ப்பது தவறு. மனப்பொருத்தம் இருந்தால் மணம்பொருத்தம் அமையும்" என்று கூறினேன். அவர்கள் விடவில்லை. இருவரின் ஜாதகங்களையும் பார்த்தேன். பெண்ணுக்கு கடுமையான செவ்வாய்தோஷம். பாம்பு வேறு பாதகமான இடத்தில் நின்றது. பத்துப் பொருத்தங்களில் சில முக்கிய பொருத்தங்கள் பொருந்தி வரவில்லை.

இதைக்கூறி அவர்களைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை. நான் சொன்னாலும் அவர்களிடம் இருந்த காதல் வேகம் காது கொடுத்து கேட்கவிடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே, சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

மூன்று வருடம் கழிந்திருக்கும். ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினேன். என்னிடம் முன்பு ஆலோசனை கேட்க வந்த அந்தப் பெண் கை கூப்பி வணங்கியபடி எனக்கு முன்னால் நின்றாள். மேகம் நிலவை மூடியதைப் போல சோகம் அவள் முகத்தைக் கவ்வி இருந்தது.

"எப்படி இருக்கிறாய் அம்மா... " என்று கேட்டேன்.

கண்களுக்குள் கங்கை உற்பத்தியானது. விழித்திரையைப் பிளந்து கொண்டு கன்னத்தில் பாய்ந்தது. "திருமணமான அடுத்த வருடமே ஒரு விபத்தில் அவர் என்னை விட்டு போய்விட்டார்."

அந்தப் பெண் சொன்ன செய்தி அமிலமாய் என் இதயத்திற்குள் இறங்கியது. அடுத்த விநாடி என்னுடைய நினைவு அவள் ஜாதகத்திற்கு பாய்ந்தது. அவள் ஜாதகத்தில் இருந்த செவ்வாய்தோஷம் என் மூளைக்குள் மின்னலாய் பளிச்சிட்டது.

முன்னோர்கள் சொல்லி வைத்த கருத்துக்கள் சொத்தை அல்ல முத்துக்கள் என்பதை அன்றுதான் முழுமையாக உணர்ந்தேன். அதே வேளையில் இந்தச் சம்பவத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

அதற்கு விதிவிலக்குகள் இருக்கின்றன. பல கூறுகள் இருக்கின்றன. பல அம்சங்கள் உள்ளன. இறைவனின் அருளால் ஜோதிடனின் கணிப்பையும் தாண்டி பல்லாண்டு வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி விதியை வென்ற தம்பதிகளும் உள்ளனர். வாழ்க்கை, தொழில், வேலை, பிள்ளைகள், நோய், சமுதாய அந்தஸ்து, அரசியல், கலை என பல தரப்பட்ட அம்சங்கள் குறித்து என்னிடம் பலர் ஆலோசனை பெற்றிருக்கிறார்கள்.

அந்த அனுபவங்களையும் தேவைப்படுவோருக்கு இறைவன் அருளால் என்னால் இயன்ற ஆலோசனைகளையும் அடுத்த கட்டங்களில் உங்களுக்குத் தருகிறேன். உங்களோடு உறவாடி என்னை நானே புதுபித்துக் கொள்ள இந்த வலைப்பதிவின் மூலம் ஆண்டவன் வழி அமைத்துக் கொடுத்து இருக்கிறான் என்ற நம்புகிறேன்.

வாழ்க வளமுடன். ராசிகளின் ஆசிகள் என்றும் உங்களுக்குத் துணை நிற்கும்.