Tuesday 13 October 2009

செவ்வாய் தோஷத்துக்கு அல்வா கொடுத்தவர்கள்

கடந்த முறை சொன்ன ஜாதகம் இதுதாங்க. லக்கனமும் ராசியும் கடகம். 5-இல் ராகு. 8-ல் குரு. 9-இல் சனி. 10-இல் புதன். 11-இல் சூரியனும் கேதும். 12-இல் சுக்கிரனும் செவ்வாயும்.


இவர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர். சமீபத்தில் ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறார். அவர், " உங்களுக்கு ஏழரைச்சனி. இது மூன்றாவது சுற்று. மாரகத்தை ஏற்படுத்தலாம். கடுமையான செவ்வாய் தோஷம். மனைவி இருக்க முடியாது. புத்திர ஸ்தானத்தில் ராகு. அதனால் பிள்ளைகளுக்கு வாய்ப்பு குறைவு" எனச் சொல்லி இருக்கிறார்.

அவ்வளவுதான் மனிதர் ஆடிப்போய் விட்டார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு அலுவலகத்தில் வந்து சந்தித்தார். நான் அவருடைய ஜாதகத்தைப் பார்த்தேன். ஆயுள் ஸ்தானத்தில் குரு இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியும் ஆயுள்காரகனுமான சனி குரு வீட்டில் இருந்து பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் ஆயுள் பங்கம் வருவதற்கு வாய்ப்பில்லை என அவரிடம் கூறினேன்.




அதே நேரத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. 12-ஆம் இடத்து ஆதிபத்தியம். லக்கனத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பது ஒரு வகையில் நல்லது என்றாலும் லக்கனத்திலேயே மாந்தி. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம். இப்படி பல பாதிப்புகளைக் கூறலாம்.

அவர் ஆசிரியராக இருந்தவர். மூன்று பிள்ளைகள். உயர்ந்த படிப்பு படித்திருக்கிறார்கள்.

இதுவரை கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மனைவியும் உடன் வந்திருந்ததால் பலமுறை என்னுடைய சந்தேகங்களை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆயுள்பங்கம் இல்லை என்று நான் சொன்னவுடன் அவர் கேட்ட அடுத்த கேள்வி, " எனக்கு அதிர்ஷ்ட வகையில் பணம் வர வாய்ப்பு இருக்கிறதா?"

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. "இதுவரை ஆண்டவன் நோய் நொடி இல்லாமல் வைத்திருக்கிறானே... அதுவே உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்" என்று சொல்லி விட்டு கண்ணதாசன் மொழி மாற்றம் செய்த பஜகோவிந்தம் பாடலில் உள்ள 'பாடிடுக...பாடிடுக.. பரந்தாமன் மெய்புகழை என்ற பாடலில் உள்ள "சந்ததமும் பாடுபடு...வந்தவரை நிம்மதி கொள் தங்குவது தெய்வ யோகம்" என்ற வரியை அவருக்கு விளக்கினேன்.

அவருடைய மனைவிக்கு மிகுந்த சந்தோஷம். கனத்த இதயத்தோடு வந்தவர்கள், சிரித்த முகத்தோடு கிளம்பினார்கள். இந்த ஜாதகத்தை அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் காட்டி செவ்வாய்தோஷ அமைப்பு பற்றி கேட்டேன்.

"இது பாதிப்பான ஜாதகம்தான். நம்முடைய கணக்கு.... இறைவனின் கணக்குக்கு முன்னால் எம்மாத்திரம்" என்று விளக்கம் தந்தார். நான் மிக மிகச் சிறியவன் அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.

12- இடத்து செவ்வாய் நிலையற்ற வாழ்க்கையை அமைத்துத்தருவான் என்பது ஜோதிட ஞானிகளின் கருத்து. விட்டுக் கொடுத்து நடந்தால் அந்தக் கருத்தையும் பொய்யாக்கி வெற்றிகரமாக வாழலாம் என்பதை மேற்கண்ட ஜாதகம் எனக்கு உணர்த்தியது.

பிடிவாதத்தால் வாழ்க்கையைத் தொலைத்த ஒரு தம்பதியரின் கதையை அடுத்து கூறுகிறேன்.

* படம் பார்வைக்கு மட்டும்

No comments:

Post a Comment