Monday 5 October 2009

என்னைப் பற்றி நான்...

அன்பிற்கினிய என் நண்பர்களே....


இந்த வலைப்பதிவின் நோக்கம் என்னுடைய ஜோதிட அனுபங்களையும் என்னை திக்கு முக்காட வைத்த உண்மைச் சம்பவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான். கடந்த
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுள் இல்லை என்ற கொள்கையில் பிடிப்போடு இருந்தேன்.

அப்போது ஒரு நாளிதழில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். ஒரு ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றிய கட்டுரையை எழுதி எடுத்து வந்து இருந்தார். நான் படித்துப் பார்த்தேன்.

பெண்களுக்கு எதிராக இருப்பது போல் எனக்குப் பட்டது. அதைப் பிரசுரிக்க இயலாது என மறுத்து விட்டேன்.

" நீங்கள் கவிதை எழுதுவதில் கெட்டிக்காரராக இருக்கலாம். ஆனால் ஜோதிடம் என்பது அப்படி அல்ல. அதற்கெல்லாம் தெய்வீக அருள் வேண்டும்" என்று சொல்லி விட்டு கோபத்தோடு போய் விட்டார்.

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. எப்படியாவது ஜோதிடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பு பாடாய் படுத்தியது. இரவு ஒரு மணிக்கு மேல் என்னை அறியாமலேயே இமைகள் தூக்கத்தை சுமந்தன. 50 வயது மதிக்கத்தக்க பெண் எனக்கு எதிரே தோன்றினார். அவர் முகத்தில் தெய்வீகக் களை சொட்டியது. "மகனே கவலைப்படாதே... உன்னுடைய குழப்பத்திற்கு விரைவில் விடை கிடைக்கும்" என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார்.

நான் திடுக்கிட்டு விழித்தேன். உடலெல்லாம் வேர்த்துக் கொட்டியது. அப்புறம்தான் அது கனவு என்று தெரிந்தது. ஓரிரு மாதங்கள் உருண்டன. ஒரு முறை நான் வசிக்கும் நகரத்துக்கு
மாதா அமிர்தானந்தமயி அம்மா வருகை தந்திருந்தார். ஒரு பத்திகையாளான அந்த நிகழ்வுக்கு போயிருந்தேன்.

சரியான கூட்டம். ஏறக்குறைய 50000 பேர் இருப்பார்கள். இதில் எங்கே நாம் அவரை அருகில் சென்று பார்ப்பது என்று நினைத்துக் கொண்டு மேடைக்கு சற்று தள்ளி ஓரமாக நின்று
கொண்டிருந்தேன். திடீரென்று அம்மா என்னை கை நீட்டி அழைத்தார். பக்கத்தில் போனேன். கட்டி அணைத்து "நீ நினைக்கும் காரியத்தில் வெற்றி அடைவாய்" என காதுக்குள்
சொன்னார். ஒருபக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் குழப்பம். இரண்டையும் சுமந்து கொண்டு அங்கிருந்து வந்தேன்.

எனக்கு மாப்பிள்ளை முறைகொண்ட ஒருவர். ஆன்மீகவாதி. அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது "ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. ஆனால், எப்படி என்றுதான் தெரியவில்லை" என்று கூறினேன்.

அது சாதாரண காரியம் அல்ல. கலைமகளின் அருள் பூரணமாக இருக்க வேண்டும். ஜோதிடத்தை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வாக்கிலும் நாக்கிலும் வாணி நிற்க வேண்டும். இந்தாருங்கள் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்" என்று சொல்லி 'சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி?' என்ற சிறிய நூல் ஒன்றைக் கொடுத்தார். என்னிடம். சின்ன அதிர்ச்சி.



இப்போது இருபது ஆண்டுகள் பின்னோக்கி போகப் போகிறேன். காரைக்குடியில் என் நண்பர் ஒருவரின் வீட்டில் மாலை நேரத்தில் காபி அருந்திக் கொண்டிருந்தேன். அவர் செல்வந்தர்.
ஜமீன் சொக்கு என்று அவரை அழைப்பார்கள்.

அவருடைய வீட்டுக்கு ஜோதிடர் ஒருவர் வந்தார். நண்பர், அவரின் குடும்பத்தார்கள் ஆகியோரின் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து பலன் சொன்னார். என்னை பார்த்து ஜாதகம் இருக்கிறதா... என்று கேட்டார். இல்லை....அதோடு எனக்கு ஜோசியம் ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை... என்று கூறினேன். சிரித்துக் கொண்டே பிறந்த நேரத்தையும் தேதியையும் கேட்டார்.

என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் இரண்டையும் சொன்னேன். ஒரு சில நிமிடத்திலேயே என் ஜாதகக் கட்டத்தைப் போட்டு சில விஷயங்களைச் சொன்னார்.

"இன்று எதை நம்பிக்கை இல்லை என்று ஒதுக்குகிறீர்களோ... அது ஒரு நாள் உங்களிடம் வந்து சேரும். பலருக்கு வழிகாட்டியாக இருக்கப் போகிறீர்கள். அதற்கான அம்சம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. இது நடக்கும். நான் கும்பிடும் ஜக்கம்மா மீது ஆணை" என்று சொன்னார்.

அவருடைய பெயர் பெத்த பெருமாள். வசித்த ஊர் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூர். என்னுடைய மாப்பிள்ளை ஜோதிட நூலைக் கொடுத்த போது இந்த சம்பவம் என்னுடைய நெஞ்சில் நிழலாடியது.

அதன் பிறகு நடந்த இன்னொரு சம்பவம். ஞான சக்திவேலன் என்ற ஜோதிடர், ஜோதிட மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு ஒரு விழா மலர் தயார் செய்தார். அதில்
என்னுடைய வாழ்த்துக் கவிதை இடம் பெற வேண்டும் என்று கேட்டார். "அப்துல் காதரிடம் வந்து அமாவாசைக்கு குறிப்பு கேட்பது மாதிரி இருக்கிறது உங்கள் வேண்டுகோள்" என்று
சிரித்தேன்.

விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு போனவர் இரண்டாம் பக்கத்தில் அந்தக் கவிதையை அச்சிட்டு இருந்தார். அதோடு விழா நாளன்று நானே அந்தக் கவிதையை மேடையில் வாசிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். விழாவுக்கு போனேன். புகழ் பெற்ற ஜோதிடர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். கவிதையைப் படித்தேன்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரு ஜோதிட மேதை என்னை அருகில் அழைத்தார். "உனக்குத் தெரியாமலேயே உன்னிடம் ஒரு சக்தி ஒளிந்திருக்கிறது. உரிய நேரத்தில் வெளிப்படும்" என்றார்.

இது நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எனக்கு ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு நிறைய ஜோதிடப் புத்தகங்களைப் படித்தேன். முதலில்
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. போகப் போக அதில் ஆர்வமும் ஒருவித ஆளுமையும் உருவானது.

ஜோதிடம் சம்பந்தமாக சுமார் 600 கேள்விகளைத் தயார் செய்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் அனுபவம் வாய்ந்த ஒரு ஜோதிடரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு பின்னர் குடும்ப உறவாக மாறியது.
என்னுடைய கேள்விகளை எல்லாம் அவரிடம் வைத்தேன். அதற்கு உரிய விளக்கத்தை பொறுமையாக உள்வாங்கிக் கொண்டேன்.பின்னர்தான் புரிந்தது ஜோதிடம் என்பது மகாசமுத்திரம் என்பது. அதில் கரை கண்டு விட்டோம் என்று யாரும் மார்தட்ட இயலாது. அப்படி யாராவது சொன்னால் குருவி குண்டுக்கல்லைத் தூக்கிக் கொண்டு குத்தாட்டம் போட்ட கதை மாதிரிதான். நான் ஓரளவு அடிப்படையைத் தெரிந்த பின்னர் பலன்களையும் கணிக்கத் தொடங்கினேன்.

நான் ஜோதிடத்தை தொழிலாக பார்க்கவில்லை. கலையாகவே பார்த்தேன். ஆகவே, பலன்களைக் கணிக்கும்போது நடைமுறை வாழ்க்கைக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை அதிக கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.



ஒரு நாள் ஒரு காதல் ஜோடி என்னிடம் வந்தது. " நாங்கள் மூன்று வருடமாகக் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள நினைக்கிறோம். பொருத்தம் பார்த்துக் கூறுங்கள்" என்று கேட்டனர்.

"இருவரும் காதலிக்கிறீர்கள். இனிமேல் பொருத்தம் பார்ப்பது தவறு. மனப்பொருத்தம் இருந்தால் மணம்பொருத்தம் அமையும்" என்று கூறினேன். அவர்கள் விடவில்லை. இருவரின் ஜாதகங்களையும் பார்த்தேன். பெண்ணுக்கு கடுமையான செவ்வாய்தோஷம். பாம்பு வேறு பாதகமான இடத்தில் நின்றது. பத்துப் பொருத்தங்களில் சில முக்கிய பொருத்தங்கள் பொருந்தி வரவில்லை.

இதைக்கூறி அவர்களைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை. நான் சொன்னாலும் அவர்களிடம் இருந்த காதல் வேகம் காது கொடுத்து கேட்கவிடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே, சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

மூன்று வருடம் கழிந்திருக்கும். ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினேன். என்னிடம் முன்பு ஆலோசனை கேட்க வந்த அந்தப் பெண் கை கூப்பி வணங்கியபடி எனக்கு முன்னால் நின்றாள். மேகம் நிலவை மூடியதைப் போல சோகம் அவள் முகத்தைக் கவ்வி இருந்தது.

"எப்படி இருக்கிறாய் அம்மா... " என்று கேட்டேன்.

கண்களுக்குள் கங்கை உற்பத்தியானது. விழித்திரையைப் பிளந்து கொண்டு கன்னத்தில் பாய்ந்தது. "திருமணமான அடுத்த வருடமே ஒரு விபத்தில் அவர் என்னை விட்டு போய்விட்டார்."

அந்தப் பெண் சொன்ன செய்தி அமிலமாய் என் இதயத்திற்குள் இறங்கியது. அடுத்த விநாடி என்னுடைய நினைவு அவள் ஜாதகத்திற்கு பாய்ந்தது. அவள் ஜாதகத்தில் இருந்த செவ்வாய்தோஷம் என் மூளைக்குள் மின்னலாய் பளிச்சிட்டது.

முன்னோர்கள் சொல்லி வைத்த கருத்துக்கள் சொத்தை அல்ல முத்துக்கள் என்பதை அன்றுதான் முழுமையாக உணர்ந்தேன். அதே வேளையில் இந்தச் சம்பவத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

அதற்கு விதிவிலக்குகள் இருக்கின்றன. பல கூறுகள் இருக்கின்றன. பல அம்சங்கள் உள்ளன. இறைவனின் அருளால் ஜோதிடனின் கணிப்பையும் தாண்டி பல்லாண்டு வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி விதியை வென்ற தம்பதிகளும் உள்ளனர். வாழ்க்கை, தொழில், வேலை, பிள்ளைகள், நோய், சமுதாய அந்தஸ்து, அரசியல், கலை என பல தரப்பட்ட அம்சங்கள் குறித்து என்னிடம் பலர் ஆலோசனை பெற்றிருக்கிறார்கள்.

அந்த அனுபவங்களையும் தேவைப்படுவோருக்கு இறைவன் அருளால் என்னால் இயன்ற ஆலோசனைகளையும் அடுத்த கட்டங்களில் உங்களுக்குத் தருகிறேன். உங்களோடு உறவாடி என்னை நானே புதுபித்துக் கொள்ள இந்த வலைப்பதிவின் மூலம் ஆண்டவன் வழி அமைத்துக் கொடுத்து இருக்கிறான் என்ற நம்புகிறேன்.

வாழ்க வளமுடன். ராசிகளின் ஆசிகள் என்றும் உங்களுக்குத் துணை நிற்கும்.

1 comment:

  1. நன்றி அய்யா, எனக்கு ஜாதகம் பார்க்க கற்றுக்கொள்ள விருப்பம். வலைத்தளத்தில் தேடும்போது உங்களின் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி

    ReplyDelete