Thursday 29 October 2009

விதவைக்கு வாழ்வு தரும் ஜாதக அமைப்பு

ஒரு பெரியவரை மகா பெரியவராக பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை ஏற்பட்டது. 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் என்னை ஒரு நாள் சந்தித்தார். அவர் மூன்று ஜாதகங்களை எடுத்து வந்திருந்தார்.ஆண்களின் ஜாதகம் இரண்டு. பெண்ணின் ஜாதகம் ஒன்று.





வைத்தியம் பார்க்கப் போகும் ஒருவர், மருத்துவரிடம் "எனக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை நீங்களே கண்டுபிடித்துச் சொல்லுங்கள்" என்று அடம்பிடிப்பதைப் போல் சிலர் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு ஜோதிடரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் ஆற்றோரம் இருக்கின்ற சாமியாரிடம் குறி கேட்கப்போன குப்புசாமியைப்போல.

இவர் அப்படி இல்லை. " ஐயா.. இது என் மூத்த மகனோட ஜாதகம். படகில போகும்போது தவறிவிழுந்து இறந்துட்டான். அந்தச் சம்பவம் மனைவி கண்ணு முன்னாடியே நடந்திருச்சு. என்னோட மருமக தங்கமான பொண்ணு. அதை பூ இல்லா... பொட்டு இல்லா.. என்னால பாக்க முடியலை. இந்த சின்ன வயசில வாழ்க்கையை தொலைக்கிறதை என்னால நினைச்சுக்கூட பாக்க முடியலை.

அதனால என் இளைய மகனுக்கே திருமணம் செஞ்சு வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்.

இது இளையவனோட ஜாதகம். இது என் மருமகளோட ஜாதகம்" என்று மூன்று ஜாதகங்களையும் கொடுத்தார்.

வியாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்துவிட்டதால் அதன் தன்மையையும் பாதிப்பையும் பார்க்கும் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. இறந்தவருக்கு ஆயுள் ஸ்தானத்தில் தேய்பிறைச் சந்திரன். அதோடு பாபர்களின் கொடூரமான பார்வையை வேறு கொண்டிருந்தான்.

இலக்கனாதிபதி நீச ஸ்தானம் ஏறி இருந்தான். இப்படிப்பட்ட அமைப்பு உடைய சாதகத்தை அவமிருத்த யோகம் கொண்டது என ஜோதிட ஞானிகள் குறிப்பிடுவர்.

அவமிருத்த யோகம் என்பது அகால மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. எட்டாம் இடம் என்ன ராசி, அதில் எந்தக் கிரகம் இருக்கிறது என்பதைப் பொறுத்து அவர் தீயினால் மடிவாரா..ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணமடைவாரா... தண்ணீரில் உயிரை விடுவாரா.. என கணிக்கலாம்.

இளைய மகனின் லக்கனம் மகரம். கடகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு எட்டாமிடத்தில் செவ்வாய். 2இல் ராகு 8-இல் கேது.

இப்படி பார்த்த வகையில் இருவருக்கும் திருமணத்தை செய்து வைக்கலாம் என்று சொன்னேன். மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை கேட்டீர்களா என வினவினேன்.

"முதலில் பிடிவாதமாக மறுத்தாள். நீ இதற்கு ஒப்புக் கொள்ளலைனா.. என் மகன் போன இடத்துக்கே நானும் போயிருவேன்ன்னு சொன்னதும் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

இளையவனும் எந்த மறுப்பும் சொல்லலை . என் மருமகள் சந்தோசமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்" இப்படிச் சொல்லும் போது பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிதறின.

"கவலைப்படாதீர்கள் ஐயா.. உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என்று சொல்லி அனுப்பினேன். இப்போது அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயத்தை ஆரம்பத்தில் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு கணவன் இறக்கும் போது ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. இப்போது புதுவரவாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் இரண்டு குழந்தைகளும் பாசத்தோடு வளர்கிறார்கள்.

*** ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து ஏழாம்பாவத்தில் இருந்தால் அவன் ஒரு விதவையை மணம் புரிய வேண்டிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment