Monday 12 October 2009

உறவைப் பிரிக்கும் செவ்வாய் தோஷம்

என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண். சுறுசுறுப்பு பரபரப்பு இரண்டும் அவளிடம் அதிகம். ஆனால், சில நேரங்களில் எதையோ பறி கொடுத்தது போல் ஆகி விடுவாள்.


வேலையில் கவனம் போய் விடும். இந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும் காதலும் இல்லாத பெண்கள் மிகக்குறைவு. அதனால் காதல் பிரச்சினையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

ஒரு நாள் அவளிடம் இது பற்றி கேட்டேன்.

" நான் ஒருவரை விரும்புகிறேன். அவரும் என்னை நேசிக்கிறார். ஆனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. அதுதான் பயமாக இருக்கிறது. எங்கள் இருவரின் ஜாதகத்தை பார்க்க முடியுமா" என்றாள்.




"காதலும் மோதலும் சகஜம்தானே...காலப்போக்கில் சரியாகி விடும்" என்றேன். ஆனால் அவள் பிடிவாதமாக இருந்தாள்.

ஒரு நாள் மாலை வேலையில் அந்தப் பையனை அலுவலகத்துக்கு வரச்சொன்னேன். இருவரின் ஜாதகத்தையும் கணித்துப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய். லக்கனத்தில் சூரியன். பையனின் ஜாதகத்தில் தோஷமில்லை. இருந்தாலும் மூன்றாம் இடத்தில் ராகுவோடு சந்திரன். இது அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மையை ஏற்படுத்தும்.

ஆனால், இதையெல்லாம் அவர்களிடம் சொல்லாமல் " வாழ்க்கைக்கு புரிந்துணர்வு முக்கியம். நீங்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்தால் பிரச்சினை இல்லாமல் வாழலாம்" என்றதோடு பல அறிவுரைகளையும் கூறினேன். காதலித்த பின்னர் கணக்கு போடுவதில் என்ன லாபம்.

அவருக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவில் நானும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினேன். அந்தப் பெண்ணும் வேலையை ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார்.

சுமார் ஒரு வருடம் கழித்து எனக்கு போன் செய்தார். "கணவருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை. நாங்கள் பிரிந்து விட்டோ ம். இப்போது தகவல் நுட்பத்துறையில் மேல்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சரியாக எங்களுக்கு பொருத்தம் பார்க்கவில்லை" என்று சொல்லி அழுதார்.

ஜாதகத்தை விட காதல் வலிமையானது என்று நினைத்தேன். ஆனால் ஏறுக்குமாறாக நடந்து விட்டது.

முதலிலேயே சொல்லி இருக்கலாமோ என்று என்னுடைய மனம் வலித்தது.

காதலர்களே, உங்களுடைய ஜாதகத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். பிரிந்து போவதற்கு அல்ல, புரிந்து நடந்து வாழ்வதற்கு.

அதேவேளையில், செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம். இவர்கள் சேர்ந்து வாழ்வது கடினம் என்று ஜோதிடரால் சொல்லப்பட்ட ஒரு ஜோடி. இன்றும் இணைந்து வாழ்கிறார்கள். அந்த நபருக்கு வயது 72. அம்மையாருக்கு வயது 65. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களைச் சந்தித்தேன்.அடுத்து அவர்களைப் பற்றி எழுதுகிறேன்.

No comments:

Post a Comment