Wednesday 30 September 2015

நாக்கில் சனி... நரகமாகும் வாழ்க்கை...!

நான் அலுவலகத்தில் அமர்ந்து கணினியை திறக்கின்ற போது அலைபேசி என்னை அழைத்தது.

" ஐயா நான் உயிர் வாழ்வதிலேயே அர்த்தம் இல்லை. எனக்கு வாழப் பிடிக்கவில்லை. நீங்கள்தான் எனக்கு வழி சொல்ல வேண்டும்."

ஒரு பெண் வெடித்துக் கிளம்பும் விம்மலை அடக்க முடியாமல் என்னிடம் பேசினார்.

" வாழ வழி கேட்டால் என்னால் ஆயிரம் வாய்ப்புகளைக் கூற முடியும். சாக வழி கேட்பது எந்த வகையில் நியாயம" என்று அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தினேன்.

" நீ பாட்டுக்கு ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடாதே.. கடைசி நேரத்தில் என்னிடம்தான் பேசினாய் என்று தெரிந்து போலீஸ் என்னை புரட்டி எடுத்து விடும்" என நகைச்சுவையாகச் சொன்னேன்.

கவ்விப் பிடித்த சோகத்திலும் அந்தப் பெண் மெல்லச் சிரிப்பது எனக்குக் கேட்டது.

" சார் உங்களை நேரில் சந்திக்க வேண்டும். எத்தனை மணிக்கு வரட்டும் எனக் கேட்டார்.

அன்று காலை இரண்டு பேருக்கு ஒப்புதல் அளித்து இருந்ததால் 12 மணிக்கு வரச்சொன்னேன்.

கணவரின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார். என்னை பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு சின்ன சலனம்.

ஜோதிடர் என்றதும் வயதான தோற்றத்தில் பட்டை அடித்து அதற்குரிய அடையாளங்களோடு இருப்பேன் என நினைத்திருப்பார் போலும்.

அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு நான் பேசியதும் அவரின் இறுக்கம் குறைந்து விட்டது.

" நான் என்ன பேசினாலும் தவறாகப் போய் விடுகிறது. எதைத் தொட்டாலும் பிரச்சினை வெடிக்கிறது. வீட்டில் மட்டுமல்ல, நண்பர்கள் உறவுகள் மத்தியிலும் இதே நிலைதான்.

நான் நியாயத்தைத் தான் பேசுகிறேன். ஆனால், அதுவே எனக்கு வினையாகி விடுகிறது. வீட்டில் வெட்டுக் குத்து நடக்காத குறைதான்" என்று சொன்னார்.

ஜாதகங்களை ஆய்வு செய்தேன். ஜென்மம், மகாதசை, கோச்சாரம் என எல்லா வகையிலும் சற்று ஆழமாகப் பார்த்தேன்.

அவர் ஜாதகத்தில் கிரகங்கள் எந்த எந்தக் கட்டத்தில் இருந்தன என நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் சிலர் அதைவைத்து தங்கள் ஜாதகத்தை ஒப்பீடு செய்கிறார்கள்.

அது தவறு. மருத்துவர் செய்வதைப்  பார்த்து அதேபோல் நாமும்  செய்தால் பாதிப்பு நமக்குத் தான். மேலும் சில தவறான அபிப்பிராயங்கள் மற்றவர் மீது ஏற்பட இந்த சிறுபிள்ளைத்தனம் வழி வகுத்து விடும்.

குடும்ப உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சில கிரகங்கள் கெட்டுக் கிடந்தன. ஏழரைச் சனியின் இறுக்கமான பிடியில் வேறு இருக்கிறார்.

நியாயத்தை மட்டும் வைத்து வாழ்க்கை வண்டியை ஓட்டி விட முடியாது. எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனிப்பு உடலுக்கு மிகவும் நல்லது. அதன் ஆக்க சக்திதான் நமக்கு ஊக்க சக்தியாக மாறி ஊட்டம் அளிக்கிறது.

ஆனால், சர்க்கரை வியாதி வந்து விட்டால் அதே சர்க்கரை நமக்கு எதிரியாகி விடுகிறது. இந்த உண்மை தெரிந்து அதை நாம் ஒதுக்காவிட்டால் அதுவே நமக்கு எமனாகி விடுகிறது.

ஆகவே, இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமைதியாக இருங்கள். சனிக்கிழமைதோறும் மௌன விரதம் அனுஷ்டியுங்கள்.

நவக்கிரக வழிபாடு செய்து வாருங்கள். மனதை அடக்கப் பழகிக் கொள்ளுங்கள். நியாயம் பேசுகிறோம் என்று சொல்லி வீட்டை நரகமாக்கி விடாதீர்கள் என கூறினேன்.

புராண இதிகாசங்களில் இருந்து பல எடுத்துக் காட்டுகளை அவருக்கு விளக்கினேன். என்னைச் சந்தித்த பலர் இறக்கி வைத்த அனுபவங்களை அவருக்கு உணர்த்தினேன்.

சிதைந்து போன மனதோடு வந்தவர் தெளிந்த முகத்தோடு திரும்பினார். என்ன அவருக்கு எதார்த்த உண்மைகளை உணர்த்த நான் எடுத்துக் கொண்ட நேரம் இரண்டு மணிக்கும் மேலாக நீண்டு விட்டது.



Tuesday 29 September 2015

பெற்ற தாயை தூக்கி எறிந்த பிள்ளைகள்

ஓர் அம்மையார் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று உங்களைப் பார்க்க முடியுமா என்றார்.

அவருடைய குரலில் அழுகையும் அவசரமும் தெரிந்தது. என் அலுவலகத்துக்கு வரச் சொன்னேன்.

மகளைக் கூட்டிக் கொண்டு மதிய நேரத்தில் வந்தார். அவருடைய இரண்டு மகன்களின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.

பார்த்தேன். அவருக்கு ஏற்பட்ட சிக்கல் என்ன என்பது தெரிந்து விட்டது.

இரண்டு ஆண்கள், ஒரு பெண், எல்லாருக்கும் திருமணம் ஆகி விட்டது.

அதன் பின்னர்தான் பிரச்சினை. ஆண்பிள்ளைகள் இருவரும் அம்மாவை ஒதுக்கி விட்டு மனைவி வீட்டில் மஞ்சம் கொண்டு விட்டார்கள்.

இந்த அம்மா குருட்டுத்தனமான தெய்வ பக்தி உடையவர். தான் அம்மனின் அவதாரம் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

மஞ்சள் ஆடையில்தான் காட்சி தருவார். சற்று அதிகமாகப் பேசக்கூடியவர்.

இவருக்கு துறவு ஜாதகம். எப்படியோ திருமணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு தாயாகி விட்டார்.

பளிங்குத் தரையில் சிதறிய பாதரசத்தைப் போல எதிலும் ஒட்டாத இல்வாழ்க்கை.

பெற்றோர் எல்லாம் பெற்றவர் இல்லை. பிள்ளைகள் எல்லாம் பிள்ளைகள் அல்லர். உங்கள் மூலமாக பிள்ளைகளை உலகுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான் என்று சொன்னேன்.

எங்கு இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் சந்தோசமாக வாழ்ந்தால் சரி தானே. அதைத் தானே ஒரு தாயின் மனது விரும்பும் என்று எடுத்துச் சொன்னேன்.

மனம் ஆறவில்லை. மருகி மருகி கேள்வி கேட்டார். கோகுலத்து கண்ணன் கதையை அவருக்கு உணர்த்தினேன்.

இனிமேல் பிள்ளைகள் இவரிடம் வர வாய்ப்பு இல்லை. ஆனால், மருமகள்கள்தான் மகன்களை பிரித்து விட்டார்கள் என்ற ஆத்திரம் இவரை அவஸ்தைப்படுத்துகிறது.

இவரின் மகள் ஜாதகமும் இல்லற வாழ்க்கைக்கு இசைவாக இல்லை. அதிலும் பிரச்சினை.

இதையெல்லாம் தாண்டி இவர் குடும்பத்திற்கு ஏதோ ஒரு சாபக்கேடு இருக்கிறது.

அதன் தாக்கம் இந்த அம்மையாரை இந்தப் பிறவியில் நிம்மதி இல்லாமல் ஆக்கி விட்டது.

வரும் குருப் பெயர்ச்சி வரை பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.

இதற்கிடையில் அந்த இளம் பெண் என்னிடம் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னார்.

அவர் என்னிடம் அவரின் மனக்குறையை இறக்கி வைக்கத் துடிக்கிறார் என்று அவரின் கண்கள் சொல்லியது.

ஆசிரியையாக பணி செய்கிறார். விடுமுறை நாளில் வரச் சொல்லி இருக்கிறேன்.

அவருக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதை என் உள் மனது தெளிவாக உணர்த்தி விட்டது.

இருப்பினும் அவர் வாயால் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

Sunday 27 September 2015

பெண்டாட்டியா... பிசாசா....?

" உன்னைய பஞ்சாயத்துல நிக்க வச்சு நாறக் கேள்வி கேட்கலைன்னா நான் மனுசி இல்லை."

" ஏம்மா இப்படி பேசுறே.. உனக்கு நான் என்ன குறை வச்சேன். நீ என்னை புருசனா நினைக்க வேண்டாம். ஒரு மனுசா நினைச்சு மரியாதை கொடுக்கக் கூடாதா"

" பொட்டப் பயலுக்கு என்னடா மரியாதை. உன் ஆத்தா பேச்சக் கேட்டுக்கிட்டு அழிச்சாட்டியமா பண்ணுற"

" உங்க அம்மாவ நீ நினைக்கிற மாதிரி தானே... நான் எங்க அம்மாவ நினைக்கிறேன். அது தப்பா...?

" பெத்துப் போட்டா தொத்திக்கிட்டே திரியணுமா.. அந்தக் கெழத்துக்கு கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலை. அம்மாவாம் அம்மா..  நொம்மா"

" இங்க பாரு என்னைய என்ன வேணுமின்னாலும் பேசு.. ஆனா, எங்க அம்மாவை இழுக்காதே. அப்புறம் என்ன நடக்குமுன்னு தெரியாது"

" என்னடா செய்வே.. அடிப்பியா.. மிதிப்பியா... பண்ணிப்பாரு உன் கன்னம் பழுத்துப் போகும்"

" போடி உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு பதிலா.. ஒரு காட்டெருமையைக் கட்டி இருக்கலாம்."

" இப்ப என்ன கேடு வந்துச்சு... காட்டெருமையக் கட்டிக்க.. இல்லைன்னா ஒரு கழுதைய வேணுமின்னாலும் கட்டிக்க..நானா வேண்டாமிங்கிறேன்."

" சீச்சீ... பொம்பளையா இருந்தா உன் கூட பேசலாம். ஒரு பிசாசோடு பேச முடியுமா" என்று கத்திக் கொண்டு வெளியேறிய ராமநாதன் ஆத்திரத்தை எல்லாம் மோட்டார் சைக்கிளில் காட்டினான்.

அவனுக்கு பயந்த ஹீரோ கோண்டா அடுத்த தெருவில் இருந்த டாஸ்மாக் கடையை நோக்கி பாய்ந்து சென்றது.

ராமநாதன் திருமணம் செய்திருப்பது மாமன் மகள் மேகலாவை. வேறு ஒரு பையனுக்கு நிச்சயம் பண்ணி கல்யாண நாளன்று ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் நின்று விட்டது.

அண்ணன் குடும்பம் அசிங்கப்பட்டு நிற்கிற்தே... என ஆதங்கப்பட்ட ராமநாதனின் தாயார் மகனுக்கு மணம் முடித்து வைத்தார்.

மேகலாவின் குடும்பம் வசதி வாய்ப்புக் குறைவானது. மேகலாவுக்கும் தகப்பனார் இல்லை, ராமநாதனுக்கும் அப்பா கிடையாது.

திருமணம் ஆகி இரண்டு வாரங்களில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. என்ன சொன்னாலும் ஏட்டிக்கு போட்டிதான்.

அத்தை அவளுக்கு சொத்தை. புருசனை புடுங்கி எடுப்பது இருட்டுக் கடை அல்வா சாப்பிடுவது மாதிரி மேகலாவுக்கு.

சண்டை சச்சரவோடு ஓராண்டு ஓடி விட்டது. தாம்பத்திய வாழ்க்கை இல்லை. பிரச்சினையைச் சமாளிக்க முடியாத ராமநாதன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு தொலைபேசியில் அழைத்தார். நேரில் வரச் சொன்னேன். இருவரின் ஜாதகத்தோடு வந்தார்.

பார்த்தேன். எந்தப் பொருத்தமும் இல்லை. நல்லதைச் செய்யக் கூடிய கிரகங்கள் அத்தனையும் கெட்டுக் கிடக்கின்றன.

சுமார் இரண்டு மணி நேரம் பேசி அவர் மனதைத் தேற்றினேன். பல்வேறு என் அனுபவங்களை எடுத்துக் காட்டாகக் கூறினேன்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின்னர் அவர் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கும் எனத் தெரிவித்தேன்.

மணமான இருவரைப் பிரிப்பது மிகப் பெரிய பாவம். ஆனால், சேர்ந்தே வாழ முடியாது என்று இருக்கும்போது ஒன்றாக வாழ்ந்து வீட்டை நரகமாக்குவது எந்த வகையில் நியாயம்.

என்னால்தான் என் மகன் வாழ்க்கை பாழாகி விட்டது என்று ராமநாதனின் தாயார் நொந்து நொந்து வெந்து சாகிறார்.

அனைவருக்கும் நிம்மதி வேண்டும் என்றால் அவரவர் பாதையில் செல்வதுதான் சிறப்பு.

அதை நடத்திக் காட்டும் வல்லமை ஆண்டவனுக்கு மட்டும்தானே உண்டு.


 

Monday 21 September 2015

"பிள்ளைக்கு தடுப்பூசி போடணும், எப்ப போகலாம்"
"நாளைக்கு காலையில போவோம்"
"கண்டிப்பாக நாளைக்கு கூட்டிக்கிட்டு போவீங்களா"
"நாளைக்கு அவசியம் போகலாம்"
"உங்க தம்பி காரை எடுத்துக்கிட்டு போயிடுவாரு. அப்புறம் எப்படி போக முடியும்"
"அதைப்பத்தி உனக்கு என்ன கவலை. கூட்டிக்கிட்டு போக வேண்டியது என் பொறுப்பு"
"கார் இல்லாம் எப்படி போக முடியும்"
"கார் இல்லைன்னா என்ன, பஸ்ஸில போகலாம்"
"பஸ்ஸில போன நம்ம கவுரவம் என்ன ஆகிறது"
"ஏன், உங்க லட்சணத்துக்கு பஸ்ஸில போக முடியாதோ, கார் கேட்குதோ"
"நாளைக்கு மட்டும் கூட்டி போகலைன்னு வச்சுக்கங்க, அப்புறம் நடக்கிறதே வேறே"
"என்னடி பண்ணுவே, நிக்க வச்சு வெளக்கு மாத்தால அடிப்பியா"
"இங்க பாருங்க, நீங்க என்னடின்னா, நானும் என்னடான்னு கேப்பேன். எங்க லட்சணம் தெரிஞ்சுதானே, நடையா நடந்து என்னைக் கட்டிக்கிட்டீங்க. நானா உங்களுக்கு வாக்கப்படுறேன்னு நட்டுக்கிட்டு நின்னேன்."
"என்னடி வாய் நீளுது. அப்புறம் என் கை நீளும் பாத்துக்க"
"உங்க கை நீண்டா நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க உங்க அண்ணன் பொண்டாட்டி மாதிரி டொப்பிரி இல்லை. அப்புறம் என் கால் நீளும் தெரிஞ்சுக்கங்க"
அவ்வளவுதான் அவனுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் தாண்டவம் ஆடியது. ஓங்கி கன்னத்தில் ஓர் அறை கொடுத்தான்.
அடுத்த வினாடி அவள் செய்த காரியம் வீட்டில் உள்ளவர்களை விக்கித்துப் போக வைத்து விட்டது.
காலை தூக்கி ஜாக்கி ஜான் மாதிரி கட்டிய கணவனின் நெஞ்சில் ஓர் உதை விட்டாள்.
அம்மா, தம்பி, தம்பி மனைவி, அண்ணன் மனைவி ஆகியோர் முன்னிலையில் இப்படி நடந்தவுடன் அவமானத்தால் குறுகிப் போன அவன் உதைத்த காலைப் பிடித்து தலைகுப்புற அடித்து விட்டான்.
ஐயோ... அப்பா... என கத்திக் கொண்டு சுருண்டு விழுந்து தரையில் கிடந்தாள். அவள் போட்ட சத்தத்தில் ஊரே கூடி விட்டது.
இடுப்பு ஒடிந்து விட்டதோ என்ற பயத்தில் அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் பாதிப்பு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்னர்தான் அவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
பையன் செ

முதலிரவுக்கு ஒத்திகை.. முறிந்து போன வாழ்க்கை...!

"நீங்க செஞ்சது நியாயமா.. என்னை நம்ப வச்சு கழுத்த அறுத்திட்டேங்களே..கமல்"

"என்னை மன்னிச்சிடு சுதா... மனசாற சொல்றேன். உன்ன ஏமாத்தனுமுன்னு நினைக்கல. நாம சேந்து வாழ கொடுத்து வைக்கலை"


"பொய்... அப்பட்டமான பொய்.. மனச்சாட்சி இல்லாத மனுசன் நீங்க.. நல்லவன் மாதிரி நடிச்சு... என்னோட வாழ்க்கையைக் கெடுத்த நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க"

"நடந்தது நடந்து போச்சு. இதை கெட்ட கனவா நினைச்சு மறந்திடு... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க. என்னை தொந்தரவு பண்ணாதே.."

"யோய் நீயெல்லாம் மனுசனா.. இப்ப நான் உனக்கு தொந்தரவா.. அன்னைக்கு நீயில்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சத்தியம் பண்ணினியே. அது உன்னோட நெஞ்சில நிக்கலையா.."

"என்ன... திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கே... அப்புறம் என் மண்டைக்கு ஏறிடும் பாத்துக்க."

"ஏன் ஏறாது. உன்னைய பாக்காம ஒரு நிமிசம் கூட இருக்க முடியலைன்னு என்னைய உருக வச்சு நயவஞ்சகமா வீட்டுக்கு கூப்பிட்டு கெடுத்திட்டு இப்ப நல்லவன் மாதிரி பேசுறீங்க."

"நான் மட்டுமா தப்பு செஞ்சேன். நீயும்தானே சம்மதிச்சே.. அப்ப உனக்கு புத்தி எங்க போச்சு."

"ஏன் சொல்ல மாட்டீங்க... உன்னைய கல்யாணம் பண்ணிக்க போறவன் கேட்கிறேன். முதலிரவு எப்படி இருக்குமுன்னு ஒத்திகை பாப்போம். அப்பத்தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியுமுன்னு சொன்னதாலதானே உங்க ஆசைக்கு நான் இணங்கினேன்."

"அறிவு கெட்டவளே.. நல்ல சாப்பாடு சாப்பிட ஆம்பிள ஆயிரம் பொய்யைச் சொல்வான். பொட்டச்சி நீதாண்டி பொத்தி வச்சிருக்கணும். அன்னைக்கு கதவத் துறந்து விட்டு காத்தாடக் கிடந்திட்டு. இன்னைக்கு வந்து கத்துற"

" உலகத்திலேயே உன்னைய மாதிரி அழகி இல்லை. உன்னை தொடுறதுக்கு நான் கொடுத்து வச்சவன்னு சொல்லி.. ஒவ்வொரு உடுப்பாக கழட்டி என்னைக் கெடுத்துட்டு இப்ப வியாக்கியானம் பேசுற. நீ எந்தக் காலத்திலும் உருப்பட மாட்டே.. என் சாபம் உன்னைச் சும்மா விடாது"

"பத்தினி சாபம் பலிச்சிடப் போகுது. போடி போக்கத்தவளே... இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுனே.. நடக்கிறதே வேற.. நாம் ரெண்டு பேரும் சல்லாபமா இருக்கிற பொல்லாத வீடியோவை இண்டர்நெட்டில போட்டேன்னு வச்சுக்க. உன் குடும்பமே விஷத்தக் குடிச்சுட்டு விண்ணுலகம் போக வேண்டியதுதான்."

கண்ணீர் பிரேசர் மலை தண்ணீர் மாதிரி பீறிட்டு வழிய கமலின் வீட்டை விட்டு வெளியேறினாள் சுதா.

சுதா கோலாலம்பூரில் வசிக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். வயது 27. வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அவர்தான் கமல்.

பினாங்கில் வேலை பார்க்கிறார். வசதி இல்லை. வாடகை வீட்டில் வசிக்கிறார். இருந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே சுதா மனதை பறிகொடுத்து விடுகிறாள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கமல் பார்ப்பதற்கு அழகானவர் இல்லை. சுமார் ரகம்தான்.

இந்த நிலையில் ஒரு நாள் தொலைபேசியில் சுதாவை அழைத்து உன்னைப் பார்க்கணும் போல் இருக்கு. நெஞ்சு வலிப்பது போல் தெரிகிறது. டாக்டரிடம் காண்பித்து மாத்திரை சாப்பிடுகிறேன். உடனே புறப்பட்டு வா என அழைத்திருக்கிறார்.

இந்த அப்பாவிப் பெண்ணும் அடித்துப் பிடித்துக் கொண்டு பினாங்கிற்கு ஓடி இருக்கிறார். வந்த இடத்தில் வசியமாக பேசி காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டார்.

ஏமாற்றத்தில் கருகிப் போன அந்தப் பெண் என்னைப் பார்க்க வந்தார். நடந்ததைச் சொன்னார். இருவரின் ஜாதகங்களையும் பார்த்தேன்.

இருவருக்கும் பொருத்தமில்லை. மேலும் அந்தப் பையன் ஜாதகத்தில் இடக்கு மடக்காக இருந்த சில கிரகங்கள் பெண்கள் விஷயத்தில் தில்லாலங்கடி வேலை செய்யும் பெரும் கில்லாடி என்பதை வெளிப்படுத்தியது.

ரோஜாப் பூவில் தேன் குடித்த வண்டு தாமரை மலருக்குத் தாவி விட்டது. இந்த விஷயம் சுதாவுக்குத் தெரிய வந்தது. இது அவரை எரிமலைக்குள் தள்ளியது.

என்ன செய்வது விதியின் விளையாட்டை அவருக்கு விளக்கிச் சொன்னேன். கெடுத்தவனை மறந்து விட்டு அடுத்த காரியத்தில் அக்கறைப்படுமாறு அறிவுறுத்தினேன்.

முற்றும் ஏற்றுக் கொள்ளாத மனதோடு சற்று ஆறுதல் வயப்பட்டு சென்றார். மனது வலிக்கும்போதெல்லாம் தொலை பேசியில் அழைக்கிறார்.

அப்பாவிப் பெண்ணின் மனக்காயத்திற்கு என் வசந்த வார்த்தைகள் மருந்தாக அமைகின்றன. அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்கு பின்னால் இவரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும்.

மண வாழ்க்கை கைகூடி மகிழ்ச்சியாக வாழ்வார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார். கட்டிய கணவனை கடவுளாக மதிப்பார்.

விதியால் நடந்த கொடுமையை நாம் தவறு எனச் சொல்லி இவரைக் குற்றவாளியாக்க முடியாது. அதே நேரத்தில் திமிர் எடுத்துப் போய் சதை விளையாட்டு நடத்தி சந்தி சிரிக்கும் பெண்களை விதியின் பேரைச் சொல்லி விலக்கி வைக்க இயலாது.

அந்த இளம் பெண்ணின் நலன் கருதி பெயரை மாற்றி பிரசுரித்திருக்கிறேன். நான் வணங்கும் விநாயகப் பெருமானும் இளவல் முருகப் பெருமானும் அவளுக்கு எல்லா நலன்களையும் அளிப்பார்கள்.

Wednesday 16 September 2015

படிக்காதவனைப் படிக்க வைத்த ஜாதகம்

"ஐயா, என் மகன் படிப்பில் மந்தமாக இருக்கிறான். அக்கறையாக படிக்க மாட்டேன் என்கிறான்" என்று கவலையோடு என்னிடம் கூறினார் ஓர் அம்மையார்.

"அப்படியா... இருக்காதே. பையனின் ஜாதக அமைப்பு சிறப்பாக உள்ளதே" என்று சொன்னேன்.

"என்ன சிறப்பு.. பிளஸ் டு பரிட்சையில் பெயிலாகி விட்டான். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை" அவருடைய கண்களில் நீர் முத்துக்கள் கொப்பளித்தன.

ஜாதகத்தை மீண்டும் ஆய்வு செய்து பார்த்தேன். புதன் உச்ச வீட்டில் பலமாக இருக்கிறான். குருவும் செவ்வாயும் பதினோராம் வீட்டில் வலுவாக நிற்கிறார்கள்.

"அம்மா.. விசனத்தை விடுங்கள். பையனைக் கொண்டு போய் பாலி டெக்னிக்கில் சிவில் படிப்பு பிரிவில் சேருங்கள்.கண்டிப்பாக பிற்காலத்தில் பெரிய கட்டடங்களைக் கட்டும் இஞ்சினியராக வருவான்" என்று சொல்லி அனுப்பினேன்.

நான் சொன்னபடியே ராயபுரம் சுப்பிரமணியம் பாலிடெக்னிக்கில் பையனைச் சேர்த்து விட்டார். முதலில் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாத அவன் போகப் போக சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்தான்.

கல்லூரி இறுதி ஆண்டில் 87 சதவிகத மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தேறினான். பொறியியல் படிப்புக்கு இரண்டாம் ஆண்டில் சேர ஆசைப்பட்டான்.

கல்லூரியில் சேர அந்தக் காலகட்டத்தில் அன்பளிப்பு அதிகமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 5 லட்சம் 6 லட்சம் என வெகுமானம் கேட்டார்கள்.

இந்த நிலையில் அந்த குடும்பத்துக்கு வேண்டிய செட்டியார் ஒருவர் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக இடம் வாங்கிக் கொடுத்தார்.

பணக்கார மாணவர்கள் படிக்கின்ற அந்தக் கல்லூரியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவன் ஆடம்பரங்களை அண்ட விடாமல் படிப்பில் மட்டுமே கவனமாக இருந்தான்.

பேராசிரியரே பாராட்டும் அளவுக்கு மிகுந்த ஈடுபாட்டோடு கல்வியைத் தொடர்ந்தான்.

அதன் பலனாக பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வாங்கி முதல் மாணவனாக முத்திரை பதித்தான்.

படிப்பு முடித்து வீட்டுக்குத் திரும்பிய மறுநாளே சென்னையில் உள்ள பிரி காஸ்டிங் முறையில் கட்டிடம் கட்டும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார் அவனுடைய தந்தை.

மிகவும் சொற்ப சம்பளம். தந்தைக்கு உடன்பாடு இல்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன் என தைரியம் சொல்லி தந்தையை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து திருவண்ணாமலையில் இருக்கும் நிறுவனத்துக்கு மாறினான். அதன் பின்னார் திருப்பூரில் ஒரு சிக்கலாக கட்டடத்தை கட்டும் வாய்ப்புக் கிடைத்தது.

சவால் நிறைந்த அந்தப் பணியை சக தொழிலாளர்களின் உதவியோடு வெற்றிகரமாக செய்து முடித்தான்.

நிறுவன உரிமையாளருக்கு மிக சந்தோஷம். வேலையை முடித்துக் கொடுத்து அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்த அவனை அடுத்த நாளே அழைத்தார் கட்டுமான நிறுவன உரிமையாளர்.

மறுப்புச் சொல்லாமல் வேலையை ஒப்புக்கொள்ளும்படி தந்தை அறிவுறுத்தினார். உடனே அந்த நிறுவனத்தில் சேர்ந்தான்.

வேளச்சேரியில் பெரிய துணிக்கடை, விழுப்புரத்தில்... சேலத்தில்... ஓசூரில்... என பல கட்டங்களைக் கட்டினான்.

கட்டுமான நிறுவனமும் பிரசித்தி பெற்ற துணிக்கடைகளும் ஒரே குழுமத்தைச் சேர்ந்தவை. பல்லாயிரம் கோடிக்கு பரிவர்த்தனை நடக்கும் குழுமம்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கமான தங்கம் தியேட்டரை அந்த நிறுவனத்தினர் விலைக்கு வாங்கினர். இடித்து தரை மட்டமாக்கி விட்டு துணிக்கடைக் கட்டுமான பணியை தொடங்கினார்கள்.

அந்தக் கட்டட கட்டுமானப் பணிக்கும் இந்தப் பையன் தான் முதன்மைப் பொறியியளாளர். 15.05.2015 இல் ஆரம்பித்து 15.08.2015 இல் அதாவது மூன்று மாதத்தில் கட்டுமானப் பணியைப் பூர்த்தி செய்து கொடுத்தான்.

சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக எழும்பியிருக்கும் ' தி சென்னை சில்க்ஸ்' கட்டடம் தான் அந்தப் பையன் கட்டியது.

மும்மூர்த்திகளுக்கும் முதல்வனாம் விநாயகப் பெருமான் பிறந்த நாளான இன்று 17.09.2015 ஆம் ஆண்டு திறப்பு விழா காண்கிறது.

விரைவாகவும் செரிவாகவும் நேர்த்தியாகவும் கட்டுமானப் பணியை முடித்துக் கொடுத்த தேவசெந்தூரனுக்கு நிறுவனத்தின் உரிமையாளர் பாராட்டும் பரிசும் வழங்கினார்.

ராமனுக்கு லட்சுமணனைப் போல தேவசெந்தூரனக்கு அவருடைய தம்பி இந்திரன் பக்க துணையாக இருந்து கட்டுமானப் பணி நிறைவுக்கு பங்காற்றினார். இவர் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இஞ்சினியர்.

பெருமிதத்தோடு என்னை வந்து சந்தித்தார் அந்த அம்மையார் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயாக...'