Wednesday 16 September 2015

படிக்காதவனைப் படிக்க வைத்த ஜாதகம்

"ஐயா, என் மகன் படிப்பில் மந்தமாக இருக்கிறான். அக்கறையாக படிக்க மாட்டேன் என்கிறான்" என்று கவலையோடு என்னிடம் கூறினார் ஓர் அம்மையார்.

"அப்படியா... இருக்காதே. பையனின் ஜாதக அமைப்பு சிறப்பாக உள்ளதே" என்று சொன்னேன்.

"என்ன சிறப்பு.. பிளஸ் டு பரிட்சையில் பெயிலாகி விட்டான். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை" அவருடைய கண்களில் நீர் முத்துக்கள் கொப்பளித்தன.

ஜாதகத்தை மீண்டும் ஆய்வு செய்து பார்த்தேன். புதன் உச்ச வீட்டில் பலமாக இருக்கிறான். குருவும் செவ்வாயும் பதினோராம் வீட்டில் வலுவாக நிற்கிறார்கள்.

"அம்மா.. விசனத்தை விடுங்கள். பையனைக் கொண்டு போய் பாலி டெக்னிக்கில் சிவில் படிப்பு பிரிவில் சேருங்கள்.கண்டிப்பாக பிற்காலத்தில் பெரிய கட்டடங்களைக் கட்டும் இஞ்சினியராக வருவான்" என்று சொல்லி அனுப்பினேன்.

நான் சொன்னபடியே ராயபுரம் சுப்பிரமணியம் பாலிடெக்னிக்கில் பையனைச் சேர்த்து விட்டார். முதலில் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாத அவன் போகப் போக சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்தான்.

கல்லூரி இறுதி ஆண்டில் 87 சதவிகத மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தேறினான். பொறியியல் படிப்புக்கு இரண்டாம் ஆண்டில் சேர ஆசைப்பட்டான்.

கல்லூரியில் சேர அந்தக் காலகட்டத்தில் அன்பளிப்பு அதிகமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 5 லட்சம் 6 லட்சம் என வெகுமானம் கேட்டார்கள்.

இந்த நிலையில் அந்த குடும்பத்துக்கு வேண்டிய செட்டியார் ஒருவர் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக இடம் வாங்கிக் கொடுத்தார்.

பணக்கார மாணவர்கள் படிக்கின்ற அந்தக் கல்லூரியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவன் ஆடம்பரங்களை அண்ட விடாமல் படிப்பில் மட்டுமே கவனமாக இருந்தான்.

பேராசிரியரே பாராட்டும் அளவுக்கு மிகுந்த ஈடுபாட்டோடு கல்வியைத் தொடர்ந்தான்.

அதன் பலனாக பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வாங்கி முதல் மாணவனாக முத்திரை பதித்தான்.

படிப்பு முடித்து வீட்டுக்குத் திரும்பிய மறுநாளே சென்னையில் உள்ள பிரி காஸ்டிங் முறையில் கட்டிடம் கட்டும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார் அவனுடைய தந்தை.

மிகவும் சொற்ப சம்பளம். தந்தைக்கு உடன்பாடு இல்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன் என தைரியம் சொல்லி தந்தையை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து திருவண்ணாமலையில் இருக்கும் நிறுவனத்துக்கு மாறினான். அதன் பின்னார் திருப்பூரில் ஒரு சிக்கலாக கட்டடத்தை கட்டும் வாய்ப்புக் கிடைத்தது.

சவால் நிறைந்த அந்தப் பணியை சக தொழிலாளர்களின் உதவியோடு வெற்றிகரமாக செய்து முடித்தான்.

நிறுவன உரிமையாளருக்கு மிக சந்தோஷம். வேலையை முடித்துக் கொடுத்து அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்த அவனை அடுத்த நாளே அழைத்தார் கட்டுமான நிறுவன உரிமையாளர்.

மறுப்புச் சொல்லாமல் வேலையை ஒப்புக்கொள்ளும்படி தந்தை அறிவுறுத்தினார். உடனே அந்த நிறுவனத்தில் சேர்ந்தான்.

வேளச்சேரியில் பெரிய துணிக்கடை, விழுப்புரத்தில்... சேலத்தில்... ஓசூரில்... என பல கட்டங்களைக் கட்டினான்.

கட்டுமான நிறுவனமும் பிரசித்தி பெற்ற துணிக்கடைகளும் ஒரே குழுமத்தைச் சேர்ந்தவை. பல்லாயிரம் கோடிக்கு பரிவர்த்தனை நடக்கும் குழுமம்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கமான தங்கம் தியேட்டரை அந்த நிறுவனத்தினர் விலைக்கு வாங்கினர். இடித்து தரை மட்டமாக்கி விட்டு துணிக்கடைக் கட்டுமான பணியை தொடங்கினார்கள்.

அந்தக் கட்டட கட்டுமானப் பணிக்கும் இந்தப் பையன் தான் முதன்மைப் பொறியியளாளர். 15.05.2015 இல் ஆரம்பித்து 15.08.2015 இல் அதாவது மூன்று மாதத்தில் கட்டுமானப் பணியைப் பூர்த்தி செய்து கொடுத்தான்.

சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக எழும்பியிருக்கும் ' தி சென்னை சில்க்ஸ்' கட்டடம் தான் அந்தப் பையன் கட்டியது.

மும்மூர்த்திகளுக்கும் முதல்வனாம் விநாயகப் பெருமான் பிறந்த நாளான இன்று 17.09.2015 ஆம் ஆண்டு திறப்பு விழா காண்கிறது.

விரைவாகவும் செரிவாகவும் நேர்த்தியாகவும் கட்டுமானப் பணியை முடித்துக் கொடுத்த தேவசெந்தூரனுக்கு நிறுவனத்தின் உரிமையாளர் பாராட்டும் பரிசும் வழங்கினார்.

ராமனுக்கு லட்சுமணனைப் போல தேவசெந்தூரனக்கு அவருடைய தம்பி இந்திரன் பக்க துணையாக இருந்து கட்டுமானப் பணி நிறைவுக்கு பங்காற்றினார். இவர் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இஞ்சினியர்.

பெருமிதத்தோடு என்னை வந்து சந்தித்தார் அந்த அம்மையார் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயாக...'

No comments:

Post a Comment