Thursday 16 July 2015

ஹோண்டா காருக்கு தொயோத்தா கார் பிஸ்டனா..? பொருத்தமில்லா ஜாதகங்களை இணைக்கலாமா...!

பத்துப் பொருத்தமும் சரியாக இருக்கிறது என்று திருமணம் முடிப்பார்கள். ஆனால், சில மாதங்களிலேயே சிக்கல் சில்லு வண்டாக ரீங்காரமிடும்.
பிறகு ஜாதகங்களை இன்னொரு ஜோதிடரிடம் எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். என்ன இது... சாம்பாருக்கு சர்க்கரையைப் போட்டது போல் பொருத்தமில்லாமல் திருமணம் செய்து வைத்திருக்கிறீர்களே என ஒரு பொல்லாத குண்டை அவர் தூக்கிப் போடுவார்.

அப்படியா... அவர் பிரபலமான ஜோதிடர் ஆயிற்றே...அவரா இப்படிக் கோட்டை விட்டார் என அவரைக் குறை சொல்வார்கள். நேற்று வரை தலையில் தூக்கி வைத்து ஆடியவர் என்பதை கண நேரத்தில் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள்.
இப்படி பலரை நான் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. இருப்பினும் வித்தை தெரிந்தவர்களை விவரமில்லாதவர்கள் என குற்றம் சாட்டும் தகுதி எனக்கு இல்லை.
அதே நேரத்தில் ஏன் இந்தக் குளறுபடி. தொண்டைக்குள் மாட்டிய கெண்டை முள்ளாக இவர்களை பாடாய்ப்படுத்தும் பிரச்சினைகளுக்கு யார் காரணம்.
இவர்கள்தான். ஜாதகத்தைக் கொடுக்கும்போதே பேசி முடித்துவிட்டோம் பிரச்சினை இருந்தால் பாருங்கள். பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். நிறைவேற்றி விடுகிறோம் என்பர்.
பெண் பெரிய இடம். இருவரும் படித்தவர்கள். பக்குவமானவர்கள். ஓரளவு அனுசரித்துப் போவார்கள் என ஜோதிடரின் வாக்குக்கு ஆப்படித்து விடுவார்கள்.
ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே 'கடப்பாரையை முழுங்கியவனுக்கு கசாயம் மருந்தாகாது' என கழட்டி விட்டு விடுவார்கள்.
மற்றவர்களோ 'மனப்பொருத்தம் இருக்கிறது. அறுதியிட்டுக் கூற நாம் என்ன ஆண்டவனா' என்று பெற்றோர் போக்கிலேயே இவர்களும் போவார்கள்.
அதனால் வரும் வினைதான் இளம் தம்பதிகளின் இல்வாழ்க்கையில் சிக்கல்களும் சிரமங்களும் விலக்க முடியாத விக்கலாக வில்லங்கம் செய்வது.
தன்னுடைய மகனுக்கு வரன் பார்த்திருப்பதாக ஒரு அன்பர் என்னிடம் ஜாதகங்களைக் கொடுத்தார்.
பெண்ணின் ராசி உத்திரம் 2 ஆம் பாதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ராசிக் கட்டத்தில் சந்திரன் இருப்பதோ கடகத்தில்.
முறைப்படி பார்த்தால் சந்திரன் கன்னியில் நிற்க வேண்டும். மேலும் அந்தப் பெண் ஆவணி மாதத்தில் பிறந்திருக்கிறார்.ஆனால், சூரியன் நிற்பதோ கடகத்தில்.
இப்படிச் சில குளறுபடிகள். அந்த அன்பரோ இரு ஜோதிடர்களிடத்தில் பொருத்தம் பார்த்து விட்டேன். ஏழு பொருத்தம் இருப்பதாகக் கூறினார்கள் எனச் சொன்னார்.
பையன் திருவாதிரை நட்சத்திரம். இதன்படி பார்த்தால் ஏழு பொருத்தம் வரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், ஜென்ம ஜாதகத்தில் கிரகங்கள் நிலையில் மாற்றம் ஏற்படுவதால் உண்டாகும் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டாமா...
தசவிதப் பொருத்தம், ஜென்ம ஜாதகப் பொருத்தம், சூக்குமப் பொருத்தம் என சில விதிகள் இருக்கும்போது அதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா...
இதையெல்லாம் அந்த அன்பரிடம் நான் சொன்னவுடன் அவரின் முகம் சுட்ட கத்தரிக்காய் போல சுருங்கி விட்டது. 'ஏன்டா இவனிடம் ஜாதகத்தைக் கொடுத்தோம்' என்று நினைத்திருப்பார் போலும்.
ஏனென்றால்' பெண் பெரிய இடம். பார்க்க லட்சணமாக இருக்கிறாள். பையன் கருப்பு. பருத்த தேகம். ஜோடிப் பொருத்தம் சற்று சுமார்தான்.
அதனால், அவரிடம் தோன்றிய வாட்டம் நியாயமானதுதான். இருந்தாலும், ஹோண்டா காருக்கு தொயோத்தா காரின் பிஸ்டனைப் பொருத்த இயலுமா... ஆகவே, என்னைப் பொருத்தவரை ஜாதகம் எழுதியது தவறு என உறுதியாகக் கூறிவிட்டேன்.
மேலும்,ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ள பிறந்த நேரத்தை வைத்து கணித்துப் பார்த்தேன். கட்டங்களில் கிரகங்கள் மாறுபட்டு நிற்பது தெரிந்தது.
பெண் வீட்டாருக்கு போன் செய்து ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மீண்டும் ஜாதகத்தை எழுதச் சொல்லுங்கள் என அந்த அன்பரிடம் தெரிவித்தேன்.
ஒரு வாரம் கடந்து விட்டது. ஜாதகம் சரியாக இருந்திருந்தால் அடுத்த நொடியே போனில் அழைத்து என்னை ஒரு பிடி பிடித்திருப்பார். அதுதானே தமிழர்களின் தனிப் பண்பு.
ஆனால்,அழைப்பு வரவில்லை. ஆகவே, ஜாதகம் குழப்பமாக இருப்பதை ஊர்ஜீதப்படுத்தி இருப்பார் என நினைக்கிறேன்.
வாழ்க்கைப் பாதை கரடு முரடானதுதான், ஒப்புக் கொள்கிறேன். அதே நேரத்தில் 'கண்ணுக்குத் தெரிந்த பள்ளத்தில் முன்னுக்கு போய் விழுகிறேன்' என்பவர்களுக்கு நாம் உறுதுணையாக நிற்பது ஜோதிட சாஸ்திர விதிகளுக்கு முரணானது அல்லவா.

No comments:

Post a Comment