Wednesday 15 July 2015

ஜாதகத்தை மீறினால் பாதகத்திற்கு பஞ்சமில்லை!

எதிர்காலம் எப்படி இருக்குமோ என வாழ்க்கையைத் தொடங்கியவர். வறுமை இவர் வாய்க்குள் விரலை விட்டு ஆட்டிய காலம். அதாவது ஒரு வேளைக் கஞ்சிக்கே உயிர் போராட்டம் நடத்திய நேரம்.
தனியாக ஏன் கஷ்டப்படுகிறாய் என நினைத்தார்களோ என்னவோ...இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இவரைத் தூக்கி நடக்கவே இவரின் கால்களுக்குத் தெம்பில்லை. இந்தநிலையில் மனைவி என்ற இறக்கி வைக்க இயலாத சுமை இவரின் தோள்மீது. ஆண்டிப்பட்டி இவரின் சொந்த ஊர்.
வைகை அணை கட்டும்போது வேலைக்குச் சேர்ந்தார். ஒரு நாள் சம்பளம் 2 ரூபாய். அயராத உழைப்பு. தளராத முயற்சி. இவை இரண்டும் இவருக்கு தனலட்சுமியைஅறிமுகப்படுத்தி வைத்தன.

ஒரு கட்டத்தில் கட்டுமான ஒப்பந்தகாரராக உருவெடுத்தார். விடாத மழையிலால் ஏற்பட்ட வெள்ளம் இவர் வீட்டுக்குள் பாய்ந்ததுபோல் துட்டுக்காக வேலை பார்த்த இவர் கையில் கட்டுக் கட்டாக பணம் கரைபுரண்டது.
இடமாக, மனையாக, காராக, நகையாக இவரின் அந்தஸ்து சிவகங்கை மாவட்ட சீமைக்கருவை மரங்களப் போல செழித்து வளர்ந்தது.
இந்த காலகட்டத்தில் 2011 ஆண்டு வாக்கில் குடும்பத்துடன் வந்து என்னை சந்தித்தார். இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.
செல்வச் செழிப்பின் காரணமாக இருவருமே வஞ்சகமில்லாமல் உடலை வளர்த்து இருந்தனர். நான் அவர்களைப் பார்த்த விதத்தைப் புரிந்து கொண்ட அவர், "ஒரு வேளைக்கு இரண்டு கிலோ கறி தின்றால் உடம்பு இப்படி இருக்காமல் எப்படி இருக்கும்" என சொல்லி சிரித்தார்.
அவர் மனைவிக்கு வருத்தம் என்றாலும் மறுக்க இயலவில்லை. இருந்தாலும் பிள்ளைக்கு பெண் அமைய வேண்டுமே.. அந்த ஏக்கம் அவருக்கு.
பிள்ளைகளின் ஜாதகத்தைப் பார்த்தேன். மல்லாக்கப் படுத்த பிள்ளை குப்புறப்படுப்பதற்குள் குடிசையைக் கோபுரமாக்கும் அபார ஜாதகம்.
இளையவனின் ஜாதகமும் அதற்கு இளைத்ததில்லை. எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட டயராக இருந்தாலும் சின்ன ஆணி குத்தி பஞ்சாராவது போல தகப்பனாரின் ஜாதகத்தில் சில கோளாறுகள் கோச்சார நிலையிலும் தசா புத்தி நிலையிலும் தலைதூக்க ஆரம்பித்தன.
பிள்ளைகளின் ஜாதகத்திலும் கோச்சார வகையில் பாதிப்பு சற்று அதிகமாக இருந்தது.
பிள்ளைக்கு பெண் தேடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இரண்டு ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். பிள்ளையும் பிறக்கும் என்றேன்.
என் வார்த்தையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பதை அவரின் முகக்குறிப்புக் காட்டியது. ஆனால், அவரின் மனைவிக்குப் பரம சந்தோசம்.
என் கணிப்புப்படி உரிய கால கட்டத்தில் திருமணம் நடந்தது. நான் குடும்பத்துடன் கலந்து கொண்டேன். அழகானபெண் பிள்ளை பிறந்தது. பெயர் வைக்கும் விழாவிற்கு சென்றிருந்தேன்.
அதன் பின்னர் மீண்டும் என்னைத் தேடிவந்தார். ரயில்வேயில் மிகப் பெரிய பதவி கிடைக்கவிருப்பதாகவும் அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வரும் என்றும் சொன்னார்.
இந்த முறை தெளிவாகவே என் கணிப்பையும் கருத்தையும் எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு இப்போது சிரமமான காலகட்டம்.
பணமா... உயிரா.. என பந்தயம் கட்டி விதி உங்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டது. எச்சரிக்கையாக இருங்கள். ஏற்கனவே உழைத்து வாழ்க்கையில் உச்சம் தொட்டவர் என்பதால் இந்த ஆலோசனை உங்கள் எண்ணத்தின் ஓரத்தைக் கூட கிள்ளிப் பார்க்காது என்று குறிப்பிட்டேன்.
அதற்கு பின்னர் மலையகம் சென்று விட்டேன். ஒரு நாள் இரவு 9 மணி இருக்கும். தொலைபேசியில் என்னை அழைத்தார்.
உங்கள் பேச்சை அலட்சியம் செய்த எனக்கு உரிய தண்டனை கிடைத்து விட்டது. ரயில்வேயில் ஒப்பந்தம் வாங்கித்தருவதாகச் சொன்ன நபர் என்னிடம் 80 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார்.
காவல்துறையில் புகார் செய்திருக்கிறேன். விசாரணை செய்து அவரைக் கைது செய்திருக்கிறார்கள். பணம் கிடைக்குமா என பச்சை புள்ளை பாலுக்கு அழுவதைப் போல கேட்டார்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதைப்போல இப்போது அவருக்கு தன்னம்பிக்கை மட்டுமே சரியான மருந்து என்பதை உணர்ந்தேன்.
நீங்கள் தேடியதில் ஒரு பகுதியைத்தான் இழந்திருக்கிறீர்கள். கையில் வைத்திருந்த பாட்டில் தவறி விழுந்து பாதி தண்ணீர் தரைக்கு இரையானது.
பாதித் தண்ணீர் பறி போய்விட்டதே என தவிக்கிறீர்கள் நீங்கள். மீதித் தண்ணீர் மிச்சம் இருக்கிறதே என்று சுட்டிக் காட்டுகிறேன் நான்.
இழந்ததை எண்ணி இளைப்பதை விட இருப்பதை வைத்து பிழைப்பதே புத்திசாலித்தனம் என அவரைத் தேற்றினேன்.
சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனத்திற்கு சாலை அமைக்கும் ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. தைரியமாக இறங்கலாமா என இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.
ஜாதகம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டிதான். அதுவே உழைப்புக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கக்கூடாது. தைரியமாக இறங்குங்கள் என உற்சாகம் கொடுத்திருக்கிறேன்.
இனிமேல் அவர் எடுத்து வைக்கும் அடியை எச்சரிக்கையாக வைப்பார். இழந்த பணத்தை மீட்டார். தொலைந்த மகிழ்ச்சியை பெறுவார்.

No comments:

Post a Comment