Tuesday 14 July 2015

தன் வாழ்க்கையை தானே அழிக்கும் பெண்கள்

முகநூலிலும் வலைப்பதிவிலும் கால்பதிக்காத இரண்டு மாத இடைவெளியில் ஜோதிட ஆலோசனை பெற பலர் என்னை அணுகினர்.
விதவிதமான அனுபவங்கள் வித்தியாசமான பிரச்சினைகள். வண்ணத் திரையை விலக்கிப் பார்த்தால் எண்ணத் தொலையாத இன்னல்கள் இடுக்கண்கள்.
நேற்றுச் சந்தித்து ஜாதகம் பார்த்த ஒரு பெண்மணியின் பிரச்சினைகளை இலைமறை காயாக இங்கே பதிவிடுகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே என்னை சந்திக்க விரும்புவதாக சொன்னார். நேரம் வாய்க்குமா என்று கேட்டார்.
நான் மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய இடங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தேன். மதுரையில் ஒரு செல்வந்தர் வீட்டில் வாஸ்து பார்க்க வேண்டும்.
ஆண்டிப்பட்டியில் ஆசை வார்த்தைக்கு மயங்கி மோசம் போய் கோடிக்கு கொஞ்சம் குறைவான பணத்தைப் பறிகொடுத்த நெருக்கமான நண்பரின் உருக்கமான வேண்டுகோள்.

திருமணமாகி சில மாதங்களே ஆன இளம் தம்பதியர் மத்தியிலே எழுந்த கருத்து வேறுபாடு, குடும்ப வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் அவலநிலை. இது தேனியில்
ஆகவே, தாமதமாக நேற்றுத்தான் அந்தப் பெண்மணியைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய சித்தப்பா, சிற்றன்னையுடன் என்னைச் சந்தித்தார்.
அவருக்கு பிள்ளைகள் இரண்டு. ஆண் பள்ளி இறுதியாண்டு படிக்கிறார். பெண் ஏழாம் வகுப்புக்குச் செல்கிறார்.
பிள்ளைகள் ஜாதகத்தில் அதிக பிரச்சினை இல்லை. பெண் பிள்ளைக்கு செவ்வாய் தோஷம். ஆண்பிள்ளைக்கு குட்டிச் சுக்கிரன்.
ஆனால், கணவரின் ஜாதகம் சற்று வித்தியாசம், காள சர்ப்ப தோஷம். மேலும் சில கிரகங்கள் தாறுமாறாக கெட்டுக் கிடந்தன.
வசதிக்கு குறைவில்லை. கணவரோ அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர். ஊரில் முக்கிய பிரமுகர்.
அவருக்கு இருதார ஜாதக அமைப்பு. களத்திரகாரகன், களத்திர ஸ்தானம் பாதிப்பு. அதில் உள்ள சிக்கல்களை என் உள் மனசு சொன்னாலும் அவர்களின் வாழ்க்கை முறையை வைத்து பலன் சொல்வதில் எனக்கு சற்று தடுமாற்றம்.
"அம்மா.. நான் ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்து பார்த்து விட்டேன். சில சிக்கல்கள் இருக்கின்றன. இது குறி பார்க்கும் இடமல்ல. என்னிடம் உள் மனதில் உள்ளதை ஒளிக்காமல் சொல்ல வேண்டும்.
உதடுகளும் இதயமும் ஒரே வார்த்தையை உச்சரிக்க வேண்டும். உண்மை தெரிந்தால் அதற்கான பரிகாரகங்களைச் செய்து சிக்கல்களைச் சீரமைக்கலாம்" என்று அவரிடம் சொன்னேன்.
நாம் அறிவாளி என்று அவர்களிடம் படம் காட்டினால் முட்டாள்களாக அவர்கள் முடங்கிப் போவார்கள். நீங்கள் அறிவாளிகள் என்று அவர்களை அறிவுறுத்தி விட்டால் தயங்காமல், தடங்கள் இல்லாமல் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
இப்படிச் சொன்னவுடன் உதடு பேச ஆரம்பித்தது. அதற்குள் கண்கள் முந்திக் கொண்டு கண்ணீரைக் கொட்டியது.
"என்னுடைய கணவருக்கு நான் இரண்டாம் தாரம். அவருடைய அண்ணனுக்கு வாக்கப்பட்டு பிரச்சினைகள் காரணமாகப் பிரிந்து இவரோடு வந்து விட்டேன்.
இவரின் முதல் மனைவி இவரை விட்டு விலகி விட்டார். மகள் வீட்டில் வசிக்கிறார். ஆரம்பத்தில் எந்தக் குறையும் இல்லை.
இரண்டு பிள்ளைகள் பிறந்து விட்டன. இப்போது எதற்கெடுத்தாலும் சண்டை. என்ன செய்தாலும் குற்றம் சொல்கிறார்.
ஒரே வீட்டில் இருந்தாலும் நாங்கள் பேசி ஒருவருடம் ஆகிவிட்டது. தனித்தனியாக படுக்கிறோம். சமைத்து வைக்கும் சாப்பாட்டை விருப்பப்பட்டால் சாப்பிடுகிறார். இல்லை என்றால் வெளியேறி விடுகிறார்.
ஏதாவது கேள்வி கேட்டால் நெருப்பாக வார்த்தைகளைக் கக்குகிறார், எட்டி உதைக்கிறார். வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற பயமாக இருக்கிறது. நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்" என்று கையெடுத்து கும்பிட்டார்.
ஓரளவு நான் கணித்ததுதான். ஜாதக பலன்களைச் சொல்லி அச்சுறுத்துவதை விட நடைமுறை வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நலம் பயக்கும் என்று எண்ணினேன்.
"அம்மா, நீங்கள் சொல்வதைப் பரிசீலித்தேன். மனக்குறைகளை உள்வாங்கிக் கொண்டேன். ஆனால், இதைக் களைவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்.
நெருப்பை நீரால் அணைக்க வேண்டும். நெருப்பால் அணைக்க இயலுமா... அதைத்தான் இந்த நிமிடம் வரை நீங்கள்
செய்து வருகிறீர்கள்.
நீங்கள் கொல்லைப் புற வழியாக வந்தவர் என்பதால் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்று பயப்படுகிறீர்கள். அந்தப் பயத்தில் பதற்றமாக வார்த்தைகளை அள்ளி வீசுகிறீர்கள்.
அதனால், உங்கள் கணவரின் கோபம் எல்லை கடந்து விடுகிறது. சமுதாயத்தில் மற்றவர்கள் எல்லாம் மரியாதை தரும்போது மனைவி மட்டும் மதிக்க மறுக்கிறாளே என்ற எண்ணம் உங்கள் கணவரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இது கோர்ட்டு அல்ல, குடும்பம். விவாதம் செய்து வெற்றி பெற இயலாது. விட்டுக் கொடுத்துத்தான் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
சுற்றி இருப்பவர்கள் விவரம் தெரியாமல் உங்களைத் தூண்டி விட்டு வில்லங்கத்திற்கு விழா எடுப்பார்கள். பாதிப்பு உங்களுக்குத்தான்.
ஒரு எடுத்துக் காட்டுக்காக இதைச் சொல்கிறேன். குடி என்பது பழக்கம் அல்ல, அது பழகப் பழக உடலில் பதியமிட்ட நோய். அவர்கள் குடிகாரர்கள் அல்ல, குடி நோயாளிகள். மருந்து கொடுத்துக் குணப்படுத்துவதற்குப் பதிலாக மட்டம் தட்டி ரணப்படுத்தினால் விளைவு விபரீதம்தான்.
அதுபோல்தான் உங்கள் நிலையும். உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். ஆனால், எல்லா நியாயங்களும் எதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராது. வாழ்க்கையில் சந்தேகம் சதிராட ஆரம்பித்தால் சந்தோசம் விரைந்தோடும் என்பது விதி.
முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், பிறகு கணவர் தானாக மாறி விடுவார். பிள்ளைகள் மீது பாசமுள்ள எந்தத் தகப்பனும் தடுமாறுவதில்லை. தடம் மாறுவதும் இல்லை என்று விளக்கிக் கூறினேன்.
கணவருக்கு அஷ்டமச்சனி பாதிப்பு இருப்பதால் திருநள்ளாறு சென்று வரும்படி அறுவுறுத்தி உள்ளேன்.
அவரின் கணவரைச் சந்தித்து பேசுவதாக வாக்களித்து இருக்கிறேன். புரிந்து கொள்ளக் கூடிய நபர். மற்றவர்களின் சிரமங்களுக்கு தோள் கொடுக்கும் தன்மை உடையவர்.
இருப்பினும் விதி விளையாடும்போது என்ன செய்ய இயலும். விதியை மதியால் வெல்லலாம். ஆனால், அதற்கு இரண்டு தரப்பிலும் இணக்கம் இருக்க வேண்டும்.
என் நாவில் குடியிருக்கும் கலைமகளின் அருளால் அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீச வைக்கும் ஆற்றல் எனக்கு இருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் கண்டிப்பாக அதைச் செய்து முடிப்பேன். அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைப்பேன்.




No comments:

Post a Comment