Saturday 7 March 2015

இடைப்பட்ட நாளில் தடைப்பட்ட திருமணம்....ஏன்?

நமக்கு வரப் போகின்ற பெரிய துன்பங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக சிறிய துன்பங்களைக் கொடுப்பது இறைவனின் திருவுள்ளம்.
இதைப் பலர் உணர்வதில்லை. அறியாமையால் ஆண்டவனைத் திட்டுகிறார்கள்.
நேற்று என்னை ஒரு தம்பதியினர் சந்தித்தனர். மிக முக்கியமான அம்சம் குறித்து ஆலோசனை கேட்க வேண்டும் என்று முன்பே தொலைபேசியில் தெரிவித்து இருந்தனர்.
இரண்டு வாரங்களாக அலுவல்சுமையின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் நேற்றுத் தான் அந்த நல்வாய்ப்பு அமைந்தது.
கணவன் அரசு தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார். பிரதமர் செல்லும் நாடுகளுக்கு கூடவே போக வேண்டும்.
மனைவியும் கல்வித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
மூத்தவள் பெண். கணினித்துறையில் பட்டம் பெற்று சிறப்பான பணியில்
இருக்கிறார். வயது 28.
இவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டார்கள். பையனும் படித்தவர். பொருளாதாரப் பஞ்சமில்லை.
ஆனால் குறித்த நாளில் திருமணம் நடக்கவில்லை. பெண் வீட்டாரே கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான். பையன் எதெற்கெடுத்தாலும் குறை பேசுகிறார்.
ஏட்டிக்கு போட்டியாகவே விவாதம் செய்கிறார். எங்கள் மகள் அமைதியானவர்.
போனில் பேசுவதற்குகூட உங்கள் மகளுக்கு வலிக்கிறதா என எங்களிடமே கேட்கிறார்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என்னை யாரும் அடக்கி ஆள முடியாது என்று சம்பந்தமில்லாமில் பேசுகிறார்.
ஆகவே எங்களுக்கு பயம் வந்து விட்டது. பின்னாளில் சிரமப்படுவதை விட இப்போதே திருமணத்தை நிறுத்தி விடுவது உத்தமம் என்று கருதி இவ்வாறு செய்து விட்டோம்.
இப்படிச் செய்தது சரியா... தவறா எனத் தெரியவில்லை. குழப்பமான நிலையில் உள்ளோம்.
ஒன்றுக்கு மூன்று ஜோதிடர்களிடம் பொருத்தம் பார்த்து விட்டுத்தான் திருமண ஏற்பாட்டைச் செய்தோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார்கள்.
அவர்கள் பேசும்போதே சில குறிப்புகளை ஒரு தாளில் எழுதினேன். அதன்பிறகு ஜாதகங்களைப் பார்த்தேன்.
ஜாதகக் கட்டங்களில் இருக்கும் கிரகங்களின் அமைப்பு மற்றும் தோஷ விவரங்களை எடுத்துக் கூறினேன்.
என் குறிப்பில் 80 சதவிகிதம் மிகச் சரியாக இருந்ததைக் கண்டு அவர்கள் வியந்து போனார்கள்.
பின்னர் ஜாதகத்தில் உள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறினேன். ஒருவேளை இந்தத் திருமணம் நடந்திருந்தால் என்னென்ன இடர்பாடுகளைச் சந்தித்திருக்க வேண்டும் என்று விளக்கினேன்.
இன்னும் ஓர் ஆண்டிற்கு பின்னர் கண்டிப்பாக நல்ல மாப்பிள்ளை அமைவார். இந்தத் திருமணத்தை நீங்கள் தடுக்கவில்லை.
உங்கள் உள்ளத்தில் இருந்து இறைவன் தான் நிறுத்தி இருக்கிறார் என அறிவுறுத்தி புராண இதிகாசங்களில் இருந்து சில விளக்கங்களை எடுத்துக் கூறினேன்.
அரை மணி அவகாசத்தில் பகாவ் செல்ல வேண்டும் என்று அமர்ந்தவர்கள் ஏறக்குறைய மூன்று மணி நேரம் என்னிடம் பேசினர்.
வீட்டிற்குள் வரும் போது மன நிறையக் கவலைகளைச் சுமந்து கொண்டு வந்தோம்.
உங்களிடம் இருந்து விடைபெறும் போது மனம் முழுக்க நிம்மதியை நிறைத்துக் கொண்டு செல்கிறோம் எனக் கூறி விடை பெற்றுச் சென்றனர்.
என் மூலமாக இறைவன் அவர்களின் மனக்கவலைக்கு மருந்து தடவி இருக்கிறார். எனக்கும் மனம் நிறைய சந்தோஷம் தான்.

No comments:

Post a Comment