Tuesday 3 March 2015

சொன்ன வாக்கு பலித்து...ஜாதகம் ஜெயித்தது...!

ஒருவரின் ஜாதக அமைப்பு எந்த அளவுக்கு அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.
2002 ஆம் ஆண்டில் நான் டாமான்சாரா டாமாயில் வீடு வாங்கி குடியேறினேன். அப்போது ஓர் இளைஞர் அறிமுகமானார். அவருக்கு வயது 25.
பழக்கம் வழக்கமாகி, நட்பு உறவாக மாறி என்னை சகோதரனாகவே கருத ஆரம்பித்தார்.
அவருக்கு சொந்த ஊர் சிரம்பான். கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
வந்த இடத்தில் வேலை அமையவில்லை. சாப்பாட்டுக்கே சிரமமான நிலை. இருந்தாலும் கடுமையான உழைப்பாளி.
இதற்கு இடையில் முத்து என்ற நபர் அறிமுகமாக நல்ல நண்பராக மாறினார். கேரளாவைச் சேர்ந்தவர். பொறியியலாளர்.
சுங்கைபூலோவில் துப்பாக்கி ரவை தயாரிக்கும் அரசாங்கத் தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.
அவருடைய அப்பா மிகச் சிறந்த ஜோதிடர். நான் ஜாதகம் பார்க்கும் ஆற்றல் கொண்டவன் என்பதை அறிந்து கொண்டார்.

ஒரு நாள் நான் மேலே குறிப்பிட்ட சகோதரர் சந்துருவின் ஜாதகத்தைக் கொண்டு வந்து காண்பித்தார்.
மகர லக்கனம், ரிஷிப ராசி. செவ்வாய், சந்திரன் குரு உச்சம். சூரியனும் புதனும் மறைவு ஸ்தானத்தில் இருந்தனர்.
அப்போது தம்பி சந்துருவும் என் வீட்டிற்கு வந்து விட்டார். இருவரிடமும் பலன் சொன்னேன்.
இன்று இவர் சிரமப்படலாம். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இவர் பொருளாதார நிலையில் மிக ஏற்றத்தில் இருப்பார் என்று.
அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால், நம்பிக்கை பிறக்கவில்லை.
அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் அப்பார்ட் மெண்டுக்கு கீழே உள்ள காபிக் கடையில் நாங்கள் சந்திப்போம். பேசுவோம். மிகவும் உறுதுணையாக இருப்பார்.
ஒரு நாள் காலையில் பசியாறிக் கொண்டிருக்கும்போது 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண் அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியே சென்றார்.
அந்தப் பெண்ணைப் பார்த்த சந்துருவின் முகத்தில் காதல் மின்னல் இழையோடியதைப் பார்த்தேன்.
ஒரு வருட இடைவெளியில் அதே பெண்ணை மணம் முடித்து வைத்தேன். மிக மரியாதை கொண்ட பெண்.
நாங்கள் அருகருகே இருக்கும்வரை அவர்கள் என் வீட்டிற்கு வந்தாலும் சரி. நான் அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் சரி எனக்கு முன்னால் ஷோபாவிலோ தரையிலோ அமர்ந்ததில்லை. எவ்வளவு நேரமானலும் நின்று கொண்டே இருப்பாள்.
இது மலேசியாவில் மட்டுமல்ல இந்தியாவில் கூட இந்தக் காலக் கட்டத்தில் பார்க்க முடியாத காட்சியாகும்.
அவருக்கு இரண்டு பையன்கள். பெரியவருக்கு அர்ச்சுன்என்று பெயர். இளையவர் பெயர் நாகார்சுன்.
இருவருக்கும் ஜாதகம் பார்த்து பெயர் வைத்தது நான் தான். குடும்பம் விரிவடைந்தவுடன் சுங்கைபூலோவிற்கு வீடு மாறி சென்றார்.
இருவருக்கும் சுமார் 30 கிலோ மீட்டர் இடைவெளி ஏற்பட்டது. அதனால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்தது.
 பல தடைகளைத் தாண்டி மேடு பள்ளங்களைக் கடந்து இன்று தார்ச் சாலை போடும் ஒப்பத்தக்காரராக தம்பி சந்துரு உருவெடுத்து விட்டார்.
வசதி வாய்ப்புகள் பெருகி விட்டது. மோட்டார் சைக்கிள் வாங்க தடுமாறியவர் இப்போது கேம்ரி கார் பாவிக்கிறார்.
சுமார் 9 லட்சம் வெள்ளியில் வீடு பார்த்திருக்கிறார். கடந்த வாரம் என்னைச் சந்தித்தபோது அனைத்து விவரங்களையும் சொன்னார்.
நான் எவ்வளவு உயர்ந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். இருந்தாலும் அன்று டாமாயில் சந்தோசமாக வாழ்ந்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்று கூறினார்.
அது இருவர் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு உண்மைதான். பணம் காசுக்கு அலையும்போது மனதில் மகிழ்ச்சி மண்டிக்கிடந்தது.
வசதி வாய்ப்புகள் வந்தவுடன் மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது.
மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம் எனச் சொல்லிப் பிரிந்தோம். இன்னும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
வேளைப்பளு கூடி விட்டது. கால்களில் சக்கரக்கதைக் கட்டிக் கொண்டு அலைகிறார். இதில் பழையதை நினைக்க நேரம் எங்கே கிடைக்கப் போகிறது.
எப்படி என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக நீ உச்சத்ததில் இருப்பாய் என்று நான் அன்று சொன்ன வார்த்தை பலித்து விட்டது.
சந்துருவை நினைத்து மனப்பூர்வாக மகிழ்ச்சி அடைகிறேன். என் அன்பும் ஆசீர்வாதமும் அவருக்கு என்றும் உண்டு.
ஏனென்றால் அவர் என் பாசமிக்க சகோதரர்.

No comments:

Post a Comment