Thursday 16 July 2015

ஜோதிடர்களுக்கு சொக்குப் பொடி போட்டால் பாதிப்பு பந்தயம் கட்டிக் கொண்டு வரும்

ஜோதிடர்களுக்கே சொக்குப் பொடி போடும் சம்பவங்கள் பின்னாளில் பெரிய பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்பதை அனுபவப்பூர்வமாக எனக்கு ஒரு சம்பவத்தின் மூலம் ஆண்டவன் உணர்த்தினான்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பெரிய சிக்கலோடு என்னை ஒரு குடும்பத்தினர் வந்து சந்தித்தனர். மகளின் ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு பிரச்சினை என்ன என்பது புரிந்துவிட்டது.
கண்ணில் விழுந்த தூசியை நாக்கால் நக்கி எடுப்பதுபோல் உற்றார் உறவினர் உணராத வண்ணம் பாதிப்பை பாதியாக குறைத்து விட்டோம்.
பழக்கம் வழக்கமாகி வழக்கம் நட்பாகி நட்பு உறவாகி அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே நான் மாறி விட்டேன். எத்தனையோ இடங்களுக்குச் சென்றும் தீர்க்க  முடியாத இன்னலை கருப்பன் வாசலில் களைந்து விட்டதாகக் கூறி என் மீது அன்பைப் பொழிந்தனர்.

இந்த நிலையில் நான் மலேசியா சென்று விட்டேன். பல்வேறு பணிகள் காரணமாக நான் அங்கிருந்து திரும்பும் காலம் சற்று நீண்டு விட்டது.
நான் தாயகம் திரும்பிய ஓரிரு நாளில் என்னை வந்து சந்தித்தார்கள். பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகக் கூறி ஜாதகங்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.
இரண்டு முக்கியமான ஜோதிடர்களிடம் பார்த்து விட்டோம். பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருப்பதாகச் சொல்லி விட்டார்கள். இந்தப் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளைதான் என்று அடித்துக் கூறிவிட்டார்கள் என்று கணவன் மனைவி இருவருமே ஒரு சேரக் குறிப்பிட்டார்கள்.
இரண்டு ஜாதகங்களையும் பார்த்தேன். சில முக்கிய பொருத்தங்கள் இல்லை. இருவரும் இணை சேருவது நன்மை அளிக்காது என்ற வகையிலேயே என் கணிப்பு அமைந்தது.
திருமணப் பொருத்த நூலிலும் பொருந்தாது என்பது விடையாக இருந்தது. கணினியில் பார்க்கும்போதும் திருமணம் கூடாது என பதில் கிடைத்தது.
ஆனால், அவர்களிடம் நான் இதைச் சொல்ல இயலவில்லை. குளத்தில் மூழ்கி விட்டு குளிக்கலாமா என அனுமதி கேட்ட கதையாக இருந்தது அவர்களின் நடவடிக்கை.
நான் ஜாதகம் குறித்து எதுவும் பேசாமல் எல்லாம் இறைவன் செயல். அவன் பட்டனை அழுத்துகிறான்.நமக்குப் படம் தெரிகிறது. நடப்பது நல்லதாகவே நடக்கட்டும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.
திருமணம் குறிப்பிட்ட நாளில் நடந்தது. கூடப் பிறக்கவில்லை என்றாலும் தாய் மாமன் என்ற தகுதியை அவர்கள் திருமண நிகழ்வில் தந்தார்கள்.
மாப்பிள்ளையும் திடகாத்திரமானவர். பெண்ணும் ஆரோக்கியத்திற்கு குறைவில்லாதவர். வசதிக்கும் வஞ்சனை இல்லை. ஆனால் குழந்தை குறைப்பிரசவத்தில் அறுவைச் சிகிச்சை மூலமாக பூமிக்கு அறிமுகமானது.
எடை இரண்டு கிலோவுக்கும் குறைவு. ஏறக்குறைவு இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் மருத்துவச் செலவு மட்டுமே ஆகியிருக்கிறது.
கணவர் வேலை செய்வது மும்பையில். பெண் மதுரை தாய் வீட்டில். இவருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் சற்று வித்தியாசமானது.
கணவர் எந்த நேரம் வேண்டுமானாலும் போன் செய்வார். உடனே போனை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்று இழவு வீடுதான்.
"ஏன் போனை எடுக்க இவ்வளவு நேரம். தினவெடுத்துப் போய் திரிகிறாயா.. புருஷன் போன் பண்ணுவான் என்ற அக்கறை இல்லாத மூக்கறையாக இருக்கிறாயே" என வாயால் வறுத்து எடுத்து விடுவாராம்.
சில நேரங்களில் சிக்கல் வேறு மாதிரியாக வேட்டியைக் கட்டிக் கொண்டு நிற்கும். அந்த மனிதன் போன் பண்ணும் போது இந்தப் பெண் வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் போதும். கரகாட்டம் ஆடி கச்சேரி நடத்தி விடுவாராம்.
"ஏன்டி இவ்வளவு நேரம் எவனோடு பேசிக் கொண்டிருந்தாய். கட்டியவன் பக்கத்தில் இல்லையென்றால் கண்ட நாய்களோடு கொண்டாட்டமா" என்று கத்தி முனை வார்த்தைகளால் குத்திக் கிழிப்பாராம்.
நஞ்சுபோய்க் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே பெரும் போராட்டம். அந்த நேரத்தில் போன் வந்து விட்டால் வேறு வினையே வேண்டாம்.

பிள்ளைக்கு பால் கொடுக்கிறேன். சற்று நேரம் கழித்து கூப்பிடுங்கள் என்று அச்சம் அடிவயிற்றைக் கிள்ள மெல்லச் சொன்னால் போதும்.
"என்னை விட பிள்ளை உனக்கு முக்கியமாகப் போய்விட்டதா.. எனக்குப் பிறகுதான் எந்த உறவும் தெரிகிறதா..." என்றுஅந்தப் பெண்ணின் இதயத்தில் சம்மட்டியை இறக்குவாராம்.
இவற்றையெல்லாம் சொல்லி அந்தப் பெண் கண்ணீர் வடித்தபோது எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனேன்.
என்ன நினைத்தேனோ அது நடந்து விட்டதே என நான் என் முதுகைத் தட்டிக் கொள்ளவில்லை. அந்த இளம் பெண்ணுக்கு இப்படி ஒரு இன்னலா எனத் துடித்துப் போனேன்.
பிள்ளை சற்று பெரிதாகட்டும். பதினெட்டாம்படி கருப்பன் வாசலுக்குத் தூக்கி வாருங்கள். சில பரிகாரம் சொல்கிறேன். அதன்படி நடந்து வாருங்கள்.
தன்னம்பிக்கையைத் தளர விடாதீர்கள். காலம் மாறும்போது கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பொறுமை மட்டுமே பொல்லாத நேரத்திற்கு மருந்து என்று தேறுதல் சொல்லி விட்டு வந்தேன்.
அழகான அமைதியான அந்தப் பெண்ணுக்கு இறைவன் கண்டிப்பாக அனுக்கிரகம் செய்வான். அதற்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.

No comments:

Post a Comment