Thursday 22 October 2009

பிடிவாதமே பிரச்சினைக்கு மூல காரணம்

கணவனுக்கு மனைவி மீது பாசம். மனைவிக்கு கணவன் என்றால் கொள்ளை பிரியம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது.





எதுக்கு எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியாக முட்டிக் கொண்டார்கள். வேலை விட்டு கணவன் எப்போது வருவான் என்று மனைவி ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பாள். மனைவியைக் காண கணவன் ஓடி வருவான்.

ஆனால், வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஏதாவது பிரச்சினை குறித்து சண்டை நாறத் தொடங்கி விடும். ஏண்டா கல்யாணம் செய்து கொண்டோம் என தனித்தனியாக படுத்துக் கொள்வார்கள்.

ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரின் ஜாதகத்தைப் பார்த்தேன். வசியப் பொருத்தம், கணப்பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் முரண்பட்டு இருந்தது.

மருத்துவரிடம் செல்கிறோம். அவர் சர்க்கரை வியாதி இருக்கிறது. இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார். நாம் அதன் படி நடந்தால் பிரச்சினை இல்லை. மீறி இனிப்பு சாப்பிட்டால் இதய நோய் வரும். புண் வந்தால் ஆறாது. கை கால்களை அகற்றவேண்டி வரும். கண்பார்வை பறிபோகும். சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்து.

அது மாதிரிதான் ஜாதகமும். எந்தக் கிரகத்தால் பாதிப்பு. எந்த அம்சத்தில் பொருத்தக் குறைவு என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை சுமூகமாக போகும். இல்லை என்றால் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மனநோயாளியாகத் திரிய வேண்டியதுதான்.

இதைத்தான் அந்த ஜோடியிடம் எடுத்துச் சொன்னேன்.

அந்தப் பெண்ணுக்கு முன்கோபம் ஜாஸ்தி. அளவு கடந்த ஈகோ. வியாதி தெரிந்த பின்னரும் விட்டுக் கொடுத்துப் போகும் பக்குவம் இல்லை. இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இதனால், அந்த ஆணுக்கு பெரிய பாதிப்பு இல்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு. அந்தப் பெண்தான் பாவம். ஆதரவின்றி அல்லாடிக் கொண்டிருக்கிறார். பிறந்த வீட்டிலும் ஒதுக்கி விட்டார்கள். பிடிவாதம் என்பது வாத நோயைவிட கொடுமையானது.

இன்று எத்தனையோ வீடுகளில் இந்த ஜோடியைப்போல எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்து (இருவரும்) போனால் வசந்தம் வாசல்படியிலே மண்டியிட்டு படுத்திருக்கும் என்பது  மறுக்கமுடியாத உண்மை.

No comments:

Post a Comment