Wednesday 7 January 2015

தாய் தந்தையரை எட்டி மிதிக்கும் பிள்ளை

தாயிற் சிறந்த கோவிலுமில்லை... தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... இந்த ஒரு வாசகத்தை எத்தனை பிள்ளைகள் திருவாசகமாக கருதுகிறார்கள் இந்த நாளில்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.... இந்த பொன்மொழியை எத்தனை பிள்ளைகள் எண்ணிப் பார்த்து நடக்கின்றனர்.

ஆலாய்ப் பறந்து தனம் தேடி அலையும் அவசர காலம் இது. சொந்தம் சுருத்து பந்த பாசம் எல்லாமே பணத்துக்குப் பின்னால்தான்.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தோள் மீதும் மார் மீதும் போட்டு வளர்த்து கல்விக் கண்ணைக் கொடுத்த தந்தையையும் எத்தி விட்டு ஏறி மிதித்து வெற்றிக் கொடி நாட்ட விரையும் பிள்ளைகள் அதிகரித்து விட்ட காலம் இது.

அண்மையில்  வயதான தம்பதியர் என்னைச் சந்தித்தார்கள். வசதியாக வாழ்ந்தவர்கள் என்பதை அசதியாக இருந்த அந்த நேரத்திலும் உடல் வாகு உணர்த்தியது.

களை பறிக்காத வயலைப் போல களை இழந்த முகம். அவர்களை வருத்துவது உடல் வலியா... மனவலியா... என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனை அவர்கள் தோற்றத்தில் விளையாடி இருந்தது.

திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தது ஆண் குழந்தை. அந்தக் குழந்தையைக் கருவறையில் சுமக்க தாய் இருந்த விரதமும் தந்தை நோற்ற நோன்பும் வார்த்தைகளில் வடிக்க இயலாது.

தவமாய் தவமிருந்து பெற்ற மகனின் மேனியில் பூ விழுந்தால்கூட தாயின் உடல் புண்ணானது. ஈ அமர்ந்தால் கூட தந்தையின் இதயம் வலித்தது.

அழுதால் குழந்தைக்கு ஆரோக்கியம். இது மருத்துவ உண்மை. ஆனால், சின்னச் சிணுங்கள் கூட பெற்றவர்களை பேதலிக்க வைத்தது.

படிக்க வைத்தார்கள். பல கலைகளை வடிக்க வைத்தார்கள். பள்ளிக் காலத்தில் மகன் எழுதும் பேனாவில் மைக்குப் பதிலாக தங்கள் இரத்தத்தை ஊற்றி அனுப்பி வைத்தார்கள்.

பெற்றோரை மகன் ஏமாற்றவில்லை. பள்ளி வாழ்க்கை மகனின் குணத்தை மாற்றவில்லை. பட்டம் பெற்றான், பெரிய பதவிக்கு வந்தான்.

ஒரு பிள்ளைதானே என்று  மொத்த சொத்தையும் விற்று மகனின் வாழ்க்கைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தார்கள். திருமணமும் செய்து வைத்தார்கள். பாசமாக இருந்த மகன் மோசமாக மாறி விட்டான்.

அடிவயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்க்கு பிடி சோறு போட மகனுக்கு மனமில்லை. கண்ணை இமைபோல காத்த தந்தை கனக்கும் சுமையாக மாறிப் போனார்.

'வீட்டின் பெயரோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்'... கண்ணீர் மல்க ஒரு கவிஞன் எழுதிய வெந்நீர் வரி இது.

இந்தக் கவிதை வரிக்கு உயிர் கொடுப்பதைப் போல உயிர் கொடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்து விட்டான் அந்த மகன்.

எங்களுக்கு ஏன் இந்த நிலை. செத்த பிறகு கொள்ளி போடுவான் என்று நினைத்த மகன், உயிரோடு இருக்கும்போதே கொள்ளி வைத்து விட்டான். இதற்கு என்ன காரணம் என்று என்னிடம் கேட்டார்கள்.

பிள்ளைகளின் நிலை குறித்து நிர்ணயம் பண்ணுவது புத்திரஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் பாவம்.

இது கெட்டுப் போகக் கூடாது. ஐந்தாம் பாவத்தின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். புத்திரகாரகன் பலமாக சஞ்சரிக்க வேண்டும்.

இவற்றில் ஏதேனும் கோளாறு இருந்தால் பிள்ளைபேறு ஏற்படுவது கஷ்டம். ஒருவேளை ஆண்டவனின் அனுக்கிரகத்தால் குழந்தை பிறந்தால் மூன்று வகையான பாதிப்புகளைக் கொண்டு வரும்.

1. பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் மடிந்து போகும். அல்லது தீர்க்க இயலாத வியாதியால் பயனற்றுக் கிடக்கும்.

2. தாய் தந்தையரை விட்டு பிரிந்து செல்லும். அல்லது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டி அடிக்கும்.

3. ஒரே வீட்டில் வசிப்பார்கள். பெற்றோரை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். நடைபிணங்களாக வீட்டில் நடமாட வேண்டிய அவல நிலை ஏற்படும்.

இந்த விபரங்களை எடுத்துக் கூறினேன். மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இறைவன் அவதாரங்கள் அடையும் இன்ப துன்பங்களை விளக்கினேன்.

நடைமுறை வாழ்க்கையில் என்னைச் சந்தித்து சோகங்களைப் பரிமாறிக் கொண்ட பல பெற்றோரின் கதைகளை அவர்களுக்கு புரிய வைத்தேன்.

ஆன்மீக ரீதியாக பல அம்சங்களை அவர்களுக்கு உணர்த்தினேன். அதன் பின்னர் அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. நீண்ட நேர தேறுதலுக்கு பின்னரே அவர்கள் என்னிடம் இருந்து விடை பெற்றார்கள். 

தள்ளாத வயதில் பெற்றோரை ஒதுக்கித் தள்ளாத பிள்ளைகள் கிடைப்பது நாம் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலனால்தான் அமையும்.

என்ன செய்வது இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.





 

No comments:

Post a Comment