Monday, 16 September 2013

மனைவியின் காள சர்ப்ப தோஷம் கணவனை முடமாக்கும்

சில நாட்களுக்கு முன்னர் சிரம்பான் மாறனைப் பற்றி எழுதி இருந்தேன். அவர் என்னை சந்தித்த செய்தியை அவர் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

அவர் மனைவி என்னோடு தொலைபேசியில் உரையாடி ஜாதக விவரங்களை வினவினார். என் கருத்தில் கணிப்பில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதனால் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வீட்டிற்கு வரமுடியுமா என்றும் கேட்டார். எத்தனையோ ஜோதிட விற்பன்னர்களை சந்தித்தவர்கள்... நம்மை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்களே என்ற மகிழ்ச்சி ஒருபுறம்...



மாறன் குடும்பத்திற்கு நம்மால் ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது நட்புக்கு நன்றியாக அமையுமே என்ற நப்பாசை ஒரு புறம்... ஆகவே அடுத்த வாரத்தில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தேன்.

அதோடு உங்கள் ஜாதகத்தில் கண்டிப்பாக காளசர்ப்ப தோஷ அமைப்பு இருக்க வேண்டும் என குறிப்பிட்டேன். அவர் ஆச்சரியப்பட்டார்.

ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் இது குறித்து குறிப்பிட்டதாகவும் திருக்காளகஸ்தி திருத்தளத்திற்கு சென்று வரும்படி அந்த ஜோதிடர் அறிவுறுத்தியதாகவும் சொன்னார்.

மேலும் நான் சொன்ன சில விஷயங்கள் என்பால் அவருக்கு பெருத்த ஈர்ப்பை ஏற்ப்டுத்தியது என நம்புகிறேன்.

அவர் பிறந்த நேரத்தையும் தேதியையும் சொன்னார்.கணித்துப் பார்த்ததில் நான் எண்ணியபடியே கடுமையான காலசர்ப்பதோஷ அமைப்பு.

திருமணப் பொருத்தத்தில் வசியமும் இல்லை... ரஜ்ஜும் இல்லை. ஆனால், குடும்ப வண்டி குடை சாயாமல் தட்டுத்தடுமாறி ஓடிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாட்களில் இவர்களுக்கு விவாகரத்து நடந்திருக்க வேண்டும். அது நடக்க வில்லை.

அல்லது பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்து குடும்பம் நசிந்து போயிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இன்னொரு வகையில் உயிர்ப்பாதிப்புகளை ஏற்படுத்தி குடும்பத்தைக் குலைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இதற்கு பதிலாக முதுகுத்தண்டில் பாதிப்பை ஏற்படுத்தி அடுத்த அடி எடுத்து வைக்கவே பெரும் அவஸ்தைப்படும் நிலைக்கு ஆளாக்கி விட்டது காளசர்ப்பதோஷம்.

ஏற்கனவே பார்த்த ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை அலட்சியப்படுத்தாமல் செய்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்காது.

காலுக்கு வந்த ஆபத்து கட்டை விரலோடு போயிருக்கும். காலம் கடந்தால் என்ன கனிவோடு வேண்டினால் கடவுளின் அருள் கண்டிப்பாக கிட்டும்.

நண்பர் மாறனின் நோய்ப்பாதிப்பு அகலும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.


Sunday, 15 September 2013

அவசரக் கல்யாணம்... அதிர்ச்சி தந்த மரணம்...!

இரண்டு ஆண்டுகளூக்கு முன்னர் நான் தமிழகம் சென்றிருந்த சமயம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்னைப்பார்க்க வந்திருந்தார்.

அவர் மகளுக்கு 18 வயது. திருமணம் செய்யலாமா என என்னிடம் கேட்டார். ஜாதகத்தைப் பார்த்தேன். திருமண வகையில் பிரச்சினை. செவ்வாயும் சுக்கிரனும் பாதகமான இடத்தில் இணைவு.

பெண் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். கிராமம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகம். ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடக்கூடாது என அந்த தகப்பனாருக்கு தவிப்பு.

இரண்டு எட்டில் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் வேறு கடுமையாக இருந்தது. ஏற்கனவே ஜாதகம் பார்த்த இடத்தில் சீக்கிரமாக திருமணத்தை நடத்தினால் நல்லது என கூறியதாக அவர் சொன்னார்.



அந்த ஜாதகர் சொன்னதிலும் ஆழ்ந்த கருத்து இருந்தது. அந்தப் பெண் தடம் மாறிச் செல்வதற்கு ஜாதக ரீதியாக வாய்ப்பு அதிகம் இருந்தததால் அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எனக்கும் அவரின் அவசரத்தில் உடன்பாடு இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை அவரிடம் அழுத்தமாக சொன்னேன்.

உறவுக்கார மாப்பிள்ளையோ அன்னியமோ.. அது பிரச்சினை இல்லை. ஆனால் இருவருக்கும் உள்ள ஜாதகப் பொருத்தத்தைக் கவனமாக பார்க்க வேண்டும். 

தசவிதப் பொருத்தம் மட்டுமல்லாமல் ஏணைய சில முக்கிய பொருத்தங்களையும் கவனமாக பார்க்க வேண்டும் என கூறினேன்.

அதன் பின்னர் மலேசியா வந்து விட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் காலகட்டத்தில் தமிழகம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டத்தால் நானும் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

அடுத்த வாரத்தில் மலேசியா திரும்பி விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அதிகாலைப் பொழுது என் கைத்தொலைபேசி என்னை எழுப்பியது.

எடுத்துப் பேசிய போது அதிர்ச்சி தரும் தகவல் என் இதயத்தை கசக்கியது. நள்ளிரவு நேரத்தில் அந்தப் பையன் நெஞ்சு வலிக்கிறது என சொல்லி இருக்கிறார்... அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

மருத்துவமனைக்கு செல்லக் கூட அவகாசம் அளிக்காமல் காலன் அவர் உயிரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

சரியாக ஜாதகம் கணிக்காமல் திருமணம் செய்தால் அந்தப்பெண் கணவனைப் பிரிந்து வந்து விடுவார் என்பது என் கணிப்பு.

ஆனால், ஒரேயடியாக கணவனைத் தொலைத்து விட்டு தாய் வீடு வருவாள் என கனவிலும் நினைக்கவில்லை.

மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என அந்தப் பெண்ணின் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

அதைவிட பலமடங்கு என் மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்வது இறைவன் திருவுள்ளம் அப்படி இருந்தால் மானிட ஜென்மத்தால் மாற்ற முடியுமா என்ன?





Wednesday, 11 September 2013

ஆண்டவன்.... அலட்சியம்... ஆபத்து...!

   என் மனதுக்கு பிடித்த நண்பர்களுள் மகத்தானவர். சிரம்பானைச் சேர்ந்தவர். சிறந்த வழக்கறிஞர். பொருளாதாரத்தில் வலுவானவர்.
   
   இவருக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை. முழங்கால் மூட்டு தேய்வு. முன்பு ஓய்வும் அசதியும் இவர் பக்கத்தில் வரவே பயப்படும்.

   ஆனால், இப்போது உட்கார்ந்து எழுவதற்கே சிரமப்படும் அளவுக்கு காலம்  இவர் கால்களுக்கு வியாதி என்ற விலங்கைப் பூட்டி விட்டது.



   இவர் பேச்சில் எப்போதும் கலகலப்பு கைகோர்த்து நிற்கும். இன்று அதில் விரக்தியின் வெளிப்பாடு அதிகம் இருப்பது வேதனை.

   இவருடைய ஜாதகத்தைக் கணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மகர லக்கனம். கடக ராசி. பூச நட்சத்திரம் மூன்றாம் பாதம்.

    லக்கனாதிபதி லக்கனத்தில்.  ராசியாதிபதி சொந்த வீட்டில். சிறுவயதில் கஷ்டமும் கவலையும் இவரின் விளையாட்டுத் தோழர்கள். 

    இன்று அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்திற்கு இவர் சொந்தக்காரர். ஆனால், உண்பது ஒரு கை பிடியளவுதான்.

    ஏன் இந்த அவஸ்தை இவருக்கு.... சரீரகாரகன் சந்திரனும் எலும்புக்கு அதிபதியான சனியும் சமசப்தம பார்வைப் பரிமாற்றம். ஏழரைச் சனி காலத்தில் இவரை முடமாக்க சனிபகவான் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

   அதற்கான அறிகுறிகளையும் இவருக்கு அனுப்பி வைத்தார். இவரின் மன பலம் ... பணபலம்... அதை அலட்சியப்படுத்தி விட்டது.

   தெய்வபலமும் சேர்ந்து கொண்டதால் தெம்பும் அதிகம் இருந்தது. விளைவு வியாதியை ஓட ஓட விரட்டிய இவரை வியாதி விரட்டிக் கொண்டிருக்கிறது.

   கோச்சாரத்தில் குரு பகவான் பலவீனமாக இருக்கிறார். நான்காம் வீட்டில் இருக்கும் சனியும் குடும்ப உறவில் குழப்பத்தை உண்டு பண்ணி திருப்தி இல்லாத நிலைக்கு தள்ளி விட்டார்.

    மேலும் இவருக்கு மறுபிறவி இல்லை என்பதால் ஜென்மாந்திர பலாபலன்களையும் இந்தப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி.



   நள மகராஜாவுக்கு விமோசனம் அளித்த திருநள்ளாறு திருத்தளத்துக்கு சென்று திருக்குளத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டு வருமாறு அறிவுறுத்தி இருக்கிறேன்.

   அதன் பின்னர் வீட்டில் ரோக நிவர்த்தி யாகம் ஒன்றையும் செய்யச் சொல்லி ஆலோசனை கூறியிருக்கிறேன்.

   இவை இரண்டையும் ஆத்ம சுத்தியோடு செய்து சனிபகவான் அனுகிரகத்தை அடைந்து விட்டால் அறுவைச்சிகிச்சை தேவைப்படாது.

   அறுவைச்சிகிச்சை தவிர்க்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் கூட கவலைப்பட வேண்டாம். சிகிச்சைக்கு பின்னர் ஓடியாடி விளையாட முடியாவிட்டாலும் வலி இல்லாமல் இயல்பாக வலம் வர இயலும் என்பது திண்ணம்.

   இவர் பார்த்த ஜோதிடரின் அறிவுறையையும் மருத்துவரின் ஆலோசனையையும் அலட்சியப்படுத்தால் ஏழரைச் சனி காலத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதிப்பு பாதி அளவு குறைந்திருக்கும். சிலவேளைகளில் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கலாம்.

   என்ன செய்வது... மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று..

Wednesday, 7 August 2013

தற்கொலைக்கு தூண்டும் ஏழரைச் சனி

சிவபெருமானுக்கே சிக்கல் ஏற்படுத்தியவர் சனி பகவான். சாதாரண மனிதர்களை சட்னியாக்கி விடமாட்டாரா என்ன?

அவதார புருஷர்களுக்கே அல்வா கொடுப்பர் சனிபகவான். அகப்பட்ட மனிதர்களை அல்லாட வைத்து விட மாட்டாரா என்ன?

ஏழரைச் சனி  என்பது சனி பகவானுக்கு மிகவும் இன்பமான கால கட்டமாகும். ஒருவருக்கு ஏழரைச் சனி பிடித்து விட்டால் உருக்குலைந்து சின்னாபின்னமாகி விடுவார்.



அதுவும் சனி பகவானுக்கு பிடிக்காத வீட்டுக்காரர்கள் என்றால் (சிம்மம் போன்ற சில ராசிக்காரர்கள்) சும்மா சொல்லிச் சொல்லி அடித்து கில்லி விளையாடி விடுவார்.

இது மாதிரி ஏழரைச் சனியின் பிடியில் சிக்கிய ஒருவர் கடந்த வாரம் என்னைச் சந்தித்தார்.

இவர் துலாம் ராசிக்காரர். லக்கனமும் துலாம்தான். 1992-ஆம் ஆண்டுகளில் மலேசியாவுக்கு வந்தவர்.

படாத கஷ்டங்கள் இல்லை என்றே சொல்லலாம். படுக்கக் கூட இடம் கிடைக்காமல் திண்டாடியவர்.

நாலைந்து ஆண்டுகள் தான் இவருக்கு சிரமம். அடுத்து ஏற்றமான காலகட்டம். சொந்தத்தொழில் ஆரம்பித்தார்.

ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி. மில்லியன் கணக்காக சம்பாத்தியம். இந்த நேரத்தில் தான் சனிபகவான் ஏழரைச்சனி என்ற வாகனம் ஏறி இவர் வாழ்க்கையில் புகுந்தார்.

இவர் நம்பி வேலைக்கு வைத்த இவரின் உறவுக்காரப் பையனை சனியன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

பணக் கையாடலை மிக பக்குவமாக அரங்கேற்றினார். தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட விலை மிகுந்த உபகரணங்களை அடகு வைத்து விட்டு கம்பி நீட்டினார்.

வெளிநாடு போயிருந்த சமயத்தில் இவ்வளவும் நடந்து விட்டது. தொழில் படுத்து விட்டது. கடன் கூடி விட்டது.

படுத்த தொழிலை எழுப்ப பல வகையில் முயன்றும் முடியாமல் தற்கொலை வரை போய் விட்டார்.

"வரும் போது என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு". இதுதான் அவருக்கு நான் சொன்ன ஆறுதல்.

ஆறுதல் மட்டும் இவரின் அழுகைக்கு மருந்து ஆகி விடாது. என்ன செய்வது அது ஒரு முதலுதவி.

நான் அவருக்கு கொடுத்த தன்முனைப்பு கொஞ்சம் தெம்பை அளித்தது. அவர் கண்களில் நம்பிக்கை ஒளி. மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற வேட்கை.

துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார்.

மேலும் மகாதசை வேறு மக்கர் பண்ணுகிறது. ஏழரைச் சனி  காலத்தில்தான் சனி மகா தசை ஆரம்பம். சுயபுத்தியில் இவரின் செயல்பாடு சுனாமியாக இருக்கும்.

திருநள்ளாறு சென்று வர கூறியிருக்கிறேன். சில வழிபாட்டு முறைகளையும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இவருக்கு சிரமமான காலகட்டமாகும். அதன் பின்னர் மாற்றம் தெரியும். படிப்படியாக ஏற்றம் கிடைக்கும்.

உயர்ந்த நிலைக்கு வருவார் என்பது உறுதி.

 

Wednesday, 31 July 2013

கல்யாணத்தைத் தடுக்கும் காளசர்ப்ப தோஷம்

நாகநந்தினி என்ற அழகான பெண். வயது 32. இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்.

அழகு இருந்தும் பணம் இருந்தும் திருமணம் மட்டும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஏராளமாக இருந்தது.



ஜாதகத்தைப்பார்த்தேன். கடுமையான காளசர்ப்பதோஷம். அதென்ன கடுமையான காளசர்ப்பதோஷம் என நினைக்கிறீர்களா?

இது வியாதி மாதிரிதான். சாதரண காய்ச்சல். டைபாய்டு. மலேசியா. டெங்கு என்பதுபோல்.

களத்திரகாரகனான சுக்கிரன் 8 ஆம் இடத்தில் மறைவு. சனியோடு சேர்க்கை. 7 ஆம் இடத்தில் சூரியன். இப்படி பல கோளாறு.

இதெல்லாம் விட மிக முக்கியமான விஷயம்... அந்த பெண்ணின் முக அமைப்பு நாகத்தைப் போல. 

நம்மைக் கூர்ந்து நோக்கினால் நாகப் பாம்பு படம் எடுத்துப் பார்ப்பதைப்போல பயப்பட வைக்கும்.

இப்படிப் பட்ட பெண்ணுக்கு கணவன் வாய்ப்பது கடினம். இருப்பினும் மணவாழ்க்கை அமைவதற்கு சில வழிகளைச் சொன்னேன்.

திருக்காளகஸ்திக்கு சென்று சர்ப்ப சாந்தி செய்யும்படி அறிவுறுத்தினேன். மேலும் தமிழ்நாட்டில் 48 வாரம் தங்கி இருக்கும்படி கூறினேன்.

தமிழ்நாடு ராமநாதபுரம் இந்தப் பெண்ணின் பூர்வீகம். சொந்த வீடு இருக்கிறது. அதில் இவரின் பெரியம்மா வசிக்கிறார்.

இவர் அங்கு இருந்து வாரம் ஒரு முறை இராமேஸ்வரம் சென்று கடலில் குளித்து தீர்த்தமாடி வந்தால் சர்ப்ப சாந்தி ஏற்படும்.

சங்கராபரணமாக சிவன் கழுத்தில் தவழும் நாகதேவன் மனம் இறங்கி மணவாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுப்பான் என்பது திண்ணம்.

இந்தப் பெண்ணுக்கு 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். இது இறைவன் திருவருளால் ஈடேறும் என்பது திண்ணம்.

Thursday, 25 July 2013

பரிகாரங்கள் கண்டிப்பாக பலன் கொடுக்கும்....!

ஜோதிடம் என்பது ஞானிகளின் அற்புத ஆன்மீக கண்டுபிடிப்பு. இது பொய் என்று புறம் தள்ளி போகின்றவர்களும் உண்டு... உண்மை என்று ஒத்துக் கொண்டு வாழ்கின்றவர்களும் உண்டு.

எட்டி மிதிப்பவர்களுக்கும் ஏற்று மதிப்பவர்களுக்கும் ஜோதிடம் பாகுபாடு பார்த்து பலன் தருவதில்லை. கிழக்கு வானை கிழித்து ஒளி சிந்தும் சூரியனைப் போல வாழ்க்கையின் வழி காட்டி அது.

எல்லாம் இருந்தும் ஒன்று இல்லாதது... எதுவும் இல்லாமல் ஏதாவது ஒன்று இருப்பது ஜோதிடத்தின் சூட்சமம்.

ஒரு தாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் இறக்காத சகோதர பாசம் கொண்டவர்.அன்பு இளவல் மகேந்திரன்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் சின்ன கிராமத்தில் இவர் வசிக்கிறார்.

ஊருக்கு அம்பலகாரர். ஊரை வழி நடத்தும் கடமை இவருக்கு உண்டு. அதற்கான தகுதியும் ஏராளம். இவருக்கு வயது 36. பாதை தடுமாற வைக்கும் போதைப்பழக்கம் இல்லை. உடலுக்கு பகையான புகை பிடிக்கும் பழக்கம் கிடையாது.

வசதி வாய்ப்புக்கள் ஏராளம். ஓடியாடி தேடித்தான் ஒருவேளை உணவு உண்ண வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அழகும் சுறுசுறுப்பும் இவருக்கு அணி செய்பவை.

எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் திருமண வாழ்க்கை கண்ணாமூச்சி காட்டியது. எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் இறுதிப் பலன் தோல்விதான்.

மகனுக்கு இன்னும் மணவாழ்க்கை அமையவில்லையே என ஈன்ற அன்னைக்கு இதயச் சுமை ஏறிக் கொண்டே போனது. இனிமேல் ஏது திருமணம் என்ற விரக்தி அந்த இளைஞனின் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்தது.



இந்த காலகட்டத்தில் நான் இந்தியாவில் இருந்தேன். என்னை வந்து சந்தித்தார்கள். நான் மட்டுமே தீர்வு காண முடியும் என உறவுகளும் நட்புகளும் உறுதியாக நம்பின.

ஜாதகத்தைப் பார்த்தேன். காளசர்ப்ப தோஷத்தின் கடுமையான பிடியில் சிக்கி அனைத்து கிரகங்களும் முடங்கிக் கிடந்தன. களத்திரகாரகனான சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தான்.

சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய திருக்காளகஸ்திக்கு அழைத்துச் சென்றேன். திருமண வகையில் இருந்த மற்ற இடையூறுகளூக்கு உரிய பரிகாரம் சொன்னேன்.

காலம் நீண்டதால் தண்ணீரில் தலை தூக்கும் கெண்டை மீனைப் போல ஏமாற்றம் அவர்கள் இதயத்தில் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதை இலை மறை காயாக என்னிடம் உணர்த்தினார்கள்.

அன்னக்கிளி படம் ஆரம்பத்தில் தடுமாறி இடைப்பட்ட காலத்தில் வசூலில் எகிற வைத்தது போல இவருக்கு பரிகாரகங்கள் பலன் தர ஆரம்பித்தன.

 இந்தப் பெண்தான் இல்லத்தரசியாக வரவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் நினைத்து அது ஈடேறாமல் மனம் வெந்து போயிருந்தாரோ அதே பெண் அவருக்கு மனைவியாக அமையும் வாய்ப்பை காலம் ஏற்படுத்தித் தந்தது.

காளசர்ப்ப தோஷம் 35 வயதுக்கு மேல் காளசர்ப்ப யோகமாக மாறும் என்பது பொதுவான விதி. இருப்பினும் களத்திர வகையில் அவருக்கு இருந்த இடையூறுகள் எல்லாம் களையப்பட்டு இன்று இல்லறச் சோலையில் தடம் 
பதிக்கப் போகிறார்.

இதில் முக்கியமான ஒரு அம்சத்தை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இவருடைய ஜாதக பலனை கணிக்கும் போது தசா புத்தி கணக்கிட்டேன். அப்போது கழித்தலில் பிழை ஏற்பட்டு வயதை சற்று குறைத்து சொல்லி விட்டேன்.

இது நான் தெரிந்து செய்த பிழை அல்ல. என்னை அறியாமல் என் இதழ் பிளந்து விழுந்த சொல். நல்லது நடக்க இறைவன் நடத்தும் நாடகங்களில் இதுவும் என்று நான் வியந்து போனேன்.

வரும் ஆவணி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். சுமார் 3500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மலேசியாவில் நான் இருக்கிறேன். அன்பு இளவலின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் நெஞ்சு நிறைந்த ஆசை. ஆனால், காலம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.





Monday, 29 April 2013

டத்தோ சரவணன் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்டது

மலேசிய கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன்.

பேராக் மாநில தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றார்.

இந்த முறை அதே தொகுதியில் போட்டி இடுகிறார். சிறந்த சேவையாளர். 

இனப்பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களிடமும் அணுக்கமான அன்பும் பாசமும் கொண்டவர்.

இவரின் ஜாதகமும் கிடைக்கவில்லை. ஆனால், இவரின் வெற்றி ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு.

அரசியல் சேவை இவரின் வெற்றிக்கு வழி வகுத்தாலும் ஆன்மீக ஆற்றல் இவரின் எல்லா வெற்றிகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது.

இறைவனை இவர் தேடிப்போக வேண்டியதில்லை. இறையருள் இவரைத்தேடி வரும்.



கலைமகள் இவர் நாவில் நடனமிடுகிறாள். அதனால், மற்றவர்களை வார்த்தையால் வசப்படுத்தும் வல்லமை இவருக்கு இயல்பாகவே அமைந்து
விட்டது.

எதிரியின் பலத்தில் பாதியை ஈர்க்கும் வல்லமை வாலிக்கு இருந்ததாக இதிகாசம் கூறுகிறது.

இந்திய அரசியல் வாதிகளில் எம் ஜி ஆருக்கு அந்தப்பலம் அளவற்று இருந்ததாக அவரின் ஆஸ்தான ஜோதிடர், ஜோதிட பூஷன், ஜோதிட சாம்ராட் வித்வான் லெட்சுமணன் அவர்கள் கூறுவார்கள்.

அந்தப் பலம் டத்தோ சரவணனுக்கு அமைந்திருக்கிற அம்சத்தை பல கட்டங்களில் காண முடிகிறது.

இவை அனைத்தும் டத்தோ சரவணன் அவர்களின் அரசியல் வெற்றிக்கு அனுசரணையாக உள்ளன.

இந்த வெற்றி மட்டுமல்ல... இன்னும் பல உச்ச பதவிகளை அடையும் பாக்கியத்தை இவரின் சாமுத்திரிகா லட்சண யோகம் அளிக்கிறது.