Wednesday, 18 November 2009

மலேசியாவில் ஒரு சாதனைத் தமிழர்

என்னுடைய வலைப்பூவை வலம் வருகின்ற அன்பு நெஞ்சங்களுக்கு பணிவான வணக்கங்கள். இரண்டு வாரமாக உங்கள் உள்ளத்தோடு உறவாடுகின்ற பாக்கியத்தை இழந்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.





டத்தோ ரெனா. துரைசிங்கம்


ஒரு சாதனைத் தமிழரின் 50-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வெளிநாடு சென்றிருந்தேன். அதனால்தான் நம்முடைய தொடர்பில் ஒரு நீண்ட தொய்வு.

உணவகம், திரையரங்கு, திரைப்படம் தயாரிப்பு என பல தொழில்களில் கொடிகட்டிப் பறக்கும் லோட்டஸ் குழுமத்தின் தலைவர டத்தோ ரெனா.துரைசிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாதான் அது.

திருப்பத்தூர் தந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை- பார்வதி அம்மாள் தம்பதியரின் தவப்புதல்வர்களில் மூத்தவர் ரெனா.துரை. அண்ணனின் வழித்தடம் மாறாத தம்பிகள் இருவர். டத்தோ ரெனா. ராமலிங்கம். ரெனா. நாகசுந்தரம்.

ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்கும் இந்த சகோதரர்கள் பல நூறுகோடி ரூபாயில் கடற்கரை உல்லாசத்தளம் ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள். 2400 அறைகளை...அல்ல...அல்ல...அழகான சிறிய வீடுகளைக் கொண்ட இந்த உல்லாசத்தளம் மலேசியாவில் ஜொகூர் நகரத்துக்கு அருகில் இருக்கிறது.




இங்கிருந்து சிங்கப்பூருக்கு இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சும்மா கூப்பிடு தூரம்தான். அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருந்தாலும் கள்ளம் கபடு இல்லாத மனதுக்கு சொந்தக்காரர்கள். எளிமை...எளிமை... எளிமை...இந்தச் சொல் இவர்களைப் பார்த்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.




                                மோட்டார் சைக்கிளில் இருப்பவர் டத்தோ.ரெனா.துரைசிங்கம்
பின்னால் அமர்ந்திருப்பவர்
மலேசியாவில் பெர்லிஸ்  மாநிலத்தின்  முதலமைச்சர்
(கலைஞர் கருணாநிதியைப் போல)
அருகில் சிரித்துக் கொண்டு நிற்பது அடியேன்


பணிவு...பணிவு...பணிவு....இது இவர்களின் பாரம்பரியச் சொத்து. இந்த சாதனைத் தமிழரை வாழ்த்த எனக்கு வாய்ப்பு நல்கிய ஆண்டவனுக்கு ஆயிரம் லட்சம் கோடியாய் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.

அடுத்த பதிவில் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்பதை குறிப்பிடுகிறேன்.

Wednesday, 4 November 2009

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜாதகம்

இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து, நாடு கடந்து நேசிக்கப்படுகின்ற ஒரு மனிதரின் ஜாதகத்தை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இதில் நாம் பார்க்கப்போவது அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை மட்டுமே.





மற்றபடி கிரகங்களின் அமைப்பை வைத்து தன்மூப்பாக எந்தக் கருத்தையும் நான் வெளியிட விரும்பவில்லை. ஒருவரின் ஜாதக பலன் ஜென்மம், உடுமகா தசை, கோச்சாரம் என்ற வகையில் கணிக்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி பூர்வ ஜாதகம் என்ற அமைப்பு இருக்கிறது. இதைக் கொண்டு போன பிறவியில் அவர் எப்படிப்பட்ட பிறப்பை எடுத்திருந்தார் என்பதையும் அவருடைய குண நலன்கள் எத்தகையது என்பதையும் ஓரளவு கணித்துவிடலாம் என அனுபவம் வாய்ந்த ஜோதிட ஞானி ஒருவர் கூறி இருக்கிறார்.அந்த வகையிலும் ரஜினியின் ஜாதகத்தை ஓர் ஆய்வு செய்து பார்த்தேன்.




ரஜினியின் ராசி மகரம். லக்கனம் சிம்மம். நட்சத்திரம் திருவோணம். (ஒருவேளை இதில் தவறு இருந்தால் சரியான ஜாதகத்தை என் பார்வைக்கு அனுப்பலாம்)

ஆனால், இந்த ஜாதக அமைப்புப்படி பெரும்பாலான விஷயங்கள், அவருடைய வெற்றிகள், குணாம்சங்கள் ஒத்துப் போகின்றன. அதனால் என் நண்பரிடம் அப்போது சில விஷயங்களைக் கூறினேன்.

அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது விவேக சிந்தாமணியில் கூறுப்பட்டுள்ள ஒரு கருத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.



"பட்சம் வழக்கறியாது

நித்திரை சுகமறியாது

பிச்சை தரமறியாது

இச்சை முறையறியாது"



இது தான் அந்தப்பாடல். இதில் பட்சம் என்பது சார்பு என்று பொருள். ஒருதலைப்பட்சமாக என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் உள்ள ஒன்று. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தி விட்டால் அவரைப்பற்றி மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இந்த நிலையில்தான் என் நண்பர் இருந்தார். ரஜினிமீது கொண்ட அளப்பறிய காதல் அவரை ஓர் அரசியல் தலைவராக மட்டும்தான் என் நண்பரால் பார்க்க முடிந்தது.

நான் என் நண்பரிடம் என்ன சொன்னேன் என்பதை அடுத்த அங்கத்தில் விவரிக்கிறேன்.

Monday, 2 November 2009

சூப்பர் ஸ்டார் ஏன் அரசியலுக்கு வரவில்லை

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் குதிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அடம்பிடித்து... அடம்பிடித்து சோர்ந்து விட்டார்கள். அவரை அரசியலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முயற்சித்த சில அரசியல் வல்லுனர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்கள்.





சந்திரமுகி படத்தின் சகாப்த வெற்றிக்கு பின்னர் ரஜினி அரசியல் களத்தில் சுனாமியாக பொங்கப் போகிறார் என்று பலர் ஆரூடம் கூறிக்கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய அன்றைய சூழ்நிலைகளும் அவ்வாறுதான் இருந்தன.

அந்த சமயத்தில் என் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி பேசினார். அவர் மிகத்தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினி ஒருவரால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சியைத் தர இயலும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்.

எனக்கு ரஜினி மீது அபார மரியாதை உண்டு. பல கோடிப் பேரை கவர்ந்த நடிகர் என்பதற்காக அல்ல...அலை எழும்பி ஆர்ப்பரிக்காத ஆன்மீகக் கடல் என்பதற்காக.

அவரிடம் ஏராளமான செல்வங்கள் கொட்டிக்கிடக்கலாம். ஆனால், அவர் எளிமையானவர். அவரிடம் ஆடம்பரமான வசதிகள் அணிவகுத்து நிற்கலாம்... ஆனால், அவர் அமைதியானவர். திரைப்படங்களில் விதவிதமான ஒப்பனைகளில் ஜொலிப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒப்பனையும் கிடையாது ஒளிவு மறைவும் கிடையாது. இப்படி ஏராளமான நல்ல குணங்களை எடுத்து அடுக்கிக் கொண்டே போகலாம்.




"ரஜினி அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று என்னிடம் கேட்டார்.

"அவர் மனதில் என்ன இருக்கிறதோ... எனக்கு எப்படித் தெரியும். ஒருவேளை அவருடைய ஜாதகம் தெரிந்தால் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா என என் சிற்றறிவுக்கு எட்டியவரை கணித்து பார்க்கலாம்" என்றேன்.

"இதோ இருக்கிறது ஜாதகம். பார்த்துச் சொல்லுங்கள்" என பரபரப்புடன் ஒரு ஜாதகத்தைக் கொடுத்தார்.

அது உண்மையான ஜாதகம் தானா என்பதை பலவழிகளில் அவர் மூலமாகவே உறுதிப்படுத்திக் கொண்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெனன ஜாதகத்தைப் பார்த்து என் நண்பரிடம் சில விஷயங்களைச் சொன்னேன்.

அவை என்ன என்பதையும் ரஜினியின் ஜனன ஜாதகத்தையும் அடுத்த அடுத்த நாட்களில் பார்க்கலாம்.

Thursday, 29 October 2009

விதவைக்கு வாழ்வு தரும் ஜாதக அமைப்பு

ஒரு பெரியவரை மகா பெரியவராக பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை ஏற்பட்டது. 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் என்னை ஒரு நாள் சந்தித்தார். அவர் மூன்று ஜாதகங்களை எடுத்து வந்திருந்தார்.ஆண்களின் ஜாதகம் இரண்டு. பெண்ணின் ஜாதகம் ஒன்று.





வைத்தியம் பார்க்கப் போகும் ஒருவர், மருத்துவரிடம் "எனக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை நீங்களே கண்டுபிடித்துச் சொல்லுங்கள்" என்று அடம்பிடிப்பதைப் போல் சிலர் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு ஜோதிடரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் ஆற்றோரம் இருக்கின்ற சாமியாரிடம் குறி கேட்கப்போன குப்புசாமியைப்போல.

இவர் அப்படி இல்லை. " ஐயா.. இது என் மூத்த மகனோட ஜாதகம். படகில போகும்போது தவறிவிழுந்து இறந்துட்டான். அந்தச் சம்பவம் மனைவி கண்ணு முன்னாடியே நடந்திருச்சு. என்னோட மருமக தங்கமான பொண்ணு. அதை பூ இல்லா... பொட்டு இல்லா.. என்னால பாக்க முடியலை. இந்த சின்ன வயசில வாழ்க்கையை தொலைக்கிறதை என்னால நினைச்சுக்கூட பாக்க முடியலை.

அதனால என் இளைய மகனுக்கே திருமணம் செஞ்சு வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்.

இது இளையவனோட ஜாதகம். இது என் மருமகளோட ஜாதகம்" என்று மூன்று ஜாதகங்களையும் கொடுத்தார்.

வியாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்துவிட்டதால் அதன் தன்மையையும் பாதிப்பையும் பார்க்கும் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. இறந்தவருக்கு ஆயுள் ஸ்தானத்தில் தேய்பிறைச் சந்திரன். அதோடு பாபர்களின் கொடூரமான பார்வையை வேறு கொண்டிருந்தான்.

இலக்கனாதிபதி நீச ஸ்தானம் ஏறி இருந்தான். இப்படிப்பட்ட அமைப்பு உடைய சாதகத்தை அவமிருத்த யோகம் கொண்டது என ஜோதிட ஞானிகள் குறிப்பிடுவர்.

அவமிருத்த யோகம் என்பது அகால மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. எட்டாம் இடம் என்ன ராசி, அதில் எந்தக் கிரகம் இருக்கிறது என்பதைப் பொறுத்து அவர் தீயினால் மடிவாரா..ஆயுதங்களால் தாக்கப்பட்டு மரணமடைவாரா... தண்ணீரில் உயிரை விடுவாரா.. என கணிக்கலாம்.

இளைய மகனின் லக்கனம் மகரம். கடகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு எட்டாமிடத்தில் செவ்வாய். 2இல் ராகு 8-இல் கேது.

இப்படி பார்த்த வகையில் இருவருக்கும் திருமணத்தை செய்து வைக்கலாம் என்று சொன்னேன். மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தை கேட்டீர்களா என வினவினேன்.

"முதலில் பிடிவாதமாக மறுத்தாள். நீ இதற்கு ஒப்புக் கொள்ளலைனா.. என் மகன் போன இடத்துக்கே நானும் போயிருவேன்ன்னு சொன்னதும் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

இளையவனும் எந்த மறுப்பும் சொல்லலை . என் மருமகள் சந்தோசமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்" இப்படிச் சொல்லும் போது பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிதறின.

"கவலைப்படாதீர்கள் ஐயா.. உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என்று சொல்லி அனுப்பினேன். இப்போது அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயத்தை ஆரம்பத்தில் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு கணவன் இறக்கும் போது ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. இப்போது புதுவரவாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் இரண்டு குழந்தைகளும் பாசத்தோடு வளர்கிறார்கள்.

*** ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து ஏழாம்பாவத்தில் இருந்தால் அவன் ஒரு விதவையை மணம் புரிய வேண்டிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, 28 October 2009

கணவனைப் பிரிக்கும் 8-ஆம் இடத்து செவ்வாய்


புருசனை மதிக்காத அந்தப் பொண்ணுக்கிட்ட இந்த விஷயத்தைத்தான் சொன்னேன். "இங்க பாரும்மா... அவரோட ஜாதகப்படி இரண்டு தாரம். உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. புத்தி தடுமாறி இந்த வீணா போன டிவி நாடகங்களைப் பாத்து... அதுமாதிரி நடக்க நினைச்சு... வாழ்க்கையைக் கெடுத்துக்காதே.

உன்னோட இடத்துக்கு வேற ஒருத்தி வந்துட்டான்னா.. அப்புறம் தலைகீழா நின்னாலும் இதுமாதிரியான வாழ்க்கை கிடைக்காது"ன்னு சொன்னவுடன் அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாள்.

அந்தப் பெண்ணுக்கு லக்கனத்துக்கு இரண்டில் சனி. இதைச் சொல்லி " நீ அடங்கி நடக்காவிட்டால் அடுத்து வருகிற தசாபுத்தியில் நீ வாழ்க்கையை இழந்து விடுவாய்.

உன்னுடைய முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பூனையாக இருக்கும் கணவனை புலியாக மாற்றி விடாதே. அப்புறம் உன்.கதி அதோகதிதான்" என எச்சரித்தேன்.

சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியம் நன்றாக வேலை செய்யும் என்பதை நன்கு அறிவேன். இப்போது பிரச்சினை இல்லாமல் குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது என்னிடம் ஆலோசனை கேட்டுக் கொள்கிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த நிம்மதி எனக்கு.

சின்ன ஜோதிட குறிப்பு: ஒரு பெண்ணின் லக்கனம் கும்பம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எட்டாம் இடம் கன்னி. இதில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லை என்றால் அந்தப் பெண், நிரந்தரமாக கணவனைப் பிரிந்து விடுவாள் என்பது ஜோதிட விதி.

Monday, 26 October 2009

பேய் அடிக்கவில்லை... பெண்டாட்டிதான் அடித்தாள்....

ஒரு நாள் நான் அலுவலகத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தயங்கித் தயங்கி என்னுடைய அறைக்குள் வந்தார்.


"சார் எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழுந்தைகள். வாழ்க்கையில் எனக்கு நிம்மதியே இல்லை. சாகலாம் போல் இருக்கிறது" என்றார்.

"கற்களும் முட்களும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பாதை. அதைத் ஏற்றுக்கொண்டு கடப்பதுதான் இல்லறம். இராமாயணத்தில் ராமனும் மகாபாரதத்தில் தருமனும் படாத கஷ்டமா..." என்று ஆறுதல் கூறினேன்.

"ஆறுதல் சொல்வது சுலபம். அனுபவிப்பவனுக்குத்தானே தெரியும் கஷ்டம்" என்று வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு கேட்டது. ஆனால், பரிதாபமாக பார்த்தார்.

"என்ன தம்பி... பிரச்சினையைச் சொல்லுங்கள். எதற்காக பேய் அடித்தது போல் இருக்கிறீர்கள்" என்றேன்




" பேய் அடிக்கவில்லை சார்.. என் பெண்டாட்டிதான் தினமும் என்னை அடிக்கிறாள்" சொல்லும் போது அழுதே விட்டார்.

கதை இதுதான். இவருடைய மனைவி ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள். இவர் வசதியான குடும்பம். வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. தன்னையும் அம்மாவையும் கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைத்தார். அதே நேரத்தில் மனைவி மீது உள்ள அன்புக்கும் குறைவில்லை.

மாமியாரும் மருமகளை மகளாகவே நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணோ யாரையும் மதிப்பதில்லை. ஏதாவது பேசினால் கணவனின் கன்னத்தையே பதம் பார்த்து விடுகிறாள்.

இப்போது இது போன்ற பிரச்சினைகள் பலவீடுகளில் இருப்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். அவருடைய ஜாதகத்தையும் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்தேன். இவர் மனுச கணம். அந்தப் பெண் ராட்சஷ கணம். வசியப் பொருத்தம் இல்லை. மேலும் சில பாதிப்புகள் இருந்தது.

அவரிடம் நிலவரத்தைக் கூறி சிறிது நாட்கள் அமைதியாக இருக்கும்படி சொல்லி... அவருடைய வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தேன்.

இந்தக் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை எப்படியாவது களைந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆகவே, சில நாட்கள் கழித்து அவருடைய வீட்டுக்கு போன் செய்து அந்தப் பெண்ணிடம் பேசினேன். என்னை வந்து பார்க்கச் சொன்னேன்.

முதலில் ஏன்... எதற்கு என்று கேட்டு முரண்டு பிடித்தார். உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்தேன். உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி விட்டு 'இதுதான் அந்த விஷயம். என ஒன்றைக் குறிப்பிட்டேன்.

அவ்வளவுதான் "எப்பொழுது வரட்டும் ஐயா" என உடனே ஒப்புக்கொண்டாள். அந்தக் குடும்பத்தில் எப்படி அமைதி மலர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.

Thursday, 22 October 2009

பிடிவாதமே பிரச்சினைக்கு மூல காரணம்

கணவனுக்கு மனைவி மீது பாசம். மனைவிக்கு கணவன் என்றால் கொள்ளை பிரியம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது.





எதுக்கு எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியாக முட்டிக் கொண்டார்கள். வேலை விட்டு கணவன் எப்போது வருவான் என்று மனைவி ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பாள். மனைவியைக் காண கணவன் ஓடி வருவான்.

ஆனால், வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஏதாவது பிரச்சினை குறித்து சண்டை நாறத் தொடங்கி விடும். ஏண்டா கல்யாணம் செய்து கொண்டோம் என தனித்தனியாக படுத்துக் கொள்வார்கள்.

ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரின் ஜாதகத்தைப் பார்த்தேன். வசியப் பொருத்தம், கணப்பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் முரண்பட்டு இருந்தது.

மருத்துவரிடம் செல்கிறோம். அவர் சர்க்கரை வியாதி இருக்கிறது. இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார். நாம் அதன் படி நடந்தால் பிரச்சினை இல்லை. மீறி இனிப்பு சாப்பிட்டால் இதய நோய் வரும். புண் வந்தால் ஆறாது. கை கால்களை அகற்றவேண்டி வரும். கண்பார்வை பறிபோகும். சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்து.

அது மாதிரிதான் ஜாதகமும். எந்தக் கிரகத்தால் பாதிப்பு. எந்த அம்சத்தில் பொருத்தக் குறைவு என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை சுமூகமாக போகும். இல்லை என்றால் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மனநோயாளியாகத் திரிய வேண்டியதுதான்.

இதைத்தான் அந்த ஜோடியிடம் எடுத்துச் சொன்னேன்.

அந்தப் பெண்ணுக்கு முன்கோபம் ஜாஸ்தி. அளவு கடந்த ஈகோ. வியாதி தெரிந்த பின்னரும் விட்டுக் கொடுத்துப் போகும் பக்குவம் இல்லை. இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இதனால், அந்த ஆணுக்கு பெரிய பாதிப்பு இல்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு. அந்தப் பெண்தான் பாவம். ஆதரவின்றி அல்லாடிக் கொண்டிருக்கிறார். பிறந்த வீட்டிலும் ஒதுக்கி விட்டார்கள். பிடிவாதம் என்பது வாத நோயைவிட கொடுமையானது.

இன்று எத்தனையோ வீடுகளில் இந்த ஜோடியைப்போல எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்து (இருவரும்) போனால் வசந்தம் வாசல்படியிலே மண்டியிட்டு படுத்திருக்கும் என்பது  மறுக்கமுடியாத உண்மை.