Saturday, 3 January 2015

தொடாமல் தொடர்ந்த முப்பது வருடக் காதல்

ஆழ்கடலில் மூழ்கினால் ஆச்சரியங்கள் பலவற்றைச் சந்திக்கலாம் என ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான்.

நான் அடியவர்க்கும் அடியவன். இருப்பினும் என்னை நம்பி ஒவ்வொரு நாளும் பலர் வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் இன்னல்களையும் குறிப்பிடுகிறார்கள்.

அவற்றில் சில என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று இருக்கின்றன. இது சாத்தியம்தானா என்று சிந்திக்க வைத்திருக்கின்றன.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க மாது. திருமணமாகி மூன்று குழந்தகளுக்குத் தாய். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

பொருளாதாரத்திலும் குறைவில்லை. இருப்பினும் அவர் மனதில் நெருஞ்சி முள்ளாய் உருண்டு கொண்டிருந்த ஒரு பிரச்சினையை என்னிடம் மனம் விட்டு சொன்னார்.

இவருக்கு திருமணம் ஆன புதிது. கணவர் மேல் காதல் இல்லாவிட்டாலும் வெறுப்பு இல்லை. இவர் படித்தவர். இவருடைய கணவனுக்கு படிப்பறிவு இல்லை.

இருந்தாலும் தன்னைத் தவிர உலகத்தில் யாரும் அறிவாளி இல்லை என்பது கணவரின் எண்ணம். தோற்றப் பொருத்தத்தில் இருவருக்கும் மிகப் பெரிய இடைவெளி.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெரிய மாமனார் மகன் மீது இனம் தெரியாத ஈர்ப்பனிந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டு விட்டது. இரு வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்லை.

சுமார் நான்கு வருடங்களாக அந்தப் பையனை நினைத்து மனதில் மருகிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கு பின்னர் இவர்கள் பேசிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

தனியாக சந்திக்க வேண்டும் என்று அந்தப் பையனுக்கு தூது அனுப்பி இருக்கிறார். சந்திக்க சம்மதம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் என்னைத் தொடக்கூடாது என்பது அந்தப் பையன் விதித்த நிபந்தனை.

இவனுக்கு என்ன பைத்தியமா.... அழகான பெண் அழைக்கிறார். தொடக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார். தூது போனவருக்கு ஆச்சரியம்.

இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அந்தக்காலகட்டத்தில் இரு குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிதைந்து போயிருந்தது. இதற்கிடையில் பையனுக்குத் திருமணம் ஆனது. குழந்தைகளும் பிறந்தன.

இருந்தாலும் இவர்கள் உறவு மட்டும் வாடிப் போகவில்லை. வடிவம் மாறவில்லை. இனிமை குறையவில்லை. இளமை குன்றவில்லை.

தாலி கட்டியர் இன்னொருவராக இருந்தாலும் இவரைத் தான் கணவனாக எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறார்.

இருவருக்கும் சம வயது. இரு குடும்பத்தவரும் மன முரண்பாடு இல்லாமல் உறவுகளைப் பேணி காத்து வருகின்றனர். இதுவரை இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளவில்லை என்பது வியப்பான உண்மை.

சின்ன கண்ணீர் முத்து விழியோரத்தில் எட்டி பார்க்க அந்தப் பெண் சொன்ன இந்தக் கதையில் துளியளவும் பொய் இல்லை என்று என் மனம் அறிவுக்கு அறிவுறுத்தியது.

இப்பொழுது இவர் கேள்வி என்ன தெரியுமா.... தாலி கட்டியர் ஒருவர் இருக்க... இன்னொருவரைக் கணவராக வரித்து வாழ்ந்து விட்டேனே.. இதற்கு என்ன காரணம்.

நான் செய்தது தவறா.. அல்லது என் ஜாதக  அமைப்பு இப்படித்தான் இருந்ததா... விடைகூறுங்கள் சாமி என்று கேட்டார்.

ஜாதகத்தை மிக அணுக்கமாக ஆராய்ந்தேன். இன்னும் சில அம்சங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தேன்.

அந்தப் பெண்ணுக்கு இரு மண அமைப்பு. போன ஜென்மத்தில் இந்தப் பெண்ணும் அந்தப் பையனும் கருத்தொருமித்த கணவன் மனைவியாக இருந்திருக்கிறார்கள்.

இந்தப் பிறவியில் உறவினர்களாக பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் மலேசியாவில் மலாக்கா மாநிலத்தில் பிறந்த இந்தப் பெண் இந்தியாவில் திருமணமாகிச் சென்றிருக்கிறார்.

அங்கு அந்தப் பையனைச் சந்தித்து இருக்கிறார். போன ஜென்மத்தின் நினைவு பூரணமாக வராவிட்டாலும் அதன் விட்ட குறை தொட்ட குறையாக இவர்களின் உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களை எடுத்துக் கூறி அவர் மனதைப் பிசைந்து கொண்டிருந்த பிரச்சினையைக் கிள்ளி எறிந்தேன்.

இதயம் முழுக்க கனத்துக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்த மகிழ்ச்சியோடு என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

மகா பாரதத்தில் ஐவருக்கு மனைவியான பாஞ்சாலி கூட கணவன்மார்களை ஆண்டுக்கு ஒருவராக மகிழ்வித்தார்.

இந்தப் பெண்ணோ உள்ளத்தால் நினைந்து உடலால் விலகி உறவைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறார். எல்லாம் இறைவன் செயல்.
 

Thursday, 1 January 2015

பணம் இருந்தால் திருமணம் நடந்து விடுமா?

ஏராளமாக பணம் இருந்தால் எல்லா வகையான இன்பங்களையும் அடைந்து விடலாம் என பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அது எந்தளவுக்கு உண்மை... சாத்தியம். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதைப் போலத்தான் இந்த எண்ணமும்.

பணம் படைத்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு மருத்துவருக்குத்தான் தெரியும் உலகத்தில் எத்தனை வகை நோய் இருக்கிறது என்று.

ஆளைப் பார்த்தால் ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவாக இருப்பார். ஆனால், 100 மீட்டர் வேகமாக நடந்தால் 200 தடவை இழுத்து மூச்சு விடுவார். கொஞ்ச நேரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.

சிலர் சீக்குக் கோழி போல தெரிவார்கள். ஆனால், இவர்களுக்கும் நோய்க்கும் நெடுந்தூரம். இவர்களிடம் நோய் நெருங்கவே பயப்படும்.

ஆகவே, பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கையை பாகுபடுத்திப் பார்த்து விட இயலாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியாது.

என்னிடம் வருகின்றவர்களின் வாழ்க்கைக் கதைகள் பல வியப்பான விஷயங்களை எனக்கு வெளிப்படுத்துகின்றன.

இப்படியும் இருக்குமா... நடக்குமா... என சில பிரச்சினைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து... வசதிக்கு பஞ்சமில்லாத குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது என்னைச் சந்தித்தார்.

இரண்டு ஆண்கள்.. ஒரு பெண்.. ஒரு மகனுக்கு திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.

மகளுக்கும் கல்யாணம் ஆகி அவரும் அமெரிக்காவில்தான் வாழ்கிறார். மூன்றாவது மகனும் அமெரிக்காவில்தான் வேலை பார்க்கிறார்.

கடைசிப் பையனுக்கு மட்டும் கல்யாண வைபவம் கண்ணாமூச்சி காட்டுகிறது. பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

ஒரு பெண்ணை பேசி முடித்து அந்தா.. இந்தா.. என்று திருமண நாள் நெருங்கும்போது பெண் பின்வாங்கி விட்டார்.

பெண்கள் வெறுத்து ஒதுக்குமளவுக்கு மாப்பிள்ளை அசிங்கமாக இல்லை. கண்ணுக்கு லட்சணமாக எழில் குறையாத நிலையில்தான் இருந்தார்.

ஏழாம் இடமும் எட்டாமிடமும் பாதிக்கப்பட்டிருந்தது. காளசர்ப்பதோஷம் வேறு அனைத்து கிரகங்களையும் முடக்கி வைத்திருந்தது.

வானளாவ வசதி இருந்தும்... படி வைத்து ஏறி பணத்தை எடுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தும் பிள்ளைக்கு திருமணம் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது.

மேலும், அந்த அம்மாவின் குடும்ப வாழ்க்கை வெறும் 16 வருடம்தான். பூத்துக் குலுங்கி புதுவாசம் பரப்பி மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் இழந்திருக்கிறார்.

என்னைப் பற்றி ஏனோதானோவென்று நினைத்து மகனின் ஜாதகத்தைக் கொடுத்த அவர், என் கணிப்பையும் சொன்ன கருத்தையும் பார்த்து பெரிய மகன் பேரன் பேத்திகள், மகள் மருமகன் ஜாதகங்களையும் கொடுத்தார்.

எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கை அருகுபோல் வேரோட வேண்டிய நேரத்தில் கருகிப் போனதற்கும் மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள்.

எனக்கு பூரண தெளிவு பிறந்திருக்கிறது. இதுவரை என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த கவலையின் கனம் குறைந்திருக்கிறது என்று சொல்லி நான் எதிர்பார்த்ததை விட காணிக்கையை பல மடங்கு கொடுத்தார்.

நான் மறுத்தும் கேட்கவில்லை. வாங்கிக் கொண்டால்தான் மனம் திருப்தி கொள்ளும் என்று பிடிவாதமாக பாசத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது ஒரு பெண் அமைந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். குவைத் நாட்டில் வேலை பார்ப்பதாகச் சொல்லி ஜாதகத்தையும் அனுப்பி வைத்தார்.

பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் உள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் உள்ள குறை பாதிப்பைச் சமப்படுத்தி நிற்கிறது.

கண்டிப்பாக நான் கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.. அவ்வளவு பெரிய பணக்கார மாது அவ்வப்போது என் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார்.

கஷ்டமும் கவலையும் எளியவர்களுக்கு மட்டுமல்ல... பணம் படைத்த வலியவர்களுக்கும் உண்டு. எல்லாம் இறைவன் செயல்.



Tuesday, 30 December 2014

வேலைக்கு லஞ்சம்... ஜாதகம் என்ன சொல்கிறது

"சார் லஞ்சம் கொடுத்தால் எனக்கு வேலை கிடைக்குமா..." 10 நாட்களுக்கு முன்னர் என் மின்னஞ்சல் முகவரிக்கு அன்பர் ஒருவர் இந்தக் கேள்வியை அனுப்பி இருந்தார்.

மேலும் அவருடைய பிறந்த தேதியையும் நேரத்தையும் அனுப்பி இருந்தார். அவரைப்பற்றிய சுயவிளக்க குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தார்.

வசதி வாய்ப்புக் குறைவான குடும்பம். ஏழு பெண்பிள்ளைகளுக்கு பின்னர் எட்டாவதாக எட்டிப் பிடிக்கப்பட்டவர். பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையே பி.காம். வரை படித்திருக்கிறார். ஒரு கால் சற்று ஊனமாம்.

போக்குவரத்துத் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார். வேலையின் தன்மை.. அதற்கு உரிய ஊதியம் என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை.ஆனால், லஞ்சம் கொடுத்தால்தான் வேலையில் சேர முடியுமாம்.

அவருடைய உறவினர் ஒருவர் அரசியலில் செல்வாக்கு மிக்கவராம். அந்தத் துறை அமைச்சரிடம் பணம் கொடுத்தால் பதவி நிச்சயம் என்று உறுதி சொல்லி அதற்கான தொகையைத் தயார் செய்யும்படி கூறியிருக்கிறார்.

ஏறக்குறைய 6 லட்சம் ரூபாய் அதற்கான கையூட்டுத் தொகை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் விவரம் கூறவில்லை.

ஏனென்றால் குற்றவாளிகளை விட குற்றம் சாட்டுகின்றவர்கள்தான் இந்தியாவில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மான நஷ்ட வழக்குப் போட்டு மண்டைக்கு மணி அடித்து விடுவார்கள் என எழுதி இருந்தார்.

அவருடைய கிரக நிலைகளை ஆராய்ந்தேன். அவருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான அம்சங்கள் மிகக் குறைவாகவே இருந்தது.

ஆனால், அதை குறிப்பிட்டு அவரின் அரசு வேலை நம்பிக்கையைக் குலைக்க விரும்பவில்லை. வேலையின் தன்மை என்ன சம்பளம் எவ்வளவு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு என்னை அழைக்கும்படி தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.

மலேசிய எண் என்பதால் வெறும் அழைப்பு மட்டும் விடுத்தால் போதும். நான் பேசுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

நேற்று என்னை அழைத்தார். நான் பேசினேன். அப்போது அவர் கூறிய விபரங்கள் என்னை ஆச்சரியத்தில் மட்டுமல்ல... அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

இளநிலை உதவியாளர் என்றால் அலுவலகத்தில் எழுத்தர் பணி. இதற்கு உரிய ஆரம்பநிலை ஊதியம் 7000 இந்திய ரூபாயாம். மேலும் ஒப்பந்த அடிப்படையில்தான் பணி நியமனம் கிடைக்குமாம்.

ஆகவே, மிகப்பெரிய தொகையை லஞ்சமாகக் கொடுத்து பணியில் சேர விரும்பவில்லை. வேறு என்ன செய்யலாம் என கேட்டிருந்தார்.

ஆக, 6 லட்சம் ரூபாய் கடனாகவும் உதவியாகவும் தயார் செய்யக்கூடிய தரத்தில் அவர் இருப்பதை நான் உணர்ந்தேன். அதனால், அவருக்கு மாற்று ஆலோசனை ஒன்றைத் தெரிவித்தேன்.

அவருடைய ஜாதகத்தில் பூமிகாரகனான செவ்வாயும் இரும்புக்குப் பிரியமானவனான சனியும் சற்று சாதகமாக இருக்கிறார்கள்.

ஆகவே, லஞ்சம் கொடுத்து இரும்பு சம்பந்தமான வேலையில் சேர்வதை விட அதே தொகையை வைத்து இரும்பு, மின்சாதனப் பொருட்கள் விற்கும் சின்னக் கடையைத் திறக்குமாறு கூறினேன். அப்படிச் செய்தால் மூன்று ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றும் கிடைக்கும். இது உறுதி என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன்.

ஏற்கனவே அவருக்கு மின்சாதனப் பொருட்கள் விற்பதில் அனுபவம் இருப்பதாக தெரிவித்தார். சுமார் 5 ஆண்டுகள் ஒரு கடையில் வேலை பார்த்திருக்கிறார்.

என்னுடைய ஆலோசனைப்படி நடப்பதாகத் தெரிவித்தார். தை மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து கடைக்கு முன்பணம் கொடுக்க ஆவன செய்வதாகச் சொன்னார்.

அவர் பேச்சில் இருந்த நம்பிக்கை அவருக்கு கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல... தீர்க்கதரிசனமான கணிப்பும் கூட.

6 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்து அடிமை வேலை பார்ப்பதை விட அதே தொகைக்கு முதலாளியாக உயர்ந்து மற்றவர்களிடம் வேலை வாங்குவது சாலச் சிறந்தது அல்லவா..






Sunday, 28 December 2014

அமைச்சர்கள் செய்யும் யாகங்கள்... பலன் தருமா பரிகாரம்...?

தமிழக முதலமைச்சராக இருந்து மக்களின் முதல்வராக மாறி விட்ட ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர்கள் அத்தனை பேரும் ஆலயங்களில் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்.

தினம் ஒரு பூஜை, நாளுக்கொரு யாகம் என்று ஆண்டவனைத் தூங்க விடாமல் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளாளுக்குச் செய்கின்ற யாகங்கள் பலிக்குமா... பலன் தருமா... என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய மிகப் பெரிய கேள்வியாகும்.

கடந்த காலங்களில் ஜெயலலிதா செய்யாத யாகங்களையா இப்போது அமைச்சர்கள் செய்து விடப் போகிறார்கள். ஜெயலலிதா செய்து செல்லாமல் போன பூஜைகள் அமைச்சர்கள் செய்தா பலிதமாகப் போகிறது.

ஒருவருக்கு வயிற்று வலி வந்து விட்டது. அதற்காக மருத்துவரைப் பார்க்க வேண்டும். வசதி இருக்கிறது என்பதற்காக ஒரே நாளில் பல மருத்துவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டால் என்னவாகும்.

ஒரு நாளைக்கு முன்று வேளைக்கு ஒவ்வொரு மாத்திரை என்று மருத்துவர் ஒரு வாரத்த்திற்கு மருந்து எழுதிக் கொடுக்கிறார்.

பட்டம் பதவியில் இருக்கிறோம் என்பதற்காக ஒரு வாரத்து மாத்திரைகளை ஒரே நாளில் வாய்க்குள் போட்டு விழுங்கி வயிற்றுக்குள் தள்ளினால் என்னவாகும்.

அந்தக் கதையாக இருக்கிறது இப்போது தமிழக அமைச்சர்கள் செய்யும் அலப்பறை யாகங்கள். கோவில்களில் நடத்தும் வழிபாட்டுக் கூத்துகள்.

வழக்கில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதை விட ஒரு வேளை வெற்றி கிடைத்தால் அது தாங்கள் நடத்திய யாகங்களால்தான் என்று பறை சாற்றிக் கொள்ளும் மனப்போக்கே மந்திரிமார்களின் செயல்பாடுகளில் தெரிகிறது.

அது சரி, இந்த யாகங்கள் பலன் தருமா... இவற்றை  வழி நடத்துகின்ற வேத விற்பன்னர்கள் அமைச்சர்களுக்கு விவரம் சொல்ல மாட்டார்களா...?

அது இயலாத காரியம். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை சொல்வதும் ஆட்டு உரலுக்குள் தலையைக் கொடுப்பதும் ஒன்றுதான்.

ஒரு முறை ஒரு கோவில் குருக்கள் சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது. கட்சித் தலைவர் ஒருவர் கோவிலுக்கு வந்தார். நடை சாத்திய பின்னர் கோவிலைத் திறக்கச் சொன்னார்.

அப்படிச் செய்வது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்று சொல்வார்கள். ஆனால், குருக்கள் எதுவும் பேசாமல் கருவறைக் கதவைத் திறந்து அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டினார்.

தலைவர் போன பின்னர் குருக்களிடம் இது குறித்துக் கேட்டேன். "என்ன செய்யச் சொல்றேள்.. நாம ஏதாச்சும் சொன்னா.. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவன்... பெரியவாள்ன்னு பாக்காம அடிப்பன். பொசுக்குனு பூணூலை அப்பன். எதுக்குண்ணா வம்பு...ஆண்டவா பாத்துக்குவா..." என்று சொன்னார்.

இறைவன் அவரவர் பூர்வ ஜென்ம பலாபலன்களுக்குத் தகுந்த மாதிரி பட்டம் பதவி பணவசதிகளைக் கொடுத்து இருக்கிறார்.

ஜாதக தெசாபுத்தி கோச்சார பலன்களுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை வாரி வழங்குகிறார். நவக்கிரகங்கள் மூலமாக நிறைவேற்றுகிறார்.

எந்தக் கிரகம் துன்பத்திற்கு தூபம் போடப் போகிறதோ.. அதன் கோபத்தைக் குறைக்க கெஞ்சுகிறோம். வேண்டுகிறோம்.

செய்த குற்றத்திற்கு இரக்கப்பட்ட நீதிபதி அதிக பட்ச தண்டனை அளிக்காமல் குறைந்த பட்ச தண்டனை கொடுப்பது போல நம் இறைஞ்சுதலுக்கு ஏற்ப இறைவனின் ஆஞ்ஞைப்படி கிரகங்கள் பாதிப்புகளைப் பாதியாகக் குறைத்துக் கொள்வதைக் கண்கூடாகக் பார்த்திருக்கிறோம்.

ஆனால், மக்கள் முதல்வருக்காக அமைச்சர்கள் செய்கின்ற யாகங்களில் ஆழமான பக்தி இருப்பதை விட ஆடம்பரமான செய்கைகளே முதலிடம்  பிடிப்பதாகத் தெரிகிறது.

ஆகவே, இவை உரிய பலனைத் தருமா என்பது சந்தேகமே.... ஜெயலலிதா அவர்களின் ஜாதகம் மிகச் சிறப்பானது. சத்ரு சம்கார ஜாதகமும் கூட...

அதனால் ஏற்படும் வெற்றிக்கு தங்கள் யாகங்களும் வழிபாடுகளும் ஒரு காரணம் என்பதைக் காட்டிக் கொள்ளும் செயல்பாடுகள் பலனைவிட பாதிப்பைத் தான் அதிகமாக்கும்.





Saturday, 27 December 2014

நிம்மதியைக் கெடுக்கும் ஏழரைச் சனி

பணம் பதவி வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ஏழரையாண்டு சனி காலத்தில் மன நிம்மதிக்கு வேட்டு வைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் சனி பகவான்.

மன அமைதிக்கு ஊறு விளைவிப்பது சனிபகவானுக்கு மல்கோவா மாம்பலம் சாப்பிடுவது மாதிரி. பாதிக்கப்படுகின்றவர்கள் படும் துயரத்தை கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதைப் போல கண்டு ரசிப்பார்.அவரை என்ன எதிர்த்துக் கேட்கவா முடியும்.

முதலமைச்சரே முட்டிக்கு முட்டி தட்டி பெண்டு எடுக்கும்போது சாதாரண
தொண்டனால் தடுக்க முடியுமா?

தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது சிங்கப்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்ட குடும்பம். அவருடைய தாயாரும் தந்தையாரும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள்.

ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் இந்தப் பிள்ளைமீது தாயாருக்கு தனிப்பிரியம். இவர் படிப்புக்கு அவர் செய்த தியாகங்கள் ஏராளம்.

சில நாட்களுக்கு முன்னர் இவருடைய தாயார் கீழே விழுந்து இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சைசெய்தார்கள்.

வயது 82. இதுவரை நோய் நொடி என்று  பாயில் படுத்து மற்றவர்களை படுத்தி
எடுக்காத சீரான உடலுக்கு சொந்தக்காரர்.இப்போதும் அடுத்தவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே, மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற மறுத்துவிட்டார்.

தாயாருக்கு அடிபட்ட செய்தி கேட்டவுடன் பிள்ளைகளை சிங்கப்பூரில் விட்டு விட்டு கணவனும் மனைவியும் சொந்த ஊருக்கு பறந்து வந்தனர்.

ஏறக்குறைய 20 நாட்கள் ஓடி விட்டன. பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம். வயசுக்கு வந்த பிள்ளையை தனியே விட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், தாயாரை விட்டு பிரிந்து செல்ல இவர் மனம் தயாராகவில்லை.

இந்த நிலையில் என்னைத் தேடி வந்து தாயாரின் ஜாதகத்தைக் காண்பித்தார். பார்த்தேன். பின்னர் நேரடியாக அவருக்கான பதிலைச் சுறுக்கமாகச் சொன்னேன்.

உங்கள் தாயாருடைய ஜாதகம் தெய்வீக அம்சம் கொண்டது. அவருடைய அன்பும் ஆசியும்தான் வாழ்க்கையில் உங்களை உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது.

அப்படிப்பட்ட தாயாரின் அந்திம காலத்தில் அருகே இருக்க முடியவில்லையே என்ற அவஸ்தை உங்கள் மனதைப் பிராண்டுகிறது.

இதுதான் விதி. இல்லாதவர்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமத்தைக் கொடுப்பார். இருப்பவர்களுக்கு எந்த வகையிலாவது மனநிம்மதியைக் கெடுப்பார். இது சனிபகவானின் தனித்தன்மை.

இதைத் தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும். தவிர்க்க முடியாது. அதே
நேரத்தில் தங்கள் தாயாரின் இறுதி மூச்சு இப்போது நிற்க வாய்ப்பில்லை.

அவர்களுடைய இறப்பை அவர்களே நிர்ணயிக்கப் போகிறார்கள். ஞானிகளும் யோகிகளும் தாங்கள் விரும்பும்போது உடலை விட்டு உயிருக்கு விடுதலை அளிப்பார்கள்.

அந்த நிலைக்கு வந்து விட்டார் உங்கள் தாயார். மரணத்தைக் கண்டு பயப்படாத பக்குவம் அவருக்கு வந்து விட்டது. இனிமேல் அன்ன ஆகாரங்களைக் குறைத்துக் கொள்ளத் தொடங்குவார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரின் ஜீவன் ஸ்தூல சரீரத்தை விட்டு விலக ஆரம்பிக்கும். ஆனால், அவர் உயிர் பிரியும் நாளைக் கணிப்பது கடினம் என்று சொன்னேன்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த அவர் பல ஜோதிடர்களைப் பார்த்திருக்கிறார். சிலர் ஓரிரு நாட்கள் கெடு சொன்னார்களாம்.

சிலர் என் கருத்தை ஒத்து பலன் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டவன் அளித்த ஆயுளை நிர்ணயிக்க மானிடப் பூச்சிகளான நமக்கு ஆற்றல் ஏது.

நீங்கள் இப்போது சிங்கப்பூருக்குக் கிளம்புங்கள். மன உளைச்சலை களைந்து
எறியுங்கள். பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள இயலாவிட்டாலும் இறுதி மூச்சு அடங்கும் போது நீங்கள் உங்கள் தாயாரின் அருகில் இருப்பீர்கள்
என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.

மனைவியை விட்டு விட்டு அவர் சிங்கப்பூர் கிளம்பிவிட்டார். அன்பு இருக்கிறது, ஆசை இருக்கிறது, பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற பாசம் இருக்கிறது.

ஆனால், அதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டியது... அருள வேண்டியது எல்லாம் வல்ல இறைவன் அல்லவா.

Friday, 26 December 2014

சனிபகவான் கெடுப்பவரா.... கொடுப்பவரா.... பாதிப்புக் குறைய பரிகாரம் என்ன?

சனி கொடுத்தால் யார் தடுப்பார்....சனியைப்போல் கொடுப்பாருமில்லை... அவரைப் போல் கெடுப்பாருமில்லை... விரையச் சனியில் விட்டதை பாதச் சனியில் பார்க்கலாம்... என சனிபகவானின் லீலைகள் பலவிதமாக
பேசப்படுகிறது.

ஜோதிடர்களிடம் கூட சனிபகவான் குறித்து மாறுபட்ட கருத்து நிலவுவதைப் பார்க்கலாம். கெடுப்பதற்கென்றே தோன்றிய கிரகம் சனி. அவரால் நல்லதே நடக்காது என்பது ஒருசாராரின் கருத்து.

அப்படி இல்லை. அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனி பகவான் தீமைகளையும் நன்மைகளையும் பாகுபாடு இன்றி பந்தி வைப்பார் என்று சொல்வாரும் உண்டு.

என்னதான் மின்சாரம் நமக்கு வெளிச்சத்தை வாரி வழங்கினாலும் அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்தாலும் தப்பித் தவறி பிரியத்தோடு தொட்டுப் பார்த்தால் நம் உடலை விட்டு உயிர் பிரிய நேரிடும்.

அது மாதிரிதான் சனிபகவானும்.. அணுகாமலும் அகலாமலும் அனல் காய்வார்போல் என்ற திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்து.

எது எப்படியோ... மற்றவர்களுக்கு நன்மை செய்வதன் மூலமாகத்தான் சனி பகவானிடமிருந்து நன்மையைப் பெற முடியும் என்பதுதான் நடைமுறை வாழ்க்கை காட்டும் உண்மை.

ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் அல்லாடும் ஓர் ஏழையின் வயிற்றுப் பசியைப் போக்கும் ஒரு பிடி அன்னம், என் முன்னே படைக்கப்படும் சுவை மிகுந்த பத்து வகைப் பதார்த்தங்களை விட உன்னதமானது என்கிறார்
கிருஷ்ண பரமாத்மா.

ஏழரைச் சனியின் பாதிப்பினால் அல்லல் படும் இனிய நண்பர்களே... கவலைப்படாதீர்கள்... வாராவாரம் சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

கருப்பு சனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு. கருப்பு எள் கலந்த உணவுகள் சனிபகவானுக்கு பிரியமானவை.

காக்கை சனிபகவானின் வாகனம். அதற்கு உணவளித்து திருப்திப்படுத்தினால் சனிபகவானின் சிந்தை குளிரும்.

கிராமப் புறங்களில் காலை எழுந்தவுடன் காக்கைக்கு சோறுவைப்பது தாய்மார்களின் வழக்கம். இந்தப் பழக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.

இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாளும் காக்கைக்கு சோறு வைப்பதன் மூலமாக சனிபகவானைக் குளிர்விக்கிறார்கள் நமது தாய்மார்கள் என்பதே உண்மை.

வசதி வாய்ப்புகள் நிறைந்த நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் பொழுது புலரும் நேரத்தில் காக்கைக்கு உணவளிப்பதை இன்றும் காணலாம்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஆகிய பாதிப்புகளில் சிக்கி இருக்கும் அன்பர்களே... இந்தக் கால கட்டத்தில் எண்ணியது ஈடேறாமல் போகலாம்.

உடல் நலத்திற்கு பங்கம் வரலாம். செய்யும் தொழில் துறைகளில் நஷ்டம் ஏற்படலாம். குடும்ப உறவில் விரிசல் உருவாகலாம். நட்புகளில் பிரிவு உண்டாகலாம்.

இப்படி ஒரு நிலை வந்தால் பதற்றப்படாமல் பக்குவத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சனிபகவானை மனதார வேண்டி ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

சுயநலமான போக்கை விடுத்து பொது நலமான போக்கை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக சனிபகவான் நமக்கு வைக்கும் பரீட்சைதான் அவர் கொடுக்கும் சோதனைகளும் வேதனைகளும்.

கரியனின் கால் ஊனம். ஆகவே, அவரை முடவன் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அந்த வகையில் உடற் குறையுள்ள அன்பர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்தால் ஏழரைச் சனியின் பாதிப்பு பலமடங்கு குறையும்.





Wednesday, 24 December 2014

பிரிந்தவர் கூடினர்... பிரிச்சினைகள் தீருமா?

கணவன் மனைவி சண்டையில் இறுதிக் கட்டத்துக்கு வந்த ஒரு ஜோடியை இணைத்து வைத்ததாக முன்பு குறிப்பிட்டேன் அல்லவா.

எப்படி அவர்களைச் சேர்த்தேன் என்பதை உங்களுக்குத் தெளிவு படுத்துவது என் கடமை. இது போல் சண்டைபோட்டு வாழ்க்கையை நாசமாக்கும் சிலருக்கு பாடமாக அமையும்.

திருமணத்துக்கு முன்னர் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு பிரியம் இருந்தது உண்மை. ஆனால்,திருமணத்துக்கு பின்னர் அது அன்பாக, பாசமாக, நேசமாக பரிமளிக்கவில்லை.

இதற்கு ஜாதக அமைப்பு ஒரு காரணம். நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு இணைந்திருக்கும் பிடிவாத குணமும் ஒரு காரணம்.

அந்தத் தம்பதிகள் இரண்டு பேருக்குமே பிள்ளை மீது கொள்ளைப் பிரியம். ஒரு நிமிடங்கூட பிரிந்து இருக்கப் பிரியப்படாதவர்கள்.

இதை வைத்து ஏன் நாம் ஒரு விளையாட்டுக் காட்டக் கூடாது என்று எண்ணினேன். அந்த எண்ணத்தை அவர்களிடம் நடைமுறைப்படுத்தினேன். அது வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்தது.

எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அவர்களிடம் சொன்ன கருத்து இதுதான்.

"நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடையாது. அதற்கான கிரகமும் இடமும் கெட்டுப் போய் இருக்கிறது.

இந்த நிலையில் நீங்கள் கொண்ட அன்பின் பயனாக அற்புதமான பிள்ளையை ஆண்டவன் உங்களுக்கு அருளியுள்ளார். இது இறைவன் இட்ட பிச்சை.

ஆனால், அதைப் போற்றி பாதுகாக்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை. இதே நிலை நீடித்தால் கொடுத்த இறைவனே பிள்ளையை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படக்கூடும்.

நன்றாக சிந்தித்திப்பார்த்து உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இழப்பு இருவருக்கும்தான்" என்று கண்டிப்பான குரலில் சொன்னேன்.

என் அதிர்ச்சி வைத்தியம் அவர்களை ஆட்டம் காண வைத்தது. சற்று நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனதில் ஏற்பட்ட மாற்றம் முகத்தில் தெரிந்தது.

தாங்கள் சொல்லியபடி நடக்கிறோம் என உறுதி அளித்து விட்டு விடைபெற்றார்கள். இனி அவர்களுக்குள் சண்டை வருவது அரிதாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் பிள்ளைப் பாசம் எல்லாவற்றையும் விட பெரிது அல்லவா. அதே நேரத்தில் இந்த அதிர்ச்சி வைத்தியம் இன்னொரு ஜோடிக்கு பலிக்குமா என்பதைப் பார்ப்போம்.

இல்லையென்றால் இன்னொரு வழியை இறைவன் காட்டாமலா போவான்.