Saturday 27 December 2014

நிம்மதியைக் கெடுக்கும் ஏழரைச் சனி

பணம் பதவி வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ஏழரையாண்டு சனி காலத்தில் மன நிம்மதிக்கு வேட்டு வைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் சனி பகவான்.

மன அமைதிக்கு ஊறு விளைவிப்பது சனிபகவானுக்கு மல்கோவா மாம்பலம் சாப்பிடுவது மாதிரி. பாதிக்கப்படுகின்றவர்கள் படும் துயரத்தை கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதைப் போல கண்டு ரசிப்பார்.அவரை என்ன எதிர்த்துக் கேட்கவா முடியும்.

முதலமைச்சரே முட்டிக்கு முட்டி தட்டி பெண்டு எடுக்கும்போது சாதாரண
தொண்டனால் தடுக்க முடியுமா?

தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது சிங்கப்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்ட குடும்பம். அவருடைய தாயாரும் தந்தையாரும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள்.

ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் இந்தப் பிள்ளைமீது தாயாருக்கு தனிப்பிரியம். இவர் படிப்புக்கு அவர் செய்த தியாகங்கள் ஏராளம்.

சில நாட்களுக்கு முன்னர் இவருடைய தாயார் கீழே விழுந்து இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சைசெய்தார்கள்.

வயது 82. இதுவரை நோய் நொடி என்று  பாயில் படுத்து மற்றவர்களை படுத்தி
எடுக்காத சீரான உடலுக்கு சொந்தக்காரர்.இப்போதும் அடுத்தவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே, மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற மறுத்துவிட்டார்.

தாயாருக்கு அடிபட்ட செய்தி கேட்டவுடன் பிள்ளைகளை சிங்கப்பூரில் விட்டு விட்டு கணவனும் மனைவியும் சொந்த ஊருக்கு பறந்து வந்தனர்.

ஏறக்குறைய 20 நாட்கள் ஓடி விட்டன. பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம். வயசுக்கு வந்த பிள்ளையை தனியே விட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், தாயாரை விட்டு பிரிந்து செல்ல இவர் மனம் தயாராகவில்லை.

இந்த நிலையில் என்னைத் தேடி வந்து தாயாரின் ஜாதகத்தைக் காண்பித்தார். பார்த்தேன். பின்னர் நேரடியாக அவருக்கான பதிலைச் சுறுக்கமாகச் சொன்னேன்.

உங்கள் தாயாருடைய ஜாதகம் தெய்வீக அம்சம் கொண்டது. அவருடைய அன்பும் ஆசியும்தான் வாழ்க்கையில் உங்களை உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது.

அப்படிப்பட்ட தாயாரின் அந்திம காலத்தில் அருகே இருக்க முடியவில்லையே என்ற அவஸ்தை உங்கள் மனதைப் பிராண்டுகிறது.

இதுதான் விதி. இல்லாதவர்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமத்தைக் கொடுப்பார். இருப்பவர்களுக்கு எந்த வகையிலாவது மனநிம்மதியைக் கெடுப்பார். இது சனிபகவானின் தனித்தன்மை.

இதைத் தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும். தவிர்க்க முடியாது. அதே
நேரத்தில் தங்கள் தாயாரின் இறுதி மூச்சு இப்போது நிற்க வாய்ப்பில்லை.

அவர்களுடைய இறப்பை அவர்களே நிர்ணயிக்கப் போகிறார்கள். ஞானிகளும் யோகிகளும் தாங்கள் விரும்பும்போது உடலை விட்டு உயிருக்கு விடுதலை அளிப்பார்கள்.

அந்த நிலைக்கு வந்து விட்டார் உங்கள் தாயார். மரணத்தைக் கண்டு பயப்படாத பக்குவம் அவருக்கு வந்து விட்டது. இனிமேல் அன்ன ஆகாரங்களைக் குறைத்துக் கொள்ளத் தொடங்குவார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரின் ஜீவன் ஸ்தூல சரீரத்தை விட்டு விலக ஆரம்பிக்கும். ஆனால், அவர் உயிர் பிரியும் நாளைக் கணிப்பது கடினம் என்று சொன்னேன்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த அவர் பல ஜோதிடர்களைப் பார்த்திருக்கிறார். சிலர் ஓரிரு நாட்கள் கெடு சொன்னார்களாம்.

சிலர் என் கருத்தை ஒத்து பலன் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டவன் அளித்த ஆயுளை நிர்ணயிக்க மானிடப் பூச்சிகளான நமக்கு ஆற்றல் ஏது.

நீங்கள் இப்போது சிங்கப்பூருக்குக் கிளம்புங்கள். மன உளைச்சலை களைந்து
எறியுங்கள். பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள இயலாவிட்டாலும் இறுதி மூச்சு அடங்கும் போது நீங்கள் உங்கள் தாயாரின் அருகில் இருப்பீர்கள்
என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.

மனைவியை விட்டு விட்டு அவர் சிங்கப்பூர் கிளம்பிவிட்டார். அன்பு இருக்கிறது, ஆசை இருக்கிறது, பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற பாசம் இருக்கிறது.

ஆனால், அதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டியது... அருள வேண்டியது எல்லாம் வல்ல இறைவன் அல்லவா.

No comments:

Post a Comment