Wednesday 24 December 2014

பிரிந்தவர் கூடினர்... பிரிச்சினைகள் தீருமா?

கணவன் மனைவி சண்டையில் இறுதிக் கட்டத்துக்கு வந்த ஒரு ஜோடியை இணைத்து வைத்ததாக முன்பு குறிப்பிட்டேன் அல்லவா.

எப்படி அவர்களைச் சேர்த்தேன் என்பதை உங்களுக்குத் தெளிவு படுத்துவது என் கடமை. இது போல் சண்டைபோட்டு வாழ்க்கையை நாசமாக்கும் சிலருக்கு பாடமாக அமையும்.

திருமணத்துக்கு முன்னர் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு பிரியம் இருந்தது உண்மை. ஆனால்,திருமணத்துக்கு பின்னர் அது அன்பாக, பாசமாக, நேசமாக பரிமளிக்கவில்லை.

இதற்கு ஜாதக அமைப்பு ஒரு காரணம். நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு இணைந்திருக்கும் பிடிவாத குணமும் ஒரு காரணம்.

அந்தத் தம்பதிகள் இரண்டு பேருக்குமே பிள்ளை மீது கொள்ளைப் பிரியம். ஒரு நிமிடங்கூட பிரிந்து இருக்கப் பிரியப்படாதவர்கள்.

இதை வைத்து ஏன் நாம் ஒரு விளையாட்டுக் காட்டக் கூடாது என்று எண்ணினேன். அந்த எண்ணத்தை அவர்களிடம் நடைமுறைப்படுத்தினேன். அது வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்தது.

எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அவர்களிடம் சொன்ன கருத்து இதுதான்.

"நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடையாது. அதற்கான கிரகமும் இடமும் கெட்டுப் போய் இருக்கிறது.

இந்த நிலையில் நீங்கள் கொண்ட அன்பின் பயனாக அற்புதமான பிள்ளையை ஆண்டவன் உங்களுக்கு அருளியுள்ளார். இது இறைவன் இட்ட பிச்சை.

ஆனால், அதைப் போற்றி பாதுகாக்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை. இதே நிலை நீடித்தால் கொடுத்த இறைவனே பிள்ளையை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படக்கூடும்.

நன்றாக சிந்தித்திப்பார்த்து உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இழப்பு இருவருக்கும்தான்" என்று கண்டிப்பான குரலில் சொன்னேன்.

என் அதிர்ச்சி வைத்தியம் அவர்களை ஆட்டம் காண வைத்தது. சற்று நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனதில் ஏற்பட்ட மாற்றம் முகத்தில் தெரிந்தது.

தாங்கள் சொல்லியபடி நடக்கிறோம் என உறுதி அளித்து விட்டு விடைபெற்றார்கள். இனி அவர்களுக்குள் சண்டை வருவது அரிதாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் பிள்ளைப் பாசம் எல்லாவற்றையும் விட பெரிது அல்லவா. அதே நேரத்தில் இந்த அதிர்ச்சி வைத்தியம் இன்னொரு ஜோடிக்கு பலிக்குமா என்பதைப் பார்ப்போம்.

இல்லையென்றால் இன்னொரு வழியை இறைவன் காட்டாமலா போவான்.

No comments:

Post a Comment