Thursday 18 December 2014

ஏழரைச் சனி காட்டும் எச்சரிக்கை

மழை வருவதற்கு முன்னர் மேகம் திரள்வதில்லையா... சண்டை வருவதற்கு முன்னர் கோபம் கொப்பளிப்பதில்லையா... காதல் வருவதற்கு முன்னர் வெட்கம் வேடிக்கை காட்டுவதில்லையா... அது மாதிரிதான் ஏழரைச் சனி காலத்தில் சனிபகவான் சில அறிகுறிகளை நமக்குக் காட்டுவார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் என்னை வந்து சந்தித்தார் 35 வயது மதிக்கத்தக்க ஓர் அன்பர். திருமண விஷயமாக பார்க்க வந்திருந்தார். பல இடங்களில் பெண் தேடியும் ஒன்றும் அமையவில்லை.



விருச்சிக ராசிக்காரர் என்பதால் ஏழரைச் சனியின் தாக்குதலுக்குத் தயாராக இருந்தார். இனிமேல் திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை என்ற அவநம்பிக்கையோடு என்னிடம் பேசினார்.

சனிபகவானுக்கு இன்னொரு பெயர் கலிபுருஷன். ஆகவே கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். காளசர்ப்பதோஷ பாதிப்புக்கு உள்ளாகி  கிரக முடக்கம் ஏற்பட்டுள்ளதால் தாமதமாக திருமணம் நடக்கும் என சொன்னேன்.

அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும் இன்னொரு கேள்வியைத் தொடுத்தார். அப்படியே திருமணம் நடந்தாலும் குழந்தை இருக்காது என சொல்கிறார்களே என்று வினவினார்.

அது ஒருவகையில் சரிதான். புத்திர ஸ்தானமும் புத்திர காரகனும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இருப்பினும் எனக்கொரு குருட்டு நம்பிக்கை உண்டு. மதி நீச்சம் அடைந்த விருச்சிகராசிக்காரர்கள் இளமையில் பல இன்னல்களை அடைந்தாலும் சுயமுன்னேற்றத்தில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார்கள்.

மேலும் இவருக்கு நாலாம் இடத்தில் சுக்கிரம் நல்ல நிலையில் இருந்தார். ஆகவே திருமணம் கண்டிப்பாக நடக்கும். சற்று தாமதமாக இரு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று சொன்னேன்.

ஓரிரு மாதங்களில் பெண் அமைந்தது. இருவீட்டாரும் என்னை வந்து பார்த்தார்கள். திருமண நாள் குறித்துக் கொடுத்தேன். சரியாக ஒன்ன்ரை ஆண்டுகளில் அந்தப் பெண் கருத்தரித்தாள்.

இந்த விஷயத்தை என்னிடம் மகிழ்ச்சியோடு தொலைபேசி வாயிலாக கூறினார். முதன் முதலாக என்னிடம் தெரிவித்ததாகச் சொன்னார்.

சனிப்பெயர்ச்சிக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என கேட்டார். பெரிதாக ஒன்றும் தேவையில்லை. பெரிச்சிக் கோவிலுக்காவது குச்சனூருக்காவது சென்று வாருங்கள் என்று சொன்னேன்.

இந்த நிலையில் கார் வாங்க நினைக்கிறேன் என்று சொல்லி கார் எண்ணையும் கூறினார்.

முடிவுரை எழுதி விட்டு முன்னுரைக்கு யோசிப்பது முட்டாள்தனம். இருந்தாலும் அவர் ஆவலின் வேகத்தைக் குறைக்க விரும்பவில்லை.

தாராளமாக வாங்குங்கள். வண்டி வாகனங்கள் ஓட்டும்போது இரு மடங்கு எச்சரிக்கையாக இருங்கள் என ஆலோசனை கூறினேன்.

சனிப்பெயர்ச்சி அன்று நானும் என் மாப்பிள்ளை கௌரியும் சில நண்பர்களும் பெரிச்சிக் கோவில் சனிபகவான் ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்த அன்பர் போன் செய்தார்.

ஐயா.. நான் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் அந்தப் பக்கத்தில் நின்ற மாடு குறுக்கே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் மோதி விட்டது. எனக்கு அடி அதிகம் இல்லை. மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் சேதமடைந்து விட்டது என கூறினார். அச்சப்படத்தேவையில்லை என்று ஆறுதல் சொன்னேன்.

இரவு எட்டு மணி இருக்கும். தொலைபேசி மணி ஒலித்தது. அவர்தான் அழைத்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது சாய்ந்து என் விரலை நசுக்கி விட்டது. எனக்கு பயமாக இருக்கிறது. வண்டி வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னீர்கள். அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் நடந்து விட்டன. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா எனக் கேட்டார்.

இது ஒரு இக்கட்டான நிலை. சனிக்கு பரிகாரம் சொல்வதா... அல்லது அவரின் அவநம்பிக்கைக்கு பரிகாரம் சொல்வதா...

சனிபகவான் ஏழரையாண்டுகள் முழுமையும் பாதிப்பைஉண்டு பண்ணுவாரா... நல்லதே செய்ய மாட்டாரா.. இப்படி பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இனி சனி பகவானை எப்படி குஷிப்படுத்துவது... சரிப்படுத்துவது... சமாதானப்படுத்துவது என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.




No comments:

Post a Comment