Saturday, 7 March 2015

இடைப்பட்ட நாளில் தடைப்பட்ட திருமணம்....ஏன்?

நமக்கு வரப் போகின்ற பெரிய துன்பங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக சிறிய துன்பங்களைக் கொடுப்பது இறைவனின் திருவுள்ளம்.
இதைப் பலர் உணர்வதில்லை. அறியாமையால் ஆண்டவனைத் திட்டுகிறார்கள்.
நேற்று என்னை ஒரு தம்பதியினர் சந்தித்தனர். மிக முக்கியமான அம்சம் குறித்து ஆலோசனை கேட்க வேண்டும் என்று முன்பே தொலைபேசியில் தெரிவித்து இருந்தனர்.
இரண்டு வாரங்களாக அலுவல்சுமையின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் நேற்றுத் தான் அந்த நல்வாய்ப்பு அமைந்தது.
கணவன் அரசு தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார். பிரதமர் செல்லும் நாடுகளுக்கு கூடவே போக வேண்டும்.
மனைவியும் கல்வித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
மூத்தவள் பெண். கணினித்துறையில் பட்டம் பெற்று சிறப்பான பணியில்
இருக்கிறார். வயது 28.
இவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டார்கள். பையனும் படித்தவர். பொருளாதாரப் பஞ்சமில்லை.
ஆனால் குறித்த நாளில் திருமணம் நடக்கவில்லை. பெண் வீட்டாரே கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான். பையன் எதெற்கெடுத்தாலும் குறை பேசுகிறார்.
ஏட்டிக்கு போட்டியாகவே விவாதம் செய்கிறார். எங்கள் மகள் அமைதியானவர்.
போனில் பேசுவதற்குகூட உங்கள் மகளுக்கு வலிக்கிறதா என எங்களிடமே கேட்கிறார்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என்னை யாரும் அடக்கி ஆள முடியாது என்று சம்பந்தமில்லாமில் பேசுகிறார்.
ஆகவே எங்களுக்கு பயம் வந்து விட்டது. பின்னாளில் சிரமப்படுவதை விட இப்போதே திருமணத்தை நிறுத்தி விடுவது உத்தமம் என்று கருதி இவ்வாறு செய்து விட்டோம்.
இப்படிச் செய்தது சரியா... தவறா எனத் தெரியவில்லை. குழப்பமான நிலையில் உள்ளோம்.
ஒன்றுக்கு மூன்று ஜோதிடர்களிடம் பொருத்தம் பார்த்து விட்டுத்தான் திருமண ஏற்பாட்டைச் செய்தோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார்கள்.
அவர்கள் பேசும்போதே சில குறிப்புகளை ஒரு தாளில் எழுதினேன். அதன்பிறகு ஜாதகங்களைப் பார்த்தேன்.
ஜாதகக் கட்டங்களில் இருக்கும் கிரகங்களின் அமைப்பு மற்றும் தோஷ விவரங்களை எடுத்துக் கூறினேன்.
என் குறிப்பில் 80 சதவிகிதம் மிகச் சரியாக இருந்ததைக் கண்டு அவர்கள் வியந்து போனார்கள்.
பின்னர் ஜாதகத்தில் உள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறினேன். ஒருவேளை இந்தத் திருமணம் நடந்திருந்தால் என்னென்ன இடர்பாடுகளைச் சந்தித்திருக்க வேண்டும் என்று விளக்கினேன்.
இன்னும் ஓர் ஆண்டிற்கு பின்னர் கண்டிப்பாக நல்ல மாப்பிள்ளை அமைவார். இந்தத் திருமணத்தை நீங்கள் தடுக்கவில்லை.
உங்கள் உள்ளத்தில் இருந்து இறைவன் தான் நிறுத்தி இருக்கிறார் என அறிவுறுத்தி புராண இதிகாசங்களில் இருந்து சில விளக்கங்களை எடுத்துக் கூறினேன்.
அரை மணி அவகாசத்தில் பகாவ் செல்ல வேண்டும் என்று அமர்ந்தவர்கள் ஏறக்குறைய மூன்று மணி நேரம் என்னிடம் பேசினர்.
வீட்டிற்குள் வரும் போது மன நிறையக் கவலைகளைச் சுமந்து கொண்டு வந்தோம்.
உங்களிடம் இருந்து விடைபெறும் போது மனம் முழுக்க நிம்மதியை நிறைத்துக் கொண்டு செல்கிறோம் எனக் கூறி விடை பெற்றுச் சென்றனர்.
என் மூலமாக இறைவன் அவர்களின் மனக்கவலைக்கு மருந்து தடவி இருக்கிறார். எனக்கும் மனம் நிறைய சந்தோஷம் தான்.

Tuesday, 3 March 2015

சொன்ன வாக்கு பலித்து...ஜாதகம் ஜெயித்தது...!

ஒருவரின் ஜாதக அமைப்பு எந்த அளவுக்கு அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.
2002 ஆம் ஆண்டில் நான் டாமான்சாரா டாமாயில் வீடு வாங்கி குடியேறினேன். அப்போது ஓர் இளைஞர் அறிமுகமானார். அவருக்கு வயது 25.
பழக்கம் வழக்கமாகி, நட்பு உறவாக மாறி என்னை சகோதரனாகவே கருத ஆரம்பித்தார்.
அவருக்கு சொந்த ஊர் சிரம்பான். கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
வந்த இடத்தில் வேலை அமையவில்லை. சாப்பாட்டுக்கே சிரமமான நிலை. இருந்தாலும் கடுமையான உழைப்பாளி.
இதற்கு இடையில் முத்து என்ற நபர் அறிமுகமாக நல்ல நண்பராக மாறினார். கேரளாவைச் சேர்ந்தவர். பொறியியலாளர்.
சுங்கைபூலோவில் துப்பாக்கி ரவை தயாரிக்கும் அரசாங்கத் தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.
அவருடைய அப்பா மிகச் சிறந்த ஜோதிடர். நான் ஜாதகம் பார்க்கும் ஆற்றல் கொண்டவன் என்பதை அறிந்து கொண்டார்.

ஒரு நாள் நான் மேலே குறிப்பிட்ட சகோதரர் சந்துருவின் ஜாதகத்தைக் கொண்டு வந்து காண்பித்தார்.
மகர லக்கனம், ரிஷிப ராசி. செவ்வாய், சந்திரன் குரு உச்சம். சூரியனும் புதனும் மறைவு ஸ்தானத்தில் இருந்தனர்.
அப்போது தம்பி சந்துருவும் என் வீட்டிற்கு வந்து விட்டார். இருவரிடமும் பலன் சொன்னேன்.
இன்று இவர் சிரமப்படலாம். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இவர் பொருளாதார நிலையில் மிக ஏற்றத்தில் இருப்பார் என்று.
அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால், நம்பிக்கை பிறக்கவில்லை.
அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் அப்பார்ட் மெண்டுக்கு கீழே உள்ள காபிக் கடையில் நாங்கள் சந்திப்போம். பேசுவோம். மிகவும் உறுதுணையாக இருப்பார்.
ஒரு நாள் காலையில் பசியாறிக் கொண்டிருக்கும்போது 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண் அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியே சென்றார்.
அந்தப் பெண்ணைப் பார்த்த சந்துருவின் முகத்தில் காதல் மின்னல் இழையோடியதைப் பார்த்தேன்.
ஒரு வருட இடைவெளியில் அதே பெண்ணை மணம் முடித்து வைத்தேன். மிக மரியாதை கொண்ட பெண்.
நாங்கள் அருகருகே இருக்கும்வரை அவர்கள் என் வீட்டிற்கு வந்தாலும் சரி. நான் அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் சரி எனக்கு முன்னால் ஷோபாவிலோ தரையிலோ அமர்ந்ததில்லை. எவ்வளவு நேரமானலும் நின்று கொண்டே இருப்பாள்.
இது மலேசியாவில் மட்டுமல்ல இந்தியாவில் கூட இந்தக் காலக் கட்டத்தில் பார்க்க முடியாத காட்சியாகும்.
அவருக்கு இரண்டு பையன்கள். பெரியவருக்கு அர்ச்சுன்என்று பெயர். இளையவர் பெயர் நாகார்சுன்.
இருவருக்கும் ஜாதகம் பார்த்து பெயர் வைத்தது நான் தான். குடும்பம் விரிவடைந்தவுடன் சுங்கைபூலோவிற்கு வீடு மாறி சென்றார்.
இருவருக்கும் சுமார் 30 கிலோ மீட்டர் இடைவெளி ஏற்பட்டது. அதனால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்தது.
 பல தடைகளைத் தாண்டி மேடு பள்ளங்களைக் கடந்து இன்று தார்ச் சாலை போடும் ஒப்பத்தக்காரராக தம்பி சந்துரு உருவெடுத்து விட்டார்.
வசதி வாய்ப்புகள் பெருகி விட்டது. மோட்டார் சைக்கிள் வாங்க தடுமாறியவர் இப்போது கேம்ரி கார் பாவிக்கிறார்.
சுமார் 9 லட்சம் வெள்ளியில் வீடு பார்த்திருக்கிறார். கடந்த வாரம் என்னைச் சந்தித்தபோது அனைத்து விவரங்களையும் சொன்னார்.
நான் எவ்வளவு உயர்ந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். இருந்தாலும் அன்று டாமாயில் சந்தோசமாக வாழ்ந்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்று கூறினார்.
அது இருவர் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு உண்மைதான். பணம் காசுக்கு அலையும்போது மனதில் மகிழ்ச்சி மண்டிக்கிடந்தது.
வசதி வாய்ப்புகள் வந்தவுடன் மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது.
மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம் எனச் சொல்லிப் பிரிந்தோம். இன்னும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
வேளைப்பளு கூடி விட்டது. கால்களில் சக்கரக்கதைக் கட்டிக் கொண்டு அலைகிறார். இதில் பழையதை நினைக்க நேரம் எங்கே கிடைக்கப் போகிறது.
எப்படி என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக நீ உச்சத்ததில் இருப்பாய் என்று நான் அன்று சொன்ன வார்த்தை பலித்து விட்டது.
சந்துருவை நினைத்து மனப்பூர்வாக மகிழ்ச்சி அடைகிறேன். என் அன்பும் ஆசீர்வாதமும் அவருக்கு என்றும் உண்டு.
ஏனென்றால் அவர் என் பாசமிக்க சகோதரர்.

Monday, 23 February 2015

இறந்த பிள்ளை பேசுகிறது...ஆவியாக வந்து...!

அரசியலில் செல்வாக்கு மிக்கவர். எல்லாரிடமும் அன்பாக...அணுக்கமாகப் பழகக்கூடியவர். என்னுடைய நீண்ட கால நண்பர்.
நான் மலையகத்தில் தங்கும் நிலை ஏற்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.
கடந்த மாதம் நான் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூரில் உணவகம் நடத்தும் நண்பரின் மைத்துனர் திருமணத்தில் அவரைச் சந்தித்தேன்.
கல்யாணம் மதுரையில் நடந்தது. மதிய உணவுக்குப் பின்னர் நானும் அவரும் காரில் காரைக்குடிக்குத் திரும்பினோம்.
அவர் மனைவியும் கூட இருந்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். இருப்பினும் அவர் முகத்தில் ஏதோ ஒரு சோகம் தோன்றித் தோன்றி மறைந்தது.
பேச்சு வாக்கில் கேட்டேன். அவர் சொன்ன சம்பவங்கள் என்னை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். ஒரு பெண்ணுக்கு திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். இன்னொரு பெண் படித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பெண் குழந்தை 6 வயதில் இறந்து விட்டது. இறந்த குழந்தை நேரடியாக வந்து பேசுகிறது என்று நண்பரின் மனைவி சொன்னார்.
அந்தக் குழந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நண்பரின் மனைவி பிறந்த ஊரில் சொந்த இடத்தில் சின்ன கோவில் கட்டி இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் விழா எடுத்து அன்னதானம் வழங்கி வந்திருக்கிறார்கள். இதற்கு அவரின் தம்பி இருவரும் ஒத்துழைப்புத் தந்திருக்கிறார்கள்.
என்ன காரணத்தாலோ இரண்டு குடும்பத்துக்கும் மன வருத்தம் ஏற்பட்டு விட்டது.
அதனால் பூஜை போடக்கூடாது . அன்னதானம் வழங்கக்கூடாது என தம்பிகள் இருவரும் தகராறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் மோதல் முற்றி என் நண்பரின் கண் எதிரிலேயே அவரின் மனைவியை அடித்து கையை ஒடித்து விட்டார்கள்.
என் நண்பருக்கு ஜாதகத்தில் அதீதமான நம்பிக்கை. அடிக்கடி ஜாதகம் பார்ப்பது வழக்கம்.
"நான் துலாம் ராசி. ஏழரைச் சனி நடக்கிறது. வம்பு வழக்கு வேண்டாம். உடலில் ஒச்சம் ஏற்படலாம். சிறை செல்ல நேரலாம். உயிருக்குக்கூட ஆபத்து உண்டாகலாம் என ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே, நடந்த அக்கிரமங்களைக் கண்களால் கண்டும் கையைக் கட்டிக் கொண்டு கல்லைப் போல் இருந்து விட்டேன்" என்று சொன்னார்.
அப்போது அவர் மனைவியின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
மலேசியாவுக்கு போகும் முன்னால் வீட்டுக்கு வந்து விட்டுச் செல்ல முடியுமா எனக் கேட்டார்.
காரைக்குடியில் உள்ள அவரின் வீட்டுக்குப் போனேன். ஜாதகத்தைக் காண்பித்தார். பார்த்தேன்.
இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த என் மகள் இப்போது என் தம்பிகளுக்குச் சாதகமாக இருக்கிறாள்.
அவர்களைக் குறை கேட்க மறுக்கிறாள். அர்த்த ஜாமத்தில் என் முன்னே தோன்றி அழுகிறாள். எதுவும் பேச மாட்டேன் என்கிறாள் என்று அவர் சொன்னார்.
ஜாதகப்படி அந்த நண்பருக்கு இக்கட்டான சூழ்நிலை. மேலும் அவர் வசிக்கும் வீட்டில் வாஸ்து குற்றம் அதிகமாக உள்ளது.
அதைச் சுட்டிக் காட்டினேன். ஒப்புக் கொண்டார். காளஹஸ்திக்கும் திருநள்ளாறுக்கும் திருப்பதிக்கும் ஆண்டுக்கு இரு முறை போய் வருவார்.
சனி ஈஸ்வரத் தலமான பெரிச்சிக் கோவிலுக்கு சனி தோறும் சென்று வருவார்.
தட்சணாமூர்த்தி எழுந்தருளி இருக்கும் பட்டமங்களத்துக்குச் சென்று வியாழக்கிழமைகளில் தவறாது  வழிபாடு செய்வார்.
ஆகவே, ஆலயங்களுக்குச் செல்லுங்கள் என்று பரிகாரம் சொல்வது பொருத்தமற்றது.
அதனால் இதற்கு மாற்று ஏற்பாடாக சில காரியங்களைச் செய்யச் சொல்லி இருக்கிறேன்.
மலேசியாவில் இருந்து திரும்பி வந்த பின்னால் வீட்டில் கவச யாகம் ஒன்றை நடத்தலாம் எனச் சொன்னேன்.
நான் ஜாதக பலன்களைச் சொன்னபோது நண்பரின் மனைவி பல உண்மைகளை ஒத்துக் கொண்டார்.
ஆகவே கண்டிப்பாக இந்த யாகத்தைச் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.
கம்பீரமாகவும் கலகலப்பாகவும் காட்சி தரும் என் நண்பரின் வீட்டுக் கதவுகளுக்குப் பின்னால் இத்தனை துன்பங்களும் துயரங்களும் மண்டிக் கிடப்பதை எண்ணிப் பார்க்கும்போது விதியின் கரங்கள் எத்தனை வலிமையானவை என உணர்கிறேன்.

Monday, 12 January 2015

உயிரைப் பறித்த ஏழரைச் சனி

மிக மன வேதனையோடு இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

உள்ளத்தைப்  பிசைந்து விழிகளைக் குளமாக்கிய ஒரு மரணத்தின் வலி இன்னும் என் இதயத்தை விட்டு இறங்கவில்லை.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு தம்பதியர் என்னைச் சந்தித்தனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு ஆண்.

மகள்களுக்குத் திருமணம் முடித்து விட்டார். மகன் கொஞ்சம் உடற்குறை உடையவர். பேசும் போது நாக்கு சற்று குளறும்.

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அவ்வளவாக நெருக்கம் கிடையாது. எலியும் பூனையும் பேசிக் கொள்வது போல்தான் எப்போதாவது அவர்களுக்கு இடையே உரையாடல் நடக்குமாம்.

ஜாதகத்தைப் பார்த்தேன். பித்ருகாரகன் மிக மோசமான நிலையில் இருந்தார். ஒன்பதாம் இடத்தில் சனியும் ராகும்.

அந்தப் பையன் ஒரு வங்கியில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். பையனைக் கூட்டி வர முடியுமா என்று கேட்டேன்.

நாங்கள் கூப்பிட்டால் வரமாட்டான் என்று சொல்லி விட்டார்கள். தொலைபேசியில் நான் அழைத்தேன்.

மறுப்புக் கூறாமல் அரை மணி நேரத்தில் வருவதாக தெரிவித்தார். பெற்றோரை மறைவாக வீட்டுக்குள் இருக்கச் சொன்னேன்.

குறிப்பிட்ட நேரத்தில் வந்து விட்டார். நான் பேச ஆரம்பித்த சிறிது சில நிமிடங்களில் என் வசம் ஈர்க்கப்பட்டு விட்டார்.

தகப்பனாரின் தியாகங்கள், தாயார் பட்ட சிரமங்கள் அனைத்தையும் அவருக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறினேன்.

ஜாதக பலாபலன்களையும் தெரிவித்தேன். அவர் ஒரு பெண்ணைக் காதலித்து அது நிறைவேறாமல் போய்விட்டதாக குறிப்பிட்டார்.

அவமிருத்த யோக அமைப்பு. ஆகையால் தற்கொலைக்கு ஆட்படுகின்ற நிலை ஏற்படலாம் என்பது என் கணிப்பு.

வாழ்க்கையில் வரிசை பிடித்து நிற்கும் இடையூறுகளையும் இடர்பாடுகளையும் எடுத்துக் கூறி, அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று விளக்கினேன்.

புரிந்து கொண்டார். புதுச் சிந்தனைகளை நடைமுறையில் புகுத்திக் கொண்டார். அப்பாவிடம் அன்பாக பேசத் தொடங்கினார்.

குடும்பத்தில் குதூகலம் களை கட்டியது. கால் கட்டுப் போட பெண் பார்க்கத் தலைப்பட்டனர். உறவு முறையிலே ஒரு பெண் அமைந்தது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இடி போன்ற செய்தி என்னை வந்து அடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் தலை நசுங்கி மாண்டு விட்டார் என்பதுதான் அந்தத் தகவல்.

ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்ததால் அடக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அங்கு சென்றேன்.

என்னைக் கண்டதும் தாயும் தந்தையும் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள். ஆறுதல் சொல்லக் கூட என் நாக்குக்குத் தைரியம் இல்லை.

மருத்துவரும் ஜோதிடரும் லௌகீக வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலைப்படக் கூடாது. அவர்களுக்கு முன்னறியும் ஆற்றல் இருப்பதால் பக்குவம் அவர்கள் பக்கத்திலேயே நிற்க வேண்டும்.

தனுசு ராசிக்காரர். பலவீனப்பட்ட ஆயுள் ஸ்தானம். மாரகாதிபதி திசை சந்திப்பு. ஏழரைச் சனி தொடக்கம். 

வண்டி வாகனங்கள் ஓட்டாமல் இருக்க இயலாது. இருப்பினும் இரண்டு மடங்கு கவனம் தேவை. ஏழரைச் சனியின் தாக்கம் உடலை ஊனப்படுத்தி விடலாம் என ஜாதகம் பார்க்கும்போது எச்சரித்து இருந்தேன்.

ஊனப்படுத்தி விடும் என்றுதானே சொன்னீர்கள்... உயிரைப்பறித்து விடும் என்று சொல்லவில்லையே என என் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார்.

ஆயுளை நிர்ணயிக்க நாம் ஆண்டவன் இல்லை. இருந்தாலும் அந்த அகால மரணம் என்னை உலுக்கி விட்டது.

Wednesday, 7 January 2015

தாய் தந்தையரை எட்டி மிதிக்கும் பிள்ளை

தாயிற் சிறந்த கோவிலுமில்லை... தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... இந்த ஒரு வாசகத்தை எத்தனை பிள்ளைகள் திருவாசகமாக கருதுகிறார்கள் இந்த நாளில்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.... இந்த பொன்மொழியை எத்தனை பிள்ளைகள் எண்ணிப் பார்த்து நடக்கின்றனர்.

ஆலாய்ப் பறந்து தனம் தேடி அலையும் அவசர காலம் இது. சொந்தம் சுருத்து பந்த பாசம் எல்லாமே பணத்துக்குப் பின்னால்தான்.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தோள் மீதும் மார் மீதும் போட்டு வளர்த்து கல்விக் கண்ணைக் கொடுத்த தந்தையையும் எத்தி விட்டு ஏறி மிதித்து வெற்றிக் கொடி நாட்ட விரையும் பிள்ளைகள் அதிகரித்து விட்ட காலம் இது.

அண்மையில்  வயதான தம்பதியர் என்னைச் சந்தித்தார்கள். வசதியாக வாழ்ந்தவர்கள் என்பதை அசதியாக இருந்த அந்த நேரத்திலும் உடல் வாகு உணர்த்தியது.

களை பறிக்காத வயலைப் போல களை இழந்த முகம். அவர்களை வருத்துவது உடல் வலியா... மனவலியா... என பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனை அவர்கள் தோற்றத்தில் விளையாடி இருந்தது.

திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தது ஆண் குழந்தை. அந்தக் குழந்தையைக் கருவறையில் சுமக்க தாய் இருந்த விரதமும் தந்தை நோற்ற நோன்பும் வார்த்தைகளில் வடிக்க இயலாது.

தவமாய் தவமிருந்து பெற்ற மகனின் மேனியில் பூ விழுந்தால்கூட தாயின் உடல் புண்ணானது. ஈ அமர்ந்தால் கூட தந்தையின் இதயம் வலித்தது.

அழுதால் குழந்தைக்கு ஆரோக்கியம். இது மருத்துவ உண்மை. ஆனால், சின்னச் சிணுங்கள் கூட பெற்றவர்களை பேதலிக்க வைத்தது.

படிக்க வைத்தார்கள். பல கலைகளை வடிக்க வைத்தார்கள். பள்ளிக் காலத்தில் மகன் எழுதும் பேனாவில் மைக்குப் பதிலாக தங்கள் இரத்தத்தை ஊற்றி அனுப்பி வைத்தார்கள்.

பெற்றோரை மகன் ஏமாற்றவில்லை. பள்ளி வாழ்க்கை மகனின் குணத்தை மாற்றவில்லை. பட்டம் பெற்றான், பெரிய பதவிக்கு வந்தான்.

ஒரு பிள்ளைதானே என்று  மொத்த சொத்தையும் விற்று மகனின் வாழ்க்கைக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தார்கள். திருமணமும் செய்து வைத்தார்கள். பாசமாக இருந்த மகன் மோசமாக மாறி விட்டான்.

அடிவயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்க்கு பிடி சோறு போட மகனுக்கு மனமில்லை. கண்ணை இமைபோல காத்த தந்தை கனக்கும் சுமையாக மாறிப் போனார்.

'வீட்டின் பெயரோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்'... கண்ணீர் மல்க ஒரு கவிஞன் எழுதிய வெந்நீர் வரி இது.

இந்தக் கவிதை வரிக்கு உயிர் கொடுப்பதைப் போல உயிர் கொடுத்த பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்து விட்டான் அந்த மகன்.

எங்களுக்கு ஏன் இந்த நிலை. செத்த பிறகு கொள்ளி போடுவான் என்று நினைத்த மகன், உயிரோடு இருக்கும்போதே கொள்ளி வைத்து விட்டான். இதற்கு என்ன காரணம் என்று என்னிடம் கேட்டார்கள்.

பிள்ளைகளின் நிலை குறித்து நிர்ணயம் பண்ணுவது புத்திரஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் பாவம்.

இது கெட்டுப் போகக் கூடாது. ஐந்தாம் பாவத்தின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். புத்திரகாரகன் பலமாக சஞ்சரிக்க வேண்டும்.

இவற்றில் ஏதேனும் கோளாறு இருந்தால் பிள்ளைபேறு ஏற்படுவது கஷ்டம். ஒருவேளை ஆண்டவனின் அனுக்கிரகத்தால் குழந்தை பிறந்தால் மூன்று வகையான பாதிப்புகளைக் கொண்டு வரும்.

1. பிறந்த பிள்ளை அற்ப ஆயுளில் மடிந்து போகும். அல்லது தீர்க்க இயலாத வியாதியால் பயனற்றுக் கிடக்கும்.

2. தாய் தந்தையரை விட்டு பிரிந்து செல்லும். அல்லது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டி அடிக்கும்.

3. ஒரே வீட்டில் வசிப்பார்கள். பெற்றோரை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். நடைபிணங்களாக வீட்டில் நடமாட வேண்டிய அவல நிலை ஏற்படும்.

இந்த விபரங்களை எடுத்துக் கூறினேன். மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இறைவன் அவதாரங்கள் அடையும் இன்ப துன்பங்களை விளக்கினேன்.

நடைமுறை வாழ்க்கையில் என்னைச் சந்தித்து சோகங்களைப் பரிமாறிக் கொண்ட பல பெற்றோரின் கதைகளை அவர்களுக்கு புரிய வைத்தேன்.

ஆன்மீக ரீதியாக பல அம்சங்களை அவர்களுக்கு உணர்த்தினேன். அதன் பின்னர் அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. நீண்ட நேர தேறுதலுக்கு பின்னரே அவர்கள் என்னிடம் இருந்து விடை பெற்றார்கள். 

தள்ளாத வயதில் பெற்றோரை ஒதுக்கித் தள்ளாத பிள்ளைகள் கிடைப்பது நாம் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலனால்தான் அமையும்.

என்ன செய்வது இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.





 

Saturday, 3 January 2015

தொடாமல் தொடர்ந்த முப்பது வருடக் காதல்

ஆழ்கடலில் மூழ்கினால் ஆச்சரியங்கள் பலவற்றைச் சந்திக்கலாம் என ஓர் அறிஞர் சொல்லி இருக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான்.

நான் அடியவர்க்கும் அடியவன். இருப்பினும் என்னை நம்பி ஒவ்வொரு நாளும் பலர் வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் இன்னல்களையும் குறிப்பிடுகிறார்கள்.

அவற்றில் சில என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று இருக்கின்றன. இது சாத்தியம்தானா என்று சிந்திக்க வைத்திருக்கின்றன.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க மாது. திருமணமாகி மூன்று குழந்தகளுக்குத் தாய். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

பொருளாதாரத்திலும் குறைவில்லை. இருப்பினும் அவர் மனதில் நெருஞ்சி முள்ளாய் உருண்டு கொண்டிருந்த ஒரு பிரச்சினையை என்னிடம் மனம் விட்டு சொன்னார்.

இவருக்கு திருமணம் ஆன புதிது. கணவர் மேல் காதல் இல்லாவிட்டாலும் வெறுப்பு இல்லை. இவர் படித்தவர். இவருடைய கணவனுக்கு படிப்பறிவு இல்லை.

இருந்தாலும் தன்னைத் தவிர உலகத்தில் யாரும் அறிவாளி இல்லை என்பது கணவரின் எண்ணம். தோற்றப் பொருத்தத்தில் இருவருக்கும் மிகப் பெரிய இடைவெளி.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெரிய மாமனார் மகன் மீது இனம் தெரியாத ஈர்ப்பனிந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டு விட்டது. இரு வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்லை.

சுமார் நான்கு வருடங்களாக அந்தப் பையனை நினைத்து மனதில் மருகிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்கு பின்னர் இவர்கள் பேசிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

தனியாக சந்திக்க வேண்டும் என்று அந்தப் பையனுக்கு தூது அனுப்பி இருக்கிறார். சந்திக்க சம்மதம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் என்னைத் தொடக்கூடாது என்பது அந்தப் பையன் விதித்த நிபந்தனை.

இவனுக்கு என்ன பைத்தியமா.... அழகான பெண் அழைக்கிறார். தொடக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார். தூது போனவருக்கு ஆச்சரியம்.

இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அந்தக்காலகட்டத்தில் இரு குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிதைந்து போயிருந்தது. இதற்கிடையில் பையனுக்குத் திருமணம் ஆனது. குழந்தைகளும் பிறந்தன.

இருந்தாலும் இவர்கள் உறவு மட்டும் வாடிப் போகவில்லை. வடிவம் மாறவில்லை. இனிமை குறையவில்லை. இளமை குன்றவில்லை.

தாலி கட்டியர் இன்னொருவராக இருந்தாலும் இவரைத் தான் கணவனாக எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறார்.

இருவருக்கும் சம வயது. இரு குடும்பத்தவரும் மன முரண்பாடு இல்லாமல் உறவுகளைப் பேணி காத்து வருகின்றனர். இதுவரை இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளவில்லை என்பது வியப்பான உண்மை.

சின்ன கண்ணீர் முத்து விழியோரத்தில் எட்டி பார்க்க அந்தப் பெண் சொன்ன இந்தக் கதையில் துளியளவும் பொய் இல்லை என்று என் மனம் அறிவுக்கு அறிவுறுத்தியது.

இப்பொழுது இவர் கேள்வி என்ன தெரியுமா.... தாலி கட்டியர் ஒருவர் இருக்க... இன்னொருவரைக் கணவராக வரித்து வாழ்ந்து விட்டேனே.. இதற்கு என்ன காரணம்.

நான் செய்தது தவறா.. அல்லது என் ஜாதக  அமைப்பு இப்படித்தான் இருந்ததா... விடைகூறுங்கள் சாமி என்று கேட்டார்.

ஜாதகத்தை மிக அணுக்கமாக ஆராய்ந்தேன். இன்னும் சில அம்சங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தேன்.

அந்தப் பெண்ணுக்கு இரு மண அமைப்பு. போன ஜென்மத்தில் இந்தப் பெண்ணும் அந்தப் பையனும் கருத்தொருமித்த கணவன் மனைவியாக இருந்திருக்கிறார்கள்.

இந்தப் பிறவியில் உறவினர்களாக பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் மலேசியாவில் மலாக்கா மாநிலத்தில் பிறந்த இந்தப் பெண் இந்தியாவில் திருமணமாகிச் சென்றிருக்கிறார்.

அங்கு அந்தப் பையனைச் சந்தித்து இருக்கிறார். போன ஜென்மத்தின் நினைவு பூரணமாக வராவிட்டாலும் அதன் விட்ட குறை தொட்ட குறையாக இவர்களின் உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களை எடுத்துக் கூறி அவர் மனதைப் பிசைந்து கொண்டிருந்த பிரச்சினையைக் கிள்ளி எறிந்தேன்.

இதயம் முழுக்க கனத்துக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்த மகிழ்ச்சியோடு என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

மகா பாரதத்தில் ஐவருக்கு மனைவியான பாஞ்சாலி கூட கணவன்மார்களை ஆண்டுக்கு ஒருவராக மகிழ்வித்தார்.

இந்தப் பெண்ணோ உள்ளத்தால் நினைந்து உடலால் விலகி உறவைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறார். எல்லாம் இறைவன் செயல்.
 

Thursday, 1 January 2015

பணம் இருந்தால் திருமணம் நடந்து விடுமா?

ஏராளமாக பணம் இருந்தால் எல்லா வகையான இன்பங்களையும் அடைந்து விடலாம் என பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அது எந்தளவுக்கு உண்மை... சாத்தியம். இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதைப் போலத்தான் இந்த எண்ணமும்.

பணம் படைத்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு மருத்துவருக்குத்தான் தெரியும் உலகத்தில் எத்தனை வகை நோய் இருக்கிறது என்று.

ஆளைப் பார்த்தால் ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவாக இருப்பார். ஆனால், 100 மீட்டர் வேகமாக நடந்தால் 200 தடவை இழுத்து மூச்சு விடுவார். கொஞ்ச நேரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்.

சிலர் சீக்குக் கோழி போல தெரிவார்கள். ஆனால், இவர்களுக்கும் நோய்க்கும் நெடுந்தூரம். இவர்களிடம் நோய் நெருங்கவே பயப்படும்.

ஆகவே, பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கையை பாகுபடுத்திப் பார்த்து விட இயலாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியாது.

என்னிடம் வருகின்றவர்களின் வாழ்க்கைக் கதைகள் பல வியப்பான விஷயங்களை எனக்கு வெளிப்படுத்துகின்றன.

இப்படியும் இருக்குமா... நடக்குமா... என சில பிரச்சினைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து... வசதிக்கு பஞ்சமில்லாத குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு மாது என்னைச் சந்தித்தார்.

இரண்டு ஆண்கள்.. ஒரு பெண்.. ஒரு மகனுக்கு திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள்.

மகளுக்கும் கல்யாணம் ஆகி அவரும் அமெரிக்காவில்தான் வாழ்கிறார். மூன்றாவது மகனும் அமெரிக்காவில்தான் வேலை பார்க்கிறார்.

கடைசிப் பையனுக்கு மட்டும் கல்யாண வைபவம் கண்ணாமூச்சி காட்டுகிறது. பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.

ஒரு பெண்ணை பேசி முடித்து அந்தா.. இந்தா.. என்று திருமண நாள் நெருங்கும்போது பெண் பின்வாங்கி விட்டார்.

பெண்கள் வெறுத்து ஒதுக்குமளவுக்கு மாப்பிள்ளை அசிங்கமாக இல்லை. கண்ணுக்கு லட்சணமாக எழில் குறையாத நிலையில்தான் இருந்தார்.

ஏழாம் இடமும் எட்டாமிடமும் பாதிக்கப்பட்டிருந்தது. காளசர்ப்பதோஷம் வேறு அனைத்து கிரகங்களையும் முடக்கி வைத்திருந்தது.

வானளாவ வசதி இருந்தும்... படி வைத்து ஏறி பணத்தை எடுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தும் பிள்ளைக்கு திருமணம் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது.

மேலும், அந்த அம்மாவின் குடும்ப வாழ்க்கை வெறும் 16 வருடம்தான். பூத்துக் குலுங்கி புதுவாசம் பரப்பி மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் இழந்திருக்கிறார்.

என்னைப் பற்றி ஏனோதானோவென்று நினைத்து மகனின் ஜாதகத்தைக் கொடுத்த அவர், என் கணிப்பையும் சொன்ன கருத்தையும் பார்த்து பெரிய மகன் பேரன் பேத்திகள், மகள் மருமகன் ஜாதகங்களையும் கொடுத்தார்.

எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கை அருகுபோல் வேரோட வேண்டிய நேரத்தில் கருகிப் போனதற்கும் மகனுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள்.

எனக்கு பூரண தெளிவு பிறந்திருக்கிறது. இதுவரை என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த கவலையின் கனம் குறைந்திருக்கிறது என்று சொல்லி நான் எதிர்பார்த்ததை விட காணிக்கையை பல மடங்கு கொடுத்தார்.

நான் மறுத்தும் கேட்கவில்லை. வாங்கிக் கொண்டால்தான் மனம் திருப்தி கொள்ளும் என்று பிடிவாதமாக பாசத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது ஒரு பெண் அமைந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். குவைத் நாட்டில் வேலை பார்ப்பதாகச் சொல்லி ஜாதகத்தையும் அனுப்பி வைத்தார்.

பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் உள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் உள்ள குறை பாதிப்பைச் சமப்படுத்தி நிற்கிறது.

கண்டிப்பாக நான் கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.. அவ்வளவு பெரிய பணக்கார மாது அவ்வப்போது என் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார்.

கஷ்டமும் கவலையும் எளியவர்களுக்கு மட்டுமல்ல... பணம் படைத்த வலியவர்களுக்கும் உண்டு. எல்லாம் இறைவன் செயல்.